காரணம்!

காரணம்!


சென்னை திருவல்லிக்கேணியில் அந்த மேன்சனில் அந்தக் காலைப்பொழுது அவ்வளவு சுகமாக விடியவில்லை. பக்கத்து அறை வாசலில் விடுதி உரிமையாளர் நின்று கத்திக் கொண்டிருந்தார். 

 “ஏம்ப்பா! சோத்துல உப்பு போட்டுத்தானே சாப்பிடறீங்க! மாசம் ஒண்ணாம் தேதியான கரெக்டா வாடகை வந்து சேர்ந்துடனும்னு சொல்லித்தானே விட்டேன்! இதோ தேதி அஞ்சு ஆச்சு! இன்னும் கொடுக்காம இழுத்தடிச்சுட்டு இருந்தா எப்படி? உங்களுக்கெல்லாம் எதாவது பொறுப்பு இருக்கா? வாய் சொல்லுல ஒரு நேர்மை இருக்கணும்! சொன்ன சொல் தவறாம நடந்துக்கணும்! இப்படி எவன் ஆத்தா செத்தா நமக்கென்னான்னு இருக்க கூடாது!”  இப்படி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஏட்டில் எழுதக் கூடிய வார்த்தைகள். எழுத முடியாத வார்த்தைகள் இன்னும் எவ்வளவோ?

  அந்த விடிந்தும் விடியாத பொழுதில் அவரின் வார்த்தைகள் எரிச்சல் வரவழைத்தன. அந்த விடுதி உரிமையாளர் கறார் ஆனவர். சேர்க்கும் போதே ஒண்றாம் தேதியானால் வாடகை வந்துவிட வேண்டும் என்று சொல்லித்தான் சேர்ப்பார். ஐந்து தேதியைக் கடந்துவிட்டால் இப்படித்தான் சத்தம் போட்டுக் கொண்டிருப்பார். அட்வான்ஸ் எதுவும் வாங்க மாட்டார். ஆறாம் தேதி பணம் வராவிட்டால் பெட்டிப் படுக்கையோடு விரட்டி விடுவார். அவ்வளவு கண்டிப்பான பேர்வழி.

    இத்தனைக்கும் அவருக்கொன்றும் குறைச்சல் இல்லைதான்! இருந்தால் இப்படிப்பட்ட சென்னையின் முக்கியமான பகுதியில் இப்படி ஒரு பில்டிங்கை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்க முடியுமா? ஆனால் கட்டிடம் பழசானது.அவரது அப்பா காலத்தில் கட்டியிருக்க வேண்டும் போல. இவர் ஏதோ அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இரண்டு பிள்ளைகள். இந்த சத்தம் போடுவதை விட்டு விட்டால் அவர் நல்ல பிள்ளைதான். ஆனாலும் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிகாலை நேரத்தில் அவர் போடும் சத்தத்தை நீங்கள் கேட்டால் இவரா இப்படி? என்று மற்ற சமயத்தில் யோசிப்பீர்கள்.

    பத்து தேதிக்கு மேல் அவரைப் பார்க்க வேண்டுமே! ஆளே பதவிசாகிவிடுவார். பார்த்து பார்த்து விசாரிப்பார். ஏதாவது வேணும்னா தயங்காம கேளுங்க தம்பி! என்று குழைவார். பாவம் எங்கிருந்தோ வந்து வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்காமலும் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து நல்ல எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் இளைஞர்கள் இவரிடம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடுவார்கள்.

   நல்ல வேளை! எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டபின் இந்த இடத்தில் வந்து சேர்ந்தேன். முதல் தேதியே தயாராக இவரிடம் வாடகையைக் கொடுத்துவிடுவேன். “ தம்பி! நீங்கதான் பர்பெக்ட்!” என்று குழைவார். அப்படி ஒரு பணப்பேய். கஷ்டப்படுபவர்கள்தானே இவரின் இந்த ஒற்றை அறையில் தங்கி கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். கொஞ்சம் பொறுத்துப் போனால்தான் என்ன? எவனாவது ஒருவன் வாடகை லேட்டாய் கொடுத்தால் இவருக்கு என்ன நேர்ந்து விடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகாமல் கறார் பேர்வழியாக இருக்கிறாரே! கூடிய சிக்கீரம் வேறு இடம் தேட வேண்டியதுதான் இப்படி நினைத்துக் கொள்வேன்.

     நல்ல இடத்தையும் தேடிக்கொண்டு இருந்தேன். இப்படியே ஓர் ஆறு மாதங்கள் கழிந்துவிட்டது. அன்று கையில் இனிப்போடு வாயெல்லாம் பல்லாக வந்து நின்றார் விடுதி உரிமையாளர்.. என்ன சார் விஷேசம்? ஸ்விட்டோட வந்திருக்கீங்க!

   தம்பி! உங்களுக்குத்தான் முதல் ஸ்வீட்! ஏன் தெரியுமா? நீங்கதான் வாடகையை கரெக்டா ஒண்ணாம் தேதி கொடுக்கிறீங்க! உங்களுக்குத்தான் பர்ஸ்ட் ! என்றார்.
    “அடச்சே! என்ன மனுஷன் இவர்? ஸ்வீட்ஸ் கொடுக்கிறதல கூட பாரபட்சமா?” மனதுக்குள் சாடியபடி, வெளியே புன்னகைத்தவாறே, எதுக்கு சார் திடீர்னு ஸ்விட்ஸ் எல்லாம்? என்றேன்.

   “ தம்பி! என் பையன் இஞ்சினியரீங்க் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்! தகுதிக்கு மீறி பெரிய காலேஜ்ல சேர்த்துட்டேன்! மாசா மாசம் உங்க வாடகைப்பணம் தான்  ஐ, மீன் இந்த விடுதியில வர வாடகைப் பணம் தான் அவனோட பீஸுக்கு உதவுச்சு! பத்தாம் தேதிக்குள்ள கட்டிடனும்! இல்லேன்னா வெளியே அனுப்பிடுவாங்க! என்னோட சம்பளம் குடும்பத்தை காப்பாத்துச்சு! உங்க எல்லோரோட வாடகைப் பணமும் அவனோட படிப்பை காப்பாத்துச்சு! இதனாலதான் அவ்ளோ கண்டீசனா நடந்துக்கறதா போச்சு! இந்தாங்க முதல் ஸ்வீட் எடுத்துக்கங்க! என்றார்.

   அட நாம் இவருக்கென்ன குறை என்று தவறாக எண்ணிவிட்டோமே! நம்முடைய சிறு வாடகைப்பணம் வாங்கி என்ன செய்துவிடப்போகிறார் என்று நினைத்தோமே! இந்தப்பணம் தான் அவர் மகனின் கல்விக்கு உதவியிருக்கிறது. காரணம் இல்லாமல் அவர் சத்தம் போடவில்லை! இது தெரியாமல் அவர் மீது வருத்தப்பட்டோமே யாரையும் சும்மா குறை சொல்லக் கூடாது. அவர்களுக்கும் ஓர் கோணம் இருக்கும் என்று தோன்ற வாழ்க்கைப் பாடம் கற்றவனாய்  இனிப்பை எடுத்துக் கொண்டு கங்கிராட்ஸ் சார்! என்றேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. வாடகையும் கொடுத்த மாதிரி ஆச்சு ,கல்விக்கும் உதவின மாதிரி ஆச்சு :)

    ReplyDelete
  2. காரணமில்லாது எதுவும் நடப்பதில்லை.....

    நல்ல் கதை....

    ReplyDelete
  3. கண்டிஷனுக்கான காரணம் இதுதானா? நல்ல கண்டிஷன்தான்.

    ReplyDelete
  4. நல்ல காரணக்கதை நண்பரே...

    ReplyDelete
  5. மனதில் ஓங்கி நிற்கிறது அந்த "ஓர் கோணம்"
    காரணமில்லாமல் காரியம் நிகழ்வது இல்லை!
    என்பது மெய்யே!
    அருமை நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. அநாவசியமாய் அதட்டி உருட்டி மாமூல் வாங்கவில்லையே... நியாயமாக தனக்கு வரவேண்டியதைத்தானே அதுவும் அது சரியான தருணத்தில் வாராத பட்சத்தில் கண்டிப்பு காட்டிக் கேட்கிறார்... அதற்கு காரணமே இல்லையென்றாலும் கூட தவறாக நினைக்கக்கூடாதல்லவா? அந்த ஒற்றை அறையும் கிடைக்கவில்லையென்றால் எத்தனைப் பேர் தெருவில் திண்டாடவேண்டியிருக்கும்? பல சிந்தனைகளைத் தூண்டிவிடும் நல்லதொரு கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  7. ஒவ்வொரு செயலுக்கும் பின்னே
    ஏதோ ஒரு காரணம் ஒளிந்து கொண்டுதான்
    இருக்கும் நண்பரே
    அருமை
    நன்றி

    ReplyDelete
  8. உண்மைதான் ஒவ்வொரு கோபத்தின் பின்னும் ஒரு நியாயமான காரணம் இருக்கத்தான் செய்கிறது... நல்ல கதை... கொஞ்சம் நீளமாகிப் போனது போல் தோன்றுகிறது....(may be crisp, suggestion only)

    ReplyDelete
  9. வணக்கம் தளீர்,
    கதையா நிஜமா தெரியாது,,,,,,,,,,, என்னைப் பொறுத்தவரை இது நிஜமே,
    ஆம் கண்டிப்பு என்பது அவரவர் மனம் சார்ந்தது, நாம் ஏற்றுக்கொண்டு தானே போகிறோம், நல்ல பகிர்வு, நன்றி.

    ReplyDelete
  10. //அவர்களுக்கும் ஓர் கோணம் இருக்கும் // உண்மை
    ஆனால் இதைத்தான் நாம் மறந்து விடுகிறோம்

    ReplyDelete
  11. ஒவ்வொருவரின் செயலுக்கும் ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும்...நல்ல கதை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!