அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்!

அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்!

மைக்கேல் டி குன்ஹா இந்த பெயரை இனி அம்மா கனவிலும் கூட மறக்கமாட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தது அம்மாவுக்கு பெரிய தண்டனை கிடைக்காது. அப்படியே தண்டணை என்றாலும் சிறிய அளவில்தான் இருக்கும். அல்லது அபராதம் மட்டுமே இருக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கேற்றார் போலவே வழக்கின் தீர்ப்பும் 22 ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

   சில அதிமுக விசுவாசிகள் அம்மா விடுதலை என்றெல்லாம் பேனர் அடித்து ஒட்டி கொண்டாடினார்கள். பல லட்சக் கணக்கில் பட்டாசுகள் வாங்கிவரப்பட்டன விடுதலையானதும் கொண்டாடி மகிழ. இவையெல்லாம் வெறும் கனவாகிப் போய்விட்டது.
  பதினொறு மணி தீர்ப்பு தள்ளிப்போய் மூன்று மணி அளவில் குற்றவாளி என்று அறிவித்து பின்னர் 4 மணிக்குமேல்தான் தண்டணை அளிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் தண்டணை, 100 கோடி ரூபாய் அபராதம். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதே அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. சமாளித்து கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டார். இரண்டு வருடங்களுக்குள் தண்டனை இருக்கும் என்று எதிர்பார்ப்பில் மண் விழுந்துவிட்டது. அப்பீல் பற்றி தீர்ப்பில் ஏதும் கூறவில்லை. தொடர்ச்சியான தசரா விடுமுறை என்பதால் ஜாமீனுக்கும் வழி இல்லை என்று எல்லா பக்கமும் கதவை அடைத்தாகிவிட்டது.

       குற்றவாளி என்றால் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும். தண்டனை என்ன என்று முடிவு செய்வது நீதிபதியின் வேலை. அதற்கு அவர் சட்டப்புத்தகங்கள், முந்தைய தீர்ப்புக்கள் பலவற்றை ஆலோசித்து தண்டனை அளிப்பார். ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு  ஏற்புடையது இல்லை என்றால் மேல் முறையீட்டுக்கு என்றே உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம், இறுதியில் ஜனாதிபதியின் பரிசீலனை என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் கடந்து வர கொஞ்சம் காலம் எடுக்கும். அதுவரை பொறுமை ஒன்றே வழி.
    ஆனால் அம்மாவின் அடிபொடிகளுக்கும் அல்லக்கைகளுக்கும் இந்த பொறுமை என்பது துளிக்கூட இல்லை. அல்லக்கை என்று சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய இன்றைய அதிமுக தொண்டர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். எதை வீசி எதைப் பிடிக்கலாம் என்றுதான் எல்லா கட்சிக்காரர்களும் இருப்பதால் இவர்களை சொல்லியும் குற்றமில்லை.
    தீர்ப்பு வெளியானதுமே சென்னையில் அப்படி ஒன்றும் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரியவில்லை. இதுவே வேறு மாநிலம் என்றால் நிலைமையே வேறாகத்தான் இருந்திருக்கும். தமிழகத்தில் கலவரம் சட்டம் ஒழுங்கு பாதித்துவிட்டது என்று கூச்சல் இடுபவர்கள் 1990ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட போது நடந்த கலவரங்களையோ 91ல் ராஜிவ் படுகொலையின் போது நடந்த கலவரங்களையோ மறந்துவிட்டிருப்பார்கள் போல.
    ஒரு தமிழக முதல்வரின் கைதுக்கு இந்த அளவிற்காவது அசம்பாவிதங்கள் நிகழாவிட்டால் அது அந்த முதல்வரின் மீது அந்த கட்சி தலைவரின் மீது தொண்டர்களின் நம்பிக்கையின்மையைத்தான் காட்டும். இரண்டுநாட்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அப்படி ஒன்றும் மோசம் இல்லை.
   இந்த சமயத்தில் அதிமுக அல்லக்கைகளான அமைச்சர்களையும் சில எம்,எல். ஏக்களையும் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். வழக்குத் தொடுத்தது சுப்ரமண்யம் சாமி, தீர்ப்பு கொடுத்தது நீதிபதி குன்ஹா. இவர்கள் இருவரையும் விட்டுவிட்ட அல்லக்கைகள் பாவம் 90 வயது கிழவர் கருணாநிதியை சகட்டு மேனிக்கு திட்டினர். அவரது உருவபொம்மையை கொளுத்தினர். செருப்புமாலை போட்டனர். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி போல. இந்த காழ்ப்புணர்ச்சி அரசியல் என்றுதான் மாறுமோ தெரியவில்லை.
    ஒரு சட்டசபை சபாநாயகராக இருந்தவர், நான்கு முறைக்கு மேல் எம்.எல். ஏ. அமைச்சராக இருந்தவர் பா. ஜெயக்குமார். அவர்கூட பொது இடத்தில் கலைஞரை வசைபாடி ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதே போல்தான் பலரும். அங்கு நீதிமன்ற வளாகத்தில் எங்களையும் அம்மாவுடன் சிறைபடுத்துங்கள் என்று சிறுபிள்ளைப் போல அடம்பிடித்து  தடியடிப்பட்டார்கள் சிலர்.
   இதெல்லாம் எதற்கு? இப்படியெல்லாம் எதையாவது செய்து அந்த அம்மாவின் பார்வையில் பட்டுவிட்டால் நமக்கு ஏதாவது பதவி கிடைக்காதா? என்ற அல்ப ஆசைதான். இதை ஊக்குவித்ததும் அம்மையாரே தான்! எதிர்கட்சியினரை வசைபாடினால் தகுதியே இல்லாவிட்டாலும் பதவி, பரிசுகள் என்று அள்ளிவீசி ஓர் தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திவிட்டார். விளைவு. இன்று ஒரு நம்பிக்கையான விசுவாசியைக் கூட தேடவேண்டிய சூழ்நிலை.

    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து ஆகவேண்டும் என்பது பழமொழி. அதையே இந்த கைது காட்டினாலும் பலரிடம் அம்மாவின் மீது ஓர் பரிவையே காண முடிந்தது. ஆட்சிக்கு வந்த புதிதில் கொள்ளையடித்து இருந்தாலும் இப்போதைய சூழலில் அம்மாவின் அணுகுமுறை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது. அம்மா உணவகம் போன்றவையும் மகளிர் நலத் திட்டங்கள் சிலதும் பெண்கள் மத்தியில் அம்மா அலையை நன்கு ஏற்படுத்தி இருக்கின்றன.
   இதற்கிடையே சிலர் முக நூலில் அம்மாவிற்கு மினரல் வாட்டர் கேட்டால் அதோ பானையில் முகர்ந்து குடி! காவிரி தண்ணீர் கேட்டாயே அதுதான் என்று சொன்னார்கள் என்றும் களி கொடுத்தார்கள் என்றும் ஆளாளுக்கு கற்பனை கலந்து கட்டி எழுதி லைக்கும் ஹிட்ஸும் வாங்கிவிட்டார்கள்.
   எல்லாம் சரிதான். எதற்கு இந்த பேருந்துகளை அல்லக்கைகள் கொளுத்தினார்கள் என்று தெரியவில்லை. எந்த ஒரு போராட்டம் என்றாலும் பாவம் பேருந்துகள் தான் மாட்டிக் கொள்கின்றன. பேருந்துகள் நம் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. நம்மை சுமந்து செல்கின்றன. இதை கொளுத்திவிடுவதால் தவறு சரியாகிவிடுமா? இல்லை குற்றம்தான் இல்லையென்று ஆகிவிடுமா? இதனால் பொதுமக்களுக்குத்தான் இடையூறு. ஒரு பேருந்தை கொளுத்திவிட்டால் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்து ஒன்று குறைந்து போகிறது. அந்த பேருந்து மீண்டும் எப்போது வாங்கப்படுமோ இறைவனுக்கே வெளிச்சம். எத்தனை லட்சங்கள் கோடிகள் மக்கள் பணம் விரையம் ஆகின்றது. இதை உணர்வதில்லை அல்லக்கைகள். ஒரு செத்த பாம்பை அடிப்பது போல இந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்து வீரப்புலிகளாக காட்டிக் கொள்கின்றனர்.

    இன்று காலையில் கோயிலுக்கு மாணவி ஒருவர் வந்திருந்தார். பாவம் அம்மா! குற்றவாளின்னு சொன்னவுடனே அழுதுட்டாங்க! ஸ்கூல் பேக், சத்துணவுல முட்டை எல்லாம் போட்டாங்க என்று வருத்தப்பட்டார்.
    இதையெல்லாம் அவங்க சொந்த பணத்துலயா கொடுத்தாங்க? நாம வரி கட்டிறோம்! அந்த பணத்துல நமக்கு கொடுக்கிறாங்க! அவங்க பணம் ஒண்ணும் இல்லையே? தப்பு செஞ்சாங்க தண்டணை அனுபவிக்கிறாங்க என்றேன்.
   அப்ப கருணாநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் எல்லாம்கூடத்தான் தப்பு செய்தாங்க! என்றார்.
  அவங்களும் ஒருநாள் மாட்டுவாங்க! என்றேன்.
கொஞ்சமா திருடனுவங்க மாட்டிக்கிறாங்க! நிறைய திருடனவுங்க நல்லா இருக்கிறாங்க! என்றார்.

இன்னும் ஒருவர் வந்தார். இது திட்டமிட்ட சதிங்க! தீர்ப்பு கொடுத்திட்டு நீதிபதி எழுந்து போயிட்டார். ஜாமீனை பத்தியோ அப்பீலை பத்தியோ எதுவும் சொல்லலை! அந்த அம்மா என்ன சாதாரண பொம்பளையா? எப்பேர்ப்பட்ட பதவி அந்தஸ்து? வேணுமின்னே சிக்க வைச்சிட்டாங்க?  என்றார்.

இப்படி நான் சந்திக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அம்மா செய்தது தப்பு என்று சொன்னாலும் தண்டணையை ஏற்கவில்லை. இது அதிகம் என்றே சொல்லுகின்றனர். ஆக அம்மா மீது மக்களிடையே வெறுப்பு இல்லை.  ஒருவித பரிதாபமே இருப்பதை காணமுடிகிறது.
    இந்த பரிதாபத்தை அதிமுகவின் அல்லக்கைகள் கடைகளை உடைப்பது பேருந்தை எரிப்பது போன்ற அராஜகங்கள் செய்து கலைத்துவிடுவார்கள் போல.

இதில் இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும் தேமுதிக தலைவர். ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்றெல்லாம் பேட்டிக் கொடுக்கிறார். இவருக்கு அன்று கூட்டணி வைக்கும் போது அம்மா ஊழல்வாதி என்று தெரியவில்லையா?  எருது இளைச்சால் காக்காவுக்கு கொண்டாட்டமாம்.

திமுக இதுகுறித்து ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை! ஒருவேளை 2ஜி என்ற அபாயசங்கு இருப்பதால் வீணாக சொல்லி சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

அல்லக்கைகளின் ஆர்பாட்டத்தை தவிர்த்து பார்த்தோம் என்றால் இந்த கைது விவகாரம்  அம்மாவின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் நீதித்துறை மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற முதல் தமிழக முதல்வர் என்ற வேதனையான சாதனையையும் அம்மா வசம் சென்றுவிட்டது. இது தமிழகத்திற்கு என்றைக்கும் ஓர் அவமானச் சின்னமாக அமைந்துவிட்டது இந்த கைதின் முக்கிய அம்சமாகிவிட்டது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மிக மிகத் தெளிவாநக கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே... ஸூப்பர்.
    எனது புதிய பதிவு My India By Devakottaiyan.

    ReplyDelete
  2. யாருமே எதிர்ப்பார்க்காத தீர்ப்பு சார், ஆனால் இதை மக்கள் அவருக்கு சாதகமாகவே பார்க்கின்றனர், அவர் செய்த ஊழல் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த அனுதாபத்தை ரத்தத்தின் ரத்தங்கள் கெடுத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...

    ReplyDelete
  3. ஒரு பேருந்தை கொளுத்திவிட்டால் அந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்து ஒன்று குறைந்து போகிறது. அந்த பேருந்து மீண்டும் எப்போது வாங்கப்படுமோ இறைவனுக்கே வெளிச்சம். எத்தனை லட்சங்கள் கோடிகள் மக்கள் பணம் விரையம் ஆகின்றது. இதை உணர்வதில்லை அல்லக்கைகள். ஒரு செத்த பாம்பை அடிப்பது போல இந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்து வீரப்புலிகளாக காட்டிக் கொள்கின்றனர்.//....

    ஆம் சரியாக குறிப்பிட்டீர்கள்.

    ReplyDelete
  4. இது ஓரளவிற்கு எதிர்பார்த்த ஒன்றுதான், அந்த அம்மாவுக்கே தெரிந்திருக்கும், அதனால்தான் இந்த வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்தார்.

    இது ஒரு நல்ல ஆரம்பம், உண்மை நீதியின் மேல் இப்பொழுது சிறிது நம்பிக்கை வந்துள்ளது.

    சுரேஷ் நல்ல பதிவு.

    ReplyDelete
  5. எண்ணங்களை அழகாக எழுத்தில் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. "//அம்மா செய்தது தப்பு என்று சொன்னாலும் தண்டணையை ஏற்கவில்லை. இது அதிகம் என்றே சொல்லுகின்றனர். ஆக அம்மா மீது மக்களிடையே வெறுப்பு இல்லை. ஒருவித பரிதாபமே இருப்பதை காணமுடிகிறது.//"

    இங்கும் சிலரது எண்ண ஓட்டங்கள் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது.

    நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  7. தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலை. சும்மாவா சொன்னாங்க?

    ReplyDelete
  8. நல்ல பார்வை.

    பேருந்துகளை கொளுத்துவதும் பொது சொத்துகளை நாசம் செய்வதும் தேவையில்லாத ஒன்று. என்று தான் திருந்தப் போகிறார்கள்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!