பிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11

பிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11

நாட்டில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஐயா சாமி தருமம் போடுங்க என்று கேட்பார்கள். போடும்வரை விடமாட்டார்கள். பஸ் நிலையம், கோயில்கள், இரயில் நிலையம் என இவர்கள் தொல்லை அதிகம் இருக்கும். இது ஒருவகை என்றால் கிராமங்களில் வீட்டுக்கு வீடு வந்து அரிசியோ நெல்லோ துணிமணியோ வாங்கிச்செல்வார்கள்.

 குடுகுடுப்பை காரர்கள் என்று ஒரு வகையினர் இருப்பர். இவர்கள் இரவில் வந்து குடுகுடுப்பை அடித்து ஏதாவது குறி சொல்லிச் செல்வார்கள். பின்னர் காலையில் வந்து துணி கேட்பார்கள்.  அது மட்டும் இன்றி பூமால் எருதுக் காரர்கள் என்று ஒரு வகையினர் மாடு ஓட்டிவந்து பிச்சை எடுப்பார்கள்.

  கிராமத்தினரும் சளைக்காமல் இவர்களுக்கு பிச்சை கொடுப்பார்கள். இன்று கிராமங்களில் கூட இத்தகைய பிச்சைக் காரர்கள் அதிகம் காணப்படுவது இல்லை. ஆனால் வேறுமாதிரியான பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டார்கள். ஒரு டீ குடிக்கணும் பத்து ரூபாய் கொடு! என்று அதிகாரத்துடன் கேட்கிறார்கள். ஒரு ரூபாய் ரெண்டுரூபாய் போட்டால் யாரும் லட்சியம் செய்வது இல்லை. இப்படி அதிகாரப் பிச்சை அதிகரித்து விட்டது.

  இந்த நிலையில் பிச்சை எடுத்து உண்பவனுக்கு யாராவது விழா எடுப்பார்களா? எடுத்தார்கள் இன்னும் எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் புலவர். அவரின் தமிழாற்றல் வியக்க வைக்கிறது. படியுங்களேன் இந்தப் பாடலை!
  
  ஒருமாடும் இல்லாமல் மைத்துனனார்
    உலகம்எலாம் உழுதே உண்டார்;
  நரைமாடோ ஒன்றிருக்க உழுது உண்ண
   மாட்டாமல் நஞ்சை உண்டீர்!
 இருநாழி நெல்இருக்க  இரண்டுபிள்ளை
  தான் இருக்க இரந்தே உண்டீர்!
திருநாளும் உண்டாச்சே, செங்கமலை
 பதிவாழும் தியாக னாரே

சுப்ரதீபக் கவிராயர் எழுதிய பாடல் இது!

கமலாலயம் என்று அழைக்கப்படுவது எது? பி.ஜே.பி அலுவலகம் என்று நினைத்து விடாதீர்கள்.  திருவாரூரைத்தான் கமலாலயம் என்று சொல்லுவார்கள். அத்தகைய கமலாலயத்தில் வீற்றிருப்பவர் தியாகேசர். அவரைக் குறித்துத் தான் இந்தப் பாடல்.

  தியாகேசப் பெருமானே! உன் மைத்துனரான திருமால் ஒரு மாட்டின் உதவியும் இல்லாமல் பன்றி அவதாரம் எடுத்து உலகம் எல்லாம் உழுது உண்டார்.
உமக்கு வெள்ளை நிறமுடைய மாடு ஒன்று இருக்கவும் உழுது உண்ணாமல் நஞ்சை உண்டீர். உன் மனைவியான உமையம்மையிடம் இருநாழி நெல் விதைப்பதற்கு இருக்கவும், விநாயகர், முருகர் என்ற இருமகன்கள் இருக்கவும் உழுது பயிர் செய்து வாழாமல் பிச்சை எடுத்து உண்டீர்! இத்தகைய உமக்கு திருவிழாவும் நடக்கப் போகிறது! இது வேடிக்கையே!

 திருவாரூர் தியாகராச பெருமானுக்கு நடக்கும் திருவிழாவை மனதில் வைத்து எத்தனை அருமையாக கவி படைத்துள்ளார் பாருங்கள். திருமாலின் வராக அவதாரம், சிவபெருமான் நஞ்சு உண்டது, பிச்சை எடுத்தது என அத்தனைத் தகவல்களை  இந்த எண்சீர் விருத்தத்தில் எத்தனை அருமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.

இன்று போனசாக ஓர் பாடல் சென்றவாரம் விடுகதை போட்ட மாதிரி இதுவும் ஓர் விடுகவி. விடையை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

 முன் ஒரு ஊரின் பேராம்; முதல் எழுத்து இல்லாவிட்டால்
 நன்னகர் மன்னர் பேராம்; நடு எழுத்து இல்லாவிட்டால்
 கன்னமா மிருகத் தின்பேர்; கடை எழுத்து இல்லாவிட்டால்
 உன்னிய தேனின் பேராம்; ஊரின் பேர் விளம்பு வீரே!

பாடலின் விளக்கம் சொல்லிவிடுகின்றேன்! விடையை சொல்லுங்கள்!
ஒரு பெயரை முழுவதுமாக சொன்னால் ஊரின் பெயராக இருக்கும். அந்த பெயரின் முதல் எழுத்தை நீக்கினால் மற்றபகுதிகள் ஊர்த் தலைவனைக் குறிக்கும். நடுவில் உள்ள எழுத்தை நீக்கினால் அருகம்புல்லை தின்னும் மிருகத்தின் பெயராகும் கடைசி எழுத்தை நீக்கினாலோ தேனின் பெயரைக் குறிக்கும். எந்த ஊர் அது?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. பாடல் விளக்கம் அருமை...

    அட...! நம்ம மதுரை...!

    ReplyDelete
  2. விளக்கவுரையை ரசித்தேன்

    ReplyDelete
  3. இதுவரை அறியாத அருமையான கவிதை
    மற்றும் விடுகதை
    மிகவும் இரசித்தேன்
    ஊர் டி.டி சொன்னதுதான் என நினைக்கிறேன்
    சுவாரஸ்யமான பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    கதையும் பாடல் விளக்கமும்நன்று பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. விடுகவிக்கான விடையை நினைத்துப் பார்த்தேன். கண்டுபிடிக்கமுடியவில்லை.

    ReplyDelete
  6. D D முதல்ல விடை போட்டு உடைச்சிட்டாரே.

    --
    Jayakumar

    ReplyDelete
  7. அருமை
    விடுகதை விடையை டிடி சொல்லி விட்டாரே

    ReplyDelete
  8. அருமையான விளக்கம்

    ReplyDelete
  9. நல்ல பதிவு தோழர்

    ReplyDelete
  10. இந்த மதுரைக்காரன் கிட்ட உங்க பாச்சா பலிக்காது :)

    ReplyDelete
  11. இந்த மதுரைக்காரன் கிட்ட உங்க பாச்சா பலிக்காது :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!