திண்ணை!

எட்டாப்பு படிக்கையிலே
ஒரு மாச லீவுக்கு ஒடிடுவோம்
தாத்தா ஊருக்கு!

தாத்தாவோடு கைப்பிடித்து நடக்கையில்
தெருவெல்லாம் வேடிக்கை பார்க்கும்!
திண்ணை வைத்துக் கட்டப்பட்ட
கூடல்வாய் ஓட்டுவீடுகளில் முற்றத்தில்
நிலா முகம் காட்டும்!

 திண்டு வைத்து கட்டப்பட்ட திண்ணை வீடுகள்
 தினுசு தினுசாய் அணிவகுக்கும்!
 
ஓடி பிடித்து விளையாட, கல்லாங்காய்,
கண்ணாமூச்சி, எல்லாத்துக்கும் சாட்சியாய்
நிற்கும் திண்ணையில் படுத்திருக்கும் பெரிசுகள்!

மத்தியான போதினிலே திண்ணையிலே சாய்ந்திருக்கும்
பாட்டிமார்கள் கதைக்கும் ஊர் கதைக்கு தனிமவுசு!
எப்பொழுதும் கூட்டமிருக்கும் எதிர்வீட்டுத் திண்ணை!
முப்பொழுதும் அங்கு நடக்கும் ரம்மி!

முன்னிரவு வேளையிலே சிறுசுகளை சேர்த்து
முனியாண்டி கதை சொல்லும் முனியம்மா!
எப்போதும் திண்ணையிலே கால்நீட்டி படுத்து 
காலன் கொண்டு போகலையே என்று அலுத்துக்கொள்ளும்
செல்லம்மாக் கிழவி!

திண்ணையிலே மெத்தைவிரித்து கைவிசிறிக்கொண்டு
விசிறி தூங்கும் ரத்னம் தாத்தா!
பாக்கு உரலில் இடித்து வெத்தலை மடித்து மெல்வதோடு
ஊர் வம்பை மெல்லும் உலகநாயகி அம்மா!
ஈசிச்சேரில் சாய்ந்து
இந்து கிராஸ் வேர்டை நிரப்ப முடியாமல் திணறும்
ஹெட்மாஸ்டர் அங்கிள் என ஒவ்வோர் வீட்டுத் திண்ணையும்
ஒட்டி உறவாடும்!


காலங்கள் வேகமாய் கரைய 
ஓவ்வொருவராய் உலகைவிட்டு விடைபெற
உறவாட யாருமில்லாது ஒருமையில் ஏங்கி சோங்கிப்போனது!

 எல்லோரும் விடை பெறுகையில் வழிஅனுப்பிய திண்ணையை
வழி அனுப்பி விட்டார்கள்!
பல ஆண்டுகழித்து பட்டணம் சென்று ஊர் திரும்புகையில்
பல அடுக்குமாடிகள் ஊரிலே நிறைந்திருக்க
பாந்தமான திண்ணை மட்டும் காணவில்லை!

சொந்தங்களையே மறக்கும் நம்மவர்கள்
திண்ணையை மறந்ததில் ஆச்சரியமில்லை!
ஆனாலும் என்னவோ செய்தது
திண்ணை இல்லா கிராமங்களை பார்க்கையில்!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உண்மைதான் நண்பரே திண்ணைகள் இப்பொழுது முழுமையாக அழி(ந்)த்து விட்டோம் வேதனையான விடயமே....

    ReplyDelete
  2. திண்ணை வைத்த வீடுகள்..... அது ஒரு கனாக்காலம். இப்போது அந்த மாதிரி வீடுகள் பலவும் இடித்து விட்டார்கள்.....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அண்ணன் எப்போ சாவான்..திண்ணை எப்போ காலியாகும்னு ஒரு பழமொழி இருக்குது..அதை தப்பா புரிஞ்சிட்டமோ..???

    ReplyDelete
  4. அருமையான மலரும் நினைவு பாஸ் தொடருங்கள்

    ReplyDelete
  5. நாங்கள் இருந்த பழைய வீட்டில் திண்ணை இருந்தது

    ReplyDelete
  6. ஆமாம், அந்த நாட்களில் மாப்பிள்ளைத்திண்ணை என்ற ஒன்று உண்டு. சாய்ந்து படுக்கிறாப்போல் வழ வழவென்று சிமென்டினால் சாய்வாகக் கட்டி இருப்பார்கள். இப்போதெல்லாம் திண்ணைகளே அபூர்வம் தான்.

    ReplyDelete
  7. aamaam suresh...thinnai illaatha veedu ennavo pol irukkirathuthaan...nalla ninaivugal engallukkum engal ninaivugalai meeteduthathu...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!