ஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்!

   ஆறாவது வயதில் தடம் பதிக்கிறது தளிர்!

    ஜனவரி 4, 2011  மதிய நேரம் எப்படியோ ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து அழகி எழுத்துருவில் எழுத்துக்களை தேடித் தேடிப் பிடித்து ஓர் பொங்கல் வாழ்த்துக் கவிதை அச்சடித்து அதை அப்படியே ப்ளாக்கிலும் பேஸ்ட் செய்தேன். முதல் முதல் பதிவே காப்பி-பேஸ்ட் தான். இதுதான் என்னை கொஞ்ச நாளுக்கு விடாமல் இருந்தது போலும்.

   திரட்டிகள் பாலோயர்கள், சக வலைப்பூக்களை படிக்க வேண்டும் என்ற எந்த அறிமுகமும் தகவலும் தெரியாது. நானே கூகுளில் தேடி சுயமாக உருவாக்கிய வலைப்பூ. அதன் பின்னர் ப்ளாக்கர் நண்பன் தளம் திரட்டிகளை இணைக்க உதவியது. சுமார் ஒருவாரம் கடந்தபின்னரும் நாலைந்து பதிவுகள் போட்ட பின்னும் கருத்துரைகள் ஏதும் இல்லை. அப்போது திரட்டிகளில் இணைக்கவில்லை. அதனால் பதிவர்கள் யாரும் படித்தார்களா என்பதே தெரியவில்லை.

   என்னுடைய ஐடியில் இருந்து நானே என் மனைவி பெயரில் ஒரு கமெண்ட் போட்டு திருப்தி பட்டுக்கொண்டேன். முதலில் இண்டிலி, உலவு என்ற திரட்டிகளில் இணைத்தேன். தமிழ்மண இணைப்பு சுலபத்தில் கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் ஓட்டுப்பட்டை இணைக்கவும் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் தமிழ்மணத்தில் இணைத்த பின்னர் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ்மணத்தில் இணையும் போது 1000த்துக்குமேலாக இருந்த எனது ரேங்க்  மூன்று மாதங்களில் 500க்கு கீழே இறங்கி வந்தது. ஆனால் பிற தள பதிவுகளை பகிர்ந்தமையால் தமிழ் மணம் என்னை நீக்கியது.

 வலைப்பூ என்பது முகநூல் போல என்று நினைத்து முதலில் எழுதியும் பகிர்ந்து கொண்டும் இருந்தேன். 2012ல் கொன்றைவனத் தம்பிரான் என்ற சக பதிவர் நான் பிற தளங்களுக்குச் சென்று என்னுடைய பதிவு குறித்து விளம்பரம் செய்வது குறித்து கேலி செய்ய விவாதம் வளர்ந்து பின்னர்  பிற தளப்பதிவுகள், சினிமா கிசுகிசுக்கள் போன்றவற்றை பகிர்வதை நிறுத்த ஆரம்பித்தேன். என்னுடைய எழுத்து பலம் எனக்கு புரிய வைத்தவர் அவர்தான். சொந்தமாக படைப்புக்களை எழுதத் துவங்கினேன்.

  பிற தளங்களில் குறிப்பாக செய்திதளங்களின் பகிர்வுகளால் நிறைந்து குப்பையாக கிடந்த தளிரில் 2012 இறுதியில் சுத்தம் செய்தேன். அப்போதே ஆயிரம் பதிவுகளுக்கு மேலிருந்தாலும் நிறைய குப்பைகள் அதையெல்லாம் குப்பைத்தொட்டிக்கு அனுப்பினேன். 2013 முதல் என் தளத்தில் அவ்வாறான பகிர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. சொந்த படைப்புக்கள், விமர்சனங்கள் என்று எழுத ஆரம்பித்தேன். நகைச்சுவை மட்டும் பிற எழுத்தாளர்கள் வாரப்பத்திரிக்கையில் எழுதியதை எடுத்து பகிர்ந்துவந்தேன். அதையும் கோவை ஆவி அவர்கள் அது எதுக்கு பாஸ்? என்று கேட்டார். அதையும் சொந்தமாக எழுத ஆரம்பித்தேன்.

 நிறைய வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள், தொடர ஆரம்பித்தார்கள் பின்னூட்டங்கள் நிறைய வர ஆரம்பித்தன. நிறைய ஆலோசனைகள் சொன்னார்கள், நல்ல நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். பாக்யா, வாரமலர் போன்ற வார இதழ்களில் ஒரு சில படைப்புக்கள் பிரசுரம் ஆயின.

   அதுமட்டும் இன்றி வலைச்சரம் என்ற வலைப்பதிவுகளை அறிமுகம் செய்யும் அருமையான வலைப்பூவில் இருமுறை ஆசிரியர் ஆகும் வாய்ப்பு பெற்று என்னால் இயன்றவரை பதிவர்களை அறிமுகம் செய்துவைத்தேன். பதிவர் திருவிழா ஒன்றிற்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

     மிக அருமையான எளிமையான திறமையான நண்பர்களை இந்த வலைப்பூ எனக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? மிக்க மகிழ்ச்சியோடு ஆறாவது வயதில் தளிர் தடம் பதிக்கிறது. இந்த தடத்தை பின்பற்றி புதியவர்கள் வருவார்களேயானால் அதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.


  என்னைத் தொடரும் நூற்றுக்கணக்கான பாலோயர்கள், வாசகர்கள்,மற்றும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கும் நண்பர்கள், வலைப்பூ தோழமைகள், மற்றும் திரட்டிகள் அனைவருக்கும் இந்த சமயத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவோடு இந்த ஆண்டில் மென்மேலும் தளிர் தழைத்தோங்கும் என்பதில் உறுதியோடு விடைபெறுகிறேன்! நன்றி!

Comments

  1. வாழ்த்துகள் சுரேஷ்! இன்னும் மேலும் மேலும் தங்கள் படைப்புகள் பதிவாகி, பத்திரைகைகளிலும் இடம் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துகள் சகோ. இன்னும் பல பல படைப்புகள் படைத்து வெற்றி பெற வாழ்த்துகள்!
    வேலைகளால் அவ்வப்பொழுது என் வருகை தடைபட்டாலும் கண்டிப்பாகத் தொடர்வேன் சகோ.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே! இன்னும் பல படைப்புகள் மிளிர வேண்டும் என மனதார வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்!இன்னும் பல பதிவுகள் இட்டு புகழ் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இப்படியே மேலும் தொடரவாழ்த்துக்கள் உங்கள் பதிவுகளில் என்னை கவர்ந்தவை நகைச்சுவை துணுக்குகளும் ஹைக்கூ கவிதைகளும்தான். எதை படிக்கிறேனோ இல்லையோ அதை கண்டிப்பாக பார்த்துவிடுவேன்..பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. ஆறு ஆண்டுகள் - அதுவும்
    சிறந்த பதிவுகளைக் கொட்டிக் குவிக்கும்
    தங்கள் பணி தொடர
    எனது வாழ்த்துகள்!
    எமது ஒத்துழைப்பு
    தங்களுக்கு என்றும் உண்டு!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அற்புதமான எழுத்தாற்றல் பெற்றிருக்கும்போது எதற்கு மற்றவருடைய பதிவுகள் . உண்மையை உள்ளபடி சொல்லும் உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள். திரட்டியின் உதவியின்றி சாதனை புரிந்துவிட்டீர்கள்.தொடரட்டும். உங்கள் சில ஹைக்கூ பாணிக் கவிதைகள் பிரமிக்க வைத்திருக்கின்றன. தொடருங்கள்

    ReplyDelete
  9. வாழ்த்துகள் நண்பரே, மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
  11. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் மேலும் பல சிகரங்கள் தொட......

    ReplyDelete
  12. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் சுரேஷ்.தளிர் நடைமுடிந்தது;இனி ஓட்டம்தான்

    ReplyDelete
  14. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சுரேஷ்......

    ReplyDelete
  15. தளிர் இன்னும் பலசிகரம் தொட என் நேசமான வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  16. கிட்டத்தட்ட இருவரும் ஒரே காலகட்டத்தில் எழுத ஆரம்பித்துள்ளோம் என நினைக்கிறேன். எனது முதல் வலைப்பூவான சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஆரம்பித்து தற்போது ஆறாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. கோயில், நகைச்சுவை, கவிதை, கதை என்ற பலநிலைகளில் தாங்கள் தொடர்ந்து எழுதி சாதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வணக்கம்.

    தங்களின் பணி சிறக்கவும், வலையுலகில் தனித்த உயரிய இடம்பெறவும் மனதார வாழ்த்துகிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சகோ ..நாமெல்லாம் ஒரே நேரம்தான் வலையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கோம் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!