அவசர அவசரமாய் நொடிக்கதைகள்! நொடிக்கதைகள் பகுதி 16

நொடிக்கதைகள்! பகுதி 16.

அவசரம்!

இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கிறது! பாடவேளை முடியப்போகிறது..! அவசர அவசரமாக அந்த கணக்கை போர்டில் போட்டு முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. டீ எடுத்து வந்த சேட்டனிடம் புன்னகையுடன் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு காப்பி பண்ணிக்கோங்க! என்று மாணவர்களிடம் சொன்னவர் டீ அருந்த சென்றார்.

அவசரம்!
     சிவப்பு விளக்கு ஒளிர்வதை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த வாகனங்கள் பச்சை ஒளிர்ந்ததும் சடுதியில் பறந்தன அவசரமாய்!

அவசரம்!
    தேர்தல் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக சென்ற வாகனங்கள் ஒதுங்கி வழிவிட்டன ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு!

அவசரம்!
   அவசரமாய் ரத்தம் தேவைப்படுவதாக வந்த பேஸ்புக், வாட்சப் தகவல்களைஅவசரமாய் ஷேர் செய்த பலரும் தங்கள் இரத்தத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை!


அவசரம்:
       சர்வதேசப் போட்டியில் வென்றவன் தம் ஜாதிக்காரனாக இருக்க வேண்டும் என்று அவசரமாய் தேடிக்கொண்டிருந்தார்கள் கூகுளில்

அவசரம்!
   அவசர அவசரமாய் பந்தல் போட்டு சாமி சிலை வைத்தார்கள் அவசரத்திற்கு உதவும் என்று ஆக்ரமித்த அரசு நிலத்தில்!

அவசரம்!
     நிலைகொள்ளாமல் தவித்தது மனசு! ஆபீஸ் நேரம் முடியவில்லையே! மணி எப்போது ஐந்தை தொடும் என்று பரபரக்க பார்த்து கொண்டிருக்க முள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.நேரம் தவறிப்போனால் நிறைய மிஸ் ஆகிவிடுமே! திருப்தி இருக்காதே! என்று கலங்கியவன் ஒருவழியாக ஐந்து அடித்ததும் பரபரவென கிளம்பி தன் அபிமான நடிகரின் சினிமா பார்க்கச் சென்றான்.


அவசரம்!
       அவசரம் அவசரமாய் வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்தவன் தன் இருக்கையில் அமர்ந்தான். பசி வயிற்றை கிள்ளியது. இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது! சாப்பிட்டு முடித்துவிடலாம் என்று லஞ்ச் பேக்கை எடுத்தான் பேக் காணவில்லை! அவசரத்தில் ஆட்டோவில் தவறவிட்டிருக்கிறான்.

அவசரம்!
    அவசரப்படாமல் ஆலோசித்து ஒரு மாதம் முன்பே முன்பதிவு செய்து தரிசன நேரம் வாங்கி டிரெயினில் முன்பதிவு செய்து திருப்பதி புறப்பட்டனர்
வரிசையில் சென்று தரிசனம் பார்க்கையில் “ஜருகண்டி! ஜருகண்டி” என்று அவசரப்படுத்தி விரட்டி விட்டனர்.


அவசரம்!
     டிக்கெட்டுக்கு கவுண்டரில் காத்திருக்கையில் “ கொஞ்சம் எமர்ஜென்சி! அவசரமா போகணும்! கொஞ்சம் வழி விடறீங்களா? என்று கேட்டு முன்னேறி முன்கூட்டி டிக்கெட் வாங்கியவர் நடை மேடையில் ரொம்ப நேரமாய் காத்திருந்தார். அவர் செல்ல வேண்டிய வண்டி தாமதமாய் வந்துகொண்டிருந்தது.

அவசரம்!
    அவசர அவசரமாய் சாலையைக் கடந்தவனை தூக்கிச் செல்ல அவசர அவசரமாய் புறப்பட்டது ஆம்புலன்ஸ்!

அவசரம்!
    அவசரமாய் ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்து வேண்டும் என்று கடன் கேட்டவரிடம் சொல்ல அவசர அவசரமாக உதித்தன ஆயிரம் கற்பனை செய்திகள்!

அவசரம்!
     இன்னும் பத்தே நிமிடங்கள்! அதற்குள் போய்விட வேண்டும்!  இல்லையென்றால் அப்புறம் கிடைக்காது என்று சொல்ல முடியாது! ஆனால் கொஞ்சம் அதிகம் செலவாகும். அவசரத்திற்கு போக முடியுதா? எத்தனை டிராபிக்? எவ்வளவு சிக்னல்கள்!  அவசர அவசரமாய் சந்து பொந்துகளில் நுழைந்து சென்றவனை எல்லோரும் முறைத்தார்கள் அவன் அவசரம் அவனுக்கு! சரியாக கடை மூடும் முன்  சென்று ஒரு குவாட்டர் ப்ளீஸ்! என்றான்.

டிஸ்கி} இரண்டு நாட்களாக உடல் அசதி, வேளைப்பளு காரணமாக இணையம் வரவில்லை! இரண்டு நாட்களுக்கான பதிவை இன்றே வெளியிட முயன்று முதலில் சில ஹைக்கூக்கள் பதிவிட்டேன். அடுத்து நொடிக்கதைகள் எழுதி விடலாம் என்று முடிவோடு முதல் கதை எழுதினேன். அவசரம் என்ற தலைப்பில். இதே தலைப்பில் பல கதைகள் உருவாக்கலாமே என்று அவசரமாய் ஒர் எண்ணம் உதிக்க அவசர அவசரமாய் உருவாகின இந்த கதைகள்! குறையிருந்தால் சுட்டுக! நிறையிருந்தால் வாழ்த்துங்கள்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. அருமை அருமை
    எப்படி இப்படி அவசரமாக எனினும்
    அற்புதமாக யோசிக்கிறீர்கள்
    என ஆக்சரியமாக இருக்கிறது
    கதைகள் அனைத்தும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைத்து கதைகளும் அருமை.

    ReplyDelete
  3. சில சுமார். சில ஓகே. ரத்ததானம் சூப்பர். தாமத ரயில் புன்னகைக்க வைத்தது. நம் எல்லோருக்குமே அது அனுபவப்பட்டிருக்கும்!

    ReplyDelete
  4. ஃபேஸ்புக் ரத்ததானம் அருமை. தாமத ரயில் சூப்பர்! ஒரு சில அவசரத்திலும் நீங்களும் அவசரப்பட்டுவிட்டீர்களோ என்று தோன்றுகின்றது சுரேஷ்!!

    ReplyDelete
  5. சுரேஷ் வேலைப்பளு, உடல்நிலை இவற்றினால் பதிவிட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்காக இரண்டு நாள் பதிவுகளையும் ஒரே நாளில் போட வேண்டும் என்று இல்லை. நீங்கள் நிதானமாக இடுங்கள். அவசரம் வேண்டாம்!!!!!!

    எங்களுக்கும் இப்படி அவசரமாக இட்டப் பதிவுகளில் திருப்தி இல்லாமல் போவது உண்டு. .. உங்கள் கற்பனை வளமும், திறனும் அபாரம். அத்னால்தான் இந்த கருத்து வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  6. இந்த ரத்தம் குறித்த தகவல்களைப் பகிர்கையில் எல்லோருக்கும் ரத்ததானம் செய்ய இயலாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கு! இப்போ நானெல்லாம் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆஸ்த்மா, ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மருந்துகள் சாப்பிட்டு வருவதால் ரத்ததானம் செய்ததே இல்லை. :) இப்படிப் பலர் இருப்பாங்க! :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!