கட்டாய ஹெல்மெட்டும் பாரதியின் தமிழ்பற்றும்! கதம்ப சோறு பகுதி 63

கதம்ப சோறு  பகுதி 63.

கட்டாய ஹெல்மெட்!

         உயர்நீதிமன்றத்தின் புண்ணியத்தினால் இன்றுமுதல் இருசக்கரவாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது உறுதியாக்கப் பட்டுள்ளது. ஓட்டிச்செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்துசெல்வோரும் அணிந்துசெல்லவேண்டுமாம். ஒருவகையில் இது நன்மை என்றாலும் சிலருக்கு வசதியாகிவிட்டது. ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இதுதான் சாக்கென்று ஹெல்மெட் வியாபாரிகள் தரமில்லாதா ஹெல்மெட்களை அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர். இப்படி எல்லாவற்றையும் கட்டாயம் ஆக்குவதால் என்ன பலனை காணப்போகிறது அரசு என்பது போகப்போகத்தெரியும். ஆனால் இன்று நான் ஹெல்மெட்டோடு வாகனத்தில் சென்ற போது நிறைய பேர் தைரியமாக ஹெல்மெட் இல்லாமல் சென்றார்கள். போலீஸ் ஒன்றும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சிலர் ஹெல்மெட்டை  பெட்ரோல் டேங்க் மீது வைத்துச் சென்றனர். ஹெல்மெட் டேங்குக்கு அல்ல! தலைக்குத்தான் என்று அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ? இதற்கெல்லாம் தலையிடும் உயர்நீதிமன்றம், டாஸ்மாக், மற்றும் பாலியல் வன்கொடுமை இதற்கெல்லாம் சட்டம் போட்டு தலையிட்டு திருத்தலாமே!

இடைத்தேர்தல் வாஷ் அவுட்!

      இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதனால்தான் சாமர்த்தியமாக பெரியகட்சிகள் போட்டியிடவில்லை. சுயேச்சைகளும் கம்யூனிஸ்ட்களும் அம்மாவுக்கு எதிராக களத்தில் குதிக்க விளம்பர பிரியர் டிராபிக் ராமசாமி திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடினார். உண்மையில் அவர் நாடியிருக்கவேண்டியது மக்களின் ஆதரவை. திமுக வை நாடியதால் அவர் மீதிருந்த பிம்பமும் அடிபட்டு போக வெறும் ஐந்தாயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கினார். ஒன்றரைலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார் அம்மா. சென்ற தேர்தலில் இங்கு திமுக ஐம்பதாயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கியது. அந்த ஓட்டுக்கள் எல்லாம் இப்போது உதிரிகட்சிகளுக்கு போகவில்லை! அம்மாவுக்கே விழுந்திருக்கிறது என்று சொல்கிறது ஓர் பத்திரிக்கையின் அலசல். எப்படியோ ஆறாவதுமுறையாக எம்.எல்.ஏ ஆகிவிட்டார் ஜெ. அவரின் இந்த உயிர்த்தெழும் வித்தை மற்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக வயிற்றெரிச்சல்தான். இனியாவது அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு உயிர்த்தெழுந்தால் நன்றாக இருக்கும்.

ஓடத்துவங்கியது மெட்ரோ ரயில்!

     சென்னைவாசிகளின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் நேற்றுமுதல் ஓடத்துவங்கிவிட்டது. முதல் ஓட்டுனர்கள் பெண்கள் என்பது மேலும் பெருமைக்குரியவிஷயம். மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் வெளிநாடுகளுக்கு இணையாக இந்த சேவை அமைந்திருந்தாலும் கட்டணங்கள் கொஞ்சம் கூடுதலாக தெரிகின்றன. இன்று சிஎம்.பிடி நிறுத்தத்தில் ரயில் நின்றும் கதவு திறக்கவில்லை என்று ஓர் புகார் எழுந்துள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தை நான் தான் செய்தேன் என்று திமுகவும் அதிமுகவும் அடித்துக் கொள்வது செம காமெடி! யார் போட்டத்திட்டம் என்று மக்களுக்குத் தெரியாதா? யார் போட்டால் என்ன? மக்களுக்கு உபயோகமாக அது அமைந்தால் மக்கள் மறக்கமாட்டார்கள். உபத்திரவமாக அமைந்தாலும் மறக்க மாட்டார்கள் இதை கட்சிகள் உணர்ந்தால் போதும்.

பிசிசிஐ போடும் இரட்டைவேடம்!

     கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்! அதிலும் ஐ.பி.எல்லில் சொல்லவே வேண்டாம். அன்று ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடைவிதித்த பிசிசிஐ இன்று ஜடேஜா, ரெய்னா என்று வரும்போது ஐ.சி.சியை கை காட்டுகின்றது. லலித் மோடி அளித்த புகார் கடிதம் ஐ.சிசிக்கு அனுப்பிவிட்டதாக சொல்கின்றது. மேலும் ரெய்னா, ஜடேஜா, பிராவோ குற்றமற்றவர்கள் என்று சொல்கின்றது. எதையுமே விசாரிக்காமல் எப்படி குற்றம் இல்லை என்று சொல்லுவது. இது பிசிசிஐக்கு மட்டுமே தெரிந்த விஷயம். எப்படியோ ஒருகண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற அளவில் பிசிசிஐ செயல்படுவது வெட்ட வெளிச்சம் ஆகிவருகிறது. இத்தனை நடந்தும் இரவு முழுதும் கண்விழித்து இந்த போட்டிகளை ரசிக்கும் ரசிகர்களை முட்டாள்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதில் தவறேதும் இருக்கிறதா சொல்லுங்கள்!

கிச்சன் கார்னர்!

காசி அல்வா!

தேவையானவை: முற்றிய வெள்ளைப் பூசணி துறுவியது 2 கப்,  சர்க்கரை ஒன்றரைகப், வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய்த் தூள், சிறிது ஆரஞ்சு புட் கலர் ஒருசிட்டிகை, நெய் 100 கிராம், வெள்ளரிவிதை ஒரு டீஸ்பூன்.

செய்யும் விதம்: பூசணித்துருவலை பிழிந்து நீரை நீக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி பூசணித்துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தீ மிதமாக இருந்தால் நலம். பின்னர் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து காய் வேகும் போது நெய் சேர்த்துக் கிளறவும். சற்றே தளர இருக்கும் போது ஆரஞ்ச் புட் கலரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். அல்வா பதமாகி வரும்போது  இறக்கவும். ஏலக்காய்த் தூள் வறுத்த முந்திரி திராட்சை, வெள்ளரிவிதைகளை தூவி அலங்கரிக்கவும். சாப்பிடுவதற்கு எதற்கு அலங்காரம் என்றெல்லாம் கேட்க கூடாது. சாப்பிட நல்லா இல்லேன்னாலும் பார்க்கவவாது நல்லா இருக்கணும் இல்லியா?

லஷ்மி சீனிவாசன் அவள் விகடனில் எழுதிய குறிப்பை என் பாணியில் தந்திருக்கிறேன்! நன்றி!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தண்ணீரை அடுப்பில் கொதிக்கவைத்துவிட்டு சிறிது படிகாரத்தை போட்டுக் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் வாய் கொப்பளித்துவர வாய் துர்நாற்றம் நீங்கும். தினமும் மூன்று முறை இப்படி செய்யவேண்டும்.

சிறு குழந்தைகளின் ஷூக்களுக்கு தினமும் பாலீஷ் போட முடியவில்லையா? ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி துடையுங்கள் பளிச்சிடும்.

அழகு கிரிம், லோஷன் பாட்டில்களில் பாதி தீர்ந்துவிட்டால் மீதி வெளியே வராமல் அடம்பிடிக்கும். பாட்டிலை தலைகீழாக சாய்த்து வைத்துவிட்டு மறுநாள் உபயோகிக்க சுலபமாக வரும்.

பழைய புளியில் கரைத்து குழம்பு வைத்தால் நிறம் கருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து ஊற்றிச்செய்தால் புதுப்புளியில் குழம்பு வைத்த மாதிரி இருக்கும்.

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து தீக்காயத்தின் மீது பரப்பி சுத்தமான துணியினால் கட்டினால் எரிச்சல் குறைந்து குணமாகும்.

முகப்பருத்தொல்லையா? மஞ்சள்தூள், சந்தனப்பவுடர் ஓரிரு கல் உப்புடன் நீர் சேர்த்து சூடுபடுத்தவும். கை பொறுக்கும் சூட்டில் அதைப் பருவின் மீது ஓரிருநாள் தடவினால் பருக்கள் தானாக மறைந்துவிடும். தழும்போ கரும்புள்ளிகளோ நிலைக்காது.

பாகிஸ்தானில் இருந்து பரவும் கள்ள நோட்டுக்கள்!

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க பாகிஸ்தானில் இருந்து மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் கள்ளநோட்டுக்கள் பரவுகின்றனவாம். இங்குள்ள ஏஜெண்ட்களிடம் மொத்தமாக பணத்தை கொடுத்து அங்குள்ள கூலித்தொழிலாளர்களை வலையில் சிக்கவைத்து அவர்கள் மூலமாக நாடு முழுவதும் இந்த நோட்டுக்களை பரவ விடுகின்றனராம். ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை நல்ல நோட்டாக மாற்றுகையில் அவர்களுக்கு சில நூறுகள் கமிஷனாகக் கிடைத்துவிடுமாம். இந்த நோட்டுகள் வித்தியாசம் தெரியாத வகையில் மிகவும் துல்லியமாக அச்சடிக்கப் படுகின்றனவாம். இனி வட இந்திய கூலித்தொழிலாளர்கள் கொடுக்கும் நோட்டுக்களை உஷாராக வாங்குங்கள்! அவர்களிடம் கள்ள நோட்டுக்களும்  இருக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் உதவலாமே!

      குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீண்ட இந்த மாணவர் எம்.பி,பி எஸ் சீட் கிடைத்தும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாது கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் உதவலாமே!  தவிக்கும் மாணவர்


நெஞ்சுருக வைக்கும் நிஜக்கதை!
நாய் என்று நாமெல்லாம் அலட்சியம் செய்வோம்! இந்த நாய் எஜமானிடம் காட்டியவிசுவாசம் எஜமானரின் பாசம் இவையிரண்டை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!  மாவிளக்கு போட்ட நாய்க்குட்டி!


படிச்சதில் பிடிச்சது!

பாரதியும்காந்தியும்!
  ஒரு சமயம் சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணிநேரம் அண்ணல் காந்தியடிகள் பேசினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி காந்தியை கண்டித்து  ஒரு கடிதம் எழுதினார். “மிஸ்டர் காந்தி! நேற்று சென்னை கூட்டத்தில் நன்றாக பேசினீர்கள். ஆனால் உங்கள் தாய்மொழியில் பேசியிருக்கலாம். அதைவிடுத்து ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தாங்கள் ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக உள்ளது” இப்படி எழுதினார் பாரதி.
   அதற்கு காந்தியடிகள் பதில் எழுதினார். வணக்கம்! உங்கள் கடிதத்தை பார்த்து சிந்தித்து பார்த்தேன்! ஆங்கிலேயரை எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது தவறுதான் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயார்! ஆனால் நீங்கள் என்னை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியது வியப்பாக உள்ளதுன்னு  எழுதினார்.
மீண்டும் பாரதியார் காந்திக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் பாரதியார் சொல்லி இருக்கார்.” நான் யாரையும் கண்டித்து கேட்கும் பொழுது எழுதுகின்ற கடினமான வார்த்தைகளை தமிழில் எழுத விரும்ப வில்லை! அதோடு என் கருத்து அப்படியே உங்களுக்கு பதிவாகவேண்டும். மொழிபெயர்ப்பாளரால் இடைச்செருகல் ஏதும் வந்துவிடக்கூடாது. எனவேதான் உங்களுக்குப் புரியும் மொழியில் எழுதினேன். அப்படின்னு எழுதி இருக்கிறார். கடினமான வார்த்தைகளைக் கூட பிரயோகிக்க விரும்பாத பாரதியின் தமிழ் பற்று போற்றத்தக்கது அல்லவா?

(பாக்யா கேள்வி பதில்களில் படிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பல்சுவை இதழொன்றைப் படித்த திருப்தி.

    அருமை ஐயா.

    நன்றி

    ReplyDelete
  2. ‘ஊமைக்கனவுகள்’ ஆசிரியர் ஜோசப் விஜூ சொன்னதை அப்படியே வழி மொழிகின்றேன். இருந்தாலும் ஹெல்மெட் விஷயம் பற்றி தனியாகவே ஒரு பதிவு எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    பல்சுவைக் கதம்பம்... அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. டிப்ஸ்களுக்கு நன்றி...

    படிச்சதில் பிடிச்சது : எடுத்து சொன்ன விதம் அருமை...

    ReplyDelete
  5. கதம்பச்சோற்றினை ரசித்தேன், ருசித்தேன். தலைக்கவசம் பற்றி பலர் விவாதித்துள்ளார்கள். நாயின் வேண்டுதலையும், பாரதி காந்தியின் கடிதப்போக்குவரத்தும் அருமை.

    ReplyDelete
  6. மெட்ரோவுக்கு எல்லா பயலுங்களும் அடிச்சிகிரானுங்க, ஏன்னு தான் புரியல, இத்தனைக்கும் விலை டிக்கட் அதிகம், பொதுமக்கள் போக மாட்டார்கள், பணக்கார்கள், ஐ.டி காரர்கள் போனால் தான் உண்டு.

    மோடி கள்ளத் தனமா வேற்று நாட்டில் இருக்கிறான், அவன் பேச்சை சீரியசாக எடுக்கும் முன்னர் அவனை இந்தியாவுக்கு கொண்டு வந்து உள்ளே தள்ளி விசாரிக்க வேண்டும்.

    ஜெயலலிதா எம்பி தேர்தல், இந்த தேர்தல் இவற்றில் பெற்ற வெற்றி காசு கொடுத்து வாங்கியது, ஜனநாயகத்திற்கு புறம்பானது.

    tharmaana pathivukku nandri.


    ReplyDelete
  7. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!