பேய் விளையாட்டு!

 

பேய்விளையாட்டு!

 


அந்த இடுகாட்டின் வாசலில் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் பிரபல சீரியல் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி சாந்தகுமார்.   கார் ஓசை கேட்டதுமே வாசலுக்கு ஓடிவந்தான் வெட்டியான் ஏழுமலை.

என்ன சார்? அடக்கம் பண்ணனுமா? பாடி எத்தனை மணிக்கு வரும்! டெத் சர்டிப்பிகேட் எல்லாம் இருக்கா? 3000 ரூபா ஆகும் கார்பரேஷன்  பீஸ் தனி அப்புறம் சரக்கு தனியா வாங்கி கொடுத்திடனும் என்று அடுக்கிக் கொண்டே போக..

கை அமர்த்தி அவன் வாயை மூடும்படி சைகை செய்தார் சாந்தகுமார்.

அவன் கை கட்டி வாய் பொத்த, ”இங்கே வா! நீதான் இங்கே இன்சார்ஜா? உன் பேர் என்ன?”

  ஏழுமலைங்க ஐயா!”

ஏழுமலை! நாங்க ஒரு திகில் சீரியல் எடுக்கிறோம்! நீ கூட மூன் டீவியிலே நைட் பத்துமணிக்கு அதை பார்த்திருக்கலாம்.”

அதுக்கெல்லாம் எனக்கேதுங்க நேரம் பொணத்தை புதைச்சோமா! கட்டிங் போட்டோமா கவுந்தடிச்சு தூங்கினோமான்னு போய்க் கிட்டிருக்கு பொழுது!”

சரி போகட்டும்!  அந்த சீரியல்ல ஒரு சுடுகாடு சீன் வருது! இங்கே ஷூட்டிங் வைக்கணும்!”

சார்! அதெல்லாம் எப்படி சார் நான் பர்மிஷன் கொடுக்க முடியும்? இது தனியாருக்கு சொந்தமான இடுகாடு! அவங்க கிட்டே…”

அது தெரியாமலேயா வந்திருப்பேன்! உன் கிட்டே நான் பர்மிஷன் கேட்க வரலை! இன்பர்மேஷன் தான் சொல்ல வந்தேன். நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு இங்கே நைட் ஷூட்டிங் நடக்க போகுது…”

சார் அதுக்கு நான் என்ன பண்ணணும்? ” எரிச்சலாய் கேட்டான் ஏழுமலை.

பார்த்தியா? கோபப்படறே? என்ன இருந்தாலும் சுடுகாடு! நைட் ஷூட்டிங் எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கும்.  நாம ஷூட்டிங் எடுக்கிற ஏரியாவுலே புதுசா ஏதாவது பொணம் வந்து புதைச்சிடக்கூடாது இல்லையா?  நான் சொல்ற இடம் வரைக்கும் யாரையும் ஆக்குஃபை  பண்ன விடாதே  உனக்கு தினமும் 500 ரூபா பேட்டாவும்  ஒரு குவாட்டரும் டிபனும் வாங்கி கொடுத்திடறேன். ஷூட்டிங் முடியறவரைக்கும்  நீ எங்க கூடவே இருக்கணும்.

அப்படின்னா சரிங்க சார்!

இந்தா அட்வான்ஸா ஒரு ஐநூறு வைச்சுக்கோ! நாளைக்கு நைட் எட்டு மணிக்கு கரெக்டா இங்கே இருப்போம்.”

வாங்க சார்! நான் காத்துட்டு இருக்கேன்.”

மறுநாள்  சாந்த குமார் தான் சொன்னபடி ஷூட்டிங் நடத்த யூனிட் வேனோடு வந்து சேர்ந்து விட்டார்.

சீரியலின் கதாநாயகியும் வில்லியும் மற்ற ஆர்ட்டிஸ்ட்களும் கார்களில் வந்திறங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏழுமலை வாயெல்லாம் பல்லாக வாங்க சார் வாங்க!” என்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். காலையில் ஊற்றிக் கொண்ட விஸ்கி வாடை இன்னும் அவன் மீது வீசிக்கொண்டிருந்தது.

ஏழுமலை! ஷூட்டிங்க கல்லறை தோட்டத்து நடுவிலே வைச்சுக்கலாம்னு பார்க்கறேன். அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே..!”

எதுவும் கிடையாது சார்!”

பரபரவென ஆட்கள் இயங்கி லைட் செட்டிங் முடித்து ஷூட்டிங் துவங்கி விட்டது.

டைரக்டர் கதாநாயகியிடம் வந்து சீன் சொல்ல ஆரம்பித்தார். இந்த கல்லறை தோட்டத்துக்கு  வில்லி தனியா வர்றாங்க. அப்போ நீங்க வெள்ளை உடையிலே ஆவியா வர்றீங்க அப்படியே கண்களே தீப்பொறி பறக்க அவங்களை மிரட்டறீங்க! என்னை கொன்னு புதைச்சிட்டா நீ தப்பிச்சிட முடியாது. ஆவியா வந்து அழிப்பேன்னு சவால் விடறீங்க!”

ஒகே.. ஸ்டார்ட் பண்ணலாமா?”

லைட்டா டச்சப் பண்ணிட்டு…”

இது பேய் சீன் தான்மா! டச்சப் ஏதும் வேணாம். அப்படியே வாங்க!”

லைட்ஸ் ஆன்! கேமரா..ரோல்! ஆக்ஷன்டைரக்டர் குரல் கொடுக்க

பளிரேன வெளிச்சம் பரவியது

வில்லி பயந்தவாறு நடந்து வர  ஹீரோயின் அந்த கல்லறை மீதிருந்து வெள்ளை உடையில்  திடிரென்று  தோன்றி..

வந்துட்டியா….! வாஉன்னைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். என்னை கொன்னுட்டு நீ நிம்மதியா இருக்க முடியாதுஉன்னை பழிவாங்கத்தான் காத்துட்டிருக்கேன். வாகிட்டே வாவிடமாட்டேன்….!”

கட் !”

சூப்பர் மா! ஒரே டேக்ல முடிச்சிட்டீங்க..”

தேங்க்ஸ் சார்.”

அடுத்த சீனுக்கு ரெடியானார் டைரக்டர்.

ஒரு வாரம் ஏழுமலைக்கு பெரிய வரமாக மாறியிருந்தது. குவார்ட்டரும் கொறிக்க திங்ஸோடு  கிடைக்க தினமும் கிடைத்த ஐநூறு பாக்கெட்டை நிரப்பியிருந்தது.

அன்று கடைசி நாள். சாந்தகுமார் கொடுத்த ஐநூறை வாங்கி பாக்கெட்டில் சொருகிக்கொண்டான். ”ரொம்ப தேங்க்ஸ் ஏழுமலை! ஷீட்டிங் எந்தவித இடைஞ்சலும் இல்லாம முடிஞ்சது. நாங்க கிளம்பறோம்.”

வேன்கள் கிளம்பிப் போக குடிசைக்குள் நுழைந்தான் ஏழுமலை!

 

ஒருவாரம் கடந்திருக்கும். அந்த சீரியல் டைரக்டர் குரல் கொடுத்தார். யோவ் சுடுகாட்லே எடுத்த சீனை ரஷ் போட்டு பார்த்துடலாம் போடுய்யா..!

சீன் ஓட  அதிர்ந்தார் டைரக்டர். என்னாய்யா? என்னென்னமோ வருது!

அந்த காட்சியில் ஒரு இளம்பெண்ணை வாலிபன் ஒருவன் பலவந்தப் படுத்துகிறான். எவ்வளவோ போராடியும் அந்த பெண் தோற்றுப் போக உயிரை விடுகின்றாள்.

அடுத்த சீன் அந்த வாலிபன் அந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவந்து இடுகாட்டில் புதைக்கும்படி வெட்டியானிடம் கூறுகின்றான்.  சில ரூபாய் தாள்களை கொடுத்துவிட்டுச் செல்கிறான்.

அந்த இளைஞன் சென்றதும் அவ்வெட்டியான் அந்த பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து புரண்டு அழுகிறான்.’ மவளே..! உன்னை நாசமாக்கிட்டு உன் பொணத்தையே என்கிட்டே புதைக்கச் சொல்லிட்டு போறானே அந்த பாதகன்..!  அவனை சும்மா விடலாமா? சும்மா விடலாமா? ஆனா என்னாலே என்ன செய்ய முடியும். அவன் பெரிய பணக்காரன் ஏழெட்டு கம்பெனிகளுக்கு முதலாளி. இதோ இந்த சுடுகாடு கூட அவன் கம்பெனியோடுதுதான். அதான் தைரியமா இங்கேயே கொண்டுவந்து உன்னை புதைக்கச் சொல்லிட்டு போறான்..’

அழுகை ஆத்திரமாகிறது! “வென கத்துகின்றான். அப்புறம் ஆற்றாமையோடு பள்ளம் தோண்டி பெண்ணை புதைக்கின்றான் வெட்டியான். சில நொடிகளில் காட்சி மாறுகின்றது. அந்த பெண்ணை புதைத்த இடத்தில் இருந்த மரமொன்றில் தூக்கில் தொங்குகிறான் அவன்.

அதிர்ச்சியாகிறார்  டைரக்டர்.

யோவ்இது என்னய்யா புதுக்கதை! நம்ம சீரியலை விட செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குது..!”

சார் அந்தப் பொண்ணை புதைச்ச வெட்டியான் யாருன்னு  உன்னிப்பா கவனிங்க!”

ரீவைண்ட் பண்ணு! ஜூம் பண்ணு!”

ஜும் செய்கையில் அங்கே அழுது கொண்டிருந்தான் வெட்டியான் ஏழுமலை!

என்னது ஏழுமலை உயிரோட இல்லையா? நெஞ்சு தூக்கிவாரிப்போட்டது டைரக்டருக்கு

இன்னாயா நடக்குது இங்கே? சாந்த குமாரை கூப்பிடுய்யா!”

 சாந்தகுமார் நடுநடுங்கியபடியே அந்த காட்சிகளை பார்த்தார்.” சார்.. சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியலை! நான் அந்த எழுமலையை பார்த்து பேசி பணம் கொடுத்துட்டு வந்தேன்.அந்த ஓனர்கிட்டே பேசும்போது கூட ஏழுமலைன்னு ஒருத்தன் வெட்டியானா இருப்பான். அவனை பார்த்து பேசிக்கோங்கன்னுதான் சொன்னாங்க.”

யோவ்! நாம பேய் சீரியல் எடுத்தா! அதுலேயே பேய் வந்து விளையாடுதேய்யா!”

இதற்குள் அந்த சீரியலின் புரட்யூசர் அரக்க பறக்க ஓடிவந்தார். டைரக்டர் சார் என்ன ஆச்சு?”

நாம எடுத்த சீன் வராம புதுசா ஏதோ ப்ளே ஆகுது! ஆனா இண்ட்ரஸ்டிங்கா இருக்குது!”

ப்ளே பண்ணுங்க…!”

காட்சி ஓடத் துவங்கியது. அந்த பெண்ணை பலவந்தப்படுத்தும் இளைஞனை பார்த்ததும் ப்ரட்யூசர் அலறினார்  முகேஷ்நீயா…?”

ஏன் பதறுறீங்க? இது யாரு உங்களுக்குத் தெரியுமா?”

இது என் அண்ணன் பையன் முகேஷ்”.

இந்த சீரியலுக்கு நான் புரட்யூசரா இருந்தாலும் மொத்த பணமும் அவனோடுதுதான்! நான் வெறும் பினாமி மட்டும்தான்!”

முகேஷ் கொஞ்சம் வழிசல் கேஸ்தான்! ஆனா இப்படி ஒரு பொண்ணை நாசம் பண்ற அளவுக்குப் போயிருப்பான்னு நான் எதிர்பாக்கவே இல்லை!”

இந்த வீடியோவை உடனே போலிசுக்கு அனுப்பிடனும்.குற்றவாளியை தண்டிக்கணும்.”

அதுக்கு அவசியமே இல்லை!”

ஏன் சார்! போனவாரம் நீங்க ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது அவசரமா வெளியே போறேன்னு நீங்க  கண்டினியு பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனேன் இல்லையா?”

ஆமாம் சார்! போய் போன் கூட பண்ணீங்களே..! யாரோ உங்க ரிலேஷன் டெத் ஆயிட்டார்னு…!”

ஆமாம் டெத் ஆனது  முகேஷ்தான்!”

எப்படி?”

ஊட்டி மலைப்பாதையிலே ஆக்ஸிடெண்ட்  ஆகியிருக்கு! பாடி கூட கிடைக்கலை!”

அடப் பாவமே..!”

அப்போது வீடியோ தானாக ஓட ஆரம்பிக்க..

ஊட்டி மலைப்பாதையில் அந்த காரை ஓட்டிக்கொண்டிருக்கிறான் முகேஷ். அவன் எதிரே ஏழுமலையும் அவன் பெண்ணும் வர.. அதிர்ந்து போய் ப்ரேக் அழுத்துகிறான். ப்ரேக் பிடிக்க வில்லை. ஸ்டிரியங் தானாக திரும்ப  மலைப்பாதையின் தடுப்பை உடைத்துக் கொண்டு அந்த கார் அதள பாதாளத்தில் விழுகின்றது.. அப்படியே வீடியோ ப்ரீஸ் ஆகி நிற்க

புரொடியூசரும் டைரக்டரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.

 

 

Comments

  1. விளையாட்டு திடுக்கிட வைத்தது...!

    ReplyDelete
  2. பேய் விளையாட்டு - Interesting! :)

    நல்லா வந்திருக்கு இந்தக் கதை.

    ReplyDelete
  3. சுரேஷ் பேய் விளையாட்டு ரொம்பவே ஆட்டம் ஆடியிருக்கிறது! அடித்துத் தள்ளியிருக்கிறது. சூப்பராக இருக்கிறது கதை!

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  4. அருமை. ஏற்கனவே படித்திருக்கிறேன். போட்டிக்கு எழுதப்பட்ட கதைதானே இது.வலைபக்கத்திலும் வெளியிடுவது நல்ல து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!