நேபாள பூகம்பமும் சர்ச்சை வாரமும்! கதம்ப சோறு பகுதி 59

கதம்ப சோறு பகுதி 59

நேபாள பூகம்பம்:

         அண்டைநாடான நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவிட்டது சோகம். இன்னும் அதிகாரப்பூர்வமாக இத்தனைபேர் என்று தகவல் வராவிடிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவலை அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இயற்கையின் சீற்றங்கள் எப்போது வரும் என்று சொல்லவும் முடியாது கணிக்கவும் முடியாது. இயற்கையை மாசு படுத்துகையில் அது பொங்கி எழும்போது நம்மால் தாங்கமுடிவதில்லை! நேபாளத் தலைநகரையே இந்த சீற்றம் மாற்றிப் போட்டுவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உணவின்றி உடையின்றி இருப்பிடம் இன்றி அடிப்படைவசதிகள் இன்றி தவித்துவருகின்றனர்.தமிழர்கள் 37 பேரின் நிலை தெரியவில்லை. தொலைதொடர்பு நிறுவனங்கள் சில சலுகைகளை மனிதாபிமானத்துடன் அறிவித்துள்ளதும் இந்திய அரசு உதவ முன் வந்திருப்பதும் பாராட்டுக்குரியது. இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்டுவர பிரார்த்திப்போம்!

மீண்டும் ஆச்சார்யா!

    கர்நாடாகவில் நடைபெற்றுவரும் அம்மா வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் முதல் அடியைக் கொடுத்தது. இரண்டாவது அடியாக இப்போது பழைய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை மீண்டும் அரசுவழக்கறிஞராக நியமித்துள்ளது. இது அம்மாவிற்கு மிகவும் பின்னடைவே! வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவந்துவிடும் என்றே தோன்றுகிறது. தீர்ப்பு எதிராக அமைந்தாலும் உச்ச நீதிமன்றம் செல்லலாம். ஆனால் அதற்குள் அரசியல் நிலைமைகள் மாறிவிடும். இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் கபட வேடதாரிகள் பலருக்கும் ஓர் எச்சரிக்கையாக அமையும் என்றே தோன்றுகிறது. ஓர் தைரியமான பெண்மணியின் அரசியல் வாழ்க்கையை இறுதி செய்யக் கூடிய தீர்ப்பாக இந்த வழக்கு அமைந்துவிட்டிருப்பது வேதனைக்குரியது. அதிமுகவின் எதிர்காலமும் இந்த வழக்கின் முடிவை பொறுத்துதான் அமையும். பார்ப்போம்!

விஜயகாந்த் காமெடி அரசியல்!

         தமிழக அரசியலில் விஜயகாந்த் ஓர் ஜோக்கராகவே பார்க்கப் படுகின்றார். தன்னுடைய வாய்ப்புகளை அவராகவே கெடுத்துக் கொள்கிறார். திடீரென எதிர்கட்சிகளை போய் சந்தித்தது. மேகதாது அணை கட்டுவதை தவிர்க்க எதிர்கட்சிகளோடு சென்று பிரதமரை சந்தித்து மனுகொடுத்தது என்று ஏகத்திற்கு பில்டப் செய்து டெல்லிக்கு போன விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் தனது வழக்கமான பாணியில் செய்தியாளர்களை ஏகவசனத்தில் தாக்கி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டுள்ளார். புதிய கட்சியாக இருந்தாலும் இந்த பிரதமர் சந்திப்பு விஷயத்தில் விஜயகாந்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடன் கலந்து கொண்ட திமுகவிற்கும் பெருத்த அவமானம் ஆகிப்போனது. இது பா.ஜ.கவின்  சதியோ என்று எண்ணும் அளவிற்கு அது யோசிக்கத் துவங்கியுள்ளது. அரசியலில் அனுபவமற்ற போக்கையே விஜயகாந்தின் அணுகுமுறை காட்டுகின்றது. விரைவில் தேர்தல்வரவுள்ள நிலையில் நல்லதொரு வாய்ப்பை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

தாலி சர்ச்சை!

   கருஞ்சட்டைக் காரர்கள் தீடீர் என்று தாலி சர்ச்சையை கையில் எடுத்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளார்கள். தாலி ஆரியர்கள் வழக்கம் தமிழர் பண்பாட்டில் தாலி இல்லை. தாலி அகற்றப் போகிறோம்! தமிழ் பெண்களே தாலி அணியாதீர்கள் என்று களத்தில் குதித்துள்ளார்கள். அது அவர்கள் விருப்பம். தமிழர்களுக்கு தமிழர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.அதை ஏற்பதும் விடுவதும் தமிழர்களின் விருப்பம். இதோடுவிட்டால் பரவாயில்லை! பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. பிராமணர்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.என்று அவர்கள் மேல் பொங்கி வழிகிறார்கள். அத்தோடும் விடவில்லை! பூணுல் அணிந்த வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து தாக்கி பூணூலை அறுத்து எறிந்து இருக்கின்றனர். இதன் மூலம் என்ன சொல்கிறார்கள் பூணூல் அறுத்துவிட்டால் அவன் பிராமணன் இல்லாது போய்விடுவானா? அல்லது அப்படி செய்துவிட்டால் மூடப்பழக்கங்கள் எல்லாம் ஒழிந்துபோய்விடுமா? பிராமணன் செய்வது சொல்வது எல்லாம் மூடப்பழக்கம் என்றால் மற்றவர்கள் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாகவில்லையா? ஆதியில் ஆடையில்லை! மொழியில்லை! வெந்த உணவில்லை! பிறகு நாகரிகம் வளர ஒவ்வொன்றாய் வந்தது. அப்படி வந்த ஒன்றாக தாலி இருக்கலாம். விரும்பியவர்கள் அணியட்டும். வேண்டாதவர்கள் மறுக்கட்டும். இதை பிரசாரம் செய்யுங்கள் மறுக்கச் சொல்லுங்கள். அதைவிட்டு எதற்கு பார்ப்பணர்களை வம்புக்கிழுக்க வேண்டும். உங்கள் இயக்கத்தினர் வழிபாடு கூடாது என்ற கருத்தினர்.ஆனால் இன்று வழிபாடு செய்பவர்களே உங்களது இயக்கமாக இருக்கிறார்கள். உங்கள் இயக்கத்தில் பிரிந்த தலைவர்கள் வழிபாட்டை விரும்புகின்றனர். இன்னொரு இயக்கத்தில் யாகங்கள் ஹோமங்கள் எல்லாம் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதெல்லாம் செய்தால் பார்ப்பானுக்குத்தானே லாபம்? ஏன் செய்கிறீர்கள் என்று அந்த தலைவர்களிடம் கேட்கத் துணிவில்லாத உங்கள் பகுத்தறிவு அப்பாவி கிழ பிராமணன் பூணூலை அறுக்க மட்டும் வந்துவிட்டதா? பார்ப்பாணையும் பாம்பையும் ஒருசேரக் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டுமாம். பார்ப்பானை அடித்துவிட்டு பாம்பைபிடித்து கொஞ்சிப் பாருங்கள் கடிக்கிறதா கொஞ்சுகிறதா என்று தெரியும். பகுத்தறிவு வாதிகளே உங்களுக்கு உண்மையிலேயே பகுத்தறியும் திறன் இருப்பின் பகுத்து அறிந்து பாருங்கள்! பார்ப்பணனை திட்டிப் பேசி பகுத்தறிவாளர்கள் என்று மார்தட்டிகொள்ளாதீர்கள்! அதே சமயத்தில் இந்து முன்னனிக்காரர்களே! நீங்களும் முடிந்தால் அவர்களின் பகுத்தறிவை விளக்க பாருங்கள் அதைவிட்டு பெரியார் படத்தை விளக்குமாற்றால் அடிப்பது? செருப்பால் அடிப்பது? சிறுநீர் கழிப்பது, கொடும்பாவி எரிப்பது போன்றவற்றை செய்து இழிவு படுத்தாதீர்கள்!   கொள்கைகளை எதிர்க்கலாம் விவாதங்கள் நடந்தால் தெளிவு பிறக்கும். உங்களின் சண்டையினால் தேவையற்ற  விரோதங்கள்தான் பிறக்கும். உங்களுக்கு பெரியாரை பிடிக்க வில்லை என்றால் நாகரிகமாக அவரை அவரின் கருத்துக்களை விமரிசியுங்கள்! கீழ்த்தரமாக இறங்கி தரம் தாழ்ந்து போகாதீர்கள். பெரும்பாலும் இதைச்செய்வது கூலிக்கு மாரடிப்பவர்களாகத்தான் இருக்கும். கூலிக்கு என்றாலும் கொஞ்சம் பகுத்தறிந்து செயல்படுங்கள் தாய்மார்களே!

கிச்சன் கார்னர்:
அவல் கிரஞ்சி

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை 1 கப், வெள்ளை அவல் 1 கப், உருளைக்கிழங்கு 4, பச்சைமிளகாய் 6,  இஞ்சி சிறுதுண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சிறிதளவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு.
அவலை ஊறவைத்து பிழியவும், வேர்க்கடலையை வறுத்து மாவாக பொடிக்கவும், உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சைமிளகாய் வேர்க்கடலைபொடி, ஊறிய அவல், கறிவேப்பிலை, கொத்துமல்லி உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அவல் கிரஞ்சி தயார்.
ரெசிபி உபயம்: வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர், நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
இனிப்பு பண்டங்கள் வைத்திருக்கும் டப்பியில் எறும்பு சுற்றுகிறதா? அந்த டப்பியைச் சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால் எறும்பு அண்டாது.
சுளுக்கு ஏற்பட்டால் குளிக்கும் முன் சுளுக்கு உள்ள இடத்தில் விளக்கெண்ணை விட்டு நீவி பதமான வெந்நீரால் கழுவி விட்டால் சுளுக்கு போயே போச்!
பாலித்தீன் பைகளால் சுற்றுச் சூழல் கெடுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்குகையில் பாலிதீன் பையில் வாங்காமல் நம் இல்லத்தில் இருந்து துணிப்பை அல்லது நார்ப்பை கொண்டு சென்று வாங்கலாமே!
அப்பளத்தை ப்ரிட்ஜில் வைத்து எடுத்து பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
குளிர்சாதனப் பெட்டியில் கரித்துண்டுகளை போட்டு வைத்தால் துர்நாற்றம் மறைந்துவிடும்.

பதிவர் அறிமுகம்:
  விசு ஆவ் செம் மின் துணிக்கைகள். 
அமெரிக்காவில் வசிக்கும் இந்த தமிழ்பதிவர் ஓர் பேராசிரியர்! நகைச்சுவை மிளிர பதிவுகள் எழுதுவதில் சமர்த்தர். தற்சமயம் ஒரு புத்தகமும் வெளியீடு செய்ய உள்ளார். சமீப காலமாக இவரது பதிவுகள் என் டேஷ் போர்டில் வரவில்லை! அதனால் படிக்கவில்லை! இந்த அறிமுகத்திற்காக தேடுகையில் அவரது தளம் மாற்றம் அடைந்துள்ளதை காணமுடிந்தது. இவரது தளத்தில் இந்த பதிவை படித்துப் பாருங்களேன்!  விசு ஆவ்செமின் மின் துணிக்கைகள்!

திரிஷாவும் திருமண முறிவு சர்ச்சையும்!

    தமிழ் சினிமாவில் த்ரிஷா எப்போதுமே சர்ச்சைக்குரிய ஓர் நடிகைதான்! நம்பர் ஒன் நடிகையாக இருந்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். அவரோடு பலர் கிசுகிசுக்கப்பட்டனர். தெலுங்கு நடிகர் ராணாவுடன் நெருக்கமாக பழகினார் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தொழிலதிபர் வருண் மணியனுடன் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தமும் நடந்தேறியது. இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். இதற்கிடையில் இருவரும் திருமணத்திற்கு முன்னரே பிரிந்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இருவருமே இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடா விட்டாலும் டிவிட்டரில் இந்த விஷயம் பெருமளவில் பரப்பப்பட்டு வருகிறது. திறமையான நடிகையாக இருந்தாலும் அவரது சொந்த விஷயமான இதை கிண்டல் பண்ணுவது வேதனையான ஒன்று. பிரபலங்களாக பிறந்துவிட்டாலே தொல்லைதான். வதந்தியோ உண்மையோ அது அவர்களுக்குத் தெரியும். அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் மீடியாக்களுக்குத் தெரியுமா அவர்களின் வலி?

வைரமுத்து- ஜெயக்காந்தன் சர்ச்சை!

    காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஓர் இலக்கிய ஆளுமை என்பதில் நுனியளவும் சந்தேகம் இல்லை! முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்ந்து மறைந்த அந்த எழுத்தாளர் மறைந்து போனதன் ஈரம் காயும் முன்னரே பப்ளிசிட்டிக்காக அவர் கடைசியாக எழுதிய எழுத்து என்று குமுதம் வார இதழ் ஓர் கடிதம் வெளியிட்டது. அதில் அவர் வைரமுத்து குமுதத்தில் எழுதிவரும் சிறுகதைகளை பாராட்டி எழுதி இருந்தார். வைரமுத்துவிற்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றோ குமுதம் பப்ளிசிட்டிக்காகவோ இந்த கடிதம் வெளியிட்டிருக்கிறது என்றொரு சர்ச்சை. ஜெயக்காந்தனின் மகள் கடந்த ஒருவருடமாகவே தன் தந்தை பேச எழுத ஆற்றல் இல்லாமல் இருந்தார். அந்த கடிதம் அவர்களாகவே எழுதிக்கொண்டு என் தந்தையின் கையோப்பம் வெட்டி ஒட்டியிருக்கின்றனர் என்று சொல்லுகிறார். வைரமுத்துவிற்கு இது போன்ற ஆசைகள் அதிகம். கவியரசு பட்டம் கண்ணதாசனுக்கு என்றால் தான் கவிப்பேரரசு என்றார். குமுதமும் இது போன்ற குறும்புகள் செய்வதில் எப்போதும் சமர்த்து. இந்த சர்ச்சையினால் குமுதம் பிரதிகள் விற்பனை கூடியிருக்கும் எல்லாம் வியாபாரத் தந்திரம். விஜய் டீவி டி. ஆர்பிக்காக ரியாலிட்டி ஷோவில் செய்யும் தில்லு முல்லுகளின் ஆரம்பமே இப்படி பத்திரிக்கைகள் செய்வதுதான். இதையெல்லாம் வாசகர்கள் பெரிது படுத்தாமல் இருந்தாலே காலப்போக்கில் மறந்து போகும்.

படிச்சதில் பிடிச்சது:

காகங்களின் கணக்கு!
ஒருநாள் மாலை அக்பர் பீர்பால் மற்றும் அமைச்சரவை சகாக்கள் மாலைப்பொழுதை ஜாலியாக போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.
அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. “ நம் ஊரில் எத்தனை காகங்கள் உள்ளன என்று உங்களால் மிகச்சரியாக கூற முடியுமா? என்று அமைச்சரவை சகாக்களைப் பார்த்துக் கேட்டார்.
“ அது சாத்தியமில்லை” என்று மற்றவர்கள் மறுத்துவிட்டனர்.
“பீர்பால் உங்களால் சொல்ல முடியுமா?”
“ஒருநாள் அவகாசம் கொடுங்கள்”
மறுநாள் பீர்பால் அவைக்கு வந்து 83 ஆயிரத்து 575 காகங்கள் என்று கணக்குச் சொன்னார்.
“ இது சரிதானா? கூடுதலாக இருந்தால்?”
“பக்கத்து ஊர் காகங்கள் நம் ஊருக்கு வந்திருக்கும்” என்றார் பீர்பால்.
“குறைவாக இருந்தால்?”
நம் ஊர் காகங்கள் வெளியூருக்குச் சென்றிருக்கும் என்றார் பீர்பால்!
அக்பர் பீர்பாலின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டு மகிழ்ந்து பரிசளித்து மகிழ்ந்தார்.
(சிட்டுக்களுக்கான குட்டிக்கதைகள் என்ற நூலில் இருந்து)

தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Comments

  1. நேபாள் மக்களுக்காக பிரார்த்திப்போம் நண்பரே..

    விடிவு காலம் பிறக்கட்டும்.

    உண்மையிலேயே ஜோக்கர்தான்.

    பார்ப்பாணையும் பாம்பையும் ஒருசேரக் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடிக்க வேண்டுமாம். பார்ப்பானை அடித்துவிட்டு பாம்பைபிடித்து கொஞ்சிப் பாருங்கள் கடிக்கிறதா கொஞ்சுகிறதா என்று தெரியும்.

    வைரமுத்துக்கு பித்து பிடித்து விட்டகு போல...

    பீர்பால் கதை அருமை.

    ReplyDelete
  2. நேபாள் மீண்டு வர பிரார்த்திப்போம் ..
    பிராமணர்களை விமர்சிப்பது வேறு பிராமணீயத்தை விமர்சிப்பது வேறு... இது தெரியாவிட்டால் பிரச்சனைதான்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    நேபாள் மீண்டும் துளிர் விட இறைவனைப்பிராத்திப்போம். சொல்லிய ஒவ்வொரு சர்ச்சையும் வித்தியாசம்... பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நேபாள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன். கதம்பம் சோறு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. அறிவு முதலில் இருந்தால் தானே பகுத்து அறிவது...?

    குட்டிக்கதை அருமை...

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு.

    நேபாள் மக்களுக்காக பிரார்த்திப்போம். இயற்கையை பாதுகாப்போம்.

    ReplyDelete
  7. பீர்பால் , தான் சொன்ன காக்கைகள் எண்ணிக்கையை வேண்டுமானால் யாரை வேண்டுமானாலும் விட்டு 'செக்' செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக தகவல் :)

    ReplyDelete
  8. பீர்பால் , தான் சொன்ன காக்கைகள் எண்ணிக்கையை வேண்டுமானால் யாரை வேண்டுமானாலும் விட்டு 'செக்' செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக தகவல் :)

    ReplyDelete
  9. கதம்பத்தில் இன்று ஏகப்பட்ட விஷயங்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!