மனம் திருந்திய சதீஷ்! பாப்பாமலர்!

மனம் திருந்திய சதீஷ்!


‘டேய்  சதீஷ் சுதந்திர தினத்திற்கு இன்னும் பத்துநாள் தான் இருக்கு நம்ம சிறுவர் சங்கம் சுதந்திர தினத்தை சிறப்பா கொண்டாடப்போகுது. இப்ப போயி ஊருக்கு போறேன்னு சொன்னா எப்படிடா?’ சதிஷிடம் குமார் கேட்டான்.

 “போடா சுதந்தரமாவது மண்ணாங்கட்டியாவது! நீங்க கொண்டாடா விட்டால் சுதந்திர தினம் நின்னா போயிடும்? உங்களுக்கு வேலை இல்லை செய்யறீங்க! உங்க கூட இருந்தா காஷ்மீரையும் ஸ்ரீநகரையும் பார்க்க முடியுமா? நீங்க கொண்டாடுங்க வேணான்னு சொல்லலை என்னை ஆள விடுங்க!” என்றான் சதிஷ்.

  ‘இப்படி சொன்னா எப்படிடா? நீதானே சங்க செயலாளர், நீ இல்லாம பங்ஷன் பண்ணா நல்லா இருக்காதுடா!’

   ‘நான் வேணும்னா என் பதவியை ரிசைன் பண்ணிடறேன்! இந்த சுதந்திர தினத்திற்காக என் டூரை விட்டுக்கொடுக்க முடியாது! ஸ்கூல்ல கூட முன் கூட்டியே பர்மிஷன் வாங்கிட்டேன்!’ என்றான் சதிஷ்.

    ‘இந்த சுதந்திரம் எத்தனையோ பேர் பாடுபட்டு உயிர் கொடுத்து வாங்கியது.இதுக்காக எத்தனையோ பேர் நல்ல வசதி வாய்ப்புகளையெல்லாம் இழந்து இருக்காங்க! ஆனா நீ ?”

‘நிறுத்துடா! அவங்களை மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது! இனியும் உங்கூட பேச விரும்பல!” வேகமாக போய்விட்டான் சதீஷ்.

 சதீஷ் மிகவும் சந்தோஷமாக இருந்தான். நாளை அவன் மாமாவுடன் காஷ்மீர் செல்ல இருந்தான். பனி படர்ந்த அந்த பிரதேசத்தையும் இயற்கை கொஞ்சும் எழில்களையும் ரசிக்க இருப்பவனை மடக்கி சுதந்திர தினம் என்று சொல்லி போகாதே என்று சொன்னால் கோபமாய் வந்தது அவனுக்கு. அதனால் தான் அவ்வளவு கோபமாக பேசி விட்டான்.மறுநாள்


             சதிஷ் மாமாவோடு ஸ்ரீநகரில் இருந்தான். ரயில் நிலையத்திலிருந்து வீடு செல்லும் வரை வீதிகளையும் அங்குள்ள மக்களையும் கண்கொட்டாது பார்த்தான் சதீஷ்.

  பனிபடர்ந்த வீதிகளும் காஷ்மீர குல்லாக்களோடு உலவும் மக்களும் அவனுக்கு ஆச்சர்யம் தந்தன.மலைகளில் அப்படியே உறையும் பனி அவனுக்கு மிகவும் வியப்பு தந்தது.இத்தனை அழகிலும் ஒரு பயம் இருந்தது. வீதிகளில் ராணுவ டிரக்குகளும் ராணுவ வீரர்களும் நின்று கொண்டிருந்தனர்.

   தமிழகவீதிகளில் அந்தமாதிரி சதீஷ் அதுவரை கண்டதே இல்லை! என்ன மாமா இது ராணுவ வீரர்கள் நிறைய பேர் சாலைகளில் நடமாடுகின்றனரே ஏதாவது அசம்பாவிதமா?

  அப்படி அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கண்காணித்துகொண்டுள்ளனர், இப்போது இங்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவேதான் இங்கு ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார் மாமா.

  வீட்டுக்குள் மாமி நன்றாக வரவேற்று உபசரித்தாள். பனிக்குளிருக்கு இதமாக இருக்க நெருப்பு அடுப்பு அங்கு இருந்தது அவனுக்கு புதுமையாக இருந்தது. மறுநாளும் அவனுக்கு ஜாலியாக பொழுது கழிந்தது. ஸ்ரீநகரின் பல கடைவீதிகளுக்கு மாமாவுடன் சென்று வந்தான்.

ஆனால் அடுத்தநாள் தான் அந்த விபரீதம் நடந்தது.

   ஒரு குண்டுவெடிப்பு நிகழ அசம்பாவிதத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டது. வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை! எங்கும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தெருக்களில் ஜன நடமாட்டம் இல்லை! வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

           மாமாவோடு ஜாலியாக ஊரை சுற்றிப்பார்க்கலாம் என்று நினைத்த சதீஷிற்கு ஏமாற்றமாய் போய்விட்டது. காஷ்மீர் சம்பவங்களைப்பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தாலும் இப்போதுதான் முதல்முறையாக நேரில் அனுபவிக்கிறான். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடக்க அவனுக்கு பிடிக்கவில்லை! கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரிந்த அவனுக்கு இப்படி கூண்டில் அடைப்பது போல இருப்பது முடியவில்லை! ஆனால் வெளியே செல்ல முடியாது.

   என்னடா இதுஇங்கே வந்து இப்படி அகப்பட்டுக் கொண்டோமே என்று ஆகிவிட்டது சதீஷிற்கு. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது. ஒரு நாள் வீட்டில் அடைந்து கிடப்பதற்கே இப்படி சுதந்திரம் பறிபோய்விட்டது என்று கஷ்டப்படுகிறோம் ஆனால் நாட்டையே அன்னியனிடம் கொடுத்துவிட்டு அடிமைகளாய் அவன் சொல்படி சில நூறாண்டுகள் சுதந்திரக்காற்றை இழந்த மக்களை நினைத்து பார்த்தான். 

அவர்கள் சுதந்திரம் பெற உழைத்த தியாகிகள் எத்தனைபேர்? அவர்களை அவமதித்து விட்டோமே! பெரிய சுதந்திர தினம் என்று கேலிபேசி விட்டோமே உண்மையாக வருந்தினான் சதீஷ்.

   இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு நீங்கவும் மாமா வா சதீஷ் இன்னிக்கு டால் ஏரியை பார்க்கலாம் என்றார். இல்லை மாமா! இன்னிக்கே என்னை டிரெய்ன் ஏத்திவிடுங்க  நான் சுதந்திர தினம் கொண்டாட ஊருக்கு போகனும் என்ற சதிஷை வியப்புடன் பார்த்தார் மாமா.
  உடனே கிளம்பனுமா? என்ன ஆச்சு! அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா! இப்பதான் எனக்கு ஞானோதயம் பிறந்துச்சு என்றான் சதீஷ்.சரி நாளைக்கு டிரெய்ன்ல உனக்கு இடம் கிடைச்சா ஏத்திவிடறேன்.இப்ப டால் ஏரியை பார்ப்போம் என்றார் மாமா.

சுதந்திர தினத்தன்று பள்ளியில் கொடியேற்று விழாவுக்கு வந்த சதீஷை வியப்புடன் பார்த்தான் குமார். என்னடா வரமாட்டேன்னு சொன்னேயே என்ற போது சாரிடா குமார்! காஷ்மீர்ல தான் எனக்கு புத்தி வந்தது. அதான் உடனே திரும்பி வந்துட்டேன். வா பங்க்ஷனை சிறப்பா கொண்டாடலாம் என்ற  அவனை மகிழ்ச்சியுடன் பார்த்தனர் நண்பர்கள்!

இந்தியன் என்று சொல்லடா! இதுதான் பாரத மண்ணடா!


மீள்பதிவு

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. முன்பு படிக்கவில்லை.சிறப்பு

    ReplyDelete
  2. அருமை சகோ..நல்ல புரிதலுக்கான கதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறந்த நாட்டுப் பற்றுக் கதை கூறி
    "இந்தியன் என்று சொல்லடா! இதுதான் பாரத மண்ணடா!" என
    உணர்வூட்டியமைக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
  4. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. சுதந்திரத்தின் பெருமையை உணரவேண்டியது அனைவரின் கடமையாகும். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!