பாதைகள் மாறாது!

பாதைகள் மாறாது!


சினிமா ஒன்று பார்த்துவிட்டு வீதியில் இறங்கி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோதுதான் அவளை கவனித்தேன். இடுப்பில் கைக் குழந்தையோடு ஒரு கையில் கறிகாய் கூடையுமாக வந்து கொண்டிருந்தாள் அவள். இவள்.. எங்கோ பார்த்தமாதிரி அல்லவா தோன்றுகிறது.

  திடீரென்று மூளையில் ஒரு மின்னல் அடித்தது! அது.. அது காயத்ரி அல்லவா? எப்படி இருந்தவள் ஆளே மாறி விட்டாளே!  என்று யோசனையுடன் பின்னோக்கிச் சென்றேன்.

  மூன்றாண்டுகள் காலேஜில் ஒன்றாக படித்தது. ஆண்களுக்கு நிகராக அரட்டையடித்து அவர்களை மடக்கி வெற்றி காண்பவள். பெண்ணுரிமை பேசுபவள்.புதிய தலைமுறை பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருந்தவள்தான் காயத்ரி. கடைசியாய் கல்லூரி கடைசி நாளன்று பார்த்தது, என்ன ப்ரணவ்? காலேஜ் லைப் முடிஞ்சவுடனே மேரேஜ் லைஃபாமே? உனக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! பொண்ணு தேடறாங்களாமே! கண்ணு கலங்காம காப்பாத்துப்பா! இல்லே நான் சண்டைக்கு வருவேன்! என்று கிண்டலடித்தவள் ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து வாங்கிச் சென்றாள் முகவரியும் போன் நெம்பரும் தந்தாள். பின்னர் சில மாதங்களில் அவளது திருமண அழைப்பிதழ் வந்தது. அப்போது ஆபிஸில் முக்கியமான வேலையாக வெளியூர் சென்றதால் போக முடியவில்லை!இதோ ஆயிற்று ஐந்து வருடங்கள்! அவளை மறந்தே போனேன்! இன்றுதான் பார்க்கிறேன்!

   நான் இது அத்தனையும் யோசிப்பதற்குள் அவள் அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டிருந்தாள். ஆனாலும் கவனித்துவிட்டேன். வேகமாக சென்று, ”ஹலோ, காயத்ரி! என்னை தெரியுதா? ”என்றேன். அவள் கையிலிருந்த குழந்தை என்னை வித்தியாசமாக பார்க்க, குழந்தையை கீழிறக்கிவிட்டு நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்ட  அவள்,” நீ.. நீங்க ப்ரணவ் தானே! ”என்றாள்.

    “அப்பாடா! நல்ல வேளை ஞாபகம் வெச்சிருக்கே! பொது இடத்திலே யாரு நீங்கன்னு கேட்டுடிவியோன்னு ஒரு நிமிசம் பயந்துட்டேன்! ”என்றேன்.
 “வாட் எ சர்ப்ரைஸ்! நீ  திருச்சியிலே இல்ல இருந்தே! உன் ஹஸ்பெண்ட் அந்த ஊருதானே! “ என்றேன்.
     “மறக்கமுடியாத காலேஜ் லைஃப்! நீ என் பெஸ்ட் ப்ரெண்ட்! எப்படி மறக்கமுடியும்? முதல்ல திருச்சியிலேதான் இருந்தோம்! இப்ப சென்னைக்கு அவர் மாத்தல் வாங்கிட்டாரு! “

   “நீ வேலைக்கு போறது இல்லையா?”

  “ இல்ல ப்ரணவ் எனக்கு குடும்பத்தை மானேஜ் பண்ணவே சரியாருக்கு! ”

 “அவரும் நான் வேலைக்கு போறதை விரும்பலை!”

 “ இந்த ஏரியாவுலதான் இருக்கியா? நானும் இங்கே தான் இருக்கேன்! இன்னிக்குத்தான் சந்திக்கணும்னு இருக்கு போலே எந்த தெருவுல இருக்கே?” என்றேன்.  “இங்கதான் பக்கத்துல அடுத்த தெருவிலதான் வீடு! வாங்களேன்! ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம் “ இயல்பாய் அழைத்தவள்  “ஆமா! ப்ரணவ் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா! அப்பவே பொண்ணு பார்த்தாங்களே! எத்தினி குழந்தைங்க?” என்றாள்.

    “ம்! இரண்டு பசங்க! வொய்ஃபும் வேலைக்கு போறா! பசங்களை அப்பா அம்மாத்தான் பார்த்துகிறாங்க! ”என்றேன்.

   “ஒருநாள் உன் வொய்ஃபையும் கூட்டிட்டு வாயேன்!”

 “கண்டிப்பா! ”என்றேன். அதற்குள் வீடு வந்துவிட்டது. கதவை திறந்தவள்  “வா ப்ரணவ்! இதுதான் என் மாளிகை ”என்றாள்.  “உட்காரு ப்ரணவ்! இதோ ஒரு நிமிசத்துல வந்துடறேன் ”என்றாள்.

  அப்போதுதான் குழந்தைக்கு எதுவும் வாங்கி வரவில்லையே என்று தோன்றியது. காயத்ரி இதோ நானும் வந்துடறேன். என்று வெளியில் சென்று ஒரு மில்க் பிஸ்கெட் பாக்கெட்டுடன் உள்ளே நுழைந்தபோது, ஒருவர் லேசான தொந்தியுடன் உள்ளே சோபாவில் அமர்ந்திருந்தார். நான் தயங்கியபடி நிற்க அவரும் கேள்விக் குறியாக பார்த்தார். அதற்குள் அங்கே வந்த காயத்ரி!  “ஏங்க நான் சொன்னேனே ப்ரணவ்! என்கூட படிச்சவர் இன்னைக்கு எதேச்சையா மார்கெட்ல பார்த்தேன்! இவரும் இந்த ஏரியாவிலதான் இருக்காரு!” என்று அறிமுகப்படுத்தியவள் இது என் ஹஸ்பெண்ட் ராகுல் என்றாள்.

   “ஹாய்! என்றவர் உட்காருங்க! ”என்று நகர்ந்தார். அவர் பக்கத்தில் அமர்ந்த நான் பிஸ்கெட்டை குழந்தையிடம் நீட்டினேன். இதெல்லாம் எதுக்கு என்றாள் காயத்ரி! பரவாயில்லை! வாங்கிக்க என்றேன் குழந்தையிடம் அது தயங்கியபடியே வாங்கிக் கொண்டது. சூடாக சுவையான காபி வந்தது. சுவைத்தேன். அவள் கணவனுடன் ஆபிஸ் அரட்டையடித்தேன். பின்னர் கிளம்பினேன்.

   ”அடிக்கடி வந்துட்டு போ ப்ரணவ் என்றாள் கிளம்பும் போது காயத்ரி! சரி காயத்ரி என்றேன்.  “அடுத்தமுறை கண்டிப்பா உன் வொய்ஃபை கூட்டிட்டு வா!” என்றாள் சரி என்று விடைபெற்றேன்.

   என் மனம் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது! எப்படி இருந்த காயத்ரி இப்படி மாறிவிட்டாள்! பெண் விடுதலை பெண்கள் முன்னேற்றம், என்று முழங்கி ஆணின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுவாள். பெண்கல்வி கற்று வேலைக்கு சென்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பாள்.இதுபற்றி காலேஜ் பட்டிமன்றங்களிலும் பேச்சு போட்டிகளிலும் பேசி பல பரிசுகள் வாங்கி இருக்கிறாள். அப்படி பட்ட காயத்ரியா இது! என்னால் நம்பவே முடியவில்லை! இப்பொழுது என்னவென்றால் கணவனுக்காக வேலைக்கு செல்லாமல் அடுப்படியில் அடைந்து அவனுக்கு பணிவிடை செய்து அவனுக்காக முகம் கழுவி காத்திருந்து வறவேற்கும் சாதரண பெண்ணாக மாறிவிட்டாளே மிகவும் ஆச்சர்யப்பட்டேன்!

   அதற்கப்புறம் பலமுறை காயத்ரியின் வீட்டிற்கு சென்றேன். என் வொய்பையும் கூட்டிச் சென்றேன். அவளுக்கு இதில் ஆர்வமே இல்லை! இருந்தாலும் கூட்டிச்சென்றேன். பின்னர் நான் மட்டுமே சென்று வந்து கொண்டிருந்தேன். என் மனைவியும் ஏன் அடிக்கடி லேட்டா வர்ரீங்க என்றாள் காயத்ரி வீட்டுக்கு போயிட்டு வரேன்! என்றதும் முறைப்பாள்.

  “  நான் ஒருத்தி இங்க காத்துகிட்டு இருக்கேன்! நீங்க அங்க இங்க ஊரு சுத்திட்டு வர்றீங்க என்று கத்தினாள். எனக்கு அவமானமாக போய்விட்டது. அப்படி என்ன தப்பு! அவ என் ப்ரெண்ட் என்றேன். அது நீங்க படிக்கிற காலத்திலே இப்ப அவங்க அடுத்தவங்க மனைவி! நீங்க நட்பா பழகினாலும் ஊர் வேற விதமா பேசும் இனிமே தினமும் அங்க போற வேலை வேணாம் சொல்லிபுட்டேன் ”என்று சொன்னாள்.

  சே! என்ன உலகம் இது! இந்த ஊரில் ஆணும் பெண்ணும் நட்பாக பழகவே முடியாதா? என்று வெறுத்து போனேன். மறுநாள் காயத்ரியிடம் சொன்னேன். அவள் சிரித்தாள்.

   “ப்ரணவ் இதுதான் நிஜம்! பேச்சுக்கு பெண்ணுரிமை அது இதுன்னு பேசலாம்! ஆனா வாழ்க்கைன்னு வரும்போது விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு! என்னையே எடுத்துக்க! காலேஜ்ல எப்படி இருந்தேன்! ஆனா இப்ப எப்படி மாறி போயிட்டேன் தெரியுமா?பார்த்தாலே தெரிஞ்சுகிட்டிருப்பே! உன் வொய்ப் சொல்றதுல நியாயம் இருக்கு! அவங்க சொன்னது நிஜம்தான். நீ இங்க வந்து போறது என் கணவருக்கும் தான் பிடிக்கலை! அது மட்டும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரங்க கூட இப்ப என் கூட சரியா பேச மாட்டேங்கறாங்க!”

    “இந்த தெருவுல நான் அடக்கமா கணவனுக்கு அடங்கி நடக்கிறதுனாலே நல்ல பெயர். இதுவே நான் எதிர்த்துகிட்டு நின்னா! சும்மாவே அடங்காப்பிடாரி! அப்படி இப்படின்னு சொல்வாங்க! அவர் இல்லாம நான் தனித்து வாழ முடியும்! ஆனா உலகம் சும்மா இருக்காது! வாழாவெட்டின்னு சொல்லும் இல்லாத கதைகளை திரித்துவிடும். அதுவும் முக்கியமா பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்! அவங்களே கூடி கூடி பேசுவாங்க! இது தேவையா?”

    “என் அப்பா ஹார்ட் பேஷண்ட். அவருக்கு கடைசிக் காலத்துல ஏன் தொந்தரவு கொடுக்கணும்? அவர் நிம்மதியை ஏன் கெடுக்கணும். இந்த உலகம் ஆண்- பெண் நட்பை கொச்சையாகத் தான் பார்க்குது. உலகம் என்ன? பெண்ணே பெண்ணை புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க! இதுல பெண்ணுரிமை பேசி என்ன பயன்? “

  அவளது பேச்சில் இருந்த நியாயங்கள் என் நெஞ்சை ‘சுருக்’ என தைத்தது. எவ்வளவு நிதர்சனமான உண்மை! நான் விடைபெற்று வெளியே வந்தேன். வாசலில் இருந்த எதிர்வீட்டுக்காரி கழுத்தை நொடித்துக் கொண்டாள். இவர்களின் பாதை மாறாது. நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். என்று முடிவு செய்தேன். நான் இப்பொழுது காயத்ரி வீட்டுக்கு செல்வதில்லை!

                        (முற்றும்)

(மீள்பதிவு)

டிஸ்கி} இது 1995ல் எனது கைஎழுத்து பத்திரிக்கையில் எழுதி வரவேற்பினை பெற்ற கதை. 2012 அக்டோபரில் இணையத்திலும் வெளியிட்டு வரவேற்புக்களை பெற்றது. புதிய வாசகர்களுக்காகவும், எனது வேளை பளுவின்  காரணமாகவும் மீண்டும் அரங்கேறுகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கருத்து நண்பரே உண்மையே எவ்வளவுதான் அன்புடன் பழகினாலும் சமூக கண்கள் வேறு மா3தான் பார்க்கும்

    ReplyDelete

  2. வணக்கம் நண்பரே!
    கதையை மனம் ஒன்றி படித்தேன்!
    அருமையாக நிகழ்வுகளை கொண்டு சென்ற விதம்
    புவியில் புரண்டோடும் புனலைப் போல அழகுற அமைந்து இருந்தது.
    வாழ்த்துகள்.
    அதேசமயம் இந்த கதை 1995 பொருந்திய விதம் 2015க்கு பொருத்தமாக இருக்குமா? என்றால் நகர்புற வாழ்க்கைக்கு அது சாத்தியமில்லை என்பதாகவே தெரிகிறது.
    எனினும் நல்லோர் சிலர் இருக்கும் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!
    நன்று!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. 95 ல் எழுதியது 2015 க்கும் பொருந்துகிறதே :)

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே! அருமையான கதை! உலகம் எவ்வளவு முன்னேறினாலும் ஆண் -பெண் நட்புகளை ஆயிரம் கண்கள் ஆச்சரியமாய் பார்க்கும் அவலம் என்றும் தீராதோ???
    கிராமங்களில் இன்னும் அதிகம்!!!

    ReplyDelete
  5. ஆஹா... ரொம்ப நல்ல கதை...
    இன்றைக்கும் பொருத்தமான கதை...
    1995-ல் கையெழுத்துப் பிரதியா...?
    நாங்களும் 1993-1994-ல் மனசு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தி கல்லூரியில் மிகப் பிரபலமாக இருந்தோம்...
    ம்... அதெல்லாம் ஒரு கனாக் காலம்.

    ReplyDelete
  6. யதார்த்தத்தை உணரவைக்கும் கதை.
    அப்பவே அசத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம்...

    தாங்களும் விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  8. உண்மைதான் சகோ,
    இன்றும் நாம் இப்படியே,,,
    அருமையான கருத்து,,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. எந்த காலத்திற்கும் பொருத்தமான கதை... இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை.... கணவன் எனும் ஆணும் மனைவி எனும் பெண்ணும் அந்த நட்பைப் புரிந்து கொண்டால் போதும் சுற்றியிருப்போர் குறித்த கவலை வேண்டாம்... இப்போது ஆங்காங்கே மாறி வருவது கொஞ்சம் உற்சாகமான விஷயம்.... எனக்கும் அப்படியான நட்பும் , உறவும் இருப்பதால் சொல்கிறேன்...

    ReplyDelete
  10. //அது மட்டும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரங்க கூட இப்ப என் கூட சரியா பேச மாட்டேங்கறாங்க!”//போய்த்தொலையட்டும்! மன்னிக்கவும் சகோ, இப்படிப்பட்ட மக்களைக் கண்டால் எனக்கு கோபம் தான்வருகிறது.
    எழில் சொல்வது போல வீட்டினரும் நண்பரும் புரிந்துகொண்டால் போதும்..அதுவும் எல்லா இடங்களிலும் நடக்கவேண்டுமே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!