பரிவு!


பரிவு!


முற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருக்கும் சாயந்திரப் பொழுது. திரு ஆயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாளை சேவிக்க காத்துக் கொண்டிருந்த சமயம். நடை இன்னும் திறக்கவில்லை. சாலையில் போகும் வாகனங்களையும் பள்ளிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களையும் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பெண்மணி நடக்க முடியாமல் என்னை கடந்தார்.
    சுமார் எழுபது வயதிருக்கும். கூந்தல் முழுதும் நரைத்திருந்தது. மெலிந்த தேகத்தில் ஆங்காங்கே வயதின் சுருக்கங்கள். கூன் விழுந்த முதுகு பூத்தட்டை இடுப்பில் சுமந்தவாறு மறு கையொன்றில் சிறு தடி ஊன்றி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். கட்டியிருந்த கைத்தறி சேலையில் ஆங்காங்கே தென்பட்ட கிழிசல்களை கைத் தையல் போட்டிருந்தார். வெயிலின் தாக்கம் நெற்றியில் வியர்வையாக ஊடுருவி இருந்தது.
    இரக்கப் பட்டது என் மனது! பாவம் இந்த வயதில் பூத் தொடுத்து விற்று பிழைக்கும் நிலை. பிள்ளைகள் இல்லையோ? இருந்தும் கைவிட்டு விட்டார்களோ? பிச்சை எடுக்காமல் உழைத்து பிழைக்க நினைக்கும் இவருக்கு உதவ வேண்டும் என்றது மனது.
    “ பாட்டி! கொஞ்சம் நில்லேன்!”
      “ என்னப்பா தம்பி! பூ வேணுமா? மல்லி, முல்லை, ஜாதி, கதம்பம் எல்லாம் இருக்கு! எது வேணும்? எவ்வளவு வேணும்?
      “ விலை எவ்வளவு பாட்டி?”
      “ முழம் பதினைஞ்சு ரூபா தம்பி! எது வேணும்?”
  “ எல்லோரும் இருபது ரூபா விக்கிறாங்க! நீ கம்மியா சொல்றியே பாட்டி கட்டுபடி ஆகுமா?”
        “இப்ப பூ விலை கம்மியாத்தான் இருக்கு தம்பி! அதான் நான் கொறைச்சுக் கொடுக்கிறேன்! எல்லா சமயத்திலும் ஒரே விலை வித்தா நியாயம் கிடையாது இல்லையா?”
    பாட்டியை மிகவும் பிடித்துப் போய்விட்டது! கட்டாயம் உதவியே தீரவேண்டும் என்று தீவிரமாக சொன்னது மனசு.
  “ சரி பாட்டி  தட்டு முழுக்க இருக்க பூ எல்லாம் அப்படியே எனக்கு கொடுத்திரு! மொத்தம் எத்தனை முழம் இருக்கும் ஒரு ஐம்பது முழம் இருக்குமா? மொத்தமா வாங்கிக்கிறேன்!”
      ஒரு நொடி பாட்டியின் முகம் மலர்ந்தது. பின்னர் பழைய நிலைக்கு திரும்பியது.
     “ என்ன பாட்டி! அளந்து கொடுத்திடறியா? இல்லே நீ அளந்து வைச்சிருப்பே இல்லே எவ்வளோ இருக்கு சொல்லு!  அதுக்கு காசு கொடுத்திடறேன்!”
      “ இ.. இல்லே தம்பி! உன் மனசுக்கு நீ நல்லா இருப்பே! ஆனா முழுசும் வேணாம்! வகையிலே ஒரு ரெண்டு முழம் வேணும்னா வாங்கிக்க!”
        எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது!
   “ ஏன் பாட்டி! இவ்வளவு பூவையும் இன்னிக்கு உன்னால வித்துட முடியுமா? மீந்தா உனக்கு நஷ்டம்தானே! நான் முழுசும் வாங்கிக்கறேன்னு சொல்றேன்! கொடுக்க உனக்கு என்ன கஷ்டம்?”
       “ நீ சொல்றது வாஸ்தவம்தான் தம்பி! இன்னிக்கு மொத்த பூவும் வித்துட முடியுமாங்கிறது சந்தேகம்தான்!  ஆனா…
   “ என்ன ஆனா…? நான் வாங்கிக்கிட்டா உனக்கு சுமை குறையுது இல்லே!கஷ்டபட வேண்டியது இல்லையே! சீக்கிரமே வீடு போகலாம் இல்லையா?”
    “ எல்லாம் சரிதான் தம்பி! நீ எனக்கு உதவனும்னு நினைக்கிறே! அது புரியுது! இன்னிக்கு உன் கிட்ட எல்லா பூவையும் வித்துட்டு நான் சந்தோஷமா வீட்டுக்கு போயிடலாம்தான் ஆனா… தினமும் என் கிட்ட பூ வாங்கிற சில வாடிக்கையானவங்க இருக்காங்க! அவங்க நான் வரலையேன்னு காத்து இருப்பாங்க! உன்கிட்ட பூவை வித்துட்டா அவங்க ஏமாந்து போயிருவாங்களே! அவங்களுக்காவது…
        “அவங்க கட்டாயம் வாங்கிப்பாங்கன்னு தெரியுமா? ஒருவேளை வேணாம்னு திருப்பிட்டா உனக்கு நஷ்டம்தானே! கைக் கிட்டேயே லாபம் வரப்ப இல்லாத வியாபாரத்தை எதுக்கு நினைச்சிக்கிறே?”
    வாடிக்கையாளரை மதிக்கிறதுதான் தம்பி வியாபாரம்! தினமும் வாங்கிறவங்க ஒரு நாள் வேண்டாம்னு சொல்லலாம்! அது அவங்க உரிமை! விக்கிற நாம இன்னிக்கு இல்லேன்னு சொல்லக் கூடாது! இதுதான் வியாபாரத்தோட நுணுக்கம்! இன்னிக்கு உன்கிட்ட பூவை வித்துட்டா அவங்க எல்லாம் ஏமாந்து போயிருவாங்க! அப்படி ஏமாறக் கூடாது அவங்க! அவங்க வாங்காம போனாக் கூட அவங்களைத் தேடி நான் போவேன். அதனாலே.. வேணும்னா வகைக்கு ஒண்ணோ ரெண்டோ வாங்கிக்க தரேன்.
     கையருகில் வியாபாரம் இருந்தும் வாடிக்கையாளரை மதிக்கும் பரிவு காட்டும் அந்த பாட்டி இன்னும் உயர்ந்து நின்றார். ஓக்கே பாட்டி! உன்னை பாராட்டறேன்! நாலு வகையிலும் ரெண்டு ரெண்டு முழம் குடு! இனிமே நானும் உன் வாடிக்கைதான்! இந்த நேரத்துக்கு தினமும் இங்கே வந்திடறேன்! பூ கொடுக்க மறந்திடாதே! என்றேன்.
     பாட்டி மகிழ்ச்சியாய் புன்னகைத்தார்!

டிஸ்கி} இன்றைக்கு முகநூலில் எழுத்தாளர், பதிவர் ரிஷபன் அவர்களின் ஸ்டேட்டஸ் ஒன்றை படித்தேன்! அதிலிருந்து விளைந்தது இந்த கதை!  கரு கொடுத்த நண்பருக்கு நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Comments

  1. ஆம் உண்மைதான்,,
    இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
    அருமையாக, அழகாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எல்லா வியாபாரிகளும் இந்த அம்மா போல் இருந்தால் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் மையமே இருக்காது!

    ReplyDelete
  3. சிறப்பான கதை! அருமை!

    நேரமிருப்பின் என் கட்டூரைக்கும் தங்கள் கரூத்தை அறிய ஆவல் நன்றி!

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. பூ வை பரிவு என்னும் நாரில் தொடுத்தது போன்ற வாசமிகு பதிவு!
      வாழ்த்துகள்!
      கரு தந்த ரிஷி க்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  5. கிடைத்த நல்ல கருவை முறையாக வடிவமைத்துத் தந்தமைக்கு நன்றி. அருமை.

    ReplyDelete
  6. உண்மையில் பாட்டி போல பல சாமானிய வியாபாரிகள் வியாபாரம் பாராட்ட வேண்டும். அருமையான கதை.

    ReplyDelete
  7. அருமையான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. இன்னும் எத்தனை திறமைகளை இதுபோல் வைத்திருக்கிறீர் மொழிப்புலத்தில்...?!!!!!

    சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!