சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்!

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்!


எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல்வேறு காலத்தில் பல்வேறு ஞானியர்கள் தோன்றி இந்து மதத்தில் சீரிய மாற்றங்கள் புகுத்தினர். அப்படி ஆதி சங்கர பகவத் பாதர் உருவாக்கியது ஷன்மத வழிபாடு.
   இந்து சமயத்தில் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாடு,கௌமாரம் எனப்படும் முருகர் வழிபாடு, சைவம் எனப்படும் சிவ வழிபாடு, சாக்தம், எனும் சக்தி வழிபாடு, வைஷ்ணவம் எனும் நாராயணர் வழிபாடு, சௌரவம் என்னும் சூரியர் வழிபாடு. என ஆறு வகையான வழிபாடுகள் உருவாக்கினார்.
   இத்தகைய ஆறுவகை வழிபாட்டில் சிறப்பானதாக போற்றப்படுவது சாக்தம் என்னும் சக்தி வழிபாடு. சக்தியைப் பல உருவங்களில் பலவிதமாக வழிபடுவதே இந்த சமயம் காட்டும் நெறி. ஆனால் சக்தி வழிபாடு மிக மிகப் பழமையானது. ஒரு காலத்தில் உலகெங்கும் பரவியிருந்தது.

ஸ்ரீவித்யா எனப்படும் சக்தி வழிபாடு   

    இதன் மிக முக்கிய அங்கம் ஸ்ரீவித்யா மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஜகத்ஜனனியாகிய அம்பிகையைத் திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம், ஸ்ரீலலிதா, காமாட்சி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி என்ற பெயர்களில் திரிபுரசுந்தரியை வணங்குகிறோம். 

        இந்தப் பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன. அவளுக்கு மிகமிகப் பிரியமான பெயரால் அவளை அழைப்பதேகூட ஒரு வழிதான். அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன. 
    ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம். 
    
    முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

லலிதா சஹஸ்ரநாமம்
    

    அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.   
    
    இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது. பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். அவளுடைய விருப்பத்தின்பேரில் அப்போது வசினி என்னும் தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர்.

    அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம். இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின்பல சுருதிஎன்னும் பகுதி கூறுகிறது.

        ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும். 

    
    இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம். 

    

    ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.
    
    ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம். 
    அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.
    
    செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு. 


   ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை ஸ்தோத்திரமாகவும் பாராயணம் செய்யலாம். அல்லது நாமாவளியாகவும் அர்ச்சனை செய்யலாம்.
   கலியுகத்தில் நாமஜெபம், நாமஸ்மரணை, நாமலிபி மகத்தான பலனைத் தரவல்லது. இந்த லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களும் அபாரமான நல்ல வாழ்வினை தரவல்லன. இந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்லோக புத்தகம் கடைகளில் கிடைக்கின்றன. ஸம்ஸ்கிருத மொழியில் இல்லாமல் தமிழில் படிக்கவும் கிடைக்கிறது. வடமொழி எழுத்துக்கள் இருப்பதால் உச்சரிப்பு தவறாகிவிடுமோ தவறாக சொல்லிவிடுவோம் என்று அஞ்ச வேண்டாம். அன்னை நம்மை குழந்தையாக பாவித்து நம் உச்சரிப்பை ஏற்றுக்கொள்வாள். பழக பழக உச்சரிப்பு கை கூடும்.

   இந்த சகஸ்ர நாமத்தை   ஸ்ரீ கணபதியை தியானித்து ஸ்ரீ குருவை வேண்டி சங்கல்பம் செய்து கொண்டு, சங்கல்பம் என்பது நமது வேண்டுதல்களை நிறைவேற்றித்தருமாறு அம்மனை வேண்டுதல் ஆகும். பாராயணம் அல்லது அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்வதாக இருந்தால் அம்மன் படம் முன்பு ஒரு தாம்பாளத்தில் தொன்னை அல்லது சிறு கிண்ணம் வைத்து அதில் கட்டைவிரல் மோதிரவிரலால் குங்குமம் எடுத்து நம: என்று முடியும் போது அம்மனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

   பாராயணம் அல்லது அர்ச்சனை செய்து முடித்தவுடன் தங்களது பாராயணத்தின் பலன்முழுவதையும் தந்தருளி ஏற்றுக்கொள் என்று அன்னைக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். நமது அர்ச்சனையிலோ பாராயணத்திலோ பிழைகள் இருந்தால் மன்னித்தருள வேண்டி  இதை சொல்லி முடிக்க வேண்டும்.
   பாராயணம் செய்யும் காலத்திலோ அர்ச்சனை செய்யும் காலத்திலோ என்னை அறியாமல் எழுத்தின் பிழையோ, பதங்களின் பிழையோ ஏற்பட்டிருந்தால் அவற்றை மன்னிக்க வேண்டுகிறேன் ஸ்ரீ லலிதாம்பிகையே! உச்சரிப்பில் நீண்டு உச்சரித்திருந்தாலும் குறைந்து உச்சரித்து இருந்தாலும் நிறுத்தி பாராயணம் செய்ய வேண்டியதை நிறுத்தாமல் இருந்தாலும் பதங்களை மாற்றி உச்சரித்து இருந்தாலும் ஏற்பட்ட பிழையை மன்னிக்க வேண்டுகிறேன் ஸ்ரீ பரமேஸ்வரியே
  எனக்கு என்னென்ன தெரியும் என்று நீ அறிவாய்! உன்னைத் தவிர எனக்கு வேறு யார் உளர். உன்னையே முழுமையாக சரணடைந்துவிட்டேன். எனவே என்னை மிகுந்த கருணையுடன் காப்பாற்றி அருள வேண்டும் அகில உலகத்திற்கும் ஸ்ரீ மாதாவாக விளங்கும் அம்பிகையே!
  இதை சொல்லி பாராயணத்தை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்து முடிக்க வேண்டும்.


 இந்த பாராயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபடுதல் சிறப்பு. மேலும் இந்த சஹஸ்ர நாமம் தோன்றிய இடமான திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வந்தால் மிகச்சிறப்பு ஆகும்.
   அம்மனுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் சர்க்கரைப்பொங்கல், பாயாசம், சர்க்கரை கலந்த பால் போன்றவை நிவேதனம் செய்து வழிபடுதல் சிறப்பு ஆகும்.
   ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இந்த சகஸ்ரநாம பாராயணம் செய்து வருகையில் நம்முடைய முன்னேற்றம் நம் கண் கூடாகத் தெரியவரும்.


   எல்லாம் வல்ல அம்பிகைக்கு பிரியமான ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்து சகல சௌபாக்கியங்களையும் அடைவோமாக. 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சகல சௌபாக்கியங்களையும் அடைவதற்கு -
    அம்பிகைக்கு பிரியமான ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வதற்கான நெறிமுறைகளைப் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  2. பாராயணம் செய்யும் வழிமுறைகளைச் சொல்லித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராணம் தமிழில் கிடைக்கிறது .
    அதை படித்து வருகிறேன்.
    சமஸ்கிரத பாடலை சிடி கேட்பேன்.
    நல்ல வாழ்வு தருவாள் அன்னை லலிதா.

    ReplyDelete
  4. Nandri... vazhga.

    ReplyDelete
  5. good information for amman devotees

    ReplyDelete
  6. Great Effort to Our Life Development

    ReplyDelete
  7. Great Effort to Our Life Development

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!