அது அவன் இல்லை!

அது அவன் இல்லை!


ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த பாழடைந்த கட்டிடம். ஏதோ ராஜா காலத்து சத்திரம் என்று சொல்லுவார்கள். சுவர்கள் ஆங்காங்கே சரிந்து புதர் மண்டிக் கிடந்தது. கேட்பாரற்ற அந்த பங்களாவில் பாம்பும் பூராணும் தேளும் இன்னும் பிற விஷ ஜந்துகள் வசிக்க ஆரம்பித்து பலநாட்கள் ஆகிவிட்டன. இவற்றுடன் ஊரில் ஓரு கட்டுக்கதையும் நிலவி வந்தது. அந்த ராஜா காலத்து சத்திரத்தில் யாரோ ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் பின்னர்தான் அங்கு யாரும் தங்குவது இல்லாமல் பராமரிப்பு இன்றி இப்படி பாழடைந்து கிடக்கின்றது என்று சொல்லுவார்கள்.
   அந்த சத்திரத்தின் அருகில் இருக்கும் மேட்டில் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் கூட உச்சி வேளையில் திடீரென சுருண்டு விழுந்து இறந்து போகும். இரவு வேளையில் யாரும் அந்த பங்களா பக்கம் செல்ல மாட்டார்கள்.
   இதெல்லாம் கட்டுக்கதை பேயாவது பிசாசாவாது அதை ஒரு கை பார்க்கிறேன் என்ற வீரையன் தாத்தா கூட அந்த பிசாசு அடிச்சு இறந்து போய் அந்த சத்திரம் ஓரம் கிடந்ததாகவும் அதன் பின்னர் யாரும் அந்த பங்களாவுக்கு செல்வது இல்லை என்று நண்பன் சொல்லியிருந்தான்.
      எனக்கு இந்த பேய் பிசாசு என்றாலே ஒருவித ஆர்வம். மாயாஜாலக்கதைகள் படிப்பது மந்திர தந்திரங்கள் பற்றிய செய்திகளை ஆராய்ச்சி செய்வது என் பொழுது போக்கு. நண்பன் சுரேந்தரின் ஊரில் இப்படி ஒரு பங்களா இருப்பது  அறிந்து அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று கிளம்பி வந்திருந்தேன்.
   “ டேய் சதீஷ்! உன் ஆராய்ச்சியெல்லாம் பேப்பரோட நிறுத்திக்க! இப்படி சுய பரிசோதனை பண்ணி ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா அப்புறம் யாரு பதில் சொல்றது?” சுரேந்தர் கேட்டான்.
       ”டேய்! அதெல்லாம் ஓண்ணும் ஆகிடாது! பேயே வந்தாலும் அது என்னை ஒண்ணும் செய்யாது! நான் மந்திரித்த தாயத்து கட்டி இருக்கேன்! அத்தோட பத்ரகாளியோட மூலமந்திரம் ஜபம் செய்யறேன்! இதெல்லாம் என்னை காப்பாத்தும்!”
       “ உன்னை காப்பாத்தும் சரி! அப்புறம் எங்களை எது காப்பாத்தும்?” சுரேந்தரின் நண்பன் விஜய் கேட்டான்.
         “சரி நீங்க வரவேண்டாம்! நான் மட்டும் இன்னிக்கு அந்த பங்களாவுக்கு போறேன்! அங்க பேயும் இல்லே எதுவும் இல்லேன்னு நிரூபிக்கிறேன்!” என்றான் சதிஷ்.
    “எப்படிப்பா நிரூபிக்க போறே? கிண்டலாக கேட்டான் மணி.
 
   “ இன்னிக்கு ராத்திரி சரியா பன்னிரண்டு மணிக்கு நான் அந்த பங்களா உள்ளே போறேன்! ஒரு மணிவரைக்கும் உள்ளேயே இருக்க போறேன்! உள்ள பேய் இருக்கா இல்லையான்னு பார்ப்போம்! ஒருவேளை பேய் இல்லைன்னா நான் நல்லபடியா வெளியே வந்துருவேன் இல்லையா? அப்படி ஒருமணி வரை நான் வெளியே வரலைன்னா நீங்க உள்ளே வந்து என்னை காப்பாத்துங்க!”
     “ ஏம்பா ஏதோ அல்வா சாப்பிடறது போல சுலபமா சொல்லிட்டே! உனக்கு மந்திரம் தெரியும் அது இதுன்னு சொல்றே? அப்படிப்பட்ட நீயே மாட்டிக்கிட்டா நாங்க எப்படிடா காப்பாத்தறது?” சுரேந்தர் கேட்டான்.
    “அதுவும் சரிதான்! நான் எல்லா முன்னேற்பாட்டடோடத்தான் வந்திருக்கேன்!”
    “என்ன முன்னேற்பாடு?”
 “ இதோ இந்த சூலத்தை கையில் வச்சுக்கங்க!”
   “இதை வச்சி என்ன பண்றது?”
 “இது எங்க ஊர் பத்ரகாளியோட கையில் வச்சி பூஜை செய்த சூலம்! எந்த பேயும் இதுங்கிட்ட நெருங்காது. ஒரு வேளை நான் வராவிட்டால் இந்த சூலத்தை எடுத்துக்கிட்டு உள்ளே வாங்க! பேய் உங்களை ஒண்ணும் செய்யாது”
  “இதை நீயே எடுத்திட்டு போகலாமே! பேய் இருந்தாலும் விட்டுடும் இல்லே!”
   “ நான் தான் சொல்றேனே! அந்த பங்களாவில பேய் ஏதும் இல்லை!” அதனால எனக்கு எந்த பாதுகாப்பும் வேண்டாம். நீங்க பயப்படறதாலதான் இந்த சூலத்தை உங்க கிட்ட கொடுக்கிறேன்!”
    “ஏம்பா முரண்பாடா பேசற? பேய் இல்லே! நல்லபடியா வந்துருவேன்னு சொல்றே? அதே சமயம் மாட்டிக்கிட்டா சூலத்தை வச்சு காப்பாத்துன்னு சொல்றே?”
     நான் பேய் இருக்காதுன்னு நினைக்கிறேன்! ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால்… அதுக்குத்தான் இந்த பாதுகாப்புக்களை உங்களுக்கு கத்து தந்து காப்பாற்ற சொல்றேன்!
   “எல்லாம் சரி! இதுல உனக்கு ஏதாவது நேர்ந்தா உன் வீட்டுல யாரும் எதுவும் சொல்லமாட்டாங்களா?”
    “அவங்களுக்கு என்னை பத்தி தெரியும்! நான் பண்ற ஆராய்ச்சி பத்தியும் தெரியும்? இப்பக்கூட இங்க வரது நான் பண்ண போறது எல்லாத்தையும் சொல்லிட்டுத்தான் வந்துருக்கேன்! அதனால ஒண்ணும் சொல்லமாட்டாங்க! எனக்கு ஒண்ணும் ஆகாதுன்ற நம்பிக்கை என்னைவிட அவங்களுக்கு அதிகம்!”
    “என்னவோ போப்பா! நீ செய்யறது கொஞ்சம் அதிகப்படியாத்தான் தோணுது!”
    “ ஆபத்துக்களை கண்டு பயந்து போக கூடாது! தைரியமா எதிர் கொள்ளனும்! இந்த பங்களாவில் பேய் இருக்குன்ற கட்டுக்கதைக்கு இன்னிக்கு ராத்திரி முடிவு கட்டறேன்! ” சதிஷ் சொன்னபோது எங்கள் முகங்கள் இருண்டு போனது.

  அன்றைய இரவு எங்களுக்கு மிகவும் பயங்கரமானதாக இருந்தது. ”சதிஷ்! நாங்க பங்களா கிட்டே எல்லாம் வரமாட்டோம்! எங்களுக்கு பேய்னா ரொம்பவே பயம்! எங்க வீட்டுல இதுக்கெல்லாம் ஒத்துக்கவே இல்லை!” என்றான் மணி.
   ”ஆமாம்பா! என்னோட வீட்டுலேயும் இந்த வீர விளையாட்டுக்கு சம்மதிக்கவே இல்லை! அதனாலே இதை விட்டுருவோம்!” என்றான் சுரேந்தர்.
   ”ஏண்டா இப்படி கோழைங்களா இருக்கீங்க? நீங்க வராவிட்டா கூட பரவாயில்லை! நான் இன்னிக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு அந்த பங்களாவில் நுழையப்போறது  நுழையப்போறதுதான்!” என்றேன். அப்போது நேரம் இரவு பத்துமணி.
    சொல்லவேண்டியதை சொல்லிட்டோம்! அப்புறம் உன் இஷ்டம்! நாங்க போய் வரோம்! மணியும் விஜயும் கிளம்பிவிட சுரேந்தர் “டேய் சதீஷ்! எதுக்குடா இந்த வீர விளையாட்டு பேசாம போய் தூங்கு! நானும் தூங்கறேன்!” என்று போர்த்திக்கொண்டு படுத்துவிட்டான்.
   “ஏண்டா இப்படி கோழைங்களா இருக்கீங்க! சாவைக் கூட வீரமா எதிர்கொள்ளனும்! கோழைங்களுக்கு தினம் தினம் சாவு! வீரனுக்கு அப்படியில்லே!”
   ”நாங்க கோழைங்களாவே இருந்துட்டு போறோம்! பேசாம தூங்கு!”
     எல்லோரும் இப்படி பின் வாங்கிவிட நான் மட்டும் உறுதியாக இருந்தேன். நேரம் மிக மெதுவாக கடந்து கொண்டிருந்தது. பதினொன்றரை என்று முள் காட்டியதுதான் தாமதம். தலையில் பனிக்குல்லா, காலில் ஷு அணிந்து கையில் டார்ச், தீப்பெட்டியை சட்டைக்குள் வைத்து கொண்டேன். இன்னொரு கையில் தடியுடன் எழுந்து வெளியே வந்தேன். சுரேந்தர் நன்கு உறங்கி கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யவில்லை!
      இரண்டு தெருக்கள் கடந்திருப்பேன். “டேய் சதீஷ் நில்லுடா!” அட இது மணியின் குரல் போல் இருக்கிறதே! ஆச்சர்யமாக திரும்பி பார்த்தேன் அவன் தான்.
       “என்னடா வரமாட்டேன்னு சொன்னே?”
     ”வரமாட்டேன்னுதான் சொன்னேன்! ஆனாலும் உன்னை தனியா விட மனசு கேக்கலை! நானும் வரேன்! ஆனா பங்களாவுக்கு உள்ளே வரமாட்டேன். வெளியேவே நிக்கறேன்! நீயும் ரொம்ப நேரம் தங்காம சீக்கிரம் வந்துரு!”
   “ எப்படியோ உனக்கு இந்த அளவுக்காவது தைரியம் வந்துதே!”
“தைரியம் இல்லேதான்! ஆனாலும் நண்பனுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி? ஆமா இதுவரைக்கும் நீ பேயை பார்த்து இருக்கியா?
    “இல்லேடா! எல்லாம் சொல்ல கேள்விதான்!”
  “பேயை பார்த்தவங்க அதை பத்தி என்ன சொன்னாங்க?”
  “எல்லோரும் சொல்றதுதான்! வெள்ளையா இருக்கும்! கண்கள் சிவப்பா இருக்கும் கால் இருக்காது! புகை மண்டலமா எழும்பும்!”
  “ ஓகோ அப்ப பேய்ங்க நார்மலா இருக்காது! இப்படித்தான் உலாத்துமா?”
     “யாரு கண்டா?”
   “ஆனா நீ இன்னிக்கு பார்க்கணும்னு கிளம்பி வந்துருக்கே இல்லையா?”

     ஆமாம்டா! பேயை பார்க்கணும்!  பார்க்கறதுமட்டும் இல்லே பேசவும் செய்யனும்! பேயை பார்த்து பேச முடியுமா?” நான் கேட்டேன். இப்போது அந்த பங்களாவை நெருங்கியிருந்தோம்!
      “ அட அதான் பார்த்துட்டே! இப்ப பேசிக்கிட்டும் இருக்கியே!” சிரித்தபடி மணி சொல்லவும் என் கால்கள் தடுமாறின. 
   “என்..னடா சொல்றே?” வாய் குழறியபடி கேட்க
  இல்லே இன்னிக்குத்தான் பேய் கூட பேசிட்டியே! வரட்டா?
 ஹாஹாஹா! என்று சிரித்தபடி தரையில் கால்படாதபடி அவன் அந்த பங்களாவில் நுழைந்தான்.
    அது அவன் இல்லையா..? நான் அப்படியே மயங்கினேன்! 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 


   

Comments

  1. பயமுறுத்திட்டீங்களே! அருமை

    ReplyDelete
  2. நல்ல சஸ்பென்சாக போயி கடைசியில் முடிச்சை சுலபமாக அவிழ்த்து விட்டீர்கள் சுரேஷ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. திக் திக் என எங்களை உள்ளாக்கிவிட்டு அமைதியாக முடித்துவிட்டீர்கள். நன்று.

    ReplyDelete
  4. மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித்து உசுப்பியதாக கேள்வி பட்டேனே ,உண்மையா :)

    ReplyDelete
  5. மயங்கி விழுந்த உங்களை அந்த பேய்தான் தண்ணீர் தெளித்து உசுப்பியதாக கேள்வி பட்டேனே ,உண்மையா :)

    ReplyDelete
  6. (இது ஒரு தெனாலி பட வசனத்தின் பாதிப்பு)

    அய்யா!
    எனக்கு ஒரே பயம்! பயம் ! ஒரே பயம்!

    அல்ல அய்யா!

    கதையை படிச்சா! ஒரே நயம்! நயம் ஒரே நயம்!

    அருமை நண்பா!

    பயத்துடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. ஹா... ஹா.... பயமுறுத்தீட்டீங்க...
    நல்ல கதை...

    ReplyDelete
  8. எழுத்தாளர் சார்,

    வணக்கம் . எப்புடி இருக்கீங்க. ஒரு வருடத்துக்கு பிறகு இப்பதான் வர முடிந்தது. கவிதைகள் எழுத பழகுபவன். உங்களிடம் கூட ஆலோசனைகள் பெற்றிருந்தேன் பதிவுகள் வழியாக. இப்போ தான் திரும்பவும் முயற்ச்சி செய்ய நேரம் கூடி வந்திருக்கிறது.

    கேசவன்

    ReplyDelete
  9. நல்ல சஸ்பென்ஸ் கதை. அருமை.

    ReplyDelete
  10. கதை நல்ல சஸ்பென்ஸ்,த்ரில்...எல்லாம் அருமை.

    நாங்கள் உங்கள் எழுத்தை ரசிப்பவர்கள் என்ர முறையிலும், கதைகளிலும் திரைக்கதைகளிலும் ஆர்வம் உள்ளவர்கள் என்ற முறையிலும் ஆர்வத்தில் இதைச் சொல்கின்றோம் தவறாக எண்ண வேண்டாம் சுரேஷ்.

    கதை சதீஷின் ஆங்கிளில் சொல்கின்றீர்களா? நண்பர்களின் ஆங்கிளில் சொல்கின்றீர்களா என்ற சிறு குழப்பம் வருகின்றது இடையில். நீங்களே திரும்ப வாசித்தீர்கள் என்றால் புரிந்து கொள்வீர்கள் எங்கு தவறுகின்றது என்பது.

    கதையில் வரும் மணி என்பவர் பேய் என்றால் எப்படி அவர் மற்றவர்களுடன் கண்ணுக்குத் தெரியும்படி இருக்கின்றாரா? அவர் இறந்தது எப்படி நண்பர்களுக்குத் தெரியாமல் போயிற்று. அப்படி அவர் இவர்களுடன் இருந்திரிந்தார்? அவர் பேய் ரூபத்திலதான் இருந்தாரா. அப்படியென்றால் நண்பர்களுக்கு தெரியாதா? இப்படி பல எழுகின்றன. மற்ற படி கதை அருமை

    ReplyDelete
    Replies
    1. எழுத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளச்செய்வதில்தான் ஓர் நல்ல நண்பரின் அழகிருக்கிறது! உண்மையாகவே நீங்கள் சொன்ன குழப்பம் கதையில் வரத்தான் செய்கிறது. திங்களன்றே இந்த கதை கருவை யோசித்து வைத்தாயிற்று. ஆனாலும் செவ்வாயன்று மாலைவரை விடாத பணிச்சுமை, பெண்ணுக்கு உடல்நலக்குறைவு என்று டாக்டரிடம் அழைத்துச்சென்றமையால் இரவில் டைப் செய்யும்போது கவனம் தவறிவிட்டது. இதற்கு இரண்டு மூன்று க்ளைமேக்ஸ் வைத்திருந்தேன். இறுதியில் மணி பேய் என்பது போல காட்டியிருந்தேன். மணி முன்பே இறக்க வில்லை! நண்பர்களுடன் பேசும்போது உயிருடன் தான் இருந்தார். பின்னர் வீட்டிற்குச்சென்றுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது சதீஷ் அந்த பங்களாவிற்கு செல்கையில் அந்த பங்களாவில் வசிக்கும் பேய் மணி உருவில் அவரிடம் உரையாடுவதாக கதையை சித்தரிக்க நினைத்தேன். கொஞ்சம் அவசரப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கையில் செம்மை படுத்தி மீள் பதிவு இடுகிறேன்! குறைகளை சுட்டி திருத்திக்கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி! இது போல தொடருங்கள் தவறாக நினைக்க மாட்டேன்! நன்றி நண்பரே!

      Delete
    2. மிக்க நன்றி சுரேஷ்! மகள் குணமாகி விட்டாளா? எப்படி இருக்கின்றாள்? சரிதான் நண்பரே! நமக்கு சில யதார்த்தா சிக்கல்கள், பணிகள் வரும் போது இது போன்ற குழப்பங்கள், எழுதுவதற்கான மூட் வராமல் போவது இயல்புதான். தாங்கள் இதை மீள் பதிவு இடுங்கள் வாசிக்கின்றோம். உங்கள் கதைக் கரு நல்ல திரைக்கதைக்கு வழி வகுக்கின்றது. அதனால்தான்....நீங்கள் ஒரு நல்ல க்ளைமாக்ஸ் யோசித்து கொடுங்கள். நிதானமாக..ஏனென்றால், காமெடி, திரில்லர் இரண்டுக்குமே நல்ல அமைதியான சூழல் வேண்டும். ஒரு வேளை நம்ம திரைப்படக் கதாசிரியர்கள், திரைக்கதை எழுதுபவர்கள் எல்லாம் தனிமை நாடிச் சென்று ரூம் போட்டு எழுதுவதன் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என்று நாங்களும் பல தடவை நினைத்துள்ளோம்.

      மிக்க நன்றி சுரேஷ். வாழ்த்துக்கள்!

      Delete
    3. நன்றி நண்பரே! மகள் இன்னும் முழுவதும் குணமடையவில்லை! சுமாராக இருக்கிறாள். தொடர் வருகைக்கும் உற்சாகப்படுத்தும் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நான் மிகவும் கடன்பட்டுள்ளேன்! மிக்க நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!