அன்புடை நெஞ்சம்! குமுதம் கொன்றை இலக்கியச் சிறுகதைப் போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசுபெற்ற என்னுடைய சிறுகதை

 

அன்புடை நெஞ்சம்!

 


புலர்ந்தும் புலராத அந்த அதிகாலைப்பொழுதில்  ஏதோ சப்தம் கேட்டு கண்விழித்தாள் கமலி. வாசலில் குவாலிஸ் கார் வந்து நின்றிருந்தது. முகுந்தன் அப்போதே குளித்து உடை தரித்து தயாராக இருந்தான். வெள்ளைக்கோட்டும் ஸ்டெத்தாஸ் கோப்பும் எடுத்து மாட்டியவாறு கிளம்பிய அவன் கமலி விழித்ததை பார்த்துவிட்டு, “ ! முழிச்சிக்கிட்டியா! பை கமலி! ஆஸ்பிடலுக்கு அவசரமா கிளம்பிட்டு இருக்கேன்.. அப்புறம் போனில் பேசறேன்என்று கிளம்பிவிட்டான்.

 இது எப்பொழுதும் நடப்பதுதான்! ஏதாவது அவசரகேஸ் சமயம் அவளை எழுப்பாமல் நள்ளிரவில் கூட அவன் சென்றதுண்டுதான். இருவரிடமும் தனித்தனி சாவிகள் உண்டு. எனவே அவன் வெளியே பூட்டிச்சென்றுவிட்டாலும் இவள் விழித்ததும் இவள் அன்றாடப்பணிகளை செய்வதில் எந்த  சங்கடமும் இல்லை. ஆனால் இப்போது அவளுக்கு என்னமோ செய்தது.

   என்னமோ ஏதோ? நம்மிடம் சொல்லாமல் செல்கிறானே? ஊரெல்லாம் கொரானா பீதியாக இருக்கிறதே! ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் அவசரமாக செல்கிறான் என்றால் ஒருவேளை..!

அவள் சோர்ந்து போனாள். கணவன் விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என்று நரசிங்கப்பெருமாளை வேண்டிக் கொண்டாள். முகுந்தன் அந்தப்பகுதி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவன். அவன் கொண்ட கடமையில் தவறாதவன், நோயாளிகளிடம்  பழகுவதாகட்டும் பெரிய அதிகாரிகளிடம் பழகுவதாகட்டும் அவர்களின் குணமறிந்து பொறுமையாக தன் கருத்தை எடுத்து வைப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் திறமையானவன். குறிப்பாக ஏழை எளிய மக்கள் அவனை மிகவும் விரும்பினார்கள்.

 முகுந்தன் அந்த தாலுக்கா மருத்துவமனையில் பணியேற்றபோது பெரும் சுகாதாரக்கேடாக  மருத்துவமனையே ஓர் நோய் உருவாக்கும் தலமாக இருந்தது, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சீர் செய்து இன்று  அவசர சிகிச்சைப்பிரிவு என்று ஓர் புதிய பிரிவும் அதற்கான கட்டடத்தையும் கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு காத்திருக்கையில் தான் நாட்டையே ஏன் உலகத்தையே கொரானா என்ற கிருமி தாக்கத்துவங்கி இருந்தது.

 கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொற்று நோய் இந்தியாவில் பரவி தமிழகத்தையும் தாக்க இந்தியாவெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மருத்துவர் என்ற முறையில் முகுந்தன் மருத்துவமனைக்குச்செல்ல வேண்டியிருந்தது.

கொரானாவின் செய்திகளை விபரீதங்களை ஊடகங்கள் வாயிலாக பார்த்து பயந்து போன கமலி கணவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.  வேணாங்க…! ஒரு மாசமோ பதினைஞ்சு நாளோ லீவ் எடுங்க! ஆஸ்பிடல் போக வேண்டாம்! வீட்டிலேயே இருங்க…!

   அவளது தலையை வருடிக்கொடுத்த முகுந்தன் கேட்டான்ஏம்மா! ?

கொரானான்னு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா?

கமலி! படிக்காத மக்கள் போல படிச்ச நீயும் பயந்துப்போயிட்டியா?”

கொரானாவுக்கு படிச்சவன், படிக்காதவன், ஏழை பணக்காரன் எந்த பேதமும் கிடையாது. பிரிட்டிஷ் இளவரசரையும் அது தாக்கி இருக்குது! பிரான்ஸ் இளவரசி செத்தே போயிட்டாங்க! சாதாரண ஒரு கூலித்தொழிலாளியையும் தாக்குது! அது டாக்டர்கள் பலபேரையும் விட்டுவைக்கலை! நமக்கு கல்யாணமாகி மூணு மாசம்தாங்க ஆகுது! எனக்கு பயமா இருக்குங்க!”

லிசன் கமலி! ஒத்துக்கறேன்! நீ சொல்றது எல்லாத்தையும் ஏத்துக்கறேன்! ஆனா லீவ் மட்டும் போட மாட்டேன்! அனாவசியமா இதுவரைக்கும் லீவ் போட்டதே இல்லை! இனி போடவும் மாட்டேன். டாக்டரான நானே பயந்து லீவ் போட்டா பாமர மக்களை காப்பாத்தறது யாரு? எனக்கு ஒண்ணும் ஆகாது! பயப்படாதே! “

  ..இல்லே முகுந்த் ஒனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியா.. முடிக்கும் முன்னே விசும்பினாள்.

 லூசுஅழாதே! உன் புருஷனுக்கு ஒண்ணும் ஆகாது! யாம் டாக்டர்! என்னை காப்பாத்திக்க எனக்குத்தெரியும். டாக்டரா என்னோட கடமையை செய்ய விடு! “

அரைமனதோடு தலையாட்டினாள் கமலி.

அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதோடு அம்மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி  மாவட்ட எல்லைகளில் இரவு ரோந்துப்பணி கண்காணிப்பு செய்வதிலும் ஈடுபட்டவன் சிலநாட்களாய் வீடு திரும்புவதே நள்ளிரவு கடந்த பின்னரே

    அசதியோடு வரும் அவன் அந்த நள்ளிரவிலும் குளித்து படுக்க வரும்போது சோர்வாக இருப்பான். அந்த சோர்வே தெரியாதவகையில் காலை 8 மணிக்கெல்லாம் மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பிவிடுவான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அந்தமாவட்டத்தில் இதுவரை யாரும் கொரானாவில் பாதிக்கப்படவில்லை! அதிலும் இவள் இருந்த தாலுக்காவில் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. கடவுளே எப்படியாவதுகொரானாவைஇந்த உலகத்தைவிட்டு துரத்திவிடு என்று பிரார்த்தித்து கொண்டாள் கமலி.

  எல்லாம் ஒரே நாளில் மாறிவிட்டது.

திடீரென்று பாதிப்பு அதிகமாகிவிட்டது. முகுந்த் சில நாட்கள் வீட்டிற்கு வருவதே குளித்து உடைமாற்றிச்செல்வதற்கே என்றானபோது  மிகவும் வருத்தமுற்றாள் கமலி.

அவளுக்கு பழைய நினைவுகள் கிளம்பியெழுந்தன. கல்யாணமாகி தேனிலவுக்கு ஊட்டி சென்று வந்ததும் அங்கே அவன் அவளை கையில் வைத்து தாங்கியதும்  நினைவுக்கு வந்து துன்புறுத்தின. அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று ஏங்கினாள்.

ஊட்டி மலை ரயிலில் சுற்றி வந்ததும் மலர்க்கண்காட்சியில் பூக்களை ரசித்து மகிழ்ந்ததும் கிட்டே பறக்கும் மேகங்களை  துரத்தி பிடிக்க முயற்சித்ததும் ஒரு குழந்தை மாதிரி கவலையே இல்லாமல் துள்ளித்திரிந்த நாட்கள் அவை ஒருவாரம் போனதே தெரியவில்லை! இன்னும் சிலநாட்கள் அங்கே இருக்கமாட்டோமா? என்று ஏங்க வைத்தது அப்போதும் அவன் கடமையிலே கருத்தாய் இருந்தான். லீவ் முடிஞ்சு போச்சு டூட்டியிலே ஜாய்ன் பண்ணனும் என்றதும் அவள் முகம் வாடிப்போனது.

  ஏய்! இதுக்குப் போய் ஏன் வருத்தப்படறே? ஒரு ரெண்டு மாசம் போகட்டும்! திரும்பவும் லீவ் போட்டுட்டு இங்கே வரலாம்! எங்கே சிரி! சிரி! என்று அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தான்.

   இதோ மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. மீண்டும் எப்போது ஊட்டிக்கு பயணப்பட போகிறோம்?

   ஊட்டிக்கு கூட வேண்டாம்! இந்த  ஊரே அடங்கியிருக்கும் நேரத்தில் அவன் தன்னுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!  யோசித்தபடி இருந்தவள் தூங்கிப்போனாள்.

அந்த விடியலில் நான் கமலியிடம் சொல்லாமல் புறப்படுவதற்கு காரணங்கள் இருந்தது. சொன்னால் மிகவும் பயந்து போவாள். சின்னப்பெண் ஒன்றும் அறியாதவள் கணவனே எல்லாம் என்று நம்புபவள். இப்போதைக்கு எதையும் அவளிடம் சொல்லி பீதி உண்டாக்க வேண்டாம் என்று வழக்கம் போலவே கிளம்பிவிட்டேன்.

வந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் வாகனம் கிளம்பி வேகம் எடுத்தது. என் நினைவுகளும் வேகம் எடுத்தது.  ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை எடுத்து டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கையில் ஏழ்மை மிகவும் அதற்கு தடைக்கல்லாக இருந்தது.

நல்லவேளை ஊடகங்களும் நல்ல உள்ளங்களும் என் நிலையை அறிந்து உதவின  அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பின் ஐந்துவருடங்கள் வேறு எதையும் நான் நினைத்துப்பார்க்கவில்லை. படிப்பு ஒன்றே குறியாக இருந்தேன். படித்து முடித்து பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து பட்டத்துடன் வெளியே வந்தபோது பல மருத்துவமனைகள் என்னை அணுகின. ஆனாலும் அரசு மருத்துவராக ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன்.

விருப்பப்படி அரசு மருத்துவராகி ஊரகப்பகுதிகளில் சில ஆண்டுகள் பணி செய்து இந்த மருத்துவமனைக்கு பணி மாறிய போதுதான் வீட்டில் கல்யாணப் பேச்சு எடுத்தார்கள்.

தூரத்து உறவான இந்த பெண்ணை உனக்கு மணமுடிக்கலாம் என்று எண்ணியுள்ளோம்! உன் எண்ணம் என்ன? என்று போட்டோவை காட்டினார்கள். அந்த சிரித்த  கள்ளம் கபடமற்ற முகமும் விரிந்த கூந்தலும் அப்போதே என்னை கவர்ந்துவிட்டது.

பெண்பார்க்கும் படலம் முடிந்து உடனே திருமணமும் ஆகிவிட்டது. அவளை ஒரு ராணி போல நடத்தினேன். அவள் விரும்பியது எல்லாவற்றையும்  என்ன விலை கொடுத்தாகிலும் வாங்கி கொடுக்கத்தயாராக இருந்தேன்.

ஊட்டியில் விடுமுறை முடிந்து கிளம்பும் சமயம் அவள் முகம் வாடிவிட்டது. அந்தவாட்டத்தை பார்த்து அதிகம் வாடியது நான் தான். ஆனால் என் கடமை என் காதலை தோற்கடித்தது.

 ஒரு மூன்று மாதத்தில் திரும்ப வருவோம் என்று வாக்களித்தேன்! ஆனால் மூன்று மாதத்தில் நிலைமை இப்படி மாறும் என்று நினைக்கவில்லை! கொரானா என்ற கொடியவன் வில்லனாக வருவான் என்று அப்போது எனக்குத்தெரியாது.

   ஊரடங்கு அமலில் இருக்க இரவு ரோந்துப்பணியிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்தேன். இப்போது வேறு ஒரு பணி என்னை அழைக்கிறது. இதைச்சொன்னால் கமலி என்னை பணிக்குச்செல்ல அனுமதிக்கமாட்டாள். இதை அவளிடம் சொல்லி அவள் அழுகை முகத்தை பார்க்க என் மனம் திடமாக இல்லை. எனவேதான் அவளிடம் எதையும் சொல்லாமலே கிளம்பிவிட்டேன்.  நள்ளிரவு நேரத்திலாவது நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இனி அதுவும் நடக்குமா? இன்னும் எத்தனை நாளாகுமோ?

வண்டி அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்தது. அந்த காலை வேலையிலும் செவிலியர்களும் ஊழியர்களும் சில உதவி மருத்துவர்களும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தனர். புதிதாக கட்டிமுடித்த அறுவை சிகிச்சை கட்டிடம் கொரானா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு இருந்தது. அங்கே சிலர் கொரானா தொற்று இருக்குமா என்று சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு வந்திருந்தனர். அவர்களை சோதித்தறியும் பணியை மருத்துவர்கள் செய்து கொண்டிருக்கையில் நான் உள்ளே நுழைந்தேன்.

  குட்மார்னிங் டாக்டர்….!

உதவி மருத்துவர் மைதிலி வரவேற்க குட்மார்னிங் டாக்டர் என்று என் அறைக்குள் நுழைந்து கையுறைகள் முகக்கவசங்கள்  தரித்தபடி கேட்டேன். அந்த பாசிட்டிவ் பேஷண்டை தனிமைப் படுத்திட்டீங்களா?

எஸ் டாக்டர்?

அந்த பேஷண்ட்டுக்கு தேவையான மெடிசன்ஸ் கேஸ் ஹிஸ்டரியை எடுத்துக்கிட்டு என்னோட வாங்க!  உத்தரவிட்டு  கொரானா பாஸிட்டிவ் பேஷண்ட் இருந்த அறைக்குள் நுழைந்தேன்.

  உடல் முழுக்க  கவசத்தோடு அந்த பேஷண்ட் படுக்கையில் படுத்திருக்க நான் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தேன்.

 

எப்போது உறங்கினேனோ விழித்தபோது  படுக்கையறையின் கண்ணாடி ஜன்னல் வழியே சூரியன் முகத்தில் அறைந்தது. எழுந்து பல்விளக்கி சூடாக ஒரு கப் காபி கலந்து பருகியபோது முகுந்தின் நினைவு வந்தது

விடியற்காலையில் போனாரே! காபி சாப்பிட்டு இருப்பாரா? நான் ஒரு முட்டாள் காலையில் அவர் கிளம்பும்போது முழித்துக் கொண்டேனே ஒரு கப் காபி கலந்து தந்து அனுப்பி இருக்க கூடாதா? ச்சே! சுத்த சோம்பேறி…! கணவனை பசியோடு அனுப்பிவிட்டு இப்போது நான் காபி சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.. சரி ஒரு போனாவது பண்ணுவோம்!

போன் செய்தாள். சில நொடிகள் ரிங்கான போன் கட் ஆனது

மீண்டும் போன் செய்தாள் ஸ்விட்ச் ஆப்என்று வந்தது.

ஏன் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டான்?  என்னோடு பேசக்கூட நேரமில்லாமல் அப்படி என்ன வேலை? மனசு வலித்தது,

மீண்டும் இரண்டுமுறை எண்களை அழுத்தி அதே பதில் வரவும் பொறுமை இழந்தாள்.

அவசரமாய் குளித்து உடை மாற்றி மீண்டும் ஒருதடவை போன் செய்தாள். அப்போதும் அதே பதில். எரிச்சலாகி போனை தூக்கி சோபாவில் வீசினாள்.

புதுசாக கல்யாணமான எத்தனை இளசுகளை பார்த்திருக்கிறாள். ஒட்டி உறவாடிக்கொண்டு பைக்கில் செல்வதும் பேருந்தில் ஒரே சீட்டில் அமர்ந்துகொஞ்சிப்பேசிச் செல்வதும் நடந்து போகும்போதுகூட ஒருவரோடு ஒருவர் உரசி சிரித்துக்கொண்டு செல்வது என எத்தனை ஜோடிகளை பார்த்திருப்பாள்.

ஒருமுறையாவது கணவனோடு அவன் இடுப்பை கட்டி அணைத்தவாறு வேகமாக பைக்கில் செல்லவேண்டும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் கணவனோ எப்போதும் சேவை சேவை மருத்துவ சேவை என்று விடிந்தும் விடியாமலும் மருத்துவ மனையில் அடைந்து கிடக்கிறானே என்று நொந்து கொண்டாள்.

போன் அடித்தது.

எடுத்தாள். அவன் தான்.

ஆன் செய்தாள். “ஹாய் செல்லம்! கோபமா? “

பின்னே போன் செய்தா சுவிட்ச் ஆப் செய்வியா?” 

நான் ஒரு முக்கியமான  பேஷண்ட் அட்டெண்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்.”

என்னைவிட அந்த பேஷண்ட் முக்கியமா?”

ஆமாம் கமலிஅந்த பேஷண்டுக்கு வந்திருக்கிறது கொரானா!”

 என்னங்க சொல்றீங்க?”

ஆமாம்! ஒரு கொரானா பேஷண்ட்டுக்கு சிகிச்சை அளிக்கிறதுக்குத்தான் அவ்வளவு காலையிலேயே கிளம்பினேன்.

அதிர்ச்சியடைந்த கமலி, “ஐயோ வேணாங்க! வந்துருங்க! என்றாள்.

பார்த்தியா இப்படி பயப்படப் போறியேன்னுதான் நான் எதுவும் சொல்லலை!”

பயம் இல்லைங்க! ஆனா நீங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்கிற என்னோட நினைப்பு அது.

அந்த நினைப்புக்கு எதுவும் ஆகாது! அந்த பேஷண்டை தனிமை படுத்தியாச்சு! கூடிய சீக்கிரம் க்யூர் பண்ணிடுவோம்!

சரி அப்ப இன்னிக்காவது சீக்கிரம் வீட்டுக்கு வாங்க!

அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.

சீக்கிரம் வந்துருவீங்களா?

இல்லே சொல்ல கஷ்டமாத்தான்  இருக்கு! இன்னும் பதினைஞ்சு நாளைக்கு நான் வீட்டுக்கு வரமாட்டேன். என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன் பேஷண்ட்டுக்கு வைத்தியம் பார்க்கும்போது அந்த கிருமி என்னை பாதிச்சாலும் உன்னை பாதிக்க கூடாது.. நான் இங்கேயே ஒரு ரூம்ல தங்கி குளிச்சு முடிச்சு  என் டுயுட்டியை பார்க்கப் போறேன்.

நீ என்னோட டிரஸ் திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சிரு! அட்டெண்டர் ஒருத்தரை அனுப்பறேன்! அவர்கிட்டே கொடுத்தனுப்பிரு..!

எதுக்கும் பயப்படாதே எனக்கு ஒண்ணும் ஆகாது..பதினைஞ்சு நாள் கழிச்சு நான் வருவேன்..

சொல்ல சொல்ல உடைந்து போனாள் கமலி.

அழாதே கமலி! உன் ஹஸ்பெண்ட் இந்த கொரானாவை எதிர்து போராடப் போறான்! எதிரிகளை எதிர்த்து போராடப்போற ஒரு ராணுவ வீரன் போல கிருமிகளை எதிர்த்து போராடற டாக்டர் நீ என்னை வாழ்த்தி அனுப்பினா நான் இன்னும் உற்சாகமா என் வேலையை செய்வேன்.

கமலி கண்களை துடைத்துக் கொண்டாள்.

அழமாட்டேங்க! உங்களோட நான் எப்பவும் துணையிருப்பேங்க! நானும் வாலாண்டியரா கொரானா விழிப்புணர்வு பணியிலே கலந்துக்க போறேன்! பெஸ்ட் ஆப் லக்!  கொரானாவை ஜெயிச்சிட்டு வாங்க! வரவேற்க காத்துகிட்டிருப்பேங்க என்றாள்.

குட் கமலி! இப்பத்தான் நீ என் பெட்டர் ஹாப்னு நிருபிச்சிருக்கே என்று தொடுதிரையில் முத்தம் பதித்தான் முகுந்த்.

தொடாவிட்டாலும் அந்த உணர்வு கமலியின் நெஞ்சில் கலந்து முகம் சிவக்க போனை அணைத்தாள்.

முற்றும்.

 

குறுந்தொகை 43, ஔவையார் 

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே,
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே,
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.  5

Comments

  1. மனிதாபிமானம் போற்றும் உயர்தரக் கதை. குமுதத்திலும் படித்திருக்கிறேன்.

    பாராட்டுகள். இன்னும் பல பரிசுகளை வென்றிட நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  2. நல்லதொரு கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!