சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!

சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் ஓரு ஊரில் அருகருகே இரண்டு சகோதரிகள்  வசித்து வந்தார்கள். அதில்  மூத்தவள் ஐந்து பசுமாடுகளை வைத்து  பால்வியாபாரம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். இன்னொருத்தியிடம் ஒரே பசுமாடுதான் உண்டு. அதில் பால்கறந்து விற்று சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தாள்.  மூத்தவள் ஊதாரித்தனமாக செலவு செய்வாள்.
  பால் விற்ற காசை செலவு செய்வதோடு கடனும் வாங்கி ஆடம்பரமாக குடித்தனம் நடத்தி வந்த அவளுக்கு பற்றாக்குறைதான் மிஞ்சியது. நாம் இத்தனை பசுமாடுகள் வைத்து நிறைய பால்வியாபாரம் செய்தும் நமக்கு கடன் தான் மிஞ்சுகிறது ஆனால் பக்கத்து வீட்டுக்காரி ஒரே பசுமாடு வைத்துக் கொண்டு கடனில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றாளே என்று அவளுக்கு பொறாமை எண்ணம் மேலோங்கியது. அவளிடம் கொஞ்சம் பால் கடனாக கேட்போம் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று ஒரே மாடு வைத்திருந்த பால்காரியிடம் அவள் வந்து  “ தங்கையே! ஐந்து மாடுகள் கறந்தும் எனக்கு பால் போதவில்லை! எல்லோருக்கும் விற்கவே சரியாக போய்விடுகிறது. நீ தினமும் ஒரு அரைபடிப் பால் தருகிறாயா? பின்னர் திருப்பித் தந்துவிடுகின்றேன்!” என்று கேட்டாள்.
   இளையவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ அக்கா! ஐந்து மாடுகள் கறந்துமா உங்களுக்கு பால் போதவில்லை! என்னிடம் ஒரே மாடுதான் இருக்கிறது! அதில் விற்றது போக என் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே பால் மிஞ்சுகிறது! அதை உங்களுக்குத் தருகிறேன்! ஆனால் தினமும் அரைபடி கிடைக்காது! எவ்வளவு கிடைக்கிறதோ அதைத் தருகிறேன்! சம்மதமானால் பெற்றுக்கொள்ளுங்கள்! ”என்றாள்.
   இரக்க குணத்தோடு சொன்ன இளையவளிடம் மூத்தவள் சொன்னாள். “ அப்படியே தா! ஆனால் ஒரேயடியாக முடியாது என்று சொல்லிவிடுவாயோ? என்று பார்த்தேன்! நல்லவேளை என் வயிற்றில் பால் வார்த்தாய்! நாளை முதல் தினமும் பால் கொடுத்துவா!  என்று விடைபெற்று சென்றாள்.
  அன்று முதல் தினமும் பால் கொடுத்துவந்தாள் இளையவள். நாட்கள் கடந்தன. ஒரு நாள் இளையவளின் ஒரே பசுமாடும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. என்னசெய்வது என்று தெரியாமல் மூத்தவளிடம் சென்று “அக்கா! நான் இதுவரை உங்களுக்கு ஐம்பதுபடி பால் கொடுத்துள்ளேன். இதுவரை திருப்பிக் கேட்கவில்லை! பணமும் வாங்கிக் கொள்ளவில்லை! இப்போது என் மாடு இறந்துவிட்டது. நீங்கள் தினமும் இரண்டு படி வீதம் திருப்பி தந்தால் அதை விற்று நான் பிழைத்துக் கொள்வேன். கூடியவிரைவில் புதிய மாடும் பிடித்துக் கொள்வேன்!” என்று கேட்டாள்.
   “ நீதான் எனக்கு தினமும் பால் தர ஒப்புக்கொண்டாய்! அதைத் தராமல் என்னிடமே திருப்பி கேட்கிறாயே! நான் தர முடியாது! போ! போ!” என்றாள் மூத்தவள்.
  ”சரி பாலாக வேண்டாம்! ஐம்பது படி பாலுக்கு காசு கொடுத்துவிடுங்கள்! நான் போய்விடுகிறேன்!” என்றாள் இளையவள்.
   ”காசும் கிடையாது! பாலும் கிடையாது! இங்கே நின்றாயானால் இனி உதைதான் கிடைக்கும்!” என்று அடாவடியாக பேசினாள் மூத்தவள்.
  இளையவள் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டாள். இருவரையும் கூப்பிட்டு விசாரித்தார் நீதிபதி!
   பால் பற்றவில்லை என்று என்னிடம் தினமும் பால் வாங்கிக் கொண்ட மூத்தவள் திருப்பி தருவதாக ஒத்துக் கொண்டு இப்போது வாங்கவே இல்லை! திருப்பி தரமுடியாது என்று மறுக்கிறாள் என்று மூத்தவள் மீது குற்றம் சுமத்தினாள் இளையவள்.
   இவளிடம் பால் வாங்கவேண்டிய அவசியமே எனக்கு இல்லை! என்னிடம் ஐந்து மாடுகள் உள்ளது. அவற்றின் பாலே எனக்கு அதிகம். விற்றது போக நிறைய மிஞ்சிக் கிடக்கும். வீணாக என் மீது பழி சுமத்துகிறாள் என்றாள் மூத்தவள்.
   நீதிபதிக்கு எப்படி தீர்ப்பு தருவது என்று யோசனை! நீ பால் கொடுத்தமைக்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா? என்று இளையவளிடம் கேட்டார். ஏதும் இல்லை என்றாள் அவள்.
   மூத்தவள் மந்தகாசமாக புன்னகைத்தாள். இவளிடம் பால் வாங்க எனக்கு அவசியமே இல்லை! ஐந்து மாடுகள் தரும் பால் எனக்கு இருக்கிறது.  என்று மீண்டும் சொன்னாள்.
நீதிபதி யோசித்தார். பின்னர் இருவரையும் பார்த்து. வெளியே ஐந்து சொம்புகளில் தண்ணீர் வைத்துள்ளேன். இருவரும் சென்று உங்கள் கால்களை கழுவி விட்டு வாருங்கள். பிறகு தீர்ப்பு தருகிறேன் என்றார்.
   மூத்தவள் வேகமாக சென்று ஐந்து சொம்பு நீரையும் கால்களில் அவசரமாக கொட்டிக்கொண்டு ஓடிவந்து நின்றாள். கால்கள் நனைந்து நனையாமலும்வந்து நின்றாள்.
  இளையவள் ஒரு சொம்பு நீரிலேயே சுத்தமாக கால்களை கழுவிவிட்டு மீதி நான்கு சொம்பு நீரை கொண்டுவந்தாள்.
  நீதிபதி சொன்னார்.” கால்களை கழுவவே ஐந்து சொம்பு நீரை வீணடித்தாய்! அப்படியும் கால்கள் சுத்தமாகவில்லை! இளையவளான இவள் சிக்கனமாய் ஒரு சொம்பு நீரில் கால் கழுவி மீதம் வைத்துள்ளாள். நீ ஊதாரி என்பது இந்த ஒரு செயலிலேயே தெரிந்துவிட்டது. உன் ஐந்து மாடுகள் தரும் பால் உனக்கு போதாது! இவளிடம் கடன் கேட்டிருப்பாய் என்று இந்த செயலிலேயே எனக்கு புரிந்துவிட்டது. உண்மையை ஒத்துக் கொள்! இல்லையேல் கடுமையான தண்டணை கிடைக்கும் ”என்று மிரட்டினார்.
   மூத்தவள் தலை குனிந்தாள். நான் ஐம்படி பால் பெற்றுக்கொண்டது உண்மை என்றும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறினாள்.
   நீதிபதி அவளை கண்டித்து, பொய் உரைத்ததற்காகவும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காகவும் கூடுதலாக ஐம்பது படி பால் இளையவளுக்கு வழங்க வேண்டும் என்று தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
  தன்னுடைய செயலே தன்னை தண்டித்துவிட்டதை நினைத்து வருந்தி தண்டணையை ஏற்றுக்கொண்டு நூறு படி பாலை தினமும் ஐந்துபடி வீதம் தருவதாக மூத்தவள் ஒத்துக்கொண்டாள்.
   இளையவளும் மகிழ்ந்தாள். நீதிபதியை வணங்கி விடைபெற்றாள்.


(சாய்பாபா சொன்னக்குட்டிகதை)

டிஸ்கி} சிற்றப்பாவின் அறுபதாம் கல்யாணம் மற்றும் வீட்டில் மின்சாரம் பழுதுபார்ப்பு காரணமாக சில தினங்களாக இணையம் வர இயலவில்லை! ஓய்வு கிடைக்கையில் நண்பர்களின் பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்லதோர் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. நல்லதொரு பாடம் கிடைத்தது நண்பரே

    ReplyDelete
  3. நல்லதொரு நல்லொழுக்கக் கதை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!