பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?

 குழந்தைகளிடன் கவனமாக பேசுங்கள்!

           இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள்! நான் ஐந்து வயது குழந்தையாக இருந்த போது கூட மின்விசிறியைக் கண்டு பயந்தேனாம். ஆனால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஃபேன் இல்லாமல் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. செல்போன், கம்ப்யூட்டர் எல்லாம் மிக சகஜம் ஆகிவிட்டது.

         அந்த காலத்தில் அப்பாவிடம் ஒரு டிரான்ஸிஸ்டர் ரேடியோ இருக்கும். அவரே அசெம்பிள் செய்தது. அதை ஆன் செய்ய கூட நான் மிகவும் யோசிப்பேன்! என் பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது அங்கிருந்த ரேடியோவை மாமாவைத் தவிர யாரும் வைக்க கூடாது. அவர் வைப்பதைத் தான் நாங்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டிருப்போம்.

     2000மாவது ஆண்டில்தான் ரிமோட்டுடன் கூடிய வண்ணத் தொலைக்காட்சியை எங்கள் வீட்டில் வாங்கினோம். அந்த ரிமோட்டைக் கூட  ஓரிருமாதங்கள் நான்  உபயொகப்படுத்தவில்லை என்றால் பாருங்களேன்! மின்னனு சாதனங்களை பயன்படுத்த அவ்வளவு பயம்! ஆனால் இப்போது பிள்ளைகள் பிறக்கும் போதே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

      ஆகையால் பிள்ளைகளிடம் எச்சரிக்கையாக பழகவும் பேசவும் வேண்டும். சின்னவயதில் பதிவது பசுமரத்தாணி போல நெஞ்சில் அப்படியே பதிந்துவிடும். ஆனால் இதை பலர் உணர்வது இல்லை!  தாத்தா பாட்டிகள் கிண்டலாக பேர் சொல்லி டேய்! என்று சொல்லு என்று கற்றுக்கொடுப்பது பலர் முன்னிலையில் அது தன்னை டேய் என்று அழைப்பதை ரசித்து மகிழ்கின்றனர். இப்படி அழைக்கும் சில குழந்தைகளை நான் பார்த்த போது நொந்து போனேன். இது தவறான முன்னுதாரணம்.

            சிறுவயதிலேயே நல்ல பழக்கங்களையும் நல்ல மரியாதைப் பண்புகளையும் கற்றுத்தரவேண்டியது நமது கடமையாகும். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள சொல்வது மிக முக்கியமான கடமையாகும். அதற்கு முன்னுதாரணமாக நாமே நடந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் நமது குழந்தைகளுக்கு  நாமே ரோல் மாடல். நாம் என்ன செய்கிறோமோ அதையே குழந்தைகள் திரும்பச் செய்யும்.

       குழந்தைகள் எதிரில் சண்டைபோடுவதோ தவறான வார்த்தைகள்  உபயோகிப்பதோ கூடாது. பொய் சொல்வதும் கூடாது. நம்முடைய நிலவரத்தை சுக துக்கங்களை குழந்தைகள் புரியும் படிசெய்ய வேண்டும். நாம் பிறரை மரியாதைக் குறைவாக நடத்துவதை குழந்தைகள் பார்த்தால் அதே தவறை அக்குழந்தையும் செய்ய ஆரம்பிக்கும். ஆகவே குழந்தைகள் எதிரில் மற்றவரை  ஒருமையில் விளிப்பதை, தவறாகவார்த்த்தைகள் சொல்லி அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் சிலர் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான தகாத வார்த்தைகளை கற்றுக் கொடுத்து அது பேசுவதை  ரசிக்கின்றனர். இது மிகவும் தவறான ஒன்றாகும். குழந்தை என்பது ஈரக் களிமண் போன்றது. களி மண்ணில் நாம் எந்த உருவம் பிடிக்கிறோமோ அது உருவாகும். நாம் யானை பிடித்தால் யானை, சிங்கம் பிடித்தால் சிங்கம், நல்லதை பிடித்தால் நன்மை, தீயதை பிடித்தால் தீமை உருவாகும். அந்த களிமண் உலர்ந்த பின் அந்த பொம்மையை சரி செய்ய முடியுமா? முடியாது அல்லவா? ஈரமாக இருக்கும் போதே நல்ல வார்ப்பாக உருவாக்கி விடுவதுதானே சிறந்தது.

     என்னுடைய சின்ன வயதில் எங்கள் வீட்டு வேலைக்காரன் ஒருவனை  தந்தை ஒரு கெட்ட வார்த்தைக் கூறி திட்டுவார். அது எப்படியோ என் நாவிலும் புகுந்து கொண்டது. நானும் அந்த வார்த்தையை அடிக்கடி கூறிக் கொண்டிருந்தேன் அது கெட்ட வார்த்தை என்று கூட அறியாமல்!  பிறகு ஏதோ ஓர் விஷேசம் உறவினர்கள் கூடியிருக்க அந்த வார்த்தையை உபயோகித்தேன்!  இந்த வார்த்தையை பேசலாமா? என்று எல்லோரும் கேட்க என் சித்தப்பா சொன்னார். இங்க இவங்கப்பா அடிக்கடி இதச் சொல்றார். அது பையன் கிட்ட படிஞ்சிருச்சு!  இது இவன் தப்பல்ல! விட்டிருங்க!   அப்போதுதான் எனக்கு உறைத்தது அது தவறான வார்த்தை என்று அதுவரை சகஜமாக அந்த வார்த்தையை  உதிர்த்துக் கொண்டிருந்தவன் அன்று முதல் அதை விட்டொழித்தேன். 

      இப்படித்தான் நம்மிடம்  இருந்துதான் குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கின்றன பிடிவாதம், அடம், கோபம், அழுகை, கெட்டவார்த்தைகள், நல்லது, கெட்டது எல்லாமே அவை நம்மையே ரொல் மாடல் ஆக்கிக் கொள்கின்றன. எனவே குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன் எதிரில் நம்முடைய  கோப தாபங்களை வெளிக் காட்ட கூடாது.

           இதெல்லாம் இருக்கட்டும்! மீடியாக்கள் நமது குழந்தைகளை எப்படி நடத்துகின்றன! அவை செய்யும் அராஜகங்கள்! சூப்பர் சிங்கர் என்று சொல்லி மேக்கப் போடுகிறேன் என்று சொல்லி குழந்தைகளை பாழ் செய்வது ஒரு புறம். சன் டீவியில் அதைவிட கொடுமை  சீரியலில் குழந்தைகள் தேவையில்லாமல் பெரிய பெரிய விஷயங்களில் நாட்டாமை செய்கின்றன. இதை வேறு குடும்பத்துடன் குழந்தைகளுடன் அமர்ந்து ரசிக்கின்றோம்.

     கார்டூன் சேனல்கள் கூட  நல்லனவற்றை சொல்லாமல் காழ்ப்புணர்ச்சி, சண்டை அடிதடி இவைகளையே காட்டுகின்றன. இதை காசு கொடுத்து பார்த்து ரசிக்கின்றோம். இதனால் குழந்தைகள் நன்றாக வளர்ந்து விடுமா? அதன் பிஞ்சு மனதில் நஞ்சினை நாமே விதைக்கலாமா?

      தினமலர் நாளிதழ்  சிறுவர்மலர் என்றொரு இணைப்பு வெளியிடுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது  மிகவும் நன்றாக இருந்த இந்த இணைப்பு இப்போது  சுமாருக்கும் குறைவாகவே இருக்கிறது. அதன் இணைப்பில் இரு வாரங்களுக்கு முன் ஒரு ஜோக்.

    “ டாக்டர் என் கணவரை எப்படியாவது காப்பாத்துங்க!”

        ”உங்க கணவர் மேல அவ்வளவு பாசமா?”

      ”என்னால பூவும் பொட்டும் இல்லாம இருக்க முடியாது!”

இப்படியொரு ஜோக் சிறுவர் மலரில் தேவைதானா?   இதை என் மனைவி  என் மகளுக்கு படித்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

     மகள் விளக்கம் கேட்டார். டாக்டர்கிட்ட புருஷனை காப்பாத்த சொல்றாங்க! அவங்களால பூவும் பொட்டும் இல்லாம இருக்க முடியாதாம்!  ஏன்? புருஷன் செத்துட்டா பூவும் பொட்டும் வைச்சிக்க முடியாது இல்லே!  இப்படி சொன்னதும் என் மகள் கேட்டாள்.    ஏம்மா புருஷன் செத்துட்டா பூவும் பொட்டும் வைச்சிக்க கூடாது?

    நெத்தியடியான கேள்வி!  என் மனைவியால் பதில் சொல்ல முடியவில்லை!

புருஷன் இல்லாட்டா பொண்ணுங்க பூவும் பொட்டும் வைச்சுக்க மாட்டாங்கடா!
     ”அப்ப எனக்கு வைச்சி விடறீங்களே?   ”
  ” நீ சின்ன பொண்ணுடா? கல்யாணமான பின்னால புருஷன் இருக்கிற வரைக்கும்தான் பூவும் பொட்டும் புருஷன் இல்லேன்னா இதெல்லாம் வைச்சுக்க மாட்டாங்க!”

      “ ஏன்?”
  திரும்பவும் மகள் கேட்க மனைவியால் பதில் பேச முடியவில்லை! கடந்த நூற்றாண்டின் மூடப்பழக்கத்தை பிஞ்சு மனதில் ஏன் நஞ்சாக விதைக்க வேண்டும்? இது போன்ற ஒரு நகைச்சுவையை எதற்கு வெளியிட வேண்டும் சிறுவர் மலரின் பொறுப்பாசிரியருக்கு கொஞ்சமாவது பொறுப்பிருக்க வேண்டாமா?
      இதுகூட பரவாயில்லை! இன்னொரு ஜோக் 

    மனைவியை அடிக்கிறவங்க எல்லாம் மனுஷங்களே இல்லே!
       தெய்வமா?
    மாவீரன்னு சொல்ல வந்தேன்!

    இப்படி சொல்லி மனைவியை அடிப்பவர்கள் வீரர்கள் என்ற நஞ்சை பிள்ளைகளிடம் வளர்க்க வேண்டுமா?

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடத்துபவர்கள், குழந்தைகள் பத்திரிக்கைகள் என்னவேண்டுமானால் எழுதுவதோ பேசுவதோ கூடாது. கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் ஓர் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். இல்லையேல் ஓர் சமுதாய சீர் கேட்டை உருவாக்குவதன்  பிள்ளையார் சுழியாக இந்த  நிகழ்வுகள் அமைந்துவிடும்.

  இத்தனை நிகழ்வையும் பார்த்துக் கொண்டிருந்த நான் சொன்னேன் மகளிடம்,  செல்லம்! அது மொக்க ஜோக்! இப்படித்தான் தப்பு தப்பா எழுதுவாங்க! சிரிக்க வைக்கனும்னு அது பேட்  ஜோக்! மறந்துடனும்!

    கரெக்ட்பா! இந்த ஜோக் எதுவுமே நல்லா இல்லை! எனக்கு பிடிக்கவே இல்லை! என்று புத்தகத்தை மூடினாள் மகள்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. பேருக்குத் தான் சிறுவர் மலர். நல்லகாலம் விவகாரமான துணுக்குகளை டவில்லையே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியது தான். இம்மாதிரியான துணுக்குகளை போடுவதற்கு தான் எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறதே. இதில் தான் போடணுமா என்ன. கொடுமை.

    நீங்கள் சொல்வது போல் இந்த காலத்து குழந்தைகளுக்கு செல்போன்,கம்ப்யூட்டர் எல்லாம் சகஜமாகிவிட்டது. அதை தான் நான் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள்
    இந்த காலத்து குழந்தைகள்

    ReplyDelete
  2. நெஞ்சை நெகிழ வைத்த ஆரோக்கியமிகு அழகிய பதிவு இது!
    நஞ்சை பிஞ்சில் விதைப்பது பேராபத்து என்பதை மிகவும் சீர்பட
    சிறப்பாக விளக்கி உள்ளீர்கள்!
    தங்களது பதிவில் இடம்பெற்ற அந்த ஜோக் பற்றிய பார்வையினை!
    அந்த நாளிதழின் பார்வைக்கு கொண்டு செல்லுவேன்!
    இனி இதுபோன்று நிகழாது இருக்க வேண்டுவோம்.

    "எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே! - அது
    நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
    அன்னை வளர்ப்பினிலே"

    இந்த பாடல் உணர்த்திய கருத்து உமது பதிவில் கண்டேன் நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. இன்றைய ஊடகங்களுக்கு பொறுப்புணர்வு இல்லை நண்பரே...

    ReplyDelete
  4. அருமையான ப்திவு நண்பரே!

    நம்முடைய நிலவரத்தை சுக துக்கங்களை குழந்தைகள் புரியும் படிசெய்ய வேண்டும். // உண்மை அது போன்று நமது பொருளாதார நிலைமையையும் எடுத்துச் சொல்லி குழந்தைகளின் மனதில் பணக்காரக் குழந்தைகள் செய்வதைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், அதனால் விளையும் தாழ்வுமனப்பான்மையைஉம் போக்கிடுவது நல்லது.
    (னாங்கள் கஷ்டப்பட்ட போது-இப்போதும் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றது - என் மகனுக்கு அப்படித்தான் சொல்லி வளர்த்தேன். அது இப்போது அவன் பெரியவனாக ஆன பிறகும் கூட அதிக ஆசைகள் இல்லாமல்....வொர்க் அவுட் ஆகின்றது.-கீதா)

    சுரேஷ் அந்த சன் டீவியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று வருமே அதன் பெயர் மறந்துவிட்டது....அது படு கேவலம்...

    உங்கள் மகளின் கேள்வி படு ஸ்மார்ட். இப்போதிலிருந்தே மூட நம்பிக்கைகளைக் களைந்து விடுங்கள். அது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையுடன் வளர உதவும்.

    நல்ல ஒரு பதிவு !!


    ReplyDelete
  5. நீங்கள் சொல்லியிருப்பது உண்மையிலும் உண்மை....
    கிராமப்புறங்களில் சில மோசமான வார்த்தைகள் கூட பேச்சு வழக்கில் வந்து விட்டதால் அதை அவர்கள் தவறாக எடுத்துக் கொள்வதில்லை...

    உங்கள் மகளின் கேள்வி அருமை....

    இப்போது நகைச்சுவை என்ற பெயரில் இப்படித்தான் கிறுக்குகிறார்கள்...

    அனைவரும் வாசிக்க வேண்டிய பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சிந்திக்க வைக்கும்
    சிறந்த வழிகாட்டல் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. ஐந்து வயது வரை ஒரு குழந்தை எதை பார்க்கிறதோ, எதை சாப்பிடுகிறதோ... இன்னும் பல... முக்கியமாக எதை கேட்கிறதோ - இவையெல்லாம் பிற்காலத்தில் அவர்களின் குணநலன்கள்...

    ReplyDelete
  8. இன்று யாருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லை என்பதே யதார்த்தம்.சிந்திக்கத்தூண்டும் பகிர்வு.

    ReplyDelete
  9. அனைத்தையும் சரி என்று நினைத்து எழுதி இளைய சமுதாயத்தை, குறிப்பாக குழந்தைகளை தடம் புரள வைக்கும் நிகழ்வுகளைக் காணும்போது வேதனையாக உள்ளது. அவ்வப்போது குழந்தைகளுடன் பேசி அனைத்தையும் பகிர்ந்துகொண்டு எடுத்துச்சொல்லி பக்குவப்படுத்துவதை நாம் பழக்கமாகக் கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  10. நாம் நம் குழந்தைகள் முன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் இவைகளைப் பெறுப்புடன் நாம் செயல்படுத்த வேண்டும். அருமையான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  11. குழந்தைகளோடு தினமும் பேச வேண்டும்
    மனம் விட்டுப் பேச வேண்டும்
    அருமையான பதிவு நண்பரே

    ReplyDelete
  12. எவ்வளவு அழகான தெளிவான பதிவு. குழந்தைகள் நாம் போட்டுவிட்ட வழியில்தான் நடக்கிறார்கள் என்பதை அறியாமல் நாமே குழந்தைகளுக்கு தவறான பாதைகளைக் காட்டுவது எவ்வளவு பேதைமை. குழந்தை வளர்ப்பு குறித்து அருமையான கருத்துகளை சொல்லிவந்துவிட்டு அந்த மொக்கை ஜோக்கைப் பார்த்ததும் என்னடா இது இவ்வளவு தூரம் நல்ல கருத்தை சொல்லிவிட்டு மனைவியை அடிப்பதையும் கணவனை இழக்க விரும்பாத மனைவி சொல்லும் காரணத்தையும் ஜோக்காக வெளியிட்டிருக்கிறீர்களே என்று ஒருநிமிடம் திகைத்துப் போனது உண்மை. அது ரசிக்க அல்ல என்பது தொடர்ந்து வாசிக்கும்போதுதான் புரிந்தது. நான் என்ன நினைத்தேனோ அதையே தாங்கள் அங்கே வெகு அழகாக அனுபவத்தின் வாயிலாக விளக்கியிருப்பது நிம்மதி தந்தது. குழந்தைகளின் மனத்தில் நஞ்சை விதைக்கும் இதுபோன்ற பத்திரிகைகள் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் என்று சொல்ல முற்றிலும் தகுதியை இழந்துவிட்டன. அருமையான பதிவு. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  13. மிகவும் அருமையான பதிவு! குழந்தைகளுக்கும் மற்றவரகளுக்கும் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்! நான் அரசாங்க பணியில் இருந்தபோது எனக்கு கீழ் வேல பார்த்த ஊழியர்கள் சிலர் தண்ணீ போட்டுக்கொண்டும் தலை வாராமலும் வருவார்கள்!நான் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை!ஆனால் நான் காலையிலேயே குளித்துவிட்டு குங்குமம் வைத்து திருநீறு பூசி சரியான நேரத்திற்கு சென்று விடுவேன்!ஓரிரு வாரங்களில் அவர்களும் என்னைப்போல் குளித்து தலைவாரி திருநூறு பூசி குங்குமம் வைத்து தூய்மையாக வந்தனர்!முக்கியமானது குடிப்பதை அறவே விட்டனர் !அவர்களின் துணைவியார்கள் எனக்கு நன்றி கூறினர்!நான் ஓய்வு பெற்று பல ஆண்டுகள்ஆன போதிலும் இன்றும் மரியாதை கொடுக்கிறார்கள்! அவர்கள் தொடர்பும் இருந்து வருகிறது!எல்லாம் நாம் நடப்பதை பொறுத்துதான்! தங்கள் பதிவை தொடர்ந்துபடித்து வருகிறேன்!நன்றி!

    ReplyDelete
  14. மிகவும் அருமையான பதிவு! குழந்தைகளுக்கும் மற்றவரகளுக்கும் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்! நான் அரசாங்க பணியில் இருந்தபோது எனக்கு கீழ் வேல பார்த்த ஊழியர்கள் சிலர் தண்ணீ போட்டுக்கொண்டும் தலை வாராமலும் வருவார்கள்!நான் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை!ஆனால் நான் காலையிலேயே குளித்துவிட்டு குங்குமம் வைத்து திருநீறு பூசி சரியான நேரத்திற்கு சென்று விடுவேன்!ஓரிரு வாரங்களில் அவர்களும் என்னைப்போல் குளித்து தலைவாரி திருநூறு பூசி குங்குமம் வைத்து தூய்மையாக வந்தனர்!முக்கியமானது குடிப்பதை அறவே விட்டனர் !அவர்களின் துணைவியார்கள் எனக்கு நன்றி கூறினர்!நான் ஓய்வு பெற்று பல ஆண்டுகள்ஆன போதிலும் இன்றும் மரியாதை கொடுக்கிறார்கள்! அவர்கள் தொடர்பும் இருந்து வருகிறது!எல்லாம் நாம் நடப்பதை பொறுத்துதான்! தங்கள் பதிவை தொடர்ந்துபடித்து வருகிறேன்!நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!