ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்!

ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது தளிர்!


வணக்கம் நண்பர்களே! இன்று உங்களின் இந்த தளிர் தளம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சின்ன வயதில் அதாவது 12 வயது முதலே எதையாவது எழுதிக் கொண்டு இருந்தாலும் வலைப்பூ ஆரம்பிப்பேன் இந்த அளவுக்கு தொடர்வேன் என்றெல்லாம் அன்று யோசித்து இருக்க வாய்ப்பு இல்லை!
    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்தவிகடனில் கற்றதும் பெற்றதும் எழுதிய போது வலைப்பூக்கள் பற்றி சொல்லி இருந்தார். அப்போது நாமும் அப்படி எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வருமானம் இல்லாமல் இருந்த அந்த காலத்தில் சொந்த கணிணி வாங்க வசதி இல்லை! இப்போது போல ப்ரவுசிங் செண்டர்களும் அப்போது அருகில் இல்லை! அதனால் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்தது.
     ஒருவழியாக 2007 ல் கணிணி வாங்கியபின்னும் இணைய வசதி இல்லை! 2010ல் இணையம் கிடைத்தும் 2011ல் தான் வலைப்பூ ஆரம்பித்தேன். வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாது ஆரம்பித்துவிட்டு மனம் போன போக்கில் எழுதிக்கொண்டும் கண்டவற்றையும் பகிர்ந்து கொண்டிருந்தேன். என் தளத்தை யார் படிக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் அப்போது கவனம் இல்லை. பின்னர் ஏதேச்சையாக அப்துல் பாஸித் அவர்களின் ப்ளாக்கர் நண்பன் தளம் ஒருநாள் பார்க்க நேர்ந்து அவர் சொன்ன நுட்பங்களை பயன்படுத்தி திரட்டிகளில் இணைத்தேன். பார்வையாளர்கள் வந்தார்கள். கூடியவிரைவில் வலைச்சரத்திலும் நண்பர் மேலையூர் ராஜா அவர்கள் அறிமுகம் செய்தார்கள். தமிழ்மணத்திலும் இணைந்துவிட்டேன். அப்போது தமிழ்மணம் ரேங்க் 1014 இருந்தேன். மூன்றே மாதத்தில் 500வது ரேங்கிற்கு வந்துவிட்டேன். ஆனால் அப்போதுதான் ஓர் பிரச்சனை ஆரம்பித்தது.
      வலைப்பூவை ஒரு ஷேரிங் தளம் என்று நினைத்துக் கொண்டு எங்கு எதில் எதைப்படித்தாலும் பரபரப்பாக சுவையாக இருந்தால் அதை அப்படியே வெட்டி ஒட்ட ஆரம்பித்தேன்! ஒரு சமயத்தில் வெட்டி ஒட்டுவது அதிகரித்து சொந்த பதிவுகள் குறைந்து போனது. இதற்கு காரணம் வழிகாட்டுதல் இல்லை. பிரபல பதிவர் ஒருவரும் இதையே செய்துவந்தார். இன்றும் செய்கிறார். அது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை! இதனால் கருத்துரைகள் குறைந்துபோனது. முக்கியமாக அந்த சமயத்தில் புதிய பதிவர்களை ஊக்குவித்து கொண்டிருந்த கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ராமேடம் அவர்கள் என் தளத்தில் இணைந்திருந்தவர் விலகிவிட்டார்.
   ஆனால் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை! அலேக்சா ரேங்க்கை குறிவைத்து பரபரப்பான செய்திகள் கிசுகிசுக்களை வெட்டி ஒட்டிக்கொண்டிருந்தேன். தமிழ்மணம் எச்சரிக்கை விட்டு என்னுடைய பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. உடனே என் பேஜ் வியுஸும் குறைந்து போனது. எங்கு தவறு என்று மீண்டும் ப்ளாக்கர் நண்பன் தளம் சென்று படித்து பார்த்தேன்.
        நம் தளத்திற்கு பார்வையாளர்கள் வேண்டுமானால் பிறரின் தளங்களுக்குச் சென்று படித்து கருத்திடவேண்டும் என்று அறிந்துகொண்டேன். பிறரின் தளங்களில் இணைந்தேன் கருத்திட்டேன். என் தளப் பதிவுகளுக்குஅவர்கள் தளத்தில் லிங்க் கொடுத்தேன். பார்வையாளர்கள் வந்தார்கள். அவர்கள் என் சொந்தபதிவுகளுக்கு கருத்துரை இடுவார்கள் காப்பி- பேஸ்ட் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள். வழக்கம் போல சொந்தபதிவு ஒன்று காப்பி-பேஸ்ட் ஒன்று என்று தொடர்ந்தேன்.
   இப்போதுதான் கொன்றைவனத் தம்பிரான் வந்தார். நீ எழுதுவது எல்லாம் பதிவா? வெட்டி ஒட்டுகிறாய்! அதற்குப்போய் பிறர் தளத்தில் ஏன் வலிந்து இங்கே வா என்று அழைக்கிறாய் என்று ஆக்ரோசப்பட்டார். நானும் பதிலுக்கு வாக்குவாதம் செய்தேன். இந்த வாக்குவாதம் ஒரு மூன்று மாதங்கள் தொடர்ந்திருக்கும். கடைசியில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது இதனிடையில் என் வலைப்பூ இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைத்தது. அந்த ஆண்டில் காப்பி- பேஸ்ட் என்பதை குறைத்துவிட்டேன்.
    என் தளத்தில் இருந்த கிசுகிசுக்களை அழித்தேன். சினிமாபதிவுகள், பிறரின் அந்தரங்கம் பற்றி பேசும் பதிவுகளை அழித்தேன். சொந்தமாக நிறைய எழுத ஆரம்பித்தேன். என்னுடைய பாலோவர்கள் அதிகரித்தார்கள். மீண்டும் கொ.வ. த வந்தார். நிறையமாற்றங்கள் தெரிகிறது என்றார். 2014 வந்தது. இந்த ஆண்டில் தினம் ஒரு பதிவு என்று எழுத ஆரம்பித்தேன் ஒவ்வொரு கிழமைக்கும் ஒருவித பதிவு என்று இது ஏற்கனவே இருந்த நடைமுறை என்றாலும் அப்போது சொந்தபதிவு கிடையாது இப்போது சொந்த பதிவு. இதற்குள் ஆயிரம் பதிவுகளை தாண்டியிருந்தேன். வலைச்சரத்தில் மீண்டும் அறிமுகங்கள் ஆனேன். வலைச்சர ஆசிரியர் பொறுப்பும் வந்தது. ஒரு பொறுப்பான பதிவராக அடையாளம் காணப்பட்டேன். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இப்போதும் ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் புதியவனாக உணர்கிறேன். ஒவ்வொரு பதிவரிடம் இருந்தும் ஒவ்வொன்றை கற்று வருகிறேன். ஆனால் அதை என் பாணியில் என் வலையில் எழுதுகின்றேன்.
    ஆரம்பத்தில் இருந்த மாதிரி இப்போது பதிவுலகம் இல்லை! அப்போது எழுதிய பலர் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். சிலர் முகநூல் சென்றுவிட்டார்கள். என்னை பொறுத்தவரை வலைப்பூ மாதிரி முகநூல் வராது என்றே தோன்றுகிறது. என் பதிவுகளை பகிர மட்டுமே முகநூலை பயன்படுத்துகிறேன். வலையுலகில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. கிடைத்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய அனுபவங்கள் புதியவர்களுக்கு பயனளிக்கும் என்றே வெளிப்படையாக நான் செய்த தவறுகளை கூறுகின்றேன்.

    இப்போதுகூட சென்றவாரம் ஒருவர் உன்னை திருத்திக்கொண்டு மற்றவர்களை குறை கூறு. உன் கணிணியில் திருட்டு சாப்ட்வேர் வைத்துக் கொண்டு கீ கேட்கிறாய்! மற்றவர்கள் யோக்கியதை பற்றி பேச அருகதை இல்லை என்றார். உண்மைதான். நான் கணிணி வாங்கியபின் தான் அதன் பயன்படுத்த கற்றுக்கொண்டேன். இன்னும் கூட சில ஆப்ஷன்களை பயன் படுத்த் அச்சம் உண்டு. கெட்டுவிடுமோ என்று தவிர்த்துவிடுவேன். எனக்கு கணிணி கொடுத்தவர் விண்டோஸ் போட்டுக்கொடுத்தார். அது இந்தமாதிரி சாப்ட்வேர் என்று தெரியாமையால் இது நடந்தது. இப்போது விலைகொடுத்து பெற்று உபயோகிக்க உள்ளேன். ஆனால் அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை இப்படியே! தவறு என்றால் ஒத்துக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் எனக்கு தைரியம் இருக்கிறது! இது போதும் என்றே நினைக்கிறேன்! என் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறேன் அவ்வளவே!
     இந்த ஐந்து வருடங்களில் என்னோடு இணைந்து பயணிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நிறைய புதியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். உங்கள் முயற்சி தொடர்ந்தால் பார்வையாளர்கள் வருவார்கள். எழுதுவதோடு மற்றவர்களின் எழுத்துக்களையும் படியுங்கள்! உங்கள் எழுத்து சீராகும்! இது என்னுடைய ஆலோசனை! தயவு செய்து சொந்தமாக எழுதுங்கள்! காப்பி-பேஸ்ட் செய்யாதீர்கள். இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. ஒரு சமயம் பத்து பக்க பார்வைகள் கூட இல்லாது இருந்த நான் இன்று ஒருநாளைக்கு 500 பக்க பார்வைகளாவது கிடைக்கப்பெறுகிறேன் இது ஒருவருடமாக தொடர்கிறது என்கிறபோதே என் வலைப்பூவின் வளர்ச்சி தெரியும்.
   இதே காப்பி- பேஸ்ட் செய்திருந்தால் ஒருநாள் அதிகரிக்கும் அடுத்தநாள் படு பாதாளத்திற்கு போயிருக்கும். எனவே சொந்தமாக எழுதுங்கள். அதே போல ஒரே விதமாக கவிதை, கட்டுரை, இல்லை கதை மட்டும் எழுதாதீர்கள். பல்சுவையாக எழுத பழகுங்கள்! அல்லது உங்களுக்கு எது வருகிறதோ அதை சுவாரஸ்யமாக தரப் பாருங்கள். ஒருநாள் உங்கள் தளமும் பார்வைகள் பெறும்.
       இந்த நான்கு வருடங்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு பயன்படும் என்றே சொல்லியுள்ளேன். இந்த ஐந்தாவது ஆண்டில் மேலும் பல நல்ல பதிவுகளை தந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பதே லட்சியம்! முடிந்தால் புத்தகமும் வெளியிட வேண்டும். இந்த லட்சியங்களை இலக்காக கொண்டு ஐந்தாம் ஆண்டில் பயணிக்கிறேன்! உங்கள் வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் அவ்வப்போது கொடுத்து என் பயணத்தில் துணை நிற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
  இக்கட்டான தருணங்களில் எனது கருத்துக்கும் பதிவுக்கும் ஆதரவு தந்து ஆலோசனைகள் தந்த திரு திண்டுக்கல் தனபாலன், திடம்கொண்டுபோராடு சீனு, அரசன், மேலையூர்ராஜா, வலைச்சர ஆசிரியர் பொறுப்புக் கொடுத்து ஊக்குவித்த திரு சீனா ஐயா,  மற்றும் தற்போது தொடர்ந்து வந்து ஆதரவு தரும், துளசிதரன் கீதா, மைதிலிகஸ்தூரிரங்கன் தம்பதியர், கில்லர்ஜி, யாதவன் நம்பி, பகவான் ஜி, மதுரைத்தமிழன், முரளிதரன், வெங்கட்நாகராஜ், ஜம்புலிங்கம் ஐயா, ஊமைக்கனவுகள் விஜி ஸ்ரீராம், சொக்கன், கரந்தை ஜெயக்குமார், பரிவை சே. குமார், இளமதி, அருணா செல்வம், அம்பாளடியாள், இனியா, ரூபன், கிரேஸ்பிரதிபா, உமையாள் காயத்ரி, கோமதி அரசு, விச்சு, விசு,கீதா, மாடிப்படிமாது, ரஞ்சனி நாராயணன், சென்னைபித்தன், ரமணிஐயா, ஜெயதேவ்தாஸ், கும்மாச்சி, பரமுசிவச்சாமி, கவியாழி கண்ணதாசன், சசிகலா, கீதாசாம்பசிவம், தனிமரம் நேசன், சீனி, ஏஞ்சலின் கோவை ஆவி, கோவை நேரம், காணமல் போன கனவுகள் ராஜி (இவரை கொஞ்சநாளா காணலை!) ஸ்கூல் பையன்போன்றோரின் ஊக்கமிடும் வார்த்தைகள் என்னை தொடர்ந்து இயக்க வைக்கிறது. மேலும் எனக்கு அவார்டு கொடுத்த தஞ்சையம்பதி தளம் துரைசெல்வராஜ் அவர்களுக்கும் நன்றி! பெயர் விட்டுப்போயிருந்தாலும் இன்னும் மனதில் விடாது இடம்பிடித்து இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வளர்ச்சியில் பங்குண்டு அவர்களுக்கும் எனது நன்றிகள்.
   பிளாக்கர் தளம் கொடுத்த கூகுள் முதல் என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் தாய்-தந்தை, மனைவி, மக்கள், மற்றும் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்! நன்றி! நன்றி! நன்றி!

டிஸ்கி} ஆருத்ரா வேலைகள் காரணமாக காலையில் இருந்த் பிஸி! யாருடைய பதிவுகளும் படிக்க முடியவில்லை! இந்த பதிவும் இப்போதுதான் வெளியிட முடிந்தது. வேலைப்பளு குறைந்ததும் அனைவர் பதிவுகளுக்கும் வருகிறேன்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. என்னையும் தங்களின் மனதில் வைத்திருக்கும் தங்களை கடைசிவரை தொடர்வேன் நண்பரே........

    ReplyDelete
  2. பதிவுகள் தொடர்ந்து தொடரவும்
    பதிவுலகத் தொடர்புகள் பெருகவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுய அலசல் வெரிகுட்

    எந்த தளத்தின் ரேங்கிற்க்காகவும் எழுதாமல் சுயமாக மனதில் எழும் சிந்தனைகளை எழுதி வந்தாலே மக்களின் மனதில் நல்ல ரேங்க் பெற முடியும் என்பது என் அனுபவம்.

    நீங்கள் சொன்ன காப்பி பேஸ்ட் பதிவரின் பதிவுகளை எப்போதாவது கண்களில் படும் போது பார்ப்பதுண்டு அவர் முற்றிலும் சுயம் இழந்து போய்விட்டார். இப்போது அவர் பதிவது எல்லாம் தன் கருத்தை சொல்ல அல்ல. அதிக ஹிட்டுக்கள் கிடைக்க வேண்டும் அதனால் கிடைக்கும் விளம்பரம் மூலம் ஏதோ காசு பார்க்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே!

    ஐந்தாம் வருடமதில் ஆர்வமோடு கால்பதித்தீர்
    பைந்தமிழ் தோழியாவாள் பார்த்து!

    மென்மேலும் உங்கள் பதிவுகள் சிறக்கவும்
    இன்னும் மேன்மைகள் வந்து சேரவும்
    உளமார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  5. வெள்ளை மனதய்யா உங்களது
    அனுபவத்தை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்
    ஐந்தாவது வருடத்திலும் தரமான பதிவுகள் தர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    5வது ஆண்டில் தொடரும் சேவையை விட இன்னும் பல படைப்புகள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. "//தவறு என்றால் ஒத்துக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் எனக்கு தைரியம் இருக்கிறது!//"
    இது ஒன்று மட்டும் போதுமே, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லுவதற்கு.
    தவறு செய்யாதவன் மனிதனே இல்லை. ஆனால் செய்த தவறை மனதார ஏற்றுக்கொண்டு திருந்துவது தான் சிறந்த மனிதன் என்று சொல்லுவார்கள்.
    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

    இந்த வருடம் உங்களின் அனைத்து இலட்சியங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்.
    அத்தனை பேருக்கும் நன்றி கூறி, நான் என்றுமே நன்றி மறவாதவன் என்று சொல்லிவிட்டீர்கள்
    வாழ்த்துக்கள் சுரேஷ். .

    ReplyDelete
  8. படிப்படியான வளர்ச்சி. நேர்மையான அலசல். சென்ற வருடமும் இந்த விவரங்களைத் தந்திருந்தீர்கள்.

    வாழ்த்துகள் 'தளிர்' சுரேஷ்.

    ReplyDelete
  9. ஆரம்ப காலங்களில் நீங்கள் காப்பியடித்தீர்கள் என்பதை மனம் திறந்து சொல்வதற்குக் கூட ஒரு நல்ல மனம் வேண்டும்... உங்களுக்கு வெளிப்படையான மனம்....

    ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் வலைப்பூ மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. உங்களது எண்ணம் இந்த ஆண்டு நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள்... புதுக்கோட்டையில் சந்திப்போம்...

    ReplyDelete
  11. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது அடிபட்ட ரணத்தின் வேதனைகளையும் பகிர்ந்தமை - வேதனை இல்லாமல் சாதனை இல்லை - என்பதனையும் சொல்லாமல் சொல்லியிருக்கின்றீர்கள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தளத்தில் இனிய சிறப்பான பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. எவ்வளவு உழைத்திருக்கின்றீர்கள்! தாங்கள் மேலும் வளர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! தக்னள் எண்ணங்கள் ஈடேறவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வெளிப்படையாக பகிர்ந்த உங்களை வியக்கிறேன் சகோ..எல்லோருக்கும் இது வராது
    என் பெயரையும் பார்த்து மகிழ்ச்சி ..நன்றி
    உங்கள் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  14. உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தே தீரும் என்பதை நிரூபிக்கும் எழுத்து தங்களுடையது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அண்ணா ! தங்களின் அனுபவம் என் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமாக அமைகிறது ! நன்றி

    தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி !!!

    மெக்னேஷ் திருமுருகன்

    ReplyDelete
  17. ரொம்பவும் உண்மையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் உண்மையே உங்கள் வலைத்தளத்தின் வெற்றிக்குக் காரணம். தொடர்ந்து எழுதுங்கள். எத்தனை நண்பர்கள் உங்களுக்கு! என்னையும் அந்த பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி.

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்! சாதனைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  18. தொடரும் நட்பு தொடரட்டும்...
    தொடரட்டும் தங்கள் எழுத்து...
    வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  19. நல்ல சுய அலசல்...தற்போது அருமையான பதிவுகள்..வாழ்த்துகள்...சகோ..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் சுரேஸ் எப்போதும் தனித்துவம் முக்கியம் அது உங்களிடம் ஏராளம் உண்டு தொடரட்டும் பயணம்.

    ReplyDelete
  21. என்னையும் நினைவில் வைத்து நன்றி சொல்லியத்துக்கு நன்றிகள். ஐய்யப்பன் விரதம் முடிந்த பின் மீண்டும் வலையில் தொடர்வேன் உங்களுடன்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அண்ணே! புகைப்படத்தைப் பார்த்ததும் புன்னகை தான் வருகிறது, வார்த்தைகள் வரவில்லை. :)

    ReplyDelete
  23. என்றோ வந்து கருத்திடும் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. ஐந்தாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பல பதிவுகளை நல்ல முறையில் எழுதவும் வாழ்த்துகள், ஆசிகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!