தித்திக்கும் தமிழ்! பகுதி 29 சிவன் பாம்பை தோடாக அணிந்தது ஏன்?

தித்திக்கும் தமிழ்! பகுதி 29

சிவன் பாம்பை தோடாக அணிந்தது ஏன்?


இன்றைய நவ நாகரீக உலகில் வித விதமான  ஆபரணங்கள் பெருகிவிட்டன. பெண்கள் தங்கம், பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதை போலவே ப்ளாஸ்டிக்  ஆபரணங்களை விதவிதமாக அணிகின்றனர். அவை அழகாககவும் அமைகிறது. அழகை கூட்டவும் செய்கின்றது. பல்வேறு முத்துக்கள் ப்ளாஸ்டிக் நார்கள் என்று சேர்த்து ஆபரணங்களை செய்து ஈர்க்கின்றனர்.

  இப்படி வித விதமான  ஆபரணங்களுக்கு முன்னோடி யார் இருக்க கூடும் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் சிவபெருமான் தான் என்று சொல்கின்றார் இந்த புலவர்.  எத்தனையோ விதவிதமான கழுத்தணிகள் இருக்க சிவனோ பாம்பை கழுத்தணியாக அணிந்தார். இது புதுமை அல்லவா?

   அட்டிகை, மணிமாலை, முத்துமாலை, என்ற பொன் ஆபரணங்களை தவிர்த்து பாம்பை கழுத்தில் அணிந்து புதிய பேஷனை அன்றே உருவாக்கிவிட்டார் சிவன்.

   அப்படி உருவாக்கியதற்கான காரணத்தையும் புலவர் புட்டு புட்டு வைக்கிறார் இந்த பாடலில் அதை படிக்கையில் நகை செய்யும் ஆசாரிகள் அன்றும் அப்படித்தானோ என்று வியந்து போவீர்கள். இதோ பாடல்.

   ஒட்டாகவெட்டியும் கால்பொன்னில் மாப்பொன் னுபாயமதாத்
   தெட்டா திரான்;பணி செய்யாதிரான்; செம்பொன் மேருவினைக்
   கட்டாகக் கட்டிக் கடுகள் வாய்நிறை காட்டவல்ல
   தட்டானுக்கு அஞ்சியல் லோஅணிந் தான்சிவன் சர்பத்தையே!

பலபட்டடை சொக்க நாதப் புலவரின் பாடல் இது.

  பொதுவாகவே தங்க நகை செய்யும் ஆசாரிகள்மீது ஓர் குற்றச்சாட்டு உண்டு.  உரைத்து உரைத்து பொன்னை திருடிக் கொள்வார்கள் என்று. அதைத்தான் புலவரும் சொல்கின்றார்.

   இப்போது ஆசாரிகள் திருட வாய்ப்பின்றி நகைக் கடைகள் செய்கூலி சேதாரம் என்று செமையாக கொள்ளை அடிக்கின்றது. இந்த கொள்ளைகளுக்கு பயந்துதான் சிவபெருமான் பொன் நகைகளை தவிர்த்து பாம்பை நகையாக அணிந்து கொண்டாராம்.

 
நகை செய்யும் ஆசாரி கால்வராகன் பொன் தந்தால் அதை உரை கல்லில் உரசி உரசி ஒரு மா அளவுடைய பொன்னாவது கல்லில் ஒட்டிக் கொள்ளுமாறு செய்து தந்திரமாக பொன்னை கவர்ந்து கொள்ளுவார். அதே சமயம் ஆபரணங்களை செய்யாமலும் இருக்க மாட்டார்.மேருமலை போன்ற பெரிய மலையளவு பொன்னைக் கொடுத்தாலும் அதை உருக்கி, சுருக்கி கடுகளவு கனமுடையதாக நிறுத்துக் காட்டும் வல்லமை ஆசாரிகளுக்கு உண்டு. அத்தகைய தட்டானாகிய ஆசாரிக்கு பயந்து அல்லவோ சிவபெருமான் பாம்பை கழுத்தணியாக ஆபரணமாக அணிந்தார் என்கிறார் புலவர்.

ரொம்பவும் பாதிக்க பட்டிருக்கிறார் போல தெரிகிறது அல்லவா? புலவரின் கற்பனை நயம் சந்த நயம் எதுகை மோனை பயன் படுத்திய விதம் அழகாய் அமைந்துள்ளது அல்லவா?

படித்து ரசியுங்கள்!

மீண்டும் ஒருமுறை மீண்டுமொரு அழகிய பாடலுடன் சந்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம் சகோ !

    அடடே அப்படியா சங்கதி ???

    அருமையான பாடல் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. கற்பனை நயம் அருமை. தேவாரத்தில் பல இடங்களில் சிவபெருமானின் தோற்றம், உருவம், வடிவம் என்ற பல நிலைகளில் வர்ணிக்கும் விதம் அருமையாக இருக்கும். இதைப் பார்த்ததும் நான் படித்துவரும் தேவாரம் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
  3. அட! அருமை .சிவபெருமானையே ஏமாற்றும் வல்லமை படைத்தவர்கள் கற்பனை நயம் சிறப்பு

    ReplyDelete
  4. நல்ல கற்பனை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!