விதவிதமாய் விநாயகர்கள்!

விதவிதமாய் விநாயகர்கள்!



காஞ்சிபுரம் விபூதி விநாயகர்:

    காஞ்சிமாநகரின் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார் விபூதி விநாயகர். இந்த விநாயகர் உடலில் எப்போதும் திருநீறு பூசியபடி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

விகட சக்ர விநாயகர் காஞ்சிபுரம்:

    காஞ்சிமாநகரின் பிரதான விநாயகர் இவரே! ஏகாம்பரேஸ்வரர்ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ளார் இவர். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுதல் வழக்கம். இது தோர்பிஹி கரணம் என்னும் சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். இது நிகழக் காரணமாக இருந்தவர் இந்த தல விநாயகர். ஒருசமயம் மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை இவர் விழுங்கிவிட மஹாவிஷ்ணு கூத்தாடி தோப்புக்கரணம் போட்டு சிரிக்க வைத்தபோது சக்ராயுதம் வெளியில் வந்து விழுந்ததாம். இந்த விகடம் செய்ததால் இவருக்கு இந்த பெயர். குமரக்கோட்டத்திலும் விகடச் சக்ர விநாயகர் எழுந்தருளி உள்ளார்.

அச்சிரப்பாக்கம் அச்சாணி முறித்த விநாயகர்:
    திரிபுரத்தை எரிக்க விநாயகரை வணங்காது புறப்பட்ட சிவபெருமானின் தேர் அச்சினை முறித்த விநாயகர் இவர். அச்சு இறு பாக்கம் என்பது மறுவி அச்சிருபாக்கம் ஆனது. தேவர்கள் தேர்வடிவாக இருந்ததால் தங்கள் துணையாலே திரிபுர தகனம் நிகழ்வதாக செருக்குற்றனர். இதனால் சிவபெருமான் தேரின் அச்சு முறித்ததாகவும் இந்த விநாயகரை வணங்கி பின்னர் தேர் சீரானதாகவும் வரலாறு உண்டு. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்து அச்சிரப்பாக்கம் அமைந்துள்ளது.

ஆயிர  யானை திரை கொண்ட விநாயகர்;
  திருவண்ணாமலை  அண்ணாமலையார் ஆலயத்தில் கிளிக்கோபுரத்தில் உள்ளார் இந்த விநாயகர். ஒரு சாண் உயரமே உடையவர். முகிலன் என்ற அசுரனிடம் ஆயிரம் யானைகளை திரையாக பெற்றதால் இந்த பெயர்.

சிதம்பரம் நரமுக விநாயகர் எனும் ஆதி விநாயகர்;
    மனித உருவமாகவே உள்ள விநாயகர் இவர். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கும்பகோணம் பண்ருட்டி வழி செல்லும் பாதையில் புவனகிரி தாண்டியவுடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. தனிக் கோயிலில் ஜடாமுடியுடன் வலது கையில் மோதகம் இடக்கையில் விளாம்பழம் உடன் பெருத்த தொந்தியுடன் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:
     சிதம்பரம் காட்டு மன்னார்குடி குமராட்சியினை அடுத்து திருநாரையூர் பிரிகிறது. விநாயகரின் ஆறாம் படை வீடாக இந்த தலம் அமைந்துள்ளது. தேவராத்தை தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் பிறந்த ஊர் திருநாரையூர். ஒரு முறை நம்பியின் தந்தை வெளியூருக்கு சென்றமையால் நம்பியை பிள்ளையார் பூஜை செய்ய சொல்லி சென்றார். நம்பி பூஜை செய்து நைவேத்தியம் செய்த போது பிள்ளையாரை வற்புறுத்தி உண்ண செய்தார். பிள்ளையார் அமைதி காக்க நம்பி தன் தலையை பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். பிள்ளையாரும் அவர் பக்தியை மெச்சி அமுது உண்டார். தகவல் அறிந்த ராஜ ராஜ சோழன் இது உண்மையில்லை தன் முன்னிலையில் நைவேத்தியம் செய்து உண்ண செய்ய வேண்டும் என்றான். விநாயகர் செவி சாய்க்கவில்லை! விநாயகர் மீது இரட்டை மணி மாலை பாடிய நம்பியின் பக்திக்கு மெச்சி அனைவர் முன்னிலையிலும் பிள்ளையார் உண்டார். சிற்பியினால் செதுக்கப்படாத பிள்ளையார் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் ஆனார்.

 வீர கேரள புரம் நிறம் மாறும் விநாயகர்;
   நாகர் கோவிலில் இருந்து 20 கீ.மி தொலைவில் அமைந்துள்ளது. சேரன் வீர கேரளவர்மனால் நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்.ராவணன் வழிபட்ட விநாயகர். திண்டு சுருட்டி அமர்ந்துள்ள இவர் உத்தராயணத்தில் கறுப்பாகவும் தட்சிணாயணத்தில் வெள்ளையாகவும் இருப்பார். எனவே பச்சோந்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திர காந்த கல்லினால் இந்த மாற்றம் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த தல ஆலமரமும் தட்சிணாயணத்தில் இலை உதிர்ந்தும் உத்தராயணத்தில் இலை வளர்ந்தும் காணப்படும். கிணற்று நீரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறும். திருமணத்தடை நீக்கும் தலம்.

மொட்டைப் பிள்ளையார் அழகிய பாண்டிய புரம்.
  நாகர் கோயிலில் இருந்து வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்து உள்ள பூதப்பாண்டியில் இருந்து 5கிமீ தொலைவில் பழையாற்றங்கரையில் உள்ளது இத்தலம். செல்வந்தர் சேத்தூர் ஜமீன் தார் 1008 சதுர்தேங்காய் விடுவதாக வேண்டிக்கொண்டு விட கடைசி தேங்காய் பிள்ளையாரின் தலையை பதம் பார்த்து தலை மொட்டை ஆனது. அதனால் மொட்டை பிள்ளையார் ஆனார். இவர். தன் தலை கொடுத்து ஜமினீன் தலை காத்ததாகவும் சொல்கிறார்கள்.

நத்தம் ஶ்ரீ காரிய சித்தி கணபதி:

 சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து மேற்கே பிரியும் சாலையில் 3 கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காரிய சித்தி கணபதி தொந்தியில்லா கணபதி. பிரம்மனுக்கு அருளிய இவர் முக்கண்ணணாக ருத்திராட்ச மாலை,பரசு ஏந்தி ஓங்காரவடிவில் தாமரை மொட்டில் அமர்ந்துள்ளார். இவரை வணங்குவதால் காரிய சித்தி ஆகும். திருமணத்தடை, உத்தியோகத்தடை, பிள்ளைப்பேறு, போன்ற தடைகளுக்கு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.

சர்ப்ப ஹஸ்த விநாயகர்:
   இராஜபாளையத்திலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாச அங்குசத்திற்கு பதிலாக சர்ப்பங்களை கையில் தாங்கியுள்ளார். சங்கரன் கோவில் கோமதி அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார்.

திருப்பாலைவனம் கதவிற் கணபதி
     பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள திருப்பாலைவனத்தில் கதவிற் கணபதி அருள்பாலிக்கின்றார். சுமார் ஒரு சாண் அளவே உள்ள இவரின் கீர்த்தியோ பெரிது. மஹா மண்டபத்தில் தனி சன்னதியில் இருக்கும் இவரை வணங்கிட வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. புகைப்படங்கள் அழகு விளக்கவுரையும் நன்று புதிய விடயம் அறிந்தேன் நண்பரே...

    ReplyDelete
  2. உங்களால் இன்றே விநாயக சதுர்த்தி. அருமையான செய்திகள், புகைப்படங்கள். நன்றி.

    ReplyDelete
  3. திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் அல்ல. பொல்லாப்பிள்ளையார்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, மன்னிக்கவும், பொள்ளாப் பிள்ளையார் என்பதே சரி! பொள் = பொத்தல், உளியால் பொத்தல் இடுவது, இந்த பிள்ளையார் உளியால் செதுக்காமல் உருவானதால் இந்த பெயர். பொள் என்பதற்கு விளக்கம் தமிழ் விக்சனரி (https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&profile=default&search=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D&fulltext=Search&searchengineselect=mediawiki) என்ற பக்கத்தில் உள்ளது. நன்றி!

      Delete
    2. நான் படித்த பெரும்பாலான நூல்களிலும், அங்கு கோயிலிலும் பொல்லாப்பிள்ளையார் என்றேயிருந்தது. நானும் அவ்வாறே நினைத்தேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

      Delete
  4. வணக்கம்
    ஐயா

    நிகழ்வை மிகவும் விரிவாக அறியத்தந்தமைக்கு நன்றி...
    எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள். அழகான படங்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  6. அழகிய விநாயகர் உருவப் படங்களும் அற்புதமான தகவல்களும்
    தந்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி சகோதரரே!

    விநாயகன் அருள் கிட்டிட வேண்டி வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  7. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. பதிவும் புகைப்படங்களும் மிக அழகு.

    ReplyDelete
  9. பொள்ளாப் பிள்ளையார் தான் சரியானது. நானும் பிள்ளையார் பற்றி எழுதியுள்ளேன். அது பிள்ளையார் சதுர்த்தி அன்று தான் மின்னூலாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  10. அட !!! வித விதமான பிள்ளையார்....ஆம் சுரேஷ் பொள்ளாப் பிள்ளையார்தான் சரி....

    தகவல்கள் அனைத்தையும் அறிந்தோம்....சூப்பர் சுரேஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!