ஜோதிடப் புலி! பாப்பா மலர்!

ஜோதிடப் புலி! பாப்பா மலர்!


   முன்னொரு காலத்தில்  ஒர் கிராமத்தில் ஏழைத்தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் பொறுப்பற்றவன், எந்த வேலைக்கும் செல்லாமல் பொழுதெல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அவன் மனைவி கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து வந்து கணவனுக்கும் சோறு ஆக்கி போட்டுவந்தாள்.
    எத்தனைநாள் தான் அவளும் பொறுப்பாள்? ஒருநாள் ஆவேசம் வந்து எங்காவது சென்று ஏதாவது வேலை வெட்டி செய்து சம்பாதித்து வந்தால்தான் இனிமே உங்களுக்குச் சோறு! என்று சொல்லிவிட்டாள். கணவன் பாவம் படிப்பறிவு கூட இல்லாதவன் யார் என்ன வேலைக் கொடுப்பார்கள் என்று யோசனை செய்தவாறே வெளியே சென்றான். அவன் சென்றபிறகு மனைவி கடைத்தெருவிற்கு புறப்பட்டாள். வழியில் ஓரிடத்தில் ஒளிந்திருந்து மனைவி வெளியே சென்றதை பார்த்த கணவன் அவளுக்குத் தெரியாமல் வந்து வீட்டிற்குள் நுழைந்து பரண் மீது ஏறி ஒளிந்து கொண்டான்.
     மனைவி வீட்டிற்கு திரும்பினாள். அடுப்படியில் தோசை வார்க்க ஆரம்பித்தாள். அவள் வார்க்கும் போதெல்லாம் பரணில் இருந்து ஒரு துடைப்பக் குச்சியை பிடுங்கி கையில் வைத்துக் கொண்டான் கணவன். தோசை வார்த்து முடித்ததும் மனைவி என்னென்ன செய்கிறாள் என்று கவனித்துக் கொண்ட கணவன் மனைவி அசந்த சமயம் பரணில் இருந்து இறங்கி வெளியேறினான். வீதியில் சில பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களிடம் துடைப்ப குச்சிகள் எத்தனை என்று எண்ணிச் சொல்லுமாறு கேட்டு மனதில் வாங்கிக் கொண்டான்.
   இராப்பொழுதில் கணவன் வீட்டுக்கு திரும்பினான். என்ன வேலை செய்து என்ன சம்பாதித்து வந்தீர்கள் என்று கேட்டாள் மனைவி. நான் வேலைக்கு போகவில்லை! ஜோசியம் கற்று வந்தேன். இதைக் கொண்டு நிறைய சம்பாதிக்க போகிறேன் என்றான் கணவன்.
    “அப்படியா? அப்படி என்ன கற்று வந்துவிட்டீர்கள்?” 
” நீ இன்னைக்கு என்னென்ன சமையல் செய்தாய் சொல்லட்டுமா?”
    ” அதெப்படி முடியும்?”
   “ எல்லாம் ஜோஸ்யம்தான்!”
 “ சரி! சொல்லுங்க பார்ப்போம்!”
 நீ இன்னைக்கு பதினோறு தோசை வார்த்து வச்சிருக்கே! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னியும் அரைச்சிருக்கே! அது மட்டும் இல்லே முருங்கை சாம்பார்! கீரை பொரியல்! என்று பரணில் ஒளிந்து பார்த்ததை அப்படியே ஒப்பித்தான்.
   அவன் மனைவியும் அப்படியே நம்பி விட்டாள். நான் ஜோஸ்யம் கத்துக்கிட்டதை யாருகிட்டேயும் சொல்லிடாதே! அப்புறம் எல்லோரும் ஓசியிலே ஜோஸ்யம் கேக்க வந்துருவாங்க! என்று மனைவியை அதட்டிவைத்தான் அந்த போலி ஜோஸ்யன்.
   அவன் மனைவி வாய் சும்மா இருக்குமா? கிணற்றடியில் நீர் இறைக்கையில் அங்கிருந்த பெண்களிடம் என் கணவர் பெரிய ஜோஸ்ய காரர்! ஒரே நாளில் ஜோஸ்யம் கற்றுவந்து ஜமாய்க்கிறார் என்று பெருமையடித்து வைத்தாள் அங்கு நீர் இறைத்துக்கொண்டிருந்த அந்த ஊர் சலவைத்தொழிலாளியின் மனைவி அதைக்கேட்டுக்கொண்டு போய் தன் கணவனிடம் கூறினாள். அவர்களுடைய கழுதை தொலைந்து போய் இருந்தது. அதற்கு ஜோஸ்யம் பார்க்க கணவனை ஜோதிடக்காரனிடம் அனுப்பினாள்.
      அவன் வந்து கேட்கும் போது ஜோஸ்யக் காரன் மிகுந்த கோபத்தில் இருந்தான். தான் ஏதோ சொல்ல போக மனைவி பிரபல்யப் படுத்தி பெரும் தொல்லை வந்து சேரும் போலிருக்கிறதே என்று ஆத்திரமாக இருந்தான். அப்போது சலவைத்தொழிலாளி என்னுடைய கழுதை எங்கே போயிருக்கும் கொஞ்சம் ஆருடம் பார்த்துச் சொல்லுங்க சாமி! என்று கேட்டான். ஜோதிடம் கோபத்தில் கழுதை கெட்டாச் குட்டிச் சுவரு! போடா! என்று கத்தினான்.
  சலவைத்தொழிலாளி அதையே வாக்காக எடுத்துக் கொண்டு கழுதையைத் தேடினான். ஒரு குட்டிச்சுவரோரம் கழுதை நின்றுகொண்டிருந்தது. அவன் ஆச்சர்யம் அடைந்து ஜோதிடனை பாராட்டி பேசி கழுதையை ஓட்டிச்சென்றான். அவன் அரண்மனை சலவைத்தொழிலாளி அவன் மூலமாக அரண்மனையில் ஜோதிடரின் புகழ் பரவியது. அரண்மனையில் அரசன் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் எண்ணெய்க்கிண்ணம் தொலைந்து போனது அதை கண்டுபிடித்து தர ஜோசியனுக்கு அழைப்பு வந்தது.
  ஜோதிடன் வெலவெலத்துப் போனான். அட இதென்ன வம்பு! தப்பாக சொன்னாலும் மாட்டிக் கொள்வோம்! உண்மையைச்சொல்லி நான் ஜோதிடன் இல்லை என்றும் சொல்ல முடியாதே! என்னடா இது சோதனை என்று யோசித்து ஊர் எல்லையோரம் ஓர் யாகம் வளர்த்துதான் திருடனை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னான். இரவோடு இரவாக அப்படியே தப்பித்து போய் விடலாம் என்று திட்டம் போட்டு ஓர் யாக சாலை நிர்மாணித்து அதில் குண்டம் அமைத்து விறகு போட்டு நெய்வார்த்துக் கொண்டிருந்தான். அதில் புகை மூக்கை அடைத்தது. எனவே கண்ணுக்கும் மூக்குக்கும் கிட்டிக்கிச்சு ஸ்வாஹா! என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
 யாகசாலைக்கு உதவியாக கண்ணம்மா, மூக்கம்மா என்று இரண்டு வேலைக்காரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்கள்தான் வெள்ளி எண்ணெய்க் கிண்ணத்தை திருடியது. ஜோதிடன் சொன்ன கண்ணுக்கும் மூக்குற்கும் கிட்டிக்கிச்சு ஸ்வாஹா! என்ற மந்திரம் அவர்கள் காதில் விழுந்ததும் அவன் நம்மைத்தான் சொல்கிறான் நம்மை கண்டுபிடித்துவிட்டான் என்று நினைத்து ஜோதிடன் காலில் வந்து விழுந்து காப்பாற்றும் படி வேண்டினார்கள்.
   அவனும் பரிதாபப்பட்டு எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டால்  உங்கள் பெயரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல அவர்களும் கிண்ணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்த இடத்தில் வைத்து விட்டார்கள். ஜோதிடனும் அரண்மனைக்குப் போய்  கிண்ணம் அதே இடத்தில் இருக்கும் யாகம் வளர்த்து கிண்ணத்தை திரும்ப வரவழைத்துவிட்டேன் என்று ஜம்பம் விட அரசன் அகமகிழ்ந்து போனான். அரசவை ஜோஸ்யனாக நியமித்துவிட்டான்.
   அந்த சமயத்தில் எதிரி ஒருவன் அந்நாட்டின் மீது போர் தொடுத்தான். எந்த நேரத்தில் போருக்கு சென்றால் வெற்றி பெறலாம் என்று கணித்து சொல்லும் படி மன்னன் உத்தரவிட்டான். மிகவும் அதிர்ந்து போனான் ஜோஸ்யன் எப்படி கணிப்பது? கணிப்பு தப்பானால் விபரீதம் விளையுமே என்று யோசித்து நாளை தனது கணிப்பை கூறுவதாக கூறினான்.

  ஜோஸ்யனின் புகழ் எதிரிக்கும் தெரிந்து இருந்தது. எனவே அவன் ஜோசியனை கடத்திச் சென்றுவிட்டான். அந்த மன்னனுக்கு எந்த தினம் போரிட நாள் குறித்து கொடுத்துள்ளாய்? என்று கேட்டு நச்சரித்தான். ஜோஸ்யன் மிகுந்த எரிச்சலுடன் “ தலையே போனாலும் நாளை சொல்ல எனக்குத் தெரியாது!” என்றான்.
    “ நாளைதான்   படையெடுக்கப் போகிறான் போல என்று எதிரி நினைத்துக் கொண்டான். அங்கிருந்த அரசனின் ஒற்றன் ஜோசியன் எதிரியிடம் மாட்டிக் கொண்டதையும் அவன் விசுவாசமாய் நாளைச்சொல்ல தெரியாது என்று மறுத்து பேசியதையும்  அரசனிடம் வந்து சொன்னான்.
  ஜோஸ்யனின் விசுவாசம் அரசனுக்கு பிடித்துப் போய், இப்போதே எதிரிமீது படையெடுத்து ஜோசியனை மீட்டுவருவோம் என்று எதிரி எதிர்பாரா சமயத்தில் அவன் முகாம் மீது பெரும் படையுடன் சென்று தாக்க எதிரி பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டான். ஜோசியன் இன்னும் அரசனின் நம்பிக்கைக்கு உரியவன் ஆகிவிட்டான்.
   ஒருநாள் ஆற்று மேட்டில் அரசனும் ஜோசியனும் உலாவிக் கொண்டிருக்கையில் அரசன் திடீரென கையில் ஒரு பொருளை மறைத்துக் கொண்டு என் கையில் என்ன இருக்கிறது உம் ஜோஸ்யத்தில் கண்டுபிடித்துக் கூறு! என்றான்.
  ஜோஸ்யன் விழித்தான். அங்கேயும் தப்பிச்சிட்டேன்! இங்கேயும் தப்பிச்சுட்டேன்! ஆத்து மேட்டிலே காயா மாட்டிக்கிட்டேன்! ஆத்துமேட்டில காயா மாட்டிகிட்டேன்! என்று புலம்பினான்.
  அரசன் உடனே ஜோசியனை கட்டி அணைத்துக் கொண்டான். சபாஷ்! என் கையில் ஆத்து தும்மட்டி காய் இருக்கிறது என்பதை அட்டகாசமாய் சொல்லிவிட்டீர்களே! பாராட்டுக்கள் என்று கழுத்தில் கிடந்த முத்து மாலையை பரிசாக அளித்தான்.
    ஜோசியன் மன்னரை வணங்கினான். இத்தனை நாள் அதிர்ஷ்டம் எப்படியோ கை கொடுத்துவிட்டது. இனியும் அதையே பயன்படுத்த முடியாது என்று மனதில் நினைத்துக் கொண்டு மன்னா! எனக்கு சொந்த ஊரில் வேலை இருக்கிறது ஒரு ஆறு மாதம் சென்று வர அனுமதி வேணும் என்று விண்ணப்பித்தான். அரசனும் மகிழ்ச்சியோடு இசைவு தர, ஜோசியன் தன் கிராமத்திற்கு வந்தான். அங்கிருந்து தொலை தூரம் சென்று ஜோதிடம் பயின்றுவர தீர்மாணித்தான். பின்னர் அப்படியே சென்று ஜோதிடம் கற்று உண்மையான ஜோதிட அறிஞனாக அரண்மனைக்குத் திரும்பினான்.
(செவிவழிக் கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   


Comments

  1. துப்பறியும் சாம்புவுக்கும் இப்படித்தான் தற்செயலாகவே எல்லாம் நடந்து விடும்!!

    ReplyDelete
  2. நல்லதொரு கருத்து கிடைத்தது நண்பரே

    ReplyDelete
  3. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல கதை. ஆனால் அடிக்கடி யாரானும் சொல்லிக் கேட்ட கதை!

    ReplyDelete
  5. மிக மிக சுவாரஸ்யமான கதை சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!