ரக்‌ஷாபந்தன்!


ரக்‌ஷாபந்தன்!


ஊரெல்லாம் ரக்‌ஷாபந்தன் திருநாள் களைகட்டிக் கொண்டிருந்தது. இளவயது பெண்கள் தம் வயதொத்த இளைஞர்கள், சகோதரர்கள் கையில் ராக்கியைக் கட்டி ஆசி வாங்கி பணமும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

   இதோ ரேகா கையில் ஓர் ரக்‌ஷா பந்தன் கயிறுடன் அந்த தெருவில் நுழையவும் நண்பர்களோடு தன் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த சுமனுக்கு வியர்த்தது. ரேகாவை அவன் நேசிக்கின்றான். இதுவரை அவளிடம் சொல்லவில்லை. சொல்ல தைரியம் வரவில்லை.

     ரேகா அவன் வசிக்கும் அடுத்த தெருவில் வசிக்கின்றாள். அவன் தங்கையோடு படிக்கின்றாளாம். அடிக்கடி தங்கையை பார்க்கவும் அவன் வீட்டுக்கு வருவாள். அப்போது இருவருக்கும் பழக்கம். பழக்கம் என்றால் ஹாய், ஹலோ! நல்லா இருக்கீங்களா? இப்படி பேசிக் கொள்வதுதான். ஆனால் அவனுக்கு ரேகாவை நிரம்ப பிடித்து இருந்தது. ரேகாவுக்கு அவனை பிடித்திருக்க வேண்டும். ஆனால் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

    ரேகாவை முதன் முதலில் ஒரு பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தான் அவன்.  அன்று அவன் நினைத்தது எல்லாம் நடந்தது. யாரடி நீ மோகினியில் நயன் தாராவை பார்த்ததால் தான் நல்லது நடக்கிறது என்று எண்ணிக் கொண்டு ஃபீல் செய்யும் தனுஷ் போல மாறிப்போனான் சுமன்.

   அன்று முதல் எந்த காரியத்தை முதலில் செய்ய ஆரம்பித்தாலும் ரேகாவை பார்க்காமல் செய்ய மாட்டான். எக்ஸாம் எழுதப்போனாலும் சரி! புதிதாக பைக் வாங்க போனாலும் சரி தெரு முனையில் காலைவேளையில் போய் காத்து நிற்பான். அந்த பெண்ணும் கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்பாள். எட்ட நின்று ஒர் பார்வை. அவள் இவனை பார்த்து புன்னகைத்துவிட்டால் கூடுதல் மகிழ்ச்சி. அன்று பூராவும் இவன் நிலை கொள்ளாமல் தவிப்பான். 
   

    அதற்கு ஏற்றார் போல அவளை பார்த்துவிட்டு அவன் துவக்கிய செயல்கள் எல்லாம் வெற்றியானது. அத்தனை நாள் அரியர்ஸ் வைத்திருந்த எக்ஸாமில் பாஸாகினான். ரொம்பநாளாய் வாங்க முடியாத பைக் லைசன்ஸ் வெற்றிகரமாக வாங்கினான். இன்று கூட அவன் அவளை எதிர்பார்த்து காத்திருப்பது நாளை நடக்க விருக்கும் ஓர் முக்கிய இண்டர்வியுக்கு அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும். அதிகாலையில் அவளை பார்ப்பது சிரமம். செண்டிமெண்டாய் இப்போது பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று நினைத்து கிளம்புகையில் நண்பர்கள் வந்துவிட தெரு முனையில் நண்பர்களோடு  பேசியபடியே காத்திருந்தான்.

      நினைத்தார்போல அவளும் வந்தாள். ஆனால் அவள் கையில் ரக்‌ஷா பந்தன் கயிறு. ஓ இன்று ரக்‌ஷா பந்தனோ? ஆஹா… இன்று இதை இவள் எனக்கு கட்டிவிட்டால் என்ன ஆவது? சகோதரன் ஆகி விடுவேனே! என்னால் அவளிடம் அப்படி பழக முடியாதே! ஐயோ இவள் கண்ணில் பட வேண்டாமே என்று நழுவ நினைத்தான்.

      ஆனால் அவள் கவனித்து விட்டாள். முன்னை விட வேகமாக வந்தாள்.  "ஹாய்…  ஒரு நிமிஷம்..!  ஹேப்பி ரக்‌ஷா பந்தன்…" என்றபடி அவள் முன்னேற  இவன் கூட்டாளிகளும்  "ஹேப்பி ரக்‌ஷாபந்தன்.." என்று சொல்ல.. இவன் பம்மினான்.

         ஐயோ வசமாக மாட்டிக் கொண்டோமே! எல்லோர் கையில் கட்டி விட்டு போகட்டும் நம் கையிலும் கட்டி விட்டால் நம் ஆசை… கனவு எல்லாம் என்ன ஆவது? என்றபடி  தவிக்க

    "ஹாய் சுமன்… ஹேப்பி ரக்‌ஷா பந்தன். உங்க வீட்டுக்கு வரலாமா?" என்றாள் அவள்.

       " எ… எதுக்கு? "

     "என்ன சுமன்? இப்படி கேட்கறே? இன்னிக்கு ரக்சா பந்தன்  கயிறு கட்டத்தான். "

     "ஐயோ வேணாம்….! "

   "இல்லை சுமன்! இன்னைக்கு கண்டிப்பா ரக்‌ஷாபந்தன் கட்டித்தான் ஆகனுமாம் அம்மா சொன்னாங்க."

    "அம்மா சொல்லி அனுப்பினாங்களா.."

   "ஆமாம்…! "

    "கண்டிப்பா ராக்கி கட்டித்தான் ஆகனுமா…?"


    "இல்லையா பின்னே…? இன்னைக்குத்தானே ரக்‌ஷாபந்தன்…" 
"சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் கிட்டே ஆசி வாங்கணும் இல்லையா…"

    "கண்டிப்பா…." சுமனின் முகம் தொங்கிப் போனது. 

   "என்ன சுமன்? என்னை வீட்டுக்குக் கூப்பிட மாட்டியா?"

    "எ… என்னது?"

  " வீட்டுக்கு கூப்பிடமாட்டியான்னு கேட்டேன்!"

   "வா… வாங்க..!"

   "ஒரு நிமிஷம் இரு சுமன்.. அம்மாவும் வரேன்னாங்க!"

     "அம்மாவா? அவங்க எதுக்கு?" புரியாமல் முழித்தான் சுமன்.

    "அம்மா… ரெடியா… சுமன் ஒத்துகிட்டாச்சு! வாங்க போகலாம்."
 பலியாடாய் சுமன் முன்னேற பின் தொடர்ந்தார்கள் அவர்கள்.

    சுமனின் வீட்டுக்குள் நுழைந்ததும், "வாங்க வாங்க! " என்று வரவேற்றாள் சுமனின் அம்மா.

     "ஹேப்பி ரச்ஷா பந்தன்…  அண்ணா  இருக்காரா கூப்பிடுங்க.. ”என்றபடி ஸ்வீட்டை நீட்டினாள் ரேகாவின் தாய்.

   அதற்குள் சுமனின் அப்பா வெளியே வர.  “ஹேப்பி ரக்‌ஷா பந்தன் அண்ணா…! ”என்றபடி அவர் கையில் ராக்கியை கட்டி விட்டு  “ஆசிர்வாதம் பண்ணுங்கன்னா!” என்றபடி காலில் விழுந்தாள் ரேகாவின் தாய்.

    அறுபது மைல் வேகத்தில் துடித்த சுமனின் இதயம் நிம்மதி அடைந்து  ஸ்… அப்பாடி,…! என்று நிமிர தூரத்தே நின்று கண் சிமிட்டி பழிப்பு காட்டினாள் ரேகா.
   பெண் மனதை புரிந்து கொள்ளாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தான் சுமன்.

    டிஸ்கி} நேத்து சீனுவின் ரக்‌ஷா பந்தன் படிச்சதுமே தோணுன ஓர் கருவினை கதையாக்கி உள்ளேன். நேரமின்மையால் இன்னும் கூர் தீட்டவில்லை! பணிகளுக்கு இடையே ஓர் பதிவு இது! உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கதை. வித்தியாசமான திருப்பம்!

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் உடனடி விமர்சனத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. அருமையான கதை ரசித்தேன்!!

    ReplyDelete
  3. ரசித்துப் படித்தேன் நண்பரே அருமை

    ReplyDelete
  4. முகப்புப் படம் அருமை சரியான அளவில் உள்ளது. டிடியின் கைவண்ணம் போல் தெரிகிறதே. கதையை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. முகப்பு படம் உருவாக்கிக் கொடுத்த பெருமை நண்பர் மதுரைத் தமிழனுக்கே உரியது. கொஞ்சம் பெரியதாக இருந்ததை தளத்திற்கு ஏற்றவாறு மாற்றியது மட்டும் நான். நன்றி!

      Delete
  5. ரக்ஷாபந்தன் நன்றாகவே நடந்திருக்கிறது!!!!!! முடிவு யூகிக்க முடிந்தாலும்...நீங்கள் எழுதிய விதம் நன்றாகவே உள்ளது! சுரேஷ்

    ReplyDelete
  6. செதுக்கவிட்டாலும் ஜொலிக்கிறது கதை:) சூப்பர் சார்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!