முன்னோர்கள் நல்லாசி வழங்கும் ஆடி அமாவாசை!

ஆடி அமாவாசை!


சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் அமாவாசை எனப்படுகின்றது. இது மாதம் தோறும் நிகழும். இந்த நாளில் ஈர்ப்பு விசை அதிகரித்து கடல் கொந்தளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அமாவாசை தினம் முன்னோர்களின் தினமாக இந்துக்களால் அனுசரிக்கப்படுகின்றது. அமாவாசை தினத்தில் முன்னோர்கள் நமது இல்லங்களுக்கு வருவதாக ஐதீகம். அன்று முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் உணவருந்துதல் வழக்கம். பசுக்களுக்கு உணவளிப்பது, பிராமணர்களுக்கு தானம் அளிப்பது, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  உதவி செய்வது ஆகியவை அமாவாசை தினத்தில் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று நம்பப் படுகின்றது.

  இந்துக்கள் நதிகளை புனிதமாக கருதினர். நதிகளை பெண் தெய்வங்களாகவும் வழிபட்டனர். அதன் காரணமாகவே நதிகளுக்கு பெண்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அமாவாசை தினத்தில் நதிக்கரைகளில் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்தல் மிகவும் உகந்தது ஆகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து காவேரி,பாகீரதி,  போன்றவை புண்ணிய தீர்த்தங்கள். இந்த தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்வது விஷேசமாகும். இது தவிர்த்து புண்ணிய க்ஷேத்திரங்களில் தர்ப்பணம் செய்வதும் விஷேசமாகும்..

ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப் பிக்கப்பட்டுள்ளது.
  ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயில் குளக்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் மிகச்சிறப்பாக செய்யப்படுகின்றது. திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் தர்ப்பண பூஜைகள் நடக்கின்றது.
இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. 
 ஆடிமாதம் முதல் தைமாதம் வரை தேவர்கள் ஓய்வெடுக்கும் நாளாக கருதப்படுகின்றது. இந்த நாட்களில் நமது முன்னோர்கள் நம்மை காப்பதற்காக நம் இல்லங்களுக்கு வருவர் என்று தர்ம நூல்கள் கூறுகின்றன. அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை நாளில் வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 .அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறதுஅகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்யவேண்டும்.

.ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள்.
இவைகளில் 14 மன்வாதி நாட்கள்,
யுகாதி நாட்கள் 4,
மாதப்பிறப்பு நாட்கள் 12,
அமாவாசை 12, மஹாளய பட்சம் 16,
வ்யதீபாதம் 12, வைத்ருதி 12,
அஷ்டகா 4, அன்வஷ்டகா 4,
பூர்வேத்யு 4 நாட்கள்.
இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
 தர்ப்பணம் ஏன்?
திவசத்தின்போது பிண்டம் கொடுப்பது ஏன்திவசத்தின்போது இறந்த பெற்றோர்பாட்டனார் மற்றும் முப்பாட்டனார்  ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது. ஏன் தெரியுமாகுழந்தை பிறக்க மூலகாரணமான பொருள்  ஆணிடமுள்ள சுக்கிலம் எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில் 84 அம்சங்கள் உள்ளன.
அதில் இருபத்து எட்டு(28)அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டானவைபெற்றோரிடமிருந்து இருபத்தியொரு(21) அம்சமும்பாட்டனாரிடமிருந்து பதினைந்து(15) அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து(10) அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு(6)  அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று(3) அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு(1) அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு (56)அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின்  சுக்கிலத்தோடு(28) அம்சங்கள் தொடர்பு கொண்டவை.
இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரேஅதனால்தான், திவசத்தின்போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறதுஇங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான சரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழ் வருடங்கள் இரண்டு அயனங்களாக பிரிக்கப்படுகிறது. தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயினம் என்றும் சொல்லப்படுகிறது. தட்சிணாயனத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை, உத்தராயணத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை, மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகியவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
  இத்தகைய சிறப்பான நாட்களிலாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடுதல் குடும்பம் சிறக்க உதவும். ஆடி அமாவாசை பற்றிய கதை ஒன்றை வாசிக்க இங்கே க்ளிக்கவும்   ஆடி அமாவாசை கதை  
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட இந்த அமாவாசை நாளில் பித்ருக்களை வழிபடுவோம்! சிறப்புறுவோம்! நன்றி!
(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஆடி அமாவாசையைப் பற்றிய வரலாற்று ரீதியான, நம்பிக்கை மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான அருமையான பதிவு. ஏராளமான செய்திகள். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தொகுத்துத் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள். நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே ஆடி அமாவாசையைக் குறித்து விரிவான தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் தளீர்,
    ஆடி அமாவாசையின் சிறப்புகள் அறிந்தோம், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஆடி அமாவசை பற்றியா சிறப்புக்கள் அறிந்தேன் மிக்க நன்றி சகோ!
    ஆனால் ஒரு கேள்வி பெண்கள் அதாவது கணவர் உள்ளவர்கள் ஆடியாமாவசை விரதம் பிடிக்கக் கூடாது என்கிறார்களே இது உண்மை தானா உங்கள் ஊரில் எதைபின் பற்றுகிறார்கள். இதனால் விரதம் பிடிக்க பயமாக இருக்கிறது தெரிந்தால் அறியத் தரவும். நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. ஆடி அமாவாசை குறித்து அறியத் தந்தீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரரே...

    ReplyDelete
  7. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்ல பதிவு ,நம்மைவிட்டு நீங்கியவர்களின் நினைவாக ..அனுஸ்டிக்கபடும் இந்தநாளில் அவர்களை நினைவுகூர்தல் நமக்கு நன்மை வந்து சேரும்

    ReplyDelete
  9. நல்ல தகவல்....பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6