நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 5

பூகம்பம்!
  ஒரே பக்கமாய் படுத்துக் கிடந்ததில் முதுகு வலித்தது. சற்றே திரும்பிப் படித்தேன்! ஒரே களேபரம்! டீ.வி. செய்தித்தாள்கள் அலறின. என்னவென்று கேட்டேன். ஏதோ பூகம்பமாம்!

இன்ஷுரன்ஸ்!
    இன்ஷூரண்ஸ் இருக்கா? லைசென்ஸ் இருக்கா? ஆர்.சி எல்லாம் கரெக்டா இருக்கா? இப்படி ஓரம் கட்டு! எல்லாத்தையும் எடு…! எப்போதும் சாலையில் போகும் வாகனங்களை மறித்து கொஞ்சமாய் வழிபறித்து கொண்டிருந்த காவலர் ஒரு நாள் இறந்து போனார் விபத்தில்… பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்கள் இன்ஷூரன்ஸ் இல்லையாம்!

ஓட்டு!

   ஓட்டுக் கேட்க வந்தார் ஆளுங்கட்சி எம். எல். ஏ. தொகுதிப் பக்கம் இதுவரை தலைவைத்து படுக்காத அவரை பார்த்ததும் மக்கள் கூடி கேரோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. பொறுத்து பொறுத்த பார்த்த எம். எல்.ஏ பொங்கி எழுந்தார். இப்ப என்னய்யா? ஓட்டுக்கு மூவாயிரம் போதாதா?  போன தேர்தல்ல ஆயிரம் தானே கொடுத்தேன்!  சரி சரி! வாங்கிக்கங்க! மறக்காம ஓட்டு போட்டுருங்க! என்றதும் கூட்டம்  அப்படி வழிக்கு வாங்க! என்று சொல்லி கலைந்து போனது.

போட்டி!
    போட்டியே இல்லாம நீ பாட்டுக்கு ஸ்வீட்ஸ் கடை வைச்சிருந்தே! இப்ப எதிர்லெயே ஒருத்தன் வந்துட்டான் ஆனாலும் வியாபாரம் அதிகமா இருக்குதே எப்படிய்யா? கேட்டவரிடம் புன்னகைதான் பதிலாய் சொன்னார் அண்ணாச்சி. போட்டிக்கடையும் நம்மதே அங்க விலை  கூடுதல் வச்சி தரத்தை குறைச்சி இந்த கடையோட மவுசை கூட்டின வியாபார தந்திரத்தை எப்படி சொல்லுவார் அவர்?

ஆக்ரமிப்பு!
   மந்திரி வருகிறார் என்று நடைபாதையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததாய் கடைகளை அகற்றிக் கொண்டிருந்தனர் போலீஸார். மந்திரி வந்து திறந்து வைத்தார் ஆற்றுக் கால்வாயை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த அந்த  வணிக அங்காடியை.

சிலை!
     தன்னுடைய தலைவரின் சிலையை  சாலை நடுவே அமைத்தே தீருவது என்று வரிந்து கட்டி போராட்டத்தில் இறங்கி வெற்றியும் பெற்றுவிட்டார் அந்த தொண்டர். சிலை திறந்த பின் மனதுக்குள் கறுவிக் கொண்டார். மவனே! எத்தனை முறை என்னை காறித்துப்பி அவமானப்படுத்தி இருப்பே! இப்ப காக்கா குருவி எல்லாம் உன் மேலே கழிஞ்சி வைக்கப்போவுது! அப்பதான்லே எனக்கு மனசு ஆறும்!

முரண்:
    ஊர் முழுக்க “பீய்ங்க் பீய்ங்க்” என்று ஹாரன் அடித்து பெட்டி முழுதும் நிறைந்திருந்த ஐஸ்கிரீம்களை குழந்தைகளுக்கு விற்று முடித்து வீடு திரும்பியவனிடம் அவனது குழந்தை கேட்டது. அப்பா! ஒரே ஒரு ஐஸ் கிரீம் தர்றீயா?  “ அதெல்லாம் வேண்டாம்! சளி பிடிச்சுக்கும்! போய் பிஸ்கெட் ஏதாவது சாப்பிடு! என்று சொன்னான் அந்த வியாபாரி.


இயற்கை விளைச்சல்!
தோட்டத்திலே விளைஞ்ச காய்கறிம்மா! இப்பவே பறிச்சு இப்பவே கொண்டாந்தது. எந்த பூச்சி மருந்தும் அடிக்கலை! இயற்கை உரத்துல விளைஞ்சது. பச்சை பசேல்னு இருக்குது பாருங்க! மெழுகு ஏதும் பூசி ஏமாத்தலை! ஆரோக்கியத்துக்கு நல்லது. குறைஞ்ச விலை! வாங்கம்மா! வாங்க! என்று கூவி  விற்று முடித்தவன் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு பீட்ஸா கடைக்குக்குள் நுழைந்தான் அவன் மகனுக்கு பீட்ஸா வாங்க!

 பொறுப்பு:
     அந்த டீக்கடை முன்பு வேகமாக வந்த பைக் ஒன்று சாலையில் உடைத்திருந்த பூசணிக்காயால் வழுக்கி சரிந்தது. நல்ல வேளை ஓட்டி வந்தவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான சிராய்ப்புடன் தப்பினர். டீக்கடையில் நின்று கொண்டிருந்த பிரகாசம் டீக்கடை காரரை பார்த்து சொன்னார். கொஞ்சமாவது பொறுப்பு இருக்காய்யா உனக்கு! நடுரோட்டுல பூசணிக்காய் உடைச்சு வைச்சிருக்க! நல்ல வேளை சின்ன காயத்தோட போச்சு! ஒரு ஒழுங்கு வேணும்யா! உன் திருஷ்டி கழியறதுக்கு ஊரான் எவனோ அடிபடனுமா?  டீக்கடைக்காரர் தலை சொறிந்தபடி நிற்க கையில் வைத்திருந்த வாழைப்பழத்தை உண்டுமுடித்த பிரகாசம் அப்படியே சாலையில் விட்டெறிந்தார்.

புகை!
   புகை பிடிக்காதீர்கள்! என்ற வாசகத்துடன் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. நகரைத் தாண்டியதும் பஸ்ஸினுள் நிகோடின் நெடி குடலைப் புரட்டியது. யார் ஊதுகின்றனர். எரிச்சலாய் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் புகைபிடிக்க வில்லை! அப்புறம் எப்படி நாற்றம்? யோசனையாய் முன்னே கவனிக்க ஸ்டியரிங்கை பிடித்த ஓட்டுனரின் கரங்களில் புகைந்து கொண்டிருந்தது சிகரெட்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!     

Comments

  1. குட்டிக்கதைகள் அனைத்தும் அருமை நண்பரே
    அதிலும் ஓட்டு, ஆக்கிரமிப்பு ஸூப்பர்

    ReplyDelete
  2. நொடிக்கதைகள் அருமை நண்பரே

    ReplyDelete
  3. அத்தனையும் அருமை நண்பரே!

    ReplyDelete
  4. அனைத்தும் நடக்கும் உண்மைகள்.....

    ReplyDelete
  5. கருத்துள்ள அருமையான
    குட்டிக் கதைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அனைத்தும் நல்ல கதைகள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை சுரேஷ்.

    ReplyDelete
  8. வழக்கம்போல் தங்கள் பாணியில் அருமை.

    ReplyDelete
  9. அத்தனையும் அருமை சுரேஷ். பாராட்டுகள்.

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை சுரேஷ்! பாராட்டுகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!