துரத்தும் கனவுகள்!

 

துரத்தும் கனவுகள்!

                 நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

 


 எதோ ஒரு பெரிய கட்டிடம்! ஜனங்களின் இரைச்சல்! சுற்றிலும் கூட்டம் கூச்சல்! கறுப்பு அங்கி அணிந்த உருவம் ஒன்று  வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வாக்குவாதம் கோபமாக உருவெடுக்கையில்  கண்ணிமைக்கும் நேரத்தில் தன் அங்கிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞனில் நெஞ்சில் பாய்ச்சுகிறது. “கத்தியபடியே இளைஞன் சாய அந்த உருவம் விகாரமாக சிரிக்க  அது அது யார், தெரிந்த முகமாகவும்  இருக்கிறது அடையாளமும் காண முடியவில்லையேயார்..? யார் அது..? ” உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தான் கண்ணன்.

  தொடர்ந்து ஒருவாரமாய் இந்த கனவு வருகிறது. கொஞ்சம் கூட காட்சிகள் மாறுவது இல்லை. கனவில் வரும் இளைஞனும் அந்த கறுப்பு அங்கி உருவமும் தெரிந்த முகமாக தெரிகிறது. ஆனால் நினைவுக்கு வருவதில்லை. ஏன் இந்த கனவு? தொடர்ந்து எனக்கு ஏன் வரவேண்டும்?

  அர்த்த ராத்திரியில் எழுந்து  உட்கார்த்திருக்கும் கணவனைக் கண்டு என்னாச்சுங்க! உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? முகமெல்லாம் திகிலடைச்சிருக்கு? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? என்று தோளில் கை வைத்து கேட்டாள். லலிதா.

   சொல்லலாமா? வேண்டாமா? சொன்னாள் பயந்து விடுவாளோ? மனதில் குழப்பங்கள் மேலோங்க இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் என்று முடிவுக்கு வந்தவன். ஆமாம் லல்லி, ஏதோ கெட்ட கனவு? கொஞ்சம் தண்ணி கொடுக்கறியா?

    பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டிலை நீட்டினாள் லலிதா. அதை வாங்கி பாதி பாட்டில் நீரை குடித்து முடித்தான். மணி சரியாக 12.30 காட்டியது. 11.30க்குத்தான் உறங்கியிருக்கிறான். சரியாக ஒரு மணி நேரத்தில் இந்த கனவு. நேற்றும் இதே நேரத்தில்  அதற்கு முந்தின நாளும் இப்படி தொடர்ச்சியாக ஒரு வாரம். ஏதோ நடக்கப்போகிறது. உள்ளுணர்வு சொல்ல அடிவயிறு முட்டிக்கொண்டு நின்றது. எழுந்து பாத்ரூமுக்குள் சென்று வந்தவன் போர்த்திக்கொண்டு படுத்தான் உறக்கம் பிடிக்கவில்லை. லலிதா தூங்கிப்போயிருந்தாள்.

 ஏன்? ஏன்? அந்த கனவு என்னை துரத்துகிறது? யோசித்துப்பார்த்தான்! எதுவும் சிக்கவில்லை! நேரம் கடந்து கொண்டிருந்தது. யோசித்து யோசித்து விடியலில் உறங்கிப்போயிருந்தான்.

   என்னங்க! எழுந்திருக்க! ஆபீஸ் போக வேண்டாமா? மணி ஏழு ஆகுது! என்ற லலிதாவின் குரல் கண்ணனை எழுப்பியது.

    இராத்தூக்கம் கெட்டது விழிகளில் எரிச்சல் பரவ கண்கள் சிவந்து கிடந்தது. எழுந்து பல் துலக்கி விட்டு ஹாலில் அமர்ந்து டீவியில் செய்தி சேனலை போட  ப்ளாஷ் நியுஸ் மின்னியது. ஹைதராபாத் கால்நடை மருத்துவரை பாலியல் வன்முறை செய்து கொன்றவர்களை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளியது போலீஸ் என்ற செய்தியும் அது தொடர்பான காட்சிகளும் ஓடிக்கொண்டிருந்தன.

  நல்ல காரியம் பண்ணியிருக்காணுங்க!” என்று அவன் வாய் முணுமுணுத்தது.

  குளித்து முடித்து ஆபீஸ் கிளம்பும் வேளையிலும் அதே நியுஸ் ஓடிக்கொண்டிருந்தது. இப்படி சுட்டுக்கொன்றது சரியா தவறா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அடச்சே! ஆரம்பிச்சிட்டானுங்களா அலப்பறையை? என்று நொந்தவாறே ஆபீஸ் கிளம்பியவன். இன்று இந்த கனவுக்கு எப்படியும் விடை காண வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

      மாலையில் வீடு திரும்புகையில் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போனதாக செய்தி ஓட  அந்த சோக செய்தியின் ஊடே ஒரு சிறுமியை  நிற்கவைத்து  ஒரு நிருபர் கேட்டுக்கொண்டிருந்தார். பாப்பா! உன் அப்பா இறந்துட்டார், உன்னோட வீடு இடிஞ்சு போச்சு! புத்தகம் நோட்டு எல்லாம் வீட்டோட போயிருச்சு! இனிமே என்ன பண்ணுவே?

     அந்த பத்துவயது சிறுமி கண்ணீருடன், எனக்கு புத்தகமும் நோட்டும் வாங்கி தந்தா போதும்! நான் நல்லா படிச்சு எங்க அம்மாவை காப்பாத்திருவேன்! என்று சொன்னது.  எல்லாச்சேனல்களும் அதையே திருப்பி திருப்பி காட்டிக்கொண்டிருந்தது.

  டிவீயை அணைத்துவிட்டு கோபத்துடன் நியுஸ் பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அதிலும் அப்படித்தான் கொலை, கொள்ளை, திருட்டு என்று பரப்பரப்பான தகவல்கள் . எப்படி நடந்தது என்று விலாவாரியான தகவல்கள். பிடிபட்டவனின் வாக்குமூலம் என்று பக்கங்கள் நிரம்பிக்கிடக்க தூக்கியெறிந்தான்.

     சாப்பிட்டு உறங்கிப்போனான். உறக்கத்தில் கருப்பு அங்கி அணிந்த அந்த உருவம் இப்போது ஆவேசமாக  அந்த இளைஞனிடம் வாக்குவாதம் செய்கிறது. என்ன அது? அந்த இளைஞனின் கையில்…. ஏதோ இருக்கிறதே அவன் யோசிக்கையிலே  தட்டி எழுப்பினாள் லலிதா.

     என்னங்க? தூக்கத்துலே என்னென்னமோ பேசறீங்க? என்னங்க ஆச்சு உங்களுக்கு?”

  ஒண்ணுமில்லே! ஒரு கனவு? ”

இல்லை!  இது சரியில்லை! இதோட நிறுத்திக்க! இல்லைனா கொன்னுடுவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே…!”

   அதான் சொல்றேன் இல்லே! கனவு…”

ஏதேதோ சீரியல் பார்த்து அதே நினைப்போட தூங்கற எங்களுக்கே எந்த கனவும் வரமாட்டேங்குது! உங்களுக்கு கனவு எப்படி வரும்..?”

   சொன்னா நம்புவியா?”

 சொல்லுங்க! அப்புறம் நம்புறதை பத்தி அப்புறம் யோசிக்கலாம்!”

    ஒருவாரமா ஒரே கனவு! ஏதோ ஒரு இடம் நிறைய ஜனங்க கூடியிருக்காங்க!  ன்னு ஒரே இரைச்சல். அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான். அவன் கையில கூட என்னமோ இருக்கு! அவனை எதிர்த்து ஒரு கருப்பு கவுன் போட்ட ஆசாமி வாதாடுறான்.  கடைசியிலே வாக்குவாதம் முத்தி அந்த கருப்பு கவுன் ஆசாமி அந்த இளைஞனை தன் கவுனில் ஒளிச்சு வைச்சிருக்கிற கத்தியாலே குத்திடுறான்.”

    ஐயையோ!  அப்புறம்…?

அவ்வளவுதான்! அதுக்கப்புறம் முழிப்பு வந்துடுது! ஒவ்வொரு நாளும் இதோட முழிப்பு வந்திடுது! அந்த கனவுலே வர முகம் எல்லாம் பரிச்சயமா இருக்குது! ஆனா யாருன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது!”

   அட வித்தியாசமா இருக்கே!”

உனக்கு ஆச்சர்யமா இருக்கு! ஆனா எனக்கு வேதனையா இருக்கு? இந்த கனவு ஏன் எனக்கு வருது? இந்த கனவு வந்த ஒரு வாரமா எனக்கு தூக்கம் கெட்டுப்போச்சு!”

   முதல்லே ஒரு சைக்கிரியாட்டிஸ்ட் ஒருத்தரை கன்சல்ட் பண்ணிப்பார்ப்போம்!

   என்னை பைத்தியக்காரன்னு சொல்றியா?

நாட்டுலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பைத்தியம்தான்! மனோதத்துவ டாக்டரை பார்க்கிறது ஒண்ணும் தப்பில்லை! நம்ம ஆழ் மனசிலே புதைஞ்சிருக்கிற சில நினைவுகள் தான் கனவுன்னு படிச்சிருக்கேன்! ஓக்கே! நான் என் ப்ரெண்ட்டுக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர்கிட்டே உங்களை அழைச்சிட்டு போறேன்.

    யாரு அந்த டாக்டர்?

டாக்டர் மதன் மோகன்! பேமஸ் சைக்யாட்ரிஸ்ட்!  அவர்கிட்டே அப்பாயிண்ட் மெண்ட் வாங்கிட்டு சொல்றேன்! அதுவரைக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க! வொர்ரிப் பண்ணிக்காதீங்க! வேணும்னா ஸ்லீப்பிங்க் டாப்ளட் யூஸ் பண்றீங்களா?

  நோ நோஅது கெட்ட பழக்கமாயிடும்! வேணாம்! ஏதாவது பாட்டு கேட்டுக்கிட்டே தூங்கிடறேன் என்றவன் செல்போன் எடுத்து காதில் ஹியரிங்கை மாட்டியவாறு  அப்படியே கண் மூடினான்.

    மறுநாள் மாலையிலேயே டாக்டர் மதன் மோகனின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிட்டது.

    வாங்க மிஸ்டர் கண்ணன்! சொல்லுங்க! உங்களுக்கு என்ன பிரச்சனை?”

  கண்ணன் சொல்லி முடிக்கவும்  இண்ட்ரஸ்டிங்க்என்ற மதன்மோகன்

இந்த கனவு எத்தனை நாளா வர்றதா சொல்றீங்க?”

ஒருவாரமா வருது டாக்டர்?”

கனவுலே வர்ற முகத்தை உங்களால் அடையாளம் காண முடியலையா?”

தெரிஞ்ச முகமா இருக்கு டாக்டர்! ஆனா யாருன்னு என்னாலே சொல்ல முடியலை!”

உங்களுக்கு யார் மீதாவது கோபம் இருக்கா?”

கோபமா? எனக்கா? நெவர் டாக்டர்!”

கனவு என்பது நமது ஆழ்மனதில் வெளிப்பாடு! உங்களோட ஆழ்மனசுலே ஏதோ புதைஞ்சு கிடக்கு! அது கனவா வெளிப்படலாம். சரி நீங்க எங்க வொர்க் பண்றீங்க?

 .டி பீல்ட், தரமணியிலே ஒரு .டி கம்பெனியில் டீம் லீடரா இருக்கேன்!”

அப்ப வொர்க் டென்சன் அதிகமா?”

இல்ல டாக்டர் நான் ஜாபை சுமையா கருதறது இல்லே! என் கொலிக்ஸும் டேலண்டானவங்க! அதனாலே இதுவரைக்கும் எந்த டென்சனோ ப்ராப்ளமோ ஜாப்லே கிடையாது.”

 .சீ..! உங்களோட ஹாபீஸ் என்ன? ரிலாக்ஸேஷனுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? டீவி வாட்ச் பண்ணுவீங்களா?”

 மொபைல்ல பேஸ்புக் டிவிட்டர், யூட்யுப் வாட்சப்னு பார்ப்பேன்! சீரியல் எல்லாம் பார்க்க மாட்டேன். நியுஸ் சேனல்ஸ் பார்ப்பேன்.”

   உங்க பேரண்ட்ஸ் என்ன பண்றாங்க?” அவங்க உங்க கூட இல்லையா?”

இப்போது கண்ணணின் கண்கள் கலங்கியது.

       நாலைஞ்சு வருஷம் முன்னாடி அவங்க ஒரு விபத்துலே இறந்துட்டாங்க! ”

  , ஐயம் சாரி…!

 இட்ஸ் ஒக்கே டாக்டர்!”

நியுஸ் சேனல்ஸ் பார்ப்பேன்னு சொல்றீங்க!  நியுஸ் சேனல்ஸ் பத்தி என்ன நினைக்கறீங்க? எந்த சேனல் உங்களுக்கு பிடிச்ச சேனல்?”

  எந்த சேனலும் எனக்கு பிடிக்கலை டாக்டர்? எல்லாம் டி.ஆர்.பிக்காக அலையறானுங்க! எழவு வீட்டிலே கூட என்ன பிடுங்க முடியும்னு பார்க்கிறானுங்க! எல்லாத்தையும் பரபரப்பாக்கி லைவ நியுஸ் போட்டு காசு பண்ணனும்! பாதிக்கப்பட்டவங்களை பத்தி அவனுங்களுக்கு கவலையே கிடையாது!”

  நியுஸ் சேனல்ஸ் மீது ரொம்ப வெறுப்பா இருக்கறீங்க போல!”

   ஆமாம் டாக்டர்! இப்ப எல்லா சேனலும் எக்ஸ்க்ளூசிவ் அது இதுன்னு போட்டு பணம் அள்ளத்துடிக்குது!

இப்ப உங்களை கொஞ்சம் ஹிப்னடைஸ் பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்!

    எதுக்கு டாக்டர்?

உங்க கனவுலே வர்றது யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

இந்த கட்டில்ல படுங்க! மெதுவா கண்ணை மூடுங்க!  மனசை ரிலாக்ஸ் பண்ணுங்க! மூச்சை நல்லா இழுத்து விடுங்க! இப்ப நீங்க தூங்கப் போறீங்க! தூங்குங்க !...

       இப்ப ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி போகறீங்க! உங்க பேமிலியோட ஒரு டூர் போயிட்டு கார்லே திரும்பிக்கிட்டு இருக்கீங்க

   இப்ப என்ன நடக்குது?

 நைட் 12 மணியிருக்கும். ஒரு புதுசா கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கிற பைபாஸ் ரோட்ல நாங்க வந்துகிட்டிருக்கோம்! ரெட் ஹில்ஸ் கிட்டே ஒரு ப்ரிட்ஜ் இருக்கு! அது மேல வேகமா கார் வேகமா வந்துட்டிருக்கு! இன்னும் ஒரு மணி நேரத்துலே வீட்டுக்கு போயிருவோம்னு  நான் நினைக்கிறேன்! பின் சீட்டுலே என்னோட அப்பா- அம்மா- வொய்ப் என்னோட ஒரே பையன் எல்லோரும் தூங்கிட்டுகிருக்காங்க!

   அப்புறம்?

கார் வேகமா போய்கிட்டுருக்கு!  100 கி.மி வேகம். அந்த கண்ட்ஸ்ரக்ஷன் முழுசா பினிஷ் ஆகலை போலிருக்கு  நான் அதை கவனிக்கிறேன்! டிரைவர்ரோட் பினிஷ் ஆகலை…! ப்ரேக்கை போடு

நான் சொல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. முழுவது முடிக்கப்பெறாத அந்த பாலத்தில் இருந்து விழுந்து நொறுங்கியது கார்டிரைவர் என்னுடைய அப்பா- அம்மா- பையன்.. ஸ்பாட்டிலேயே இறந்துட்டாங்க!

  நானும் என் மனைவியும் அதிர்ஷ்ட வசமா நிறைய காயங்களோட பிழைச்சுகிட்டோம்.

   ஆம்புலன்ஸ் வருதுஹாஸ்பிடலைஸ் பண்றாங்க,,, என்னோட நினைவு திரும்புது,,,

   அம்மா- அப்பாபையன்,,, இறந்து போன துக்கம்! கண்ணீரோட இருக்கும் போது

    ஒரு மீடியாக்காரன் மைக் கொண்டுவந்து நீட்டறான்! ஹைவேஸ் டிபார்ட்மெண்ட்டோட அலட்சியம்தான் இந்த விபத்துக்கு காரணமா? உங்க அப்பா- அம்மா- பையனை  இழந்திருக்கீங்க! இது குறிச்சு நீங்க என்ன சொல்லறீங்க? இது அரசாங்கத்தோட மெத்தனம்னு சொல்றீங்களா? அரசுக்கு மக்களோட உயிர் மேல அக்கறை இல்லாததை காட்டுதா? அப்படின்னு அவன் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு கேட்கறான்..”

    என்னாலே கோபத்தை கட்டுப்படுத்த முடியலை…! எல்லாத்தையும் இழந்து தவிக்கிற என் முன்னாடி இந்த கேள்விக்கணைகள் ஈட்டியா குத்துது! அவனை அப்படியே குத்திடலாம்னு பார்க்கிறேன்! என் கண்கள் இருளுது அப்படியே மயங்கிப்போயிடறேன்…”

    ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! அப்படியே மெதுவா கண்ணைத் திறங்க!

கண்ணன் மெதுவாக கண்விழித்து எழுந்து டாக்டரையும் லலிதாவையும் குழப்பமாக பார்த்தான்.

   டோண்ட் வொர்ரி மிஸ்டர் கண்ணன்,  இது உங்க ஆழ்மனதிலே படிஞ்சிருந்த ஒரு படிமம்தான். உங்க குடும்பத்துலே அஞ்சு வருஷம் முன்னே நடந்த விபத்தின் போது மீடியா காரர்கள் உங்க கிட்டே நடந்துட்ட விதம் உங்களை பாதிச்சிருக்கு! அவங்க மேல ஏற்பட்ட கோபம்  உங்க ஆழ்மனசிலே பதிஞ்சு ஒரு கனவா வந்துருக்கு  நீங்கதான் அந்த கருப்பு கவுன் மனிதன், நீங்க கொல்லறது மீடியாவை! மீன், மீடியாவோட ரிப்போர்ட்டரை.

தொடர்ந்து ஒரு வாரமா இந்த கனவு ஏன் வந்தது டாக்டர்?”

  ஒரு வாரமா தொடர்ந்து நியுஸ் சேனல்ஸ்ல லைவ் நியுஸ் பரபரப்பான செய்திகள் வந்திருக்கு! இதையெல்லாம் பாத்ததும் உங்களோட ஆழ்மனசிலே பழைய நினைவுகள் கிளறி இருக்கு! அது கனவா வெளிப்பட்டிருக்கு! தட்ஸ் ஆல்!”

       அப்ப  இந்த கனவு தொடர்ந்து வருமா டாக்டர்?”

நியுஸ் சேனல்ஸ் பார்க்கிறதை தவிர்த்து விடுங்க! அப்படியே நியுஸ் பார்க்கணும்னா கவர்மெண்ட் சேனல் பாருங்க! கொஞ்ச நாளைக்கு சோஷியல் மீடியாக்களை தவிருங்க! நான் கொடுக்கிற மெடிசன்ஸ் எடுத்துக்கங்க!

காலையிலே யோகா, தியானம் பண்ணுங்க! மைண்ட ரிலாக்ஸா வெச்சுக்கங்க! அப்புறம் இந்த கனவு வராது!”

  தேங்க்யூ டாக்டர்! தேங்க்யூ வெரிமச்!  விடைபெற்று சென்ற கண்ணன் ஸ்மார்ட் போனை தூக்கி எறிந்து சாதா போனை வாங்கினான்.  வீட்டில் டீ.வி ரிமோட்டை தூக்கி  தூற எறிந்தான்.

   இப்போதெல்லாம் அவனை கனவுகள் துரத்தவில்லை!


திரு கணேஷ்பாலா 2019 டிசம்பர் மாதத்தில் முகநூலில் வைத்த படத்திற்கு கதை எழுதும் போட்டிக்காக எழுதிய கதை. இக்கதை பரிசு பெறவில்லை.)

 

     

Comments

  1. கதை பரிசு பெறாவிட்டால் என்ன?
    அருமை

    ReplyDelete
  2. கதை நன்று. நல்லதொரு முயற்சி - பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2