அழைக்காதே!


“என்னம்மா  சீமந்த ஏற்பாடெல்லாம் ஜரூரா நடந்திட்டிருக்கு போல!” தன் பெண்ணின் சீமந்தத்திற்கு ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்த மீனாட்சியிடம் கேட்டாள் மேகலை!. மேகலாவும் மீனாட்சியின் மகள் லலிதாவும் ஒன்றாய் படித்தவர்கள். ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என்று அவர்கள் படிக்கும் காலத்தில் நெருங்கி பழகி ஒன்றாய் சுற்றியவர்கள்.

      “ ஆமாண்டி மேகலா! இன்னும் பத்தே நாள் தான் இருக்கு! ஒரு வேலையும் உருப்படியா ஓடலை! அவர் பாட்டுக்கு ஆபிஸுக்கு போயிடறார்! நான் ஒண்டியாளா கிடந்து அவஸ்தை பட வேண்டியிருக்கு!”

   என்னைக் கூப்பிடக் கூடாதாம்மா! நீங்க எதுக்கு தயங்கறீங்க! வீட்டுல வெட்டியாத்தானே இருக்கேன்! கூட மாட வந்து உதவ மாட்டேனா என்ன?
   “ கண்டிப்பா மேகலா! ஆனா உனக்கும் புருஷன் மாமியாருன்னு வீடு வாசல் இருக்கோ இல்லியா?”

    “ அது பாட்டுக்கு அது! தோழியோட சீமந்தத்துக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யாட்டி எப்படி? எதுக்கு வேணும்னாலும் கூப்பிடுங்க! ஒரு போன் அடியுங்க! அடுத்த பத்தாவது நிமிசத்துல இங்க இருப்பேன்!”

      “இவ்வளோ நல்ல மனசு உனக்கு! பாவம் உன் வயித்துலேயும் ஒரு புள்ளை தங்கிடுச்சுன்னா நன்னா இருக்கும்! அந்த கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ தெரியலையே!”

     “ அதை விடுங்கம்மா! இப்ப எதுக்கு அதெல்லாம்! எல்லாம் நேரம் வரப்ப அமையும்! அதுவரைக்கும் மனசை தேத்திண்டு போக வேண்டியதுதான்!”

      “ எல்லாம் கால காலத்திலே நடந்தாதாண்டி அம்மா நல்லது! உனக்கும் கல்யாணம் ஆகி  நாலு வருஷம் ஓடிருச்சு இல்லே! என் பொண்ணுக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் ஆயிருச்சு! இவதான் நான் வேலைக்கு போவணும் அது இதுன்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு போனவருஷம்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! தோ இப்ப புள்ளை உண்டாயிருக்கா!”

        ” லலிதா அதிஷ்டக்காரிம்மா! அவ மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்!” என் கிட்ட எந்த உதவின்னாலும் தயங்காம கூப்பிடுங்க! வரேன்!” மேகலா கிளம்பிவிட்டாள்.

  அடுத்த நாள் தன்னுடைய பெண் வீட்டிற்கு சென்ற மீனாட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வலிய வந்து உதவி செய்கிறேன் என்ற மேகலாவையே சீமந்தத்திற்கு கூப்பிட வேண்டாம் என்கிறாள் அவள்.

  “ என்னடி இது! உன்னோட சீமந்தத்திற்கு உன் நெருங்கிய தோழியையே கூப்பிட வேண்டாம்னு சொல்றே? இது நல்லாவா இருக்கும்? அவ என்னடான்னா வலிய வந்து எது வேணும்னாலும் கேளுங்கோ! ஹெல்ப் பண்றேன்னு சொல்றா!”

    “ அம்மா நான் சொல்றதைக் கேளு! அவளுக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு! ஒரு புள்ளைக் குட்டி இருக்கா?”
    இவள் இப்படி பேசிக்கொண்டிருக்கையில் தற்செயலாய் அங்கே வந்த மேகலா இந்த சொல் கேட்டு அப்படியே நின்றாள்.

      “ ஏண்டி! நீயே இப்படி பாரபட்சம் பாக்கலாமா? அவளுக்கு குழந்தை இல்லேன்னா என்ன? அதுக்காகவா எல்லார் மாதிரி நீயும் நடந்துப்பே! கூப்பிட வேண்டாம்னு சொல்றே? அவளை வர வேண்டாம்னு சொன்னா அவ மனசு என்ன பாடு படும்? நீயும் அவளும் பழகின தோஷத்துக்கு இதுவா மரியாதை?”

   “ அம்மா! போதும் நிறுத்தறியா? அவ சீமந்தத்துக்கு வரதுலேயோ ஓடியாடி வேலை செய்யறதிலேயோ எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை! ஆனா! வர்றவங்க ஒவ்வொருத்தரும் அவளை என்னென்ன கேள்வி கேப்பாங்க தெரியுமா? முதல்லேயே அவ நொந்து போயிருக்கா! அவ மனசு லேசானதும்மா! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசறப்ப அவ தாங்க மாட்டா? யாராவது அவளை பேசினா எனக்கு மனசு கேக்காதும்மா!  அதனாலதான் வரவேண்டாம்னு சொல்றேன்”

      “பங்ஷணுக்கு வந்து அவ மனசு நோகறதை விட வராமலே இருக்கலாம் இல்லையா? அவ வந்தாலும் வராவிட்டாலும் முதல் வாழ்த்து அவளோடதான் இருக்கும்னு எனக்குத் தெரியும்மா! இந்த வீட்டு பெரியவங்க ஆளுக்கு ஒண்ணு சொல்லி அவளை நோகடிப்பாங்க! அதை விட அவ அங்கே இருந்தே வாழ்த்தட்டும்! அதுவே எனக்கு போதும்மா!”

    தோழியே தன்னை தப்பாக நினைக்கிறாளே என்று வருத்தப்பட்ட மேகலா, அவள் சொன்னது முழுமையும் கேட்டதும் கண் கலங்கினாள். ஓடோடி வந்து லலிதாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் இந்த திடீர் அன்பு புரியாது திகைத்தாள் லலிதா.

டிஸ்கி} காலை முதல் நிறைய யோசித்தும் கதை எதுவும் சரியாக தோன்றவில்லை! திடீரென்று தோன்றிய இந்த கருவை உடனடியாக அப்படியே சுடச்சுட பதிவிட்டுள்ளேன்! குறைகள் இருப்பின் பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

  1. நட்பின் பெருந்தக்க யாவுள
    அருமை நண்பரே

    ReplyDelete
  2. நல்ல பாடம் அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  4. ஓடி வந்து தோழி வாஞ்சையுடன் முத்தமிட்ட செயல் அதீத அன்பின் வெளிப்பாடாக மிக அருமையாக உள்ளது. சற்றொப்ப இதையொத்த ஒரு காட்சியை அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் பார்த்துள்ளேன். கவிதா (நடிகை சுஜாதா) தன் சகோதரிக்கு திருமணம் உறுதிபடுத்தப்படும் சமயத்தில் முத்தம் கொடுப்பார். ஏக்கம், அன்பு உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் அதில் காணமுடியும்.

    ReplyDelete
  5. நிறைய வீடுகளில் நடக்கும் நிதர்சமான விஷயத்தை அழகாய் எழுதியிருக்கிறீர்கள். தாய்மையடையாத பெண் இது மாதிரி விசேடங்களுக்கு வந்தால் நீங்கள் சொல்கிற‌ மாதிரி தான் சொல்லம்புகள் துளைக்கும். அதோடு விடாமல் அதே மனையில் அமர வைத்து வளையல் அணிவித்து மடியில் வாழைப்பழம் வைத்து கட்டுவார்கள். தாய்மையடையாத அந்தப் பெண்ணுக்கு கண்கள் கலங்கிக்கொண்டேயிருக்கும். இந்த மாதிரி உண்மையான நட்பு ஒன்றே அவளைக் கவசமாய்க் காக்கும்!

    ReplyDelete
  6. நல்ல அன்பின் கதை வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி!? தாங்கள் என்தளத்திற்கு வந்தமைக்கும் கருத்துமையிட்டதற்கும் நன்றி !?!

    அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!?!

    ReplyDelete
  7. நல்ல உண்மையான நட்பினைச் சொல்லும் கதை...அழகாகத்தான் இருக்கின்றது கதை...சுரேஷ்!

    ReplyDelete
  8. நல்ல கதையம்சம் கொண்ட கருவைச் சிறுகதையாக்கி இருக்கிறீர்கள். இதுவும் நல்லாத் தான் இருக்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!