சகல பாக்கியங்கள் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

சகல பாக்கியங்கள் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

   கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
    உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

   ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள் பாலிப்பவர்.

   ஆனை முகனை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம்! மண்ணிலே பிடித்து வைக்கலாம். எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.


   ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

  சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.

   இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.

    பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.

விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவதுஎன்று சபித்தார்.

பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார்.

புருகண்டி முனிவர்' என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது. இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்என்ற எண்ணம் தோன்றுகிறது.

நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும். 


சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

  குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
  வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
  வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
   துள்ளி யோடும் தொடரும் வினைகளே
  கருணை வள்ளல் கணபதியைத் தொழ
  அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
  முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
   தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
  வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
                                                                                நாட்டுப்புறப்பாடல்

இந்த மாதம் 21-8-16 ஞாயிற்றுக்கிழமை அன்று மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. விநாயகரைத் தொழுது விக்கினங்கள் அகலப் பெறுவோமாக!


எங்கள் ஊர் நத்தம் ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியன்று காலை பதினோறு மணி முதல் சங்கடநிவாரண ஹோமம் மற்றும் விஷேச அபிஷேகம், கலசாபிஷேகம் ககார சஹஸ்ரநாம அர்ச்சணை முதலியவை நடைபெற உள்ளது. நண்பர்கள் வாய்ப்பிருப்பின் கலந்துகொண்டு கணபதியின் அருளினை பெற்றுய்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

  1. நல்ல தகவல்கள்... நன்றி.

    ReplyDelete
  2. விரதமகிமையை அருமையாக சொன்னீர்கள்.
    சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை அருளவேண்டும்.

    ReplyDelete
  3. விரதம் பற்றியும் சங்கடகர சதுர்த்தி பற்றியும் நல்லதொரு பகிர்வு....
    நன்றி.

    ReplyDelete
  4. விரதம் குறித்து நன்கு அறிந்தோம் நன்றி

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ கணேசாய நம!

    ReplyDelete
  6. விரதம் குறித்த தகவல்களை நானும் மழலைகள் குழுமத்தில் சில வருடங்கள் முன்னர் எழுதி இருக்கேன். :) மின்னூலாகவும் வந்திருக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!