நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 12

நொடிக்கதைகள் பகுதி 12

புழுக்கம்!
   ஆசை மகனுக்கு ஏசி வைத்த கிளாஸ் ரூம் உள்ள ஸ்கூலில் எல்.கே.ஜி அட்மிசன் போட்டுவிட்டு அதற்காக வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்று புழுக்கத்தில் ஆழ்ந்தான் மிடில்கிளாஸ் தகப்பன்.
பசி!
   வேலை முடிந்ததும் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து மனைவி சுட்டுப்போட்ட காந்தல் தோசையை ருசித்து சாப்பிட்டான் பிரபல ஓட்டலில் தோசை மாஸ்டராக பணி புரியும் சரவணன்.

திருஷ்டி!
     ஊர் முழுக்க திருஷ்டி கழிக்க பூசணிக்காய் விற்ற வியாபாரி மாலை வியாபாரம் முடிந்ததும் சொல்லிக் கொண்டான். இன்னைக்கு நல்ல வியாபாரம்!  நிறைய திருஷ்டி பட்டு இருக்கும் வீட்டுக்குப் போனதும் அம்மாட்ட சொல்லி சுத்திப்போட சொல்லணும்!

எல்லாமே கையிலே!
     எதுக்கும் எங்கேயும் அலைய வேண்டியதே இல்லை! உலகமே இப்ப நம்ம கையிலே! எதுவேணும்னாலும் என்ன வேணும்னாலும் நொடியிலே தகவல் திரட்டிடலாம். எல்லாம் விஞ்ஞானத்தோட வளர்ச்சி! கடைக்கு போகவேண்டாம் வீட்டுக்கே கடை தேடிவரும். பஞ்சாங்கத்துக்கு ஜோசியர் வேண்டாம்! பணம் எடுக்க பேங்க் வேண்டாம் எல்லாமே கையிலே இருக்கு! எல்லாமே இப்ப நம்ம கையிலே வந்துருச்சு! என்று சொன்னவர் திடீர் என்று மார்பை பிடித்துக் கொண்டார். அப்படியே சுருண்டு விழுந்தார் ஹார்ட் அட்டாக் என்றார்கள் மரணத்தை வெல்ல விஞ்ஞானத்தால் முடியவில்லை!

படையல்!
   குலசாமிக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து தலைவாழை இலையில் படையல் போட்ட போது அங்கு வந்த குழந்தை ஒன்று “ எனக்கு பசிக்குதே! என்றபோது விரட்டினார்கள் சாமிக்கு படைச்சதும்தான் பிரசாதம்! போ! போ! என்றார்கள்.கடைசிவரை  சாமி சாப்பிடவே இல்லை படையலை!

ஒளிவு மறைவு!
  பிரபல டைரக்டரோடு கிசுகிசுக்கப்பட்ட கவர்ச்சி நடிகையிடம் பேட்டி எடுத்தார்கள் ”எனக்கு மூடி மறைக்கவே தெரியாது! ஒளிவு மறைவும் கிடையாது” என்றாள்.

பாலம்!
   கிராமத்தில் இருந்து புதிதாக நகருக்குள் நுழைந்த சிறுவன் அப்பாவிடம் கேட்டான்  ஆறுங்களே இல்லை! ஆனா இந்த ஆளுங்க நிறைய பாலங்களை கட்டி வைச்சிருக்காங்களே? ஏம்பா?!

கூட்டல் பெருக்கல்!
   “ எம் பொண்ணுக்கு கூட்டவோ பெருக்கவோ தெரியாது! அவளை அப்படி நாங்க வளர்க்கலை! அவ பெரிய கம்பெனியிலே அக்கவுண்டண்டா இருக்கா! என்று பெருமையாக சொல்லிக்கொண்டாள் பிள்ளைவிட்டுக்காரர்களிடம் பெண்ணுடைய அம்மா.

திருடன் போலீஸ்!
   மும்முரமாக திருடனை விரட்டிக் கொண்டிருந்தார் போலீஸ்! போக்குக் காட்டிக் கொண்டிருந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தார். இன்னும் ஒரே நிமிசம் திருடனை பிடித்து விடலாம்! அப்போது ஸ்விட்ச் ஆஃப் ஆனது செல்போன்! சே! என்று தூக்கி எறிந்தான்.

ரிலீஸ்!
 சிறைக்குள் இருந்தான் செந்தில். அவன் மனதில் புலம்பிக்கொண்டிருந்தான்   ” எப்படியும் நாளைக்கு ரிலிஸ் பண்ணிட்டா நல்லா இருக்கும். எந்த பிரச்சனையும் வரக்கூடாது! யாரும் எந்த அப்ஜெக்‌ஷனும் சொல்லக் கூடாது! ரிலீஸ் பண்ற வரைக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது முருகா! பழனி ஆண்டவா! இந்த முறையும் என்னை காப்பாற்றுப்பா! உனக்கு மொட்டை போடறேன்! என்று வேண்டிக்கொண்டான்.  ரிலீஸ் ஆனதும் பறந்தான் அவன் தலைவர் நடித்த படத்தின் முதல் காட்சியை பார்க்க.

துக்க விசாரிப்பு!
     அப்பா இறந்துவிட்டார் என்று தகவல் அறிந்ததும் அடித்து பிடித்து சொந்த ஊருக்கு ஓடியவன் அரண்டு புரண்டு அழுதவன் அப்பாவின் விரலை பார்த்தான் அடுத்த நொடி அண்ணன்களிடம் கேட்டான் அப்பாவுக்கு நான் போட்ட மோதிரம் எங்கேடா போச்சு?


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமை நொடிக்கதை உங்க கற்பனையை எண்ணி வியக்கின்றேன்!

    ReplyDelete
  2. படையல் மிகவும் அருமை நண்பரே
    துக்க விசாரிப்பு மிகவும் நன்று
    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. அருமை...
    கலக்குறீங்க...

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை!

    ReplyDelete
  5. பெண்ணுடைய அம்மாவின் பெருமை புல்லரிக்க வைக்கிறது :)

    ReplyDelete
  6. கலக்குறீங்க சுரேஷ்

    ReplyDelete
  7. அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!