பஞ்ச நாராயணக் கோட்டம்! நாவல் விமர்சனம்!

பஞ்ச நாராயணக் கோட்டம்! நாவல்  விமர்சனம்!


இந்த நாவலை புத்தகக் கண்காட்சியில் வாங்கி படித்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. கொஞ்சம் சோம்பல் ஆணிபுடுங்கல் அதிகமாகிவிட்டபடியால் இதனுடன் வாங்கிவந்த நாவல்கள் புத்தகங்களை இன்னும் வாசிக்கவில்லை! குறிப்பாக வெற்றிவேலின் வானவல்லி.

  கர்ணபரம்பரை நாவல் விமர்சனம் எழுதியவுடன் இதையும் உடனேயே வெளியிட வேண்டாம் என்று நினைத்தேன். மேலும் அந்த புத்தக விமர்சனம் எழுதுகையில் ஜீவி அவர்கள் சொன்ன ஒரு கருத்தும் சரியென்று பட்டது. ஒரு புத்தகமோ நாவலோ வாசித்தால் அதில் உள்ள ஓர் தகவலோ கருத்தோ நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன் தரக்கூடியதாக இருக்கவேண்டும். அப்படி பயன் தரக்கூடிய தகவல்கள் இருந்தால் அதை விமர்சகர்கள் குறிப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார் ஜீவி. அதில் உடன்பாடு உண்டாகிவிட்டதால் இனி கவனமாக விமர்சனம் எழுதுவேன்.

  பஞ்ச நாராயணக் கோட்டம் கடந்தவருடமே வெளியான நாவல். வைணவ ஆச்சாரியார் ஸ்ரீஇராமானுசர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் ஹோய்சாள மன்னன் பிட்டித்தேவன் சமண மதத்தில் இருந்து மாறி வைணவனாகி மாலவனுக்கு ஐந்து கோவில்கள் எழுப்புகின்றான். நம்பி நாராயணம், தொண்டணூர்) கீர்த்தி நாராயணம் (தலக்காடு) செல்வநாராயணம் (மேல்கோட்டை) விஜயநாராயணம் (வேளாபுரி-பேளூர்) வீர நாராயணம் ( கதக்- வடகர்நாடகா)

  இந்த ஐந்து கோவில்கள் எழும்பியதன் பின்னணியில் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ இராமானுசரின் பங்களிப்பு மற்றும் அந்தக்கால அரசியல் சதிகள் சூட்சுமங்கள் சமணனான பிட்டி தேவன் வைணவத்துக்கு மாறிய சூழல் போன்றவற்றையும் அழகாக விறுவிறுப்பு குறையாமல் சொல்கிறது நாவல்.

  ஹோய்சாள மன்னனின் அருமை மகள் வசந்திகா தேவி மரணமடைந்தாள் என்ற அதிர்ச்சி செய்தியோடு நாவல் தொடங்குகிறது. குலோத்துங்க சோழனின் சைவ வெறியால் ஆச்சார்யர் இராமனுசர் ஹோய்சாள தேசம் செல்கிறார். அவர் எப்படி சமணரான பிட்டித்தேவனை வைணவராக மாற்றுகின்றார் பிட்டி தேவனுக்கும் வைணவப் பெண் லஷ்மிப் பிரபா உடனான அவனது காதல். அரசியல் காரணங்களுக்காக தளபதியின் மகள் ஷாந்தலா தேவியை மணக்க வேண்டிய நிர்பந்தம். ஷாந்தலா- லஷ்மிபிரபா நட்பு பகையாக மாறுவது ஷாந்தலாவின் சூழ்ச்சியால் லஷ்மிபிரபா வீட்டுச்சிறையில் அடைக்கப்படுவது என்று முதல் கோட்டம் விறுவிறுப்பாக செல்கிறது. இந்த கதையை ஓய்வு பெற்ற பேராசிரியர் மன்மதனுக்கு பேளூர் ஹளபேடு கைடு ஒருவரின் அப்பா முகலிங்கம் கூறுவது போலவும். மன்மதன் தங்கியிருக்கும் ஹோட்டல் விஷ்ணுவர்த்தன மஹாராஜாவின் பழைய மாளிகை போலவும் அவருக்கு அதில் அமானுஷ்யமான அனுபவங்கள் நடப்பது போல காட்டியிருப்பது ஆசிரியரின் அருமையான உத்தி.

இரண்டாவது கோட்டம் கீர்த்தி நாராயணக் கோட்டம். இது தலக்காடு என்று இன்று அழைக்கப்படும் கங்கநாட்டு தளபதியின் மகனை பிட்டித்தேவனின் தளபதி கங்கராஜாவின் மகன் தேஜசன் கொலை செய்ய அவனது பத்தினி பிரம்ம ராட்சஸாக மாறியதையும் தேஜசனைப் பழிவாங்க அவள் பிட்டித்தேவன் மகளை பிடித்துக் கொண்டு ஆட்டிப்படைப்பது, இராமனுசர்- பிட்டித் தேவன் சந்திப்பு. பிட்டித்தேவன் நிபந்தனையை ஏற்று பிரம்மராட்சஸியை இராமனுசர் விரட்டி அடித்தல் பிட்டித்தேவன் விஷ்ணுவர்த்தனனாக மாறி  தலக்காட்டில் நாராயணனுக்கு கோயில் எழுப்புவதை சுவாரஸ்யமாக கூறுகின்றது.

மூன்றாவது கோட்டம் செல்வநாராயணக் கோட்டம், சமண தலைவர்கள் அரசி ஷாந்தலா தேவியுடன் நடத்தும் சூழ்ச்சிகள், இராமானுசர் பெருமாளுடைய வைர முடியை தேடிப்பெறுதல் மாலிக் ஏஜாஸ் மகள் வசமிருக்கும் பெருமாளை மீண்டும் மீட்டு கொண்டுவருதல் சிற்பி ஜெக்கன்னா அறிமுகம்  அவருடைய சிற்ப பணிகளுடன் செல்வ நாராயணக் கோட்டம் எழும்புதலை விவரிக்கின்றது.

நான்காவது கோட்டம் விஜயநாராயணக் கோட்டம், லஷ்மிபிரபாவுடம் விஷ்ணுவர்த்தனன் மீண்டும் இணைந்தது. பேளூர் என்னும் வேளாபுரி சென்றது. அங்கு நாராயணருக்கு கோயில் எழுப்புதல், சிற்பி ஜெக்கன்னா சிற்பம் வடிக்க மூலிகை தேடுதல், நபும்சகி இந்திரசேனா அறிமுகம். அவள் யாருடைய மகள் என்பதில் ஒரு சஸ்பென்ஸ். சாளுக்கியர்களுடனான விஷ்ணுவர்த்தனன் போர், சிற்பி ஜெக்கன்னா மகன் தக்கன்னாவின் சவால். ஜெக்கன்னா கரம் இழத்தல் என்று திடுக்கிடும் திருப்பங்களோடு செல்கிறது.

ஐந்தாவது கோட்டம் வீர நாராயணக் கோட்டம் சாளுக்கியரின் தலைநகராக துவாரசமுத்திரம் உருவாவது. இந்திரசேனாவின் தோழி மஹதி காணாமல் போவது ஷாந்தலா தேவி பிட்டிதேவனுக்கு போட்டியாக ஜெக்கன்னாவின் மகனைக்கொண்டு ஹோய்சாளத்தில் ஒரு கோட்டம் எழுப்புவது சிற்பி ஜெக்கன்னாவின் வீர நாராயணக் கோயில் புனிதம் இழப்பது. இராமானுசர் அதை சரி செய்தல் இராமனுசர் மீண்டும் திருவரங்கம் செல்வது. இந்திரசேனாவின் உடலில் புகுந்த பிரம்மராட்ஷசி தேஜசனைக் கொல்வது என்று செல்கிறது. பட்ட மகிஷியானாலும் கணவனின் அன்பை பெறாத ஷாந்தலா பட்டினி கிடந்து (சலிக்கானாவிரதம்) இருந்து உயிர் துறப்பது என்று விவரிக்கின்றன.

ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனன் வாழ்க்கை சம்பவங்களுடனே வைணவ ஆச்சார்யர் இரண்டுற கலந்து வைணவம் தழைக்க பாடுபட்டதையும் அரசியல் சதிகளை கடந்து மாலனுக்கு ஐந்து பெரும் ஆலயங்கள் எழுப்பியதையும் அழகுற சொல்கிறது நாவல். வரலாற்று தகவல்கள் பல ஆச்சர்யம் வரவைக்கிறது. இராமானுசர் தன்னுடைய எண்பத்து மூன்றாம் வயதில் திருவரங்கத்தை விட்டு ஹோய்சாளம் வந்து அங்கு இருபது ஆண்டுகள் தங்கி வைணவம் வளர்த்து பின் மீண்டும் திருவரங்கம் சென்றார் என்பதும் 120 வயதுகள் வாழ்ந்தார் என்பதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று நிகழ்வுகள் உண்மை. அக்காலத்தே வாழ்ந்த மன்னர்களையும் மாந்தர்களையும் கண்முன்னே நிறுத்தி வியக்க வைக்கிறது பஞ்ச நாராயணக் கோட்டம்.


வானதி பதிப்பக வெளியீடு,  பக்கங்கள் : 720,  விலை ரூ 300.00

Comments

  1. விரிவான விமர்சனம் நன்று நண்பரே

    ReplyDelete
  2. படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்...

    நம்பி நாராயணையும், செல்வ நாராயணனையும் தரித்தது உண்டு....
    ஆனால் இராமனுசர் சுவாமியை ஒட்டிய வரலாறு மட்டுமே தெரியும்...
    இவ்வாறு ஆழ்ந்த கதைகளை படிக்கும் ஆவலை இந்த புத்தகம் உண்டாக்குகிறது...

    ReplyDelete
  4. வாங்க வேண்டும். படிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. இவ்வாறான ஒரு நூல் பற்றி நான் இதுவரை அறியவில்லை. தங்களின் அருமையான நூல் அறிமுகம் படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது.

    ReplyDelete
  6. நூலின் விமர்சனத்தை படித்தவுடன் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன். எனது நண்பனிடம் இந்த புத்தகத்தை பார்த்த ஞாபகம் இருக்கிறது.
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. படிக்க நினைத்திருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!