கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?


கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?


    இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் இந்தியா ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டும். ஜெயிக்கும் போதெல்லாம் கொண்டாடுவார்கள் தோற்றவுடன் தூக்கி வீசி விடுவார்கள். இப்போது பாராட்டு வாங்கும் முறை கோஹ்லியினுடையது. இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொடர் வெற்றி பெற்று தந்து இருக்கிறார். பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

   குறிப்பாக இந்த தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றியை நெருங்கிவிட்ட பின்னர்   மட்டையாளர்களின் தவறால் போட்டியை இழந்தார்கள். அப்போதும் கோஹ்லி மனம் தளரவில்லை. அடுத்த போட்டியில் சாதிப்போம் என்றார். சொன்னபடி சாதித்துக் காட்டியுள்ளார். அன்னிய மண்ணில் அஷ்வினின் பந்து வீச்சு அவ்வளவாக எடுபடுவது கிடையாது. ஆனால் இந்த முறை 21 விக்கெட்டுக்களை சாய்த்து தொடர் நாயகனாக மிளிர்கின்றார். அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர்.

      தொடரின் துவக்கத்திலேயே முரளிவிஜய் காயம், அடுத்த போட்டியில் தவானுக்கு காயம், சஹாவுக்கு காயம் என முக்கியவீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். கோஹ்லி பார்மில் இல்லை. ஐந்து பவுலர்கள் பார்முலாவை வேறு கையில் எடுத்திருந்தார் கோஹ்லி. பின்வரிசையில் நிலைத்து ஆட திறமையான மட்டையாளர்கள் இல்லாத போதும் சாதித்து காட்டியுள்ளது இந்திய அணி.


    தோனி எப்போதும் தற்காப்பு பாணி ஆட்டத்தை மேற்கொள்வார். ஆக்ரோஷமான போக்கு இருக்காது. சில சமயம் வியுகங்களை மாற்ற யோசிப்பார். ஆனால் கோஹ்லியின் வியூகம் தோனிக்கு நேர் எதிரானது. எதிரணி மட்டையாளர்கள், பந்துவீச்சாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தோனி விரும்ப மாட்டார். ஆனால் கோஹ்லி ஆக்ரோஷமானவர். எதிரணியினரை சீண்டுவார். அவர்கள் வம்புக்கிழுக்கையில் சண்டைக்குச் செல்வார். அப்படித்தான் இஷாந்த் சர்மாவும் இந்த தொடரில் நடந்து கொண்டார். தம்மிகா பிரசாத், சண்டிமால் ஆகியோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கொஞ்சமல்ல நிறையவே மிகை. எனவேதான் ஓர் போட்டிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளார்.


     கேப்டன் ஆன பிறகு ஓர் முழுமையான தொடருக்கு கோஹ்லி பொறுப்பேற்றது இந்த தொடரே. இதில் வென்று சாதித்துக் காட்டிவிட்டார். இவர் பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் ஒவ்வொரு போட்டியிலும் சக மட்டையாளர்கள் கை கொடுக்க போட்டி இவர் வசம் வந்தது. 

     கண்டிப்பாக இது தோனிக்கு பின்னடைவாகவே தோன்றுகிறது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு இந்தியாவை கொண்டுவந்தது அவர்தான் என்றாலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ஓய்வும் பெற்றார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் படி வியுகம் அமைக்கவில்லை. முன்பு அவரிடம் இருந்த கேப்டன் கூல் என்ற அணுகுமுறையும் மாறி உள்ளது. 

   அதே போல ஓர் அணிக்குள் இரண்டு தலைவர்கள் என்ற இந்தியாவின் புதிய அணுகு முறை வீரர்களிடையே பிளவையும் ஏற்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள் அது உண்மையோ இல்லையோ பிளவை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் அணியில் ஆடும் பலர் ஒருநாள் அணியிலும் ஆடுகின்றனர். கோஹ்லியும் அதில் ஒருவர். அவரே தலைவராக டெஸ்ட் அணியிலும் சாதாரணவீரராக தோனி வழி நடத்தலில் ஆடுவதற்கும் வேறுபாடு இருக்கும். வீரர்களுக்கும் எவரை சப்போர்ட் செய்தால் அணியில் நீடிக்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.
   ஏற்கனவே சூதாட்ட சர்ச்சைகள்  இருக்கும் கிரிக்கெட்டில் இப்போது இரு தலைவர்களில் எவர்  வழி நடப்பது என்ற பிரச்சனை. தோனி வழிநடத்தலை கோஹ்லி ஏற்க மறுக்கலாம். இப்படியெல்லாம் நடப்பது பிளவை ஏற்படுத்தக் கூடியது.

     தோனி நீண்டகாலம் தலைவராக இருந்து விட்டார். வயதும் கூடிவிட்டது. இன்னும் ஓர் இரண்டு ஆண்டுகள் விளையாட வாய்ப்பு இருக்கும் அவ்வளவுதான். எனவே அவர் பெருந்தன்மையாக தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிடலாம். விக்கெட் கீப்பராக மட்டும் தொடரலாம். அல்லது முழு ஓய்வையும் அறிவித்து விடலாம். 


   அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இலங்கையுடனான இந்த தொடரில் கோஹ்லியின் அணுகுமுறை அவருக்கு பெருத்த ஆதரவை தந்துள்ளது. இது தோனிக்கு பெரும் பின்னடைவே! அவரது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.

  இந்த தொடர் வெற்றி ஓர் கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி! இந்த கூட்டு முயற்சி ஒருநாள் தொடரில் தொடர தோனி விட்டுக் கொடுக்க வேண்டிய காலம் வந்தாகிவிட்டது.  

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மிக அழகாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கின்றீர்கள் நண்பரே... அருமை

    ReplyDelete
  2. நல்ல நுணுக்கமான பார்வை! உங்கள் அலசல் சரியே! தோனி இனி கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது நல்லதே! பிளவு வந்துவிட்டால் டீம் காலி...

    ReplyDelete
  3. மைதானத்தில் ஆக்ரோஷம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது!

    ReplyDelete
  4. அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்...
    என் சப்போர்ட் எல்லாம் தல தோணிக்கே....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!