கடைத்தேங்காய்!

கடைத்தேங்காய்!


வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க பொன்னேரி மார்க்கெட் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பனுடன் வந்திருந்த நான் எனது இரு சக்கர வாகனத்தை அந்த மளிகைக் கடை முன் நிறுத்தினேன். நண்பன் இறங்கவும் வண்டியை ஸ்டாண்ட் போட்டு சைட் லாக்கிட்டு உள்ளே சென்றான்.
   கடை முதலாளி,  “வாங்க சாமி! சவுக்கியங்களா! இப்பல்லாம் கடை பக்கமே காணோமே?” என்றார் வாயெல்லாம் பல்லாக.
    “என்ன செட்டியார்! நான் வந்துட்டுதான் இருக்கேன்! நீங்கதான் கடையில இருக்க மாட்டேங்கிறீங்க! அவ்ளோ பிஸியாகிட்டீங்க! நிறைய வியாபாரம் ஆயிருச்சு உங்களுக்கு!” என்றேன்.
   “ எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் சாமி! இன்னும் ரெண்டு மளிகை கடை பக்கத்த்து டவுன்லபோட்டதாலே ஒரே கடையில இருக்க முடியலை! அப்பப்ப போய் பார்த்துட்டு வர வேண்டியதா போச்சு!” என்றார்.
   “ பகவான் புண்ணியத்துல ஷேமமா இருங்கோ! சரி! இந்த லிஸ்ட் எல்லாம் போட்டு வச்சிருங்க! நாளைக்கு கோயில்ல விசேஷ பூஜை இருக்கு! ஒரு அரை மணி நேரத்தில் வந்துடறேன்!”
     “பையனை போட சொல்லிடறேன் சாமி! நீங்க போயிட்டு வர்றதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கும்!”
    இதற்குள் அந்த  கடைப்பையன் என்னை பார்த்து புன்னகைத்தான். “என்ன விஷேசம் சாமி நாளைக்கு?” என்றான்.
   “பிரதோஷம்டா!”
 “சரிங்க சாமி! நீங்க போயிட்டு வாங்க! நான் போட்டு வச்சிடறேன்!”
   நண்பனுடன் வேறு சில கடைகளுக்கு சென்று இன்னும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு மளிகை கடைக்கு வரும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. செட்டியாரை காணவில்லை. அந்தப் பையன் தான் இருந்தான். நல்ல உச்சிவெயில். அப்பாடா! என்றபடி உள்ளே நுழையவும் “வாங்க சாமி! உக்காருங்க! என்று ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டான்.
     “என்ன சண்முகம்! எல்லா சாமானும் போட்டாச்சா!”
  “ஆச்சு சாமி!”
 “மத்த பசங்க எங்க? நீ மட்டும் தான் இருக்கே!”
 “எல்லாம் சாப்பாட்டுக்கு போயிருக்காங்க சாமி! நீங்க வருவீங்கன்னு நான் போகலை!”
 “சரி சாமானை பேக் பண்ணிட்டியா?”
 “இதோ ரெடியா இருக்கு சாமி! இந்தாங்க பில்!”
  “அடடே! மூவாயிரம் ரூபா ஆயிருச்சா! விலையெல்லாம் பார்த்துதானே போட்டே!”
   “உங்களுக்கு போய் அதிகமா போடுவனா சாமி! நான் கடையில சேர்ந்தது முதல் உங்கள பாத்துண்டு இருக்கேன்! முதலாளியும் நீங்களும் பழக்கம் வேற! உங்களுக்கு அதிகமா போடுவனா?”
 உண்மைதான் அவன் சொல்லுவது! இந்த கடை ஆரம்பித்த நாள் முதல் அவன் அங்கு வேலை செய்கிறான். நானும் அந்த கடையின் ஆரம்ப நாள் முதல் வாடிக்கையாளர். செட்டியார் என்னதான் நன்றாக பழகினாலும் விலையில் கறாராக இருப்பார். ஒரு பைசா குறைக்க மாட்டார். ஆனால் பொருள் தரமாக இருக்கும். நியாயமான விலையாக இருக்கும். சண்முகமும் ஆரம்ப நாள் முதல் பழக்கம்.
   சரி சண்முகம்! இந்தா பணம்! மூவாயிரம் ரூபாயை எடுத்து கொடுத்தேன்.
  சண்முகம் அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என் கையில் கொடுத்தான்.
  “ என்ன சண்முகம் இது?”
 “சாமி! நாளைக்கு சாமிக்கு பாலபிஷேகம் பண்ணிடுங்க! என் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடுங்க! பிரசாதம் எதுவும் வேண்டாம். திருநீறு மட்டும் இருந்தா போதும் அதுவும் முதலாளி இருக்கறப்ப கொடுக்க வேண்டாம்!”

    எனக்கு ஒன்று புரிந்தது முதலாளிக்கு தெரியாமல் கடைப் பணத்தை எடுத்துக் கொடுக்கிறான். அதனால்தான் முதலாளி இருக்கும் போது பிரசாதம் கொடுக்க வேண்டாம் என்கிறான். சரி ஏதோ நமக்கு ஒரு நூறு ரூபாய் லாபம்! என்று வந்து விட்டேன்.
   நாளாக நாளாக இது தொடர்ந்தது! கடையில் இருந்து ஏதாவது ஒரு சாமானை எடுத்துக் கொடுப்பான். இல்லை ஒரு பொருளுக்கு விலை போடாது விட்டுவிடுவான். சில சமயம் சில்லறை அதிகமாக கொடுத்துவிட்டு கண்ணடித்து விடுவான்.
    அன்றும் அப்படித்தான் பொன்னேரிக்கு சென்றேன். உடன் நண்பன் வர என்ன செட்டியார் கடைக்குத்தானே! என்று கேட்டான். ஆமாம் என்று தலையாட்டினேன். நண்பனும் அங்க போனா  செட்டியார் இல்லாம இருந்தாஒரு  ஐம்பதோ நூறோ கிடைக்கும் என்றான்.
  அப்போதுதான் எனக்கு உறைத்தது! அடடா! நாம் தவறு செய்கிறோமே என்று.
   செட்டியார் கடை முன் வண்டியை நிறுத்தினேன். உள்ளே செட்டியார் இருக்கிறாரா என்று பார்த்தேன். இல்லை. வண்டியை திருப்பிக்கொண்டு வேறு  கடைக்கு சென்றேன்.
   நண்பன் கேட்டான்.  “என்னடா! வேற கடைக்கு போற?”
   “அந்த கடையில செட்டியார் இல்லையேடா”
  “செட்டியார் இல்லேன்னாதானே நமக்கு லாபம்?”
“அந்த லாபம் வேண்டாம்னு தோணுது?”
   “ஏண்டா?”
 “தெரிந்தோ தெரியாமலோ நாமளே ஒரு தவறை ஊக்குவிக்க கூடாதுடா!”
   “என்ன பெரிய தப்பு?”
 “அவன் கடையிலிருந்து பணம் எடுக்கிறதுதான்! செட்டியார் அவனை நம்பி கடையையே விட்டுட்டு போறார்! இவன் சாமிக்கு அர்ச்சணை பண்றேன்னு பணம் எடுத்து கொடுத்தா நாமளும் வாங்கிக்கிறோம்! அது தப்புத்தானே! அவன் செய்யறது சாமிக்குன்னா அது அவன் பணமா இருக்கணும்! ஒத்தை ரூபாயா இருந்தாலும் அவன் உழைச்சி கொடுத்தா வாங்கிக்கலாம்! செட்டியாரோடத எடுத்து கொடுக்க கூடாது. இவன் செய்யறது கடைத் தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரி இருக்கு!அதை நாம் ஊக்குவிக்க கூடாது!”
   “அப்ப செட்டியார் கிட்ட சொல்லிட வேண்டியதுதானே!”
செட்டியார் கிட்ட சொன்னா அவன் வேலை போயிரும்! தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்புக்கு நாமும் உடந்தையா இருந்திருக்கோம்! முத தடவை கொடுக்கும் போதே மறுத்து இருக்கணும்! அப்படி செஞ்சிருந்தா அவன் அந்த தப்பை செஞ்சிருக்க மாட்டான். நாம செய்யலை! அவன் வேலையும் போகக்கூடாது. நாம பணமும் வாங்க கூடாது. இனி செட்டியார் இருக்கும் போது மட்டும் தான் அந்த கடைக்கு போறோம்!” உறுதியாக சொன்னேன்.
    “அப்ப அவன் திருந்திடுவானா? நாம் இல்லைன்னா இன்னொருத்தன் கிட்ட கொடுப்பான்!”
“அதுக்கு சான்ஸ் கம்மி! நான் ரொம்ப பழக்கமானவன்னு என்னை நம்பி கொடுத்தான்! என்னைப்போல இன்னொருத்தன் பழக்கம் ஆக ரொம்ப நாள் ஆகும்! அப்படியே அவன் இன்னொருத்தன் கிட்ட கொடுத்தாலும் கொடுத்துட்டு போகட்டும்! தப்பை செய்யறதைவிட அதை ஊக்குவிக்கிறது பெரிய தப்பு! இதை தெரியாம இத்தனை நாளா செஞ்சிட்டேன்! இனி செய்யறதா இல்லை! அந்த பையனுக்கும் அப்புறமா எடுத்து சொல்லுவோம்! என்றேன்.

  நண்பன் என்னை வித்தியாசமாக பார்த்தான்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கதை.

    "//தெரிந்தோ தெரியாமலோ நாமளே ஒரு தவறை ஊக்குவிக்க கூடாதுடா!//” - சரியா சொன்னீங்க. நாம தப்பை ஊக்குவிக்காமல் இருந்தால்,நாளடைவில் அந்த தப்பு நடக்காமலே போகக்கூடும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கதை..பையனும் திருந்தினால் நல்லது.

    ReplyDelete
  4. உண்மை தான் தப்புச் செய்வதை விட அதை ஊக்குவிப்பதும் பெருந் தப்புத் தான் .அந்தப் பையனைப் போலுள்ளவர்கள் திருந்த வேண்டும் என்றால் நல்ல அறிவுரை வழங்கியேயாக வேண்டும் .சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  5. அவனை ஊக்குவிக்காமல் இப்போதாவது திருந்தத் தோன்றியதே... கடவுள் விஷயத்திலேயே தப்பு செய்கிறவர் எதற்குத்தான் துணிய மாட்டார்?

    ReplyDelete
  6. அவனை தவறு செய்ய விட்டுவிட்டு பிறகு திருத்த வேண்டும் என்று நினைக்காமல், முதல் தடவையே அவனைக் கண்டித்திருக்க வேண்டும். இதைப்போலத்தான் சில வீடுகளிலும் அப்பாவிற்குத் தெரியாமல் குழந்தைகள் செய்யும் தவறுகளை தாய்மார்கள் திருத்தாமல் விட்டுவிட்டு பிறகு நொந்து கொள்ளுகிறார்கள்.

    நிறைய சிந்திக்க வைத்திருக்கிறீர்கள், சுரேஷ், பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. கருத்துள்ள கதை நண்பரே
    அருமை

    ReplyDelete
  8. // தப்பை ஊக்குவிக்கிறது பெரிய தப்பு // சரி தான்...

    ReplyDelete
  9. எடுத்து சொல்லுவோம்!

    ReplyDelete
  10. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  11. ஒருபாடம் கற்க நிறைய நாள் தேவைப்பட்டதோ. சின்ன சுருக் கதை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6