ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? அதிர்ச்சித் தகவல்!

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?


இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் முன்னதாகவே சென்றுவிட்டேன். வழக்கமாய் பொங்கல் கழித்து செல்வேன். இந்த முறையும் தந்தை உடன் வர 13ம் தேதியே சென்றேன். போன முறை போல் அல்லாது புத்தகம் வாங்குவதற்கென்றே  ஒரு சிறு தொகை தனியாக சேமித்து வைத்திருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிவிட்டேன். சிறுவர் இலக்கியங்களும், நாவல்களும்தான் அதிகம் வாங்கினேன்.
    இலக்கிய பதிப்பகங்களான காலச்சுவடு, உயிர்மை போன்ற இன்னபிற ஸ்டால்களை கவனித்ததோடு சரி! இலக்கியம் படிக்கிறேன் என்று சொல்லி அப்புறம் வேதனைப்பட நான் தயாராக இல்லை!
   சரி தலைப்புக்கு வருவோம்! பொன்னியின் செல்வன் படித்த எல்லோருக்குமே அதில் ஆதித்த கரிகாலன் மர்மமாக  கொல்லப்பட்டது தெரியும். அந்த கொலையை யார் செய்தார்கள் என்று இறுதி வரை சொல்லாமலேயே கதையை முடித்து இருப்பார் கல்கி. ஆனாலும் யார் கொன்றிருப்பார்கள்? என்ற கேள்வி நாவலைப்படித்த எல்லோருக்கும் ஓர் மூலையில் உட்கார்ந்து அரித்துக் கொண்டிருக்கும்.
   சோழர்களின் இணையற்ற வீரனாக கருதப்பட்ட ஆதித்த கரிகாலன் ஓர் முரடனாகவும் ஈவு இரக்கம் இல்லாதவனுமாகவே வரலாற்று ஆசிரியர்களாலும் புனைக்கதையாசிரியர்களாலும் சித்தரிக்கப் படுகிறான். அவனது மரணமும் மர்மமாகவே இருக்கிறது. அதற்கு விடை தேடி பலர் புறப்பட்ட போதும் இன்னும் சரியான விடை கிடைத்த பாடில்லை!
    அந்த வகையில் சென்ற வருடம் கலைமாமணி விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி நாவல் வாங்கி நான் ஏமாந்து போனேன். பதிவர் திரு வெங்கட்நாகராஜ் தன் பதிவில் ஒரு நாவலை குறிப்பிட்டுச்சொல்லி அதில் ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளியை இந்த நாவல் ஆதாரங்களோடு சொல்கிறது என்று எழுதி இருந்தார். அந்த நாவலின் பெயர் சங்க தாரா. சென்றவருடம் பெயர் நினைவில்லாதமையால் நந்திபுரத்து நாயகி வாங்கி ஏமாந்தேன்.  அப்புறம் அந்த நாவலை மின் நூலாய் தரவிறக்கி வைத்திருந்தும் படிக்கவில்லை! என்ன இருந்தாலும் மின் நூல்கள் வாசிப்பது எனக்கு அவ்வளவாய் ஒத்துவரவில்லை! இந்த வருடம் புத்தக கண்காட்சியை சுற்றிவரும்போது டிஸ்கவரி புக் பேலசில் இந்த நாவலை பார்த்ததும் உடனே வாங்கி விட்டேன்.
   வாங்கி வந்த மறுநாளே படித்து முடித்தும் விட்டேன்! அவ்வளவு விறுவிறுப்பாக நாவல் இருக்கிறது. எழுத்தாளர் குடும்பத்தை சேர்ந்தவர் காலச்சக்கரம் நரசிம்மா. இவரது இயற்பெயர் டி.ஏ. நரசிம்மன். இந்து பத்திரிக்கையில் பணியாற்றி வரும் இவரின் தந்தை திரைப்பட இயக்குனர் சித்ராலாயா கோபு, தாய் நாவலாசிரியை திருமதி கமலா சடகோபன்.
   பொதுவாக சரித்திர கதைகளில் விரிவான வர்ணணைகள் நம் வாசிப்பை கொல்லும். வர்ணணைகள் அழகென்றாலும் ஓரளவிற்கே என்னால் சகித்துக் கொள்ளமுடியும். நாவலாசிரியர் தன் முன்னுரையிலேயே இதைப்பற்றி ஓர் குறிப்பு கொடுக்கிறார். ஒரு பத்தி அழகான வர்ணணை செய்து இது மாதிரி எழுத என்னாலும் முடியும் ஆனால் அப்படி எழுத நான் விரும்பவில்லை! என்று அடித்துச்சொல்கிறார். இன்றைய தலைமுறை விரும்பும் வண்ணம் அவர்கள் படிக்கும் எழுத்து நடையில் எழுதியிருப்பதாக சொல்லுகிறார்.
   முகவுரையில் ஆதித்த கரிகாலன் பேசுகிறேன்! என்று ஆதித்த கரிகாலன் பேசுவதாய் அவனைப்பற்றியும் அவன் கொலையைப்பற்றியும் எப்படி திரித்துக்கூறப்பட்டுள்ளது என்று விவரிக்கின்றார்.
     கி.பி 1025ல் இராஜேந்திர சோழன் காலத்தில் அவனது அத்தையார் புத்த துறவி தவமணி அடிகள் இறந்ததில் ஆரம்பிக்கிறது கதை. அவர் எழுதியுள்ள ஓர் டைரி போன்ற நூல்தான் சோழ அரசின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது.56 அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நடந்த ஆண்டுகளோடு ஆங்காங்கே சரித்திர ஆதாரங்கள். குந்தவை ஆதித்த கரிகாலன் அன்பு, குந்தவையின் அதிகார ஆசை, பழுவேட்டறையரின் இருதலைக்கொள்ளியான நிலைமை. அன்றைய அரசியல் சூழல்கள். அருண்மொழிவர்மனின் பிறப்பு, அதன் பின் குந்தவையிடம் வந்த மாற்றம், சுகோதயச்சோழன், ஆதித்த கரிகாலனின் பாண்டியநாட்டுப்போர், சாம்பவி என்ற கண்டராதித்த சோழர் போன்ற பாத்திரங்கள் நம் கண் முன்னே நடமாடுகின்றன.
    ஆதித்த கரிகாலன் கொலையுண்ட காட்சியை விவரிக்காமல் விட்டாலும் கடம்பூர் மாளிகையை அவர் விவரிக்கும் விதமும் அதில் ஆதித்த கரிகாலன் இறந்ததை காட்டும் காட்சியும் கண் முன்னே விரிகின்றன.ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய அடிக்குறிப்புக்கள் வரலாற்று சான்றுகள். பன்னக தத்தர் ஓலைச்சுவடி பாடல் மூலம் இவர்தான் கொலையாளி என்று நமக்கு அடையாளம் காட்டும் போது நமது புருவங்கள் உயர்கின்றன.
    சோழவம்சத்தினரான அவர் ஏன் ஆதித்த கரிகாலனை கொன்றிருக்க கூடும் என்ற நம் கேள்விக்கு தேவையான ஆதாரங்களையும் தந்து கொலையாளி அவர்தான் என்று அடித்து கூறுகின்றார். புனைவில் அதை கொலையாளியும் ஏற்றுக் கொள்கிறார்! நம்மையும் ஏற்றுக்கொள்ள வைக்கும்போது கதாசிரியரின் வெற்றியை சிலாகிப்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!
      இந்த நாவலில் அறிந்து கொண்ட தகவல் ஒன்று பலாசம் என்று அழைக்கப்படும் முருக்கன் மரம். இது இருவகை உண்டு என்றும் முருங்கல் என்பது தானாக முறியும் முருக்கல் என்பது வெட்டி பிளக்கப்படும் என்றும் சொல்கிறார். இந்த நாவலில் வரும் பைத்தியக்கார அரசி தேவியம்மன் இந்த முருக்கன், முருக்கன் சொற்களை கையாள்கின்றார். நாவலின் கொலையாளியை கண்டுபிடிக்க இந்த சொல் மிகவும் உதவுகின்றது
 பெரிய பழுவேட்டரையரின் பெயர், கண்டன் அமுதன் என்பதையும் இந்த நூலில் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிசோழர்கள் புரச இலையையும் தலைச்சங்கத்தையும் கொண்டு அபிஷேகம் செய்து முடிசூடிக்கொண்டனர். கிள்ளி சகோதர்கள் காலத்தில் அந்த தலைச்சங்கு சங்கேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது என்று வரலாற்று தகவலை அறிய முடிகிறது. நூலகம் என்பதற்கு பண்டாரச்சாலை என்ற ஒரு சொல்லையும் அறிய முடிகின்றது. ஆதிசோழ இளவரசி சங்கவை ஸ்ரீ விஜய அரசனை மணந்துகொண்டு ஆதித்யபதி என்ற மகனை பெற்றெடுத்தாள். அவன் உருவாக்கிய நாடு புரசங்க நாடு இன்றைய மலேயாவில் கங்காநகரா என்று அழைக்கப்படுகிறது என்ற வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றது. இந்த நாவலின் இன்னொரு திருப்பு முனை இராஜ ராஜ சோழனைப் பற்றியது. அவனது பிறப்பின் ரகசியத்தை அவன் யாருடைய பிள்ளை என்பதையும் நாவலாசிரியர் சொல்லும்போது வியப்பின் உச்சிக்கே செல்கின்றோம்.
   இவரது நூல்களை இதுவரை நான் வாசித்தது இல்லை. இந்த நூலை வாசித்தபின் அவரது காலச்சக்கரம் என்ற நூலையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க தோன்றாத அளவிற்கு வேகமாகவும் விறுவிறுப்பு நிறைந்ததாகவும் மன நிறைவை தருவதாகவும் அமைந்துள்ள நாவல். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. நூல் வடிவமைப்பும், கட்டமைப்பும் அழகாக அமைந்துள்ளது. 100 பக்கங்கள் உள்ள நூல்களுக்கே 100 ரூபாய் தாண்டி விற்கப்படுகையில் இந்த நூலின் விலை மிகவும் குறைவுதான்! குறைந்த விலையில் இப்படி ஒரு பொக்கிஷத்தை தந்த வானதி பதிப்பகத்தாரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

 இவ்வளோ சொன்னீங்க ஆதித்ய கரிகாலனை கொன்றது யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களேன்னு கேக்கறீங்களா? புத்தகத்தை வாங்கி படியுங்க கண்டிப்பா நீங்க அதிர்ச்சி ஆகிடுவீங்க! ஏன்னா? ஆதித்ய கரிகாலனை கொன்றது யாருன்னா? பொன்னியின் செல்வனை படிச்ச படிக்காதவங்க எல்லோரும் கொண்டாடும் ஒரு கதாப்பாத்திரம்! அவங்க இல்லாம சோழர்குல வரலாறே இல்லை! 
நூல்: சங்கதாரா
வெளியிட்டோர்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17.

பக்கங்கள்: 450  விலை: ரூ 180.

டிஸ்கவரி புக் பேலஸ் கே.கே நகரிலும் இந்த புத்தகம் கிடைக்கும்.

கொசுறு:
    கன்னிமாடம், கோட்டைபுரத்துவீடு, மசால் தோசை 38 ரூபாய், எரியும் பனிக்காடு,சரிதாயணம் கடல் வேந்தன், மாதவியின் மனம், கொலையுதிர்காலம், செப்பு பட்டயம், அகல்யா, விரும்பிச்சொன்ன பொய்கள், ஆ, சிறுகதை எழுதுவது எப்படி? சுஜாதா பதில்கள், டாலர் நகரம், அனுபவ வைத்திய முறை 2 பாகங்கள் இவையெல்லாம் நான் வாங்கிய சில புத்தகங்கள்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து  ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஆஹா ரொம்ப நாள் சந்தேகம் விடை கூறாமல் இப்படி விட்டு விட்டீர்களே கட்டாயம் வாங்கிப்படிக்கனும் ...சகோ...உங்களது பதிவும் விருவிருன்னு விடைதேடிப்போய் கிடைக்காது எதிர்பார்ப்பை தூண்டுகின்றது..

    ReplyDelete
  2. அருமையாக அலசி விமர்சித்து இருக்கிறீர்கள் நண்பரே.... கண்டிப்பாக வாங்குவேன் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. என் தளத்தில் முன்பு எழுதியது பற்றி இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. நான் எழுதிய பதிவின் சுட்டியும் தந்திருக்கிறேன்.


    http://venkatnagaraj.blogspot.com/2013/11/blog-post_5.html

    ReplyDelete
  4. அருமையான அறிமுகம் படிச்சுட்டு அனுப்புங்க ...

    ReplyDelete
  5. பால கணேஷ் கொடுத்து நான் படித்த புதினம்!நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. வ‌ண‌க்க‌ம் திரு. சுரேஷ் ஐயா.

    பொன்னியின் செல்வ‌ன் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என‌து நீண்ட‌ நாள் ஆசைக‌ளுள் ஒன்று. த‌ங்க‌ளின் ப‌திவு என‌து ஆசையை மேலும் தூண்டுகிற‌து.

    ReplyDelete
  7. ஆஹா... அருமையான ஒரு நூல் பற்றி அழகான ஆழமான பகிர்வு...
    வாழ்த்துக்கள் சகோதரா.

    ReplyDelete
  8. தளிர் வணக்கம்.

    எங்க இயக்குனரின் நன்பர் படம் வெளிவரப்போகுது அதற்காக வேலையில் பிசி. மன்னீக்கவும். விபரமான பின்னூட்டம் பின்னர். என் இயக்குனர் பெயரைச் சொல்ல இயலாது. மன்னிச்சு.
    பரமு சிவசாமி.

    பின்னூ பிழைதிருத்தம் உதவி ஆ.பெ.சங்கமித்ரன்

    ReplyDelete
  9. புத்தகத்தை வாங்கி படிக்க தோன்றுகிறது. அருமையான விமர்சனம்.
    நீங்கள் சொல்வதில் இருந்து யூகிக்க முடிகிறது.
    நன்றி.

    ReplyDelete
  10. ஒருவரை நூலைப் படிக்க வைக்க இதுபோன்ற உத்தி சரி என்று நினைக்கிறேன். வரலாறு உள்ள வரை பொன்னியின் செல்வன் உள்ள வரை ஆதித்த கரிகாலன் மரணம் உயிர்ப்போடு இருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு கல்வி நம் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டார். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. நானும் இவர் எழுதிய நூல்களை படித்ததில்லை. அடுத்த முறை இந்தியா வரும்போது கண்டிப்பாக வாங்கிவிடுவேன். ஒவ்வொரு முறையும் பொன்னியின் செல்வன் படிக்கும்போது, அந்த கொலை நடந்த நிகழ்வினை மிகவும் நிதானமாகவே படிப்பேன். மனசுக்குள் இவர் தான் செய்திருப்பாரோ,அவர் செய்திருப்பாரோ என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்.
    நன்றாகவே விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

    கன்னிமாடம் மற்றும் கோட்டைப்புரத்து வீடு படித்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கும். படித்து விட்டு அதற்கும் விமர்சனம் எழுதுங்கள்.

    ReplyDelete
  12. ஆவலைத் தூண்டிவிட்டு விட்டீர்கள். நரசிம்மாவை பற்றித் தெரிந்திருந்தாலும் வாசித்ததில்லை....வாசிக்க வேண்டும்....

    ReplyDelete
  13. சங்கத்தாரா கதை எப்படியிருக்கிறதோ, உங்களின் இந்த விமரிசனம் ரொம்பவும் விறுவிறுப்பு. நிச்சயம் வாங்கிப் படித்து விடுகிறேன். ஆனால் ஆதித்த கரிகாலனை யார் கொன்றிருப்பார்கள் என்பதற்காகவே மறுபடி மறுபடி பொன்னியின் செல்வனைத் திருப்பித் திருப்பி படித்திருக்கிறேன் - அதுவும் கடைசி பாகத்தை. அந்தத் 'த்ரில்' போய்விடுமே!
    சிறப்பான விமரிசனத்திற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. இதுபோன்ற நூல் விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது
    அடுத்த புத்தக கண்காட்சிக்கு கிளம்பி வர வேண்டும் போல் உள்ளது.
    நல்ல விமர்சனம் நண்பரே!
    புத்தகம் கிடைத்ததும் படிக்கின்றேன்!
    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
  15. சபாஷ்... என் நண்பரின் நூலை அழகாக ரசித்துப் படித்து உள்வாங்கி எழுதியிருக்கிறாய் சுரேஷ். இதை அவர் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்கிறேன். கோட்டைப்புரத்து வீடும் உன்னை விமர்சனம் எழுத வைக்கப் போகும் ஒன்றுதான். சூப்பர். (என் பதிவுகளில் நிறைய ஹிட்களை வாங்கிய இரண்டாவது பதிவு இந்த சங்கத்தாரா நூல் விமர்சனம்தான், தெரியுமோ...?)

    ReplyDelete
  16. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete
  17. ஏற்கெனவே வெங்கட் எழுதியும், ஶ்ரீராம் எங்கள் ப்ளாகில் எழுதியும் விமரிசனம் படித்தேன். புத்தகம் தான் படிக்கலை. ஆனால் என் தம்பி கதையின் மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்டுவிட்டார். அவர் எப்போதுமே இப்படித் தான்! சிறு வயதில் இருந்தே துப்பறியும் நாவல்களை முதலிலேயே படிச்சுட்டு முடிவைச் சொல்லி வெறுப்பேத்துவார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. :)

    ReplyDelete
  18. Padil solama vitutegala. min nool anupe vaiga. vaalthukal.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!