செத்துப்போன டெஸ்ட் அணி! கதம்ப சோறு பகுதி 49

 கதம்ப சோறு பகுதி 49

திட்டக்குழுவைக் கலைக்கலாமா?


   சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதில் முக்கியமான ஒன்று திட்டக்குழுவினை கலைத்தல். அவர் சொன்னதின் சாராம்சம் என்ன வென்றால் இந்த குழுவினால் இப்போது எந்த உபயோகமும் இல்லை. சுதந்திரம் பெற்ற புதிதில் இந்த குழுவின் செயல்பாடுகள் தேவைப்பட்டது. செம்மையாகவும் இருந்தது. இப்போது சரியில்லை. இதை சரிப்படுத்தவும் முடியாது. எனவே நாட்டுக்குத் தேவையான வகையில் திட்டக் கமிசனை கலைத்து புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை இது சரியென்றே தோன்றுகிறது. எந்த ஒரு பொருளுக்கு ஓர் ஆயுட்காலம் இருக்கிறது. அது முடிந்தவுடன் அதை தூக்கிவீசிவிடுகிறோம். திட்டக்கமிசனும் அப்படித்தான். சுதந்திரம் பெற்ற புதிதில் நாட்டை வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல ஐந்தாண்டுதிட்டங்கள் வகுக்க இது அமைக்கப்பட்டது. இந்த கமிசன் அப்போது சிறப்பாக செயல்பட்டது. இப்போது சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பழைய முறையில் செயல்பாடுகள் சட்டத்திட்டங்கள் என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமையும். எனவே இப்போதுள்ள சூழலுக்குத் தகுந்தவாறு திட்டக் கமிஷனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்தான் என்று தோன்றுகிறது. எதிர்கட்சிகளும் இடது சாரிகளும் இப்போதே எதிர்ப்பை கிளப்பிவிட்டன என்ன நடக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

செல்பேசிக்கொண்டு கொடியேற்றியவர்!

       எதற்கு மரியாதை கொடுக்கிறோமோ இல்லையோ சுதந்திரத் தினத்தன்று கொடிக்கு மரியாதை செலுத்துவது மரபு. கொடியேற்றவும் இறக்கவும் நிறைய மரபுகள் உண்டு. சென்னை அருகே ஓர் பள்ளியில் கொடியேற்ற சென்ற நகராட்சி தலைவர் செல்பேசிக்கொண்டே கொடியேற்றி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம். அதையெல்லாம் கொடியேற்றப்போகும் ஐந்து நிமிடமாவது தள்ளிவைத்துவிட்டு கொடிக்கு மரியாதை செலுத்தலாம் அல்லவா? அப்படி செலுத்த முடியாது எனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலாவது இருந்து இருக்கலாமே! இப்படி கொடிக்கு அவமரியாதை செலுத்தலாமா? இதே போலத்தான் பல்வேறு இடங்களில் சுதந்தர தின கொண்டாட்டங்களில் மீறல்கள் நடந்துள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலேயே கொடி ஒரு முனை மட்டுமே கட்டப்பட்டு ஏற்றி பின்னர் சரி செய்துள்ளனர். காலம் செல்ல செல்ல சுதந்திர தினம் என்பது ஒரு வெறும் சம்பிரதாயம் ஆகிவிட்டது. அன்றைக்கு ஒரு நாள் லீவு என்ற அளவிலேயே சுதந்திரம் நமக்கு சுதந்தரத்தை கொடுத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் வீடியோ கான்ப்ரஸ் முறையில் கூட கொடியேற்று வைபவங்கள் நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!

செத்துப்போன இந்திய டெஸ்ட் அணி!

  போனவாரமே இந்திய அணியின் திணறலை கூறி இருந்தேன். இதோ கடைசி டெஸ்டில் படு கேவலமாக தோற்று தொடரை இழந்துவிட்டது. பிளட்சரை மாற்ற வேண்டும். தோனியை மாற்றவேண்டும் என்று ஆளுக்கு ஆள் கூறுகிறார்கள். இந்த மாற்றத்தால் எல்லாம் மாற்றம் வந்துவிடாது என்றே தோன்றுகிறது. இப்போதைய ஆட்டக்காரர்கள் யாருக்கும் டெஸ்ட் விளையாடும் திறன் இல்லை! பயிற்சி இல்லை என்பதையே இந்த தொடர் நம் கண்முன்னே நிரூபித்து இருக்கிறது. வெளிநாட்டில் தோல்வி என்பது இன்றைக்கோ நேற்றோ நடந்ததுஅல்ல. எப்போதுமே உள்நாட்டு புலியாக இருக்கும் எல்லா அணிகளும் வெளிநாட்டில் மண்ணைக் கவ்விக்கொள்ளும். இந்தியாவும் இதற்கு முன் எத்தனையோ தோல்விகளை வெளிநாட்டு மண்ணில் கண்டிருக்கிறது. ஆனால் இப்படி ஓரேடியாக சரண்டர் ஆனது இல்லை. கொஞ்சம் போராடி அப்புறம் உயிரைவிடும். ஆனால் தோனி தலைமையில் சென்ற அணிக்கு போராடத் தெரியவில்லை! களத்தில் நிற்கவே எல்லா பேட்ஸ்மேன்களும் பயப்பட்டார்கள். தேவையில்லாத பந்துகளை தானாக சென்று அடித்து ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்கள். சிலர் பந்துகளை எல்லாம் வீணடித்தார்களே தவிர ரன் எடுக்க முயற்சிக்கவில்லை! டி 20 போட்டிகளின் தாக்கமே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களிடம் காண முடிந்தது. அதற்கேற்ப இளைஞர் அணி என்று டி 20 ஸ்பெஷலிஸ்டுகளே அணியில் இடம்பெற்றனர். ஆல்ரவுண்டர் என்று ஸ்டுவர்ட் பின்னியும், ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றனர். இவர்கள் இருவரும் இதுவரை ரஞ்சிப் போட்டியில் எதை பெரிதாக சாதித்துவிட்டனர் என்று டெஸ்ட் அணியில் இடம்பெற்றார்கள் என்று தெரியவில்லை. ஓபனிங்கிற்கு தேர்வான ஷிகர் தவானும் ரஞ்சியில் ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. இவர்களுக்கு டெஸ்ட் தொழில்நுட்பம் இன்னும் கைகூடிவரவில்லை. ஏதோ ஒர் போட்டியில் அதிர்ஷ்டம் அடித்து சதமடித்து அணியில் நிரந்தரர்கள் ஆகிவிட்டார்கள். தோனியும் விக்கெட் கீப்பிங்கிலும் கேப்டன் ஷிப்பிலும் ஒன்றும் புதிய உத்திகளை கையாளவில்லை! அணித்தேர்வு மொத்தமாக சொதப்பலாக அமைந்தது. கடைசி போட்டியில் எதற்கு பின்னியை சேர்த்தார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்? திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் ப்ரக்யான் ஓஜாவுக்கு அல்லது அமித் மிஸ்ராவுக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வருகின்றது. அஸ்வின் கேப்டனின் செல்லப்பிள்ளையாகி தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார். அவர் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்புறம் எப்படி வெற்றிக் கிடைக்கும். இந்திய கிரிக்கெட் வாரியம் டி 20 யில் கவனம் செலுத்துவதை விட்டு ரஞ்சிப்போட்டிகளில் கவனம் செலுத்தினால் டெஸ்ட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கலாம். இல்லையேல் இந்திய அணி இங்கிலாந்தில் செத்துப்போனது செத்துப்போனதுதான்.

தொட்டால் தொடரும்!

  சக வலைபதிவரான திரு கேபிள் சங்கரின் படம் இது. இதன் இசை வெளியீடு நடந்து பாடல்கள் யூ டியுபிலும் பகிரப்பட்டு ஹிட்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறது. நிறைய பேர் இதைப்பற்றி எழுதிவிட்டார்கள். நான் பெரிய சினிமா ரசிகனோ இசை ரசிகனோ கிடையாது. எப்போதாவது பொழுது போகாதபோது பாட்டுக்கள் கேட்பது உண்டு. இதே ஒரு இருபது வருடம் முந்தி என்றால் பாட்டுக்களை விழுந்துவிழுந்து சேகரித்து கேட்பேன். அப்போது இப்போது போல மெமரிகார்டோ சி.டியோ எதுவும் கிடையாது. கேசட்கள்தான். ரிச்சி ஸ்டீரிட் சென்று கேசட்களை வாங்கி போட்டு பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஏ. ஆர் ரகுமான் கோலொச்சிய நேரம் அது. அவரின் இசை என்னை வசீகரித்தது. இளையராஜாவின் பாடல்களும் பிடிக்கும்தான். ஆனால் பெரிதான இசை அறிவு கிடையாது. நிற்க, தொட்டால் தொடரும் பாடல்களை டவுண்லோட் செய்துவிட்டேன். யூ டியுபிலும் பாஸு பாஸு பாடலை பார்த்தேன். இன்னொரு மெலடியும் எனக்கு பிடித்து இருக்கிறது. ஒரு படம் வெற்றிபெற பாடல்கள் மிக முக்கிய காரணி. சங்கமம் படத்தை உதாரணமாக கூறலாம். படம் ஒன்றுமில்லை என்றாலும் பாட்டுக்கள் ஹிட்டானதால் பிழைத்தது. கேபிள் சங்கரின் படம் அப்படி இருக்காது படமும் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அவரது படப்பாடல்கள் எனக்கு பிடித்து இருப்பதால் படமும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள் கேபிள்ஜி! படம் பயங்கர ஹிட்டடிக்க வாழ்த்துக்கள்!

கிச்சன் கார்னர்:


பொன்னாங்கன்னி மசியல்!

தேவையானவை:
பொன்னாங்கன்னி கீரை- 1 கட்டு
வெங்காயம் -2
தக்காளி -1
காய்ந்த மிளகாய்- 2
பூண்டு 4 பல்
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

கீரையைச் சுத்தம் செய்து கொண்டு இலையை நறுக்கி திட்டமாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை கிள்ளிப்போட்டு வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். வேகவைத்த கீரையை தண்ணீர் வடித்து சேர்த்துக் கிளறவும். உப்புச் சேர்த்து குழைவாக கிளறவும். கடுகு தாளித்து இறக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.சாத வகைகளுக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
(தி இந்துவில் படித்தது)  எழுதியவர்: வரலட்சுமி முத்துசாமி.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பட்டுப்புடவையை சாதாரண தண்ணீரில் அலச வேண்டும். கறைஏதேனும் பட்டால் உடனே அலசவேண்டும். எண்ணெய் போன்றவை பட்டால் அந்த இடத்தில் விபூதி போட்டு 5 நிமிடம் வரை பொறுத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச எண்ணெய்கறை அகலும்.

வசம்புத்துண்டுகளை பட்டுப்புடவை வைக்கும் துணிப்பையில் போட்டுவைத்தால் பூச்சிகள் அரிக்காது.

ஹேண்ட் பேக்கில் சில டிஷ்யூ பேப்பர்களை வைத்து இருந்தால் கோயில்களில் தீபம் ஏற்றி வழிபடும் போது கைகளை துடைத்துக் கொள்ள உதவும்.

தூங்கும் முன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது நெஞ்சு அடைப்பு, பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது. சாப்பிடும் முன் ஒரு கப் வெதுநீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்.

தினமும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகிவந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவை எண்ணெயில் பொறித்தெடுக்கும்போது நான்கைந்து துளி எலுமிச்சை சாறை சேர்த்தால் எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.

இந்தவாரமும் எந்த புத்தகமும் படிக்கவில்லை! அதனால் நோ புக்ஸ் கார்னர்.

இவரைத் தெரிஞ்சுக்கோங்க!
மாற்றுத்திறனாளியான ஞானப்பிரகாசம் அவர்களின் சாதனைகளை அறிந்துகொள்ள இங்கு  நான் ஞானப்பிரகாசம்

 வடமாநிலங்களில் வெள்ளம்!

   உத்திரப்பிரதேசம், பீகார்,  உத்திரக் கண்டில் பெய்து வரும் பெருமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. சுமார் 200 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. 50க்கும் அதிகமானோர் இந்த வெள்ளம் மற்றும் மழையினால் இறந்துள்ளார்கள். பல இடங்களில் நிலச்சரிவு! ஒவ்வொரு வருடமும் இது போன்ற மழையும் வெள்ளமும் தொடர்கிறது. இயற்கையை வெல்லுவது கடினம்தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு ஏற்படும் போது நிவாரணப்பணிகள் செய்யும் அரசு அடுத்த வருடத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளாதது ஏன் என்று தோன்றுகிறது. அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் வசிப்போருக்கு தகுந்த எச்சரிக்கைச் செய்து நீர் உள்ளே புகாமல் செய்ய எந்த பணியையும் அரசு இதுவரை செய்ததாக தெரியவில்லை! புகைப்படங்களில் தீவுக் கூட்டங்கள் போல காட்சி தரும் கிராமங்களை காண்கையில் பகீர் என்கிறது! இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல்வேறு ஆட்சிகள் மாறியும் மக்கள் நிலை மாறவில்லை! அப்புறம் எதற்கு அரசாங்கம்! திட்டங்கள்! நம் சென்னை நிலைமையும் அதுதான்! ஒரு சாதாரண மழைக்கே சென்னையில் வெளியில் வர முடியாது ஆங்காங்கே தண்ணீர் தேங்கிவிடும்! இப்போது மெட்ரோ ரயில் அது இதென்று இன்னும் அடைப்புக்கள் அதிகம்! போனவருடம் மழை குறைவு. இந்த வருடம் கண்டிப்பாக வெளுத்து வாங்கும் என்று நினைக்கிறேன்! அம்மா அரசு கவனத்தில் வந்து என்ன நடவடிக்கை எடுக்குமோ தெரியவில்லை! இல்லையென்றால் ஒரு பத்து வருடம் முன்பு படகு ஓட்டியது போல ஓட்ட வேண்டியதுதான்.

படிச்சதில் பிடிச்சது!
தேன் உண்ணும் வண்டு.

புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள 
வெண்பாவை  அரங்கேற்ற ஆரம்பித்தார்.பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி,''மல்லிகையே வெண்சங்கா வண்டூத,''என்று பாடினார்.அதன் பொருள்,''மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி  செய்த போது, '' என்பதாகும்.சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு.அவருக்கும்,புகழேந்திக்கும் ஏழாம்  பொருத்தம்.புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார். புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார்,ஒட்டக்கூத்தர். அவர் கூறினார்,''சங்கு ஊதுபவன் சங்கின் பின் புறம் இருந்து ஊதுவதுதான் முறை.மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது.புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா,''சபையில் கடுமையான அமைதி நிலவியது. புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.புகழேந்தி சொன்னார், ''ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான்.ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே!கள் குடிப்பவனுக்கு தலை எது கால் எது என்று தெரியுமா?கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.

(ஜெயராஜன் அவர்களின் தென்றல் என்ற வலைப்பூவில் படித்தது) http://jeyarajanm.blogspot.in/2014/08/blog-post_8.html



Comments

  1. கதம்பச்சோறு தொகுப்பு அருமை தொட்டால் தொடரும் பாடல்கள் அருமை.

    ReplyDelete
  2. கதம்பம் மாலையாக கோர்த்தது அருமை நண்பா,

    ReplyDelete
  3. தென்றல் தளத்தில் நான் ரசித்ததை நீங்களும் ரசித்ததை ,மீண்டும் ரசித்தேன் !

    ReplyDelete
  4. செல்போனில் பேசிக்கொண்டே கொடியேற்றினாரா
    என்ன உலகு இது

    ReplyDelete
  5. புல் மீல்ஸ் சாப்பிடது போன்ற உணர்வு ஐயா ! இறுதியில் வந்த அந்த படித்ததில் பிடித்தது மிகவும் அருமை. நம் அணி இன்னும் சாகவில்லை, செத்துக் கொண்டிருக்கிறது. சரியான மருத்துவம் இல்லை என்றால் விரைவில் அவுட்....

    ReplyDelete
  6. அருமையான பதிவு..கிரிக்கெட் பற்றி... பின்னி அவர்களின் தகப்பன் ரோஜர் பின்னி தற்போதைய தேர்வாளர். அதனால் தான் அவர் மகன் இந்த அணியில் உள்ளார். ஜடேஜா அவர்கள் சென்னை சிமெண்ட்ஸ் டைரக்டர், அது மட்டும் அல்லாமால் தோனியின் கைப்புள்ள. அதனால் தான். ஏமாறுபவன் இருக்குன் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. அருமையான தொகுப்பு....

    படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. எல்லாவற்றையும் ரசித்தோம். படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!