கஷ்டங்கள் போக்கும் கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!

கஷ்டங்கள்  போக்கும்  கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!


சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். சிவனுடைய அம்சமான இவர் ஆலயங்களின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டார். அக்காலங்களில் ஆலயங்களின் கதவை பூட்டி பைரவரின் சன்னதியில் வைத்துவிடுவது வழக்கம். மறுதினம் பைரவரை வழிபாடு செய்து சாவி எடுத்துச் சென்று கதவு திறப்பார்கள்.

  பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி திதி ஆகும். ஒரு மாதத்தில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என்ற இரு அஷ்டமி திதிகள் உண்டு. அதில் தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட உகந்தது ஆகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.


 ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.


பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும்

அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்


பைரவரை காலைநேரத்தில் வழிபட நோய்கள் நீங்கும் பகல் வேளையில் வழிபட நினைத்த காரியம் கைகூடும்  அந்தி நேரத்தில் வழிபட செய்த பாபங்கள் விலகும் அர்த்த சாமத்தில் வழிபட வளமான வாழ்வும் மனச்சாந்தியும் கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் கிடைக்கும்.


வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.


மூல மந்திரம்

ஓம் ஹேம்,ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சஹவம்ச ஆபத்துதோராணய  அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷனாய மம தாரித்திரியம்  வித்வேஷனாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

காயத்திரி:
பைரவாய வித்மஹே ஹரிஹர பிரம்மாத்மஹாய தீமஹி
தன்ன ஸ்வர்ணாகர்ஷன பைரவ ப்ரச்சோதயாது


அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்குவோம்! அல்லல்கள் அகன்று ஆனந்தம் அடைவோம்!

(இது தளிர் தளத்தின் 2000 மாவது பதிவு.)

(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


Comments

  1. அறியாத தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete
  2. புதிய தகவல் சுரேஷ்!

    ReplyDelete
  3. 2000 பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் சிகரம்தொட தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்....

    2000-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள்.... மேலும் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!