பாச்சாஸ் ஃபன் கிளப்- பகுதி 2

 


பாச்சாஸ் ஃபன் கிளப்-  பகுதி 2

 

தன் வீட்டு சோபாவில் ஹாயாக அமர்ந்து நியுஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்தார் பாச்சா மாமா. கொரானா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் உள்ளதையும் மீறி சென்ற வாகன்ங்களை போலிஸார் பறிமுதல் செய்ததையும் பார்த்தவர் பொங்கி எழுந்தார்.

  பொறுப்பத்த போலிஸுங்க! இப்படி வண்டியை பிடுங்கி அதுலே இருக்கிற ஒரு பார்ட்ஸ்கூட விடாம பிரிச்சு வித்துடுவானுங்க! என்று சொல்லவும் இதைக் கேட்டுக்கொண்டே சமையல்கட்டிலிருந்து வந்த சச்சு மாமி ஓல்ட் மேன் என்ன சொன்னீங்க?  யூ ஹேவ் சென்ஸ்? கர்ஃப்யூ போட்டிருக்கு வீட்டுல இருங்கன்னு சொன்னா கேட்காம  இவனுங்க ஊர் சுத்துவானுங்க அவங்க பைக்கை போலீஸ் மேன்ஸ் பிடுங்க கூடாதா? தே ஆர் டூயிங் அவர் ட்யூட்டி?  நீங்க எதுக்கு பொங்கறீங்க? என்று போலீஸுக்கு ஆதரவாக பரிந்து கட்டினார்.

சென்ஸ் இருந்தா  நான்சென்ஸ்உன்னை கட்டியிருப்பேனா? என்று மனதுக்கு முணுமுணுத்தார் பாச்சா.

அங்க என்ன முணுமுணுப்பு ? உரக்க பேசறது? சச்சு மாமி குரல் உயர்த்த  ஒண்ணுமில்லே சச்சு! பாவம் அந்த பசங்களோட அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த பைக்கெல்லாம் வாங்கி கொடுத்திருப்பான்னு சொன்னேன்.

பெத்தவாளைத்தான் முதல்லே கொறை சொல்லனும்தே ஆர் ரிடிகுலஸ்..! புள்ளைங்க கேக்குதேன்னு லட்ச ரூபா பைக் வாங்கி கொடுத்து லைசென்ஸ் இல்லாம ரோட்டுக்கு அனுப்பறதெல்லாம் இடியாடிக் ஹேபிட்ஸ்.

  சரி அது கிடக்கட்டும்.. வீட்டுலேயே அடைஞ்சு கிடக்க போரடிக்குது.. இன்னிக்கு நான் ஷாப்பிங் போயிட்டுவரட்டுமா சச்சு..

  நோ.. நோ..! இட்ஸ் நாட் பாசிபல்! கர்ஃப்யூ இன்னும் முடியலை! வீட்டை விட்டு எங்கும் நகரக் கூடாது..!  உங்களுக்கு பொழுது போகணும்னா  இருக்கவே இருக்கு டீவி!

ஐயையோ! எனக்கு சீரியல்னா அலர்ஜின்னு  உனக்கு தெரியாதா?

அலர்ஜின்னாஅவில்டேப்ளட் யூஸ் பண்ணிக்கோங்க! நல்லா தூக்கம் வரும்!

டிவியிலே இப்போ புதுப்புது படமா போடறானாம் தெரியுமோ?

எல்லாம் தியேட்டர்ல ஓடாதபப்படங்கள்அதுக்கு ஆயிரத்து எட்டு அட்வர்டைஸ்மெண்ட்ஸ் வேற அதை பார்த்தா எனக்கு ஷாப்பிங் போற ஆசை வந்துரும்!

அப்போ உங்களை பரப்பன ஹள்ளி ப்ரிசனுக்குத்தான் அனுப்பனும்!

      நீ மட்டும் ஜோரா தினமும் வெளியே போய் வர்றியே…!

அயம் ஸ்டிரிக்ட்லி பாலோ அவர் கவர்மெண்ட் ரூல்ஸ்…! மாஸ்க் போட்டுக்கிறேன்! மார்னிங் அவர்ஸ்ல தேவைக்கு மட்டும்தான் போறேன்! டூ யூ நோ?

காக்காவுக்கு எருதோட நோவு தெரியுமா?

 இல்லே டிவி பார்க்கறப்ப கொறிக்க சிப்ஸ் கிடைக்குமா?

ஓட்டலில் டிப்ஸ் கேட்ட சர்வரை முறைப்பது போல அவரை பார்த்தார் மாமி. பொட்டாட்டோ சிப்ஸ் கேட்டா ஏன் என்னை  வில்லன் கிட்டப்பா மாறி மொறைக்கறே? நான் என்ன ஜுமோட்டாவுலேயா ஆர்டர் பண்ண சொன்னேன்?

 உங்க ப்ரெண்ட் தபேலாவாவை பொட்டாட்டோ வாங்கிட்டு வரச்சொல்லுங்க பண்ணிடலாம்!”

அவங்கிட்டே பொட்டாட்டோ வாங்கிட்டு வான்னா மாட்டுக்கு வைக்கிறபொட்டுவாங்கிட்டு வந்துருவான்.

நல்லதா போச்சு! நீங்களே கரைச்சு குடிச்சுக்குங்க!” அவனவன் லாக் டவுன்ல கஞ்சி கிடைக்குமான்னு கிடக்கிறான்  உங்களுக்கு பொட்டாட்டோ  சிப்ஸ் கேட்குதா? என்று கடிந்தபடி கிச்சனுக்குள் சென்றார் சச்சு மாமி.

கியவி! கிராதகி! பாதகத்தி!  ஒரு கடை கண்ணிக்கு போக விடமாட்டேங்கிறா! இருபது நாளா பாக்கெட் மணியையும் கட் பண்ணிட்டா! பேக்கப் எடுத்து வைச்சிருந்த நூறு ரூபாவை கூட கண்டுபிடிச்சு பிடுங்கிட்டா! ஒரு  உமா பட்டினம் பொடியும் உறிஞ்ச முடியலை! ஸ்லைஸ் ஜூஸும் குடிக்க முடியலை சதா ஊட்லேயே அடைஞ்சு கிடக்க வேண்டியிருக்கே  எப்படியாவது ஐடியா பண்ணி வெளியே போகணுமே

  தபேலாவுக்கு போன் செய்தார்.  டேய் தபேலா.. எங்கடா கீறே..?”

  வூட்டாண்ட்தான் தலை…! என்னா மேட்டரு…!”

ஒண்ணுமில்லேடா தபேலா! லாக்டவுன் போட்டாலும் போட்டான்! கியவி என்னை  லாக் அப் விட்டு அடைச்சுட்டா! வெளியே வரவிடமாட்டேங்கிறா! கைச்செலவுக்கு கொடுக்காங்காட்டியும் விரல் செலவுக்காவுது கொடுக்க வேணாமா? ஒண்ணுமே கண்ணுலே காட்டமாட்டேங்கிறாடா?”

   பீல் ஆகாதே தலஇந்த தபேலா தன் தலையை அடகு வைச்சாவது உனக்கு பாக்கெட் மணிக்கு ஏற்பாடு பண்றேன்! “ 

கூட் ரோடு சேட்டு இப்ப தலையெல்லாம் கூட அடமானம் வைச்சுக்கறானா என்ன?”

இப்ப நான் என்னா பண்ணனுங்கிற…?

வெளியே போகணும்டா!  பீச் காத்து வாங்கணும்!  பட்டணம் பொடி வாங்கி மூக்குல உறிஞ்சனும்! அப்புறம் முடிஞ்சா ஒரு கிளாஸ் ஜூஸ் குடிக்கணும்!

  அவ்ளோ தானே…! 

மாமி அசந்த நேரம் பார்த்து வாசலாண்ட வா! நான் கூட்டிட்டு போறேன்..!

வூடு முழுக்க சிசிடீவி கேமரா வைச்சிருக்கா!  யாரும் திருடங்க வந்துரக் கூடாதாம் சின்ன அசைவு தெரிஞ்சா கூட கண்டுபிடிச்சுருவாடா!

  வூட்டுலேயே திருடனை வெச்சுகிட்டு  வெளித்திருடனை புடிக்க கேமரா வைச்சிருக்குதா மாமி…?”

   டேய்…! 

கோச்சுக்காதே மாமா! எதுங்காட்டியும் ஐடியா திங் பண்ணுவோம்!”

    தபேலா.. மாமி மத்தியாணம் லஞ்ச் முடிச்சதும் படுத்து தூங்கப் போயிரும்! அப்ப வெளியே வந்திர வேண்டியதுதான்..”

  அப்புறம் என்ன வந்துட வேண்டியதுதானே..!”

 அதான் முடியாது,, வீட்டை லாக் பண்ணி சாவியை இடுப்புல முடிஞ்சுகிட்டுதான் தூங்குவா கியவி!”

 படு ப்ரில்லியாண்டானா கியவியா இருக்குதே தல.”.

அவ ப்ரில்லியண்டுன்னா  நான் அவ ஹஸ்பெண்ட்டு…! நான் அவ தூங்கினதும் மொட்டை மாடிக்கு வந்துடறேன்.. நீ ஒரு ரோப் எடுத்துட்டு ரெண்டு மணிக்கு என் வீட்டு பின் பக்கம் வந்துரு,, அப்புறம் ரோப்பை பிடிச்சுக்கிட்டு கீழே இறங்கி  கேட்ட தாண்டி குதிச்சு வெளியே போயிருவோம்

இந்த வயசுலே இந்த ரிஸ்க் எல்லாம் தேவையா தல.”.

ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடறாப் போல,,,”

ரைமிங்காத்தான் பேசறே! ஆனா டைமிங்ல கோட்டை விட்டற போறே?”

ஆச்சா பூச்சான்னு  பண்றவன்  இல்லே இந்த பாச்சா! ஒரே மூச்சா செஞ்சு முடிச்சு காட்டறவன் தான் இந்த பாச்சா!

பஞ்ச் டயலாக்கெல்லாம்  ஓக்கே மாம்ஸு  பங்க்சுவாலிட்டியா ரெண்டுமணிக்கு உன் ஊட்டு பின்னாலே நிப்பான் இந்த தபேலா…!

நீ தான் எனக்குரோப்பத்பாந்தவன் டா தபேலா!”

மத்தியானம் ரெண்டு மணி  சச்சு மாமி ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டதும் அவசர அவசரமாக  மொட்டை மாடிக்குச்சென்று பின்னால் எட்டிப் பார்த்தார் பாச்சா.

   தபேலா ஒரு கயிறுடன் நின்று கொண்டு தம்ஸ் அப் செய்தான்.

தபேலா! அந்த கயிறை தூக்கிப் போடுடா…!  தபேலா கயிறை வீசினான் அது சரியாக பாச்சாவின் கை அருகில் வந்து கீழே விழுந்தது.  பழைய சினிமா நாயகிகள் போல மாமா.. கைவிட்டு விடாதீர்கள் மாமா,,,! என்று மீண்டும் வீசினான் தபேலா,   அது மாமாவின்  கையில் சிக்க அதை மாடியில் இருந்த சங்கிலியில் கட்டி மூன்று முடிச்சுகள் போட்டார்.

என்னா தலேமுடிச்சு பலமா போடறே?”

கட்டினவனை கை விடக் கூடாதுன்னுதாண்டா தபேலா..

சொல்லிய பாச்சா.. தன் வேட்டியை அவிழ்த்து கீழே வீசினார்.  பட்டா பட்டி அண்ட்ராயருடன் கயிறை பிடித்து  கீழே இறங்க கால் வைத்தார். அந்தோ பரிதாபம். அவர் கால் வைத்த இடத்தில் ஒரு குளவி தன் குடும்பத்தோடு நீண்ட நாளாய் குடி கொண்டிருந்தது.

 கொரானா காலத்தில் தன் வீட்டுக்கு புதிதாக வந்த விருந்தாளியை அந்த குளவி விரும்பவில்லை! கொட்டித் தீர்த்தது . “ஐயோ என்று அலறி  காலைத் தூக்கி  கீழே வைக்கப் போக பதற்றத்தில் பிடி நழுவியது கால்பிடி நழுவினாலும் கைப்பிடி நழுவாமல் அப்படியே சறுக்கிக்க்கொண்டு சில சிராய்ப்புகளோடு சேஃபாக கீழே லேண்ட் ஆனார் மாமா.

      

வேட்டியை எடுத்து அணிந்து கொண்டவர் தபேலா வந்திருந்த டி.வி,எஸ் எக்செல்லில் ஏறி அமர்ந்தார். வண்டி சீறிப்பாய்ந்த்து. ஆள் நடமாட்டமில்லா தெருவில் ரெண்டு தெருக்களை தாண்டி மெயின் ரோட்டுக்கு வருகையில் ஒரு காவலர் தன் கையில் வைத்திருந்த லட்டியை நீட்டி வண்டியை நிறுத்தச்சொன்னார்.

   தபேலா வண்டியை நிறுத்தினான்.

எங்கேடா.. போறீங்க?” தபேலாவை முறைத்தார் கான்ஸ்டபிள்.

இதோ இந்த பெருசுக்கு திடீர்னு நெஞ்சு வலி.. அதான் ஆஸ்பிடலுக்கு  இட்டுக்கினு போறேன் சார்!”

நம்பறா மாதிரி இல்லேயே…” அவர் சொல்ல கண்ணால் சைகை காட்டினான் தபேலா..

நெஞ்சைப்பிடித்துக்கொண்டு தங்கப்பதக்கம் சிவாஜிபோல ஆக்ட் கொடுக்க ஆரம்பித்தார் பாச்சா… ”,, வலிக்குதே,,”

பெருசை பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு! இப்படியே இந்த ஓட்டை வண்டியிலே கூட்டிட்டு போனா வழியிலேயே போயிரும்! இரு நான் ஆம்புலன்ஸுக்கு போன் பண்றேன்.”

  வேண்டாம் சார்! பக்கத்துலேதான் கிளினிக்கு..!”

அந்த கிளினிக் எல்லாம் மூடி பத்து நாள் ஆச்சு! நீ சும்மா இரு…! இல்லே வண்டியை சீஸ் பண்ணிருவேன்! ஆமா இந்த பெருசு உனக்கு என்னா வேணும்?”

 ப்ரெண்டு சார்…!”

அந்த போலீஸ்காரர் பாச்சாவை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தார்..

ஆம்புலன்ஸுக்கு போன் செய்றேன்! அதுலே ஜி.எச் போயிருஎன்று டயல் செய்ய ஆரம்பிக்க தபேலா நைசாக எஸ் ஆக ஆரம்பித்தான்..

டேய்தபேலா  விட்டுட்டு போகாதேடா..!   எமனிடம் சாவித்திரி கெஞ்சுவது போல கெஞ்சினார் பாச்சா..

ஆனால் விட்டால் போதும் என்று நைசாக வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிட்டான் தபேலா.

நல்ல நண்பனுக்கு அழகு ஆபத்திலே உதவுறது தாண்டா!  இப்படி நடு ஆத்திலே விட்டுட்டுப் போறியே ?”கத்தினார் பாச்சா!

யோவ்! இது ஆறு இல்லே! ரோடு! என்னவிஷயமா வந்தீங்க உண்மையை சொல்லுங்க! உன் கூட வந்தவனை பார்த்தா ரவுடி மாதிரி தெரியுது?”

ரவுடியெல்லாம் இல்ல சார்! இது ஒருபொடிபிரச்சனை சார்!”

என்னாதுபொடியா”? ”பவுடர்கடத்தறீங்களா?”

பாண்ட்ஸ்பவுடர் தவிர வேற எதையும் நான் கண்டறியேன் சார்!”

யோவ் விளையாடறியா?  ப்ரவுன் சுகர்தானே”?

இல்லே சார்! வீட்ல  வொய்ட் சுகர்தான் என் வொய்ஃப் யூஸ் பண்ணுவா?”

இதுலே மூணாவதா ஒரு பார்ட்னரும் இருக்காங்களா?”

ஆமா சார் ஷி இஸ் மை லைஃப் பார்ட்னர்!”

எவ்வளவு நாளா நடக்குது?”

 ஒரு நாற்பது வருஷமா?”

 அப்ப நீ பெரியபிஸ்தாதான்!”

எங்க சார்? நட்ஸ் நிறைய சாப்பிட்டா கொழுப்பு அதிகமாயிரும்னு என் பொண்டாட்டி கொடுக்கறதே இல்லே!”

நாங்க கூட்டிட்டு போய் கொடுக்க வேண்டியதை கொடுத்தா கொழுப்பு தானா கரைஞ்சு போயிரும்!”

நீங்க எந்த டாக்டர்கிட்டே கூட்டிட்டுபோவீங்க?”

டாக்டர்கிட்டே இல்லே? போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் தட்டுனா உன் கொழுப்பு தானா அடங்கி போயிரும்…! என்னது ஸ்டேஷனா? வேட்டி நனைந்துவிடும் போல ஆகிவிட  சார்! அர்ஜெண்ட் என்று ஒரு விரலை காண்பித்தார்..”

  சரிசரி அப்படி ஓரமா ஒதுங்கித்தொலை…!”

ஒண்ணுக்கு அடிக்கப் போவது போல சுவரோரமாய் ஒதுங்கி போலீஸ் பார்வை அப்படி திரும்பியதும் ஓட்டம் பிடித்தார் பாச்சா..

  பின்னாலேயே துரத்திக்கொண்டுவந்தார் காவலர்.

யோவ்! பெருசு. ஓடாதே நில்லு..! ”

 எப்படியோ ரெண்டு தெரு சந்து பொந்தில் நுழைந்து போலிசுக்கு டிமிக்கி கொடுத்து  திறந்திருந்த ஒரு பெட்டிக் கடை முன் ஆஜரானார் பாச்சா. பட்டணம் பொடி ஒரு பாக்கெட் கொடுங்க என்றார்

இருபது ரூபா கொடு”.. என்றார் அந்த கடைக்காரர்.

   பொடிவிலை கேட்டா படி விலை சொல்றே?”

பெர்சு! இன்னா காலத்துலே இருக்கே.. லாக்டவுன் பீரியட் இது,,நினைப்புல வெச்சுக்கோ!

இருக்கட்டுமே கொஞ்சம் பொடிக்குஇடைவேளைஉடக்குடாதா? அப்பாவியாய் கேட்டார் பாஞ்சா.”.

தோபார்றா.. இடைவேளை விடமாட்டோம்! “இடைவெளிதான் உடனும்னு மோடிலேர்ந்து எடப்பாடி வரைக்கும் கூவிக்கினுகிறாங்க! சட்டுபுட்டுன்னு வாங்கிட்டு எட்த்த காலிப் பண்ணு!”

போடியை வாங்கி மூக்கில் விட்டு உறிஞ்சியவர்  தும்மினார்,, “ஹ்ச்ஹச்

அவ்ளோதான்…! எங்கிருந்தோ ஒரு பத்து பேர் வந்து.. கோழி அமுக்குவது போல பாஞ்சாவை அமுக்கிவிட்டார்கள் அடுத்த பத்தாவது நிமிஷம் ஜி.எச்சில் ஒரு பரிசோதனை எலி போல பாச்சா இருக்க அவரை சுற்றி விண்வெளி உடை அணிந்த மாதிரி நான்கு டாக்டர்கள் சூழ்ந்து இருந்தனர்.

மிஸ்டர் உங்க நேம் என்ன? எங்க இருக்கீங்க? உங்க வீட்டுல எத்தனை பேரு? எத்தனை நாளா இருமல் இருக்கு?”  அடுக்கடுக்காய் கேள்விகள்

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டு ஒரு மூக்குப்பொடி போட்டு நெடி தாளாமத்தான் தும்மினேன் டாக்டர் எனக்கு கொரானாவெல்லாம் இல்லை  கெஞ்சுன குரலில் பாச்சா சொல்ல..மிஞ்சுன குரலில் சொன்னார் டாக்டர்.. ”நோ.. மிஸ்டர் பாச்சா..! அப்படி சொல்லக்கூடாது.. டெஸ்ட் எடுப்போம்! ரிசல்ட் வந்தப்புறம்தான் நீங்க வீட்டுக்கு போக முடியும்.”

 அவரை ஒரு அறைக்குள்  அடைத்து தனிமைப்படுத்தினார்கள்.

ஒரு மணிநேரம் கடந்திருக்கும். அவர் இருந்த அறைவாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்த பாச்சா மகிழ்ந்தார்.  சச்சு..  வந்திட்டியா.. என்னை இவங்க பிடிச்சு வச்சிருக்காங்க! என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறியா?”

 ஷ்என்று அடக்கிய சச்சு அங்கிருந்த டாக்டர்களிடம் ஏதோ பேசினார். அப்புறம் அங்கிருந்து பாச்சா மாமாவிடம் வந்தார்.

சச்சு டாக்டர் கிட்டே சொல்லிட்டியா? நாம போலாமா?”என்றார் மாமா ஆவலாக.

திஸ் ஈஸ் டூ மச்! ரெடிக்குலஸ்!மூக்குப்பொடி போடறதுக்காக வீட்டுல இருந்து சுவர் ஏறி குதிச்சு வெளியே வந்து இருக்கீங்க! கொஞ்சம் கூட சோஷியல் ரெஸ்பான்ஸ் இல்லே! கவர்மெண்ட் ரூல்ஸ் ஒபே பண்ணனுங்கிற அறிவு இல்லே! உங்களுக்கு நல்லா வேணும்..!”

  அப்ப நாம வீட்டுக்கு போகலையா?”

வீட்டுக்கு போறதா? எள்ளுதான் வெயில்ல காயுதுன்னா எலிப்புழுக்கையும் சேர்ந்து காயனும்னு தலையெழுத்து! ”

உங்களை கட்டிண்ட பாவத்துக்கு நானும் இங்க இருந்து டெஸ்ட் பண்ணி ஆகனுமாம்! ரிப்போர்ட் நெகட்டிவ்னு வந்தாத்தான் நாம வெளியே போக முடியும்!”

  …”  என்று மயங்கிவிழுந்தார் பாச்சா மாமா.


டிஸ்கி:  முழு ஊரடங்கு  காலத்தில் எழுதி முகநூலில் பதிவிட்ட  கதை.

Comments

  1. அற்புதம்..எந்தவகையிலும் அப்புச்சாமிக்கு குறைவில்லை..தொடர வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. விறுவிறுப்பாகவும், ரசனையோடும் உள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகிறேன். கதை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் எடிட் செய்தால் குமுதத்திலேயே பிரசுரிக்கலாம். 

    ReplyDelete
  4. செம சுரேஷ். நல்ல் ஃப்ளோ. வாழ்த்துகள் ஒரு ஆலோசனை. அப்புசாமி சீதாப் பாட்டி கேரக்டரைசேஷனை தவிர்க்கலாம்.அது உங்கள் தனித்தன்மையை குறைந்த்துவிடும்

    ReplyDelete
  5. அப்புசாமி எஃபெக்ட்! :)

    உங்கள் பாணியில் தொடருங்கள் சுரேஷ். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!