தோனி விலக வேண்டுமா? கதம்ப சோறு! பகுதி 62

கதம்ப சோறு! பகுதி 62

மேகியைத் தொடர்ந்து காம்ப்ளான்!

         மேகிநூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருள் இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டது விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது. இத்தனை நாள் சும்மா இருந்த சுகாதாரத்துறை திடீரென விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றது. இதில் என்னென்ன உள்குத்துக்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதைத்தொடர்ந்து இப்போது உ.பி யில் ஒருவர் வாங்கிய காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் நெளிந்தது என்று பகீர் பட வைக்கின்றார். அதே போல குளுக்கான் டி யிலும் புழுக்கள் இருந்தது அதையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் ஒருவர். பையில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவுமே பாதுகாப்பானது அல்ல என்ற ஓர் விழிப்புணர்வு இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது அந்த வகையில் இந்த சம்பவங்கள் நல்லதுதான். அதே சமயம் இந்தப் பொருள் உடல்நலனுக்கு தீங்கானது என்று பாக்கெட்டில் பொறித்துவிட்டு விஷத்தைக் கூட விற்றுக் கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் வினோதமானது. சிகரெட், பீடி, குட்கா, பான், சாராயம் போன்றவை இந்தியச் சந்தையில் பொருளாதார அளவில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. இவற்றை முழுவதுமாக தடை செய்ய ஓர் அரசும் முன் வரவில்லை என்பது வெட்கமான விஷயம்.

உங்க ரூபாய் நோட்டுக்களை மாற்றிவிட்டீர்களா?

      2005க்கு முன் வெளியான ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று அழித்து வருகின்றது. பாதுகாப்பு குறைபாடு மற்றும் கருப்பு பணப் புழக்கத்தை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் வரை இந்த நோட்டுக்களை மாற்ற வழங்கப்பட்ட அவகாசம் நீடிக்கப்பட்டது. அந்த அவகாசம் இந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிகின்றது. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.அல்லது நமது கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். ஜூன் மாதம் 30ம் தேதிக்குப்பின் இவ்வகை நோட்டுக்கள் இருந்தால் அவை செல்லாக்காசாகிவிடும். ரூபாய் நோட்டின் பின்புறம் மையத்தில் புதிய நோட்டாக இருப்பின் அந்த ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். இந்த மாதிரி நோட்டுக்களே இனி செல்லுபடியாகும்.

மீண்டும் மவுசுக்கு வரும் வணிகவியல் படிப்புக்கள்!

     ஒருகாலத்தில் கல்லூரிகளில் ஓஹோவென்றிருந்த பி.காம் எனப்படும் வணிகவியல் படிப்புக்கள் மவுசிழந்து எடுப்பார் இல்லாமல் போயின. இஞ்சினியரிங் படிப்புக்களில் மாணவர்கள் கவனத்தை செலுத்தினர். இப்போது நிறைய இஞ்சினியர்கள் உருவாகி வேலைவாய்ப்பற்ற சூழ்நிலையில் கல்லூரிகளில் பிகாம் படிப்புக்கு கிராக்கி அதிகரித்து வருகின்றது. நூறு சீட் இருந்தால் மூவாயிரம் வரை விண்ணப்பங்கள் இந்த படிப்பிற்கு குவிகின்றது. இந்த துறையில் நிறைய வேலைவாய்ப்பு இருப்பதும் மேற்படிப்புக்கள் படிக்கையில் பொறியியல் துறையைவிட அதிக சம்பாத்தியம் பெறமுடியும் என்ற சூழ்நிலையில் அனைவரும் இந்த துறையை நாடுகின்றனர். வணிகவியலிலும் இப்போது பாடப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு மூன்று வகையில் பிகாம் பொது, பி.காம் கார்பரேட் செக்ரெட்டரிஷிப், பி.காம் கணிணி அறிவியல் என படிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தோனி விலக வேண்டுமா?

    வங்காள தேசத்திற்கு எதிராக தொடரை இழந்ததும் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அணியிலும் பிளவு இருப்பதாக சொல்கின்றனர். ஆஸ்திரேலியா போன்று நமது அணிக்கு இரட்டை கேப்டன்கள் என்ற பாணி சரிபட்டு வராது. ஓர் உறையில் இரண்டு வாட்கள் என்பதெல்லாம் இந்தியாவுக்கு பொருந்தாது. இந்த தொடரை பொறுத்தவரை தோனியின் தலைமை மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. விரைவாக ரன்களை சேர்க்கவில்லையே தவிர பொறுப்பில்லாமல் அவர் ஆடவில்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக ஆடி அணியை கரை சேர்க்கவில்லை. துவக்கத்திலும் ரோகித் சோபிக்கவில்லை! பந்துவீச்சிலும் அஸ்வினைத் தவிர யாரும் சிறப்பாக வீசவில்லை. இப்படி ஓர் அணியைவைத்துக் கொண்டு கத்துக்குட்டி அணியைக் கூட வெல்ல முடியாதுதான். இப்போது அனைவருக்கும் கோஹ்லி மீது ஓர் நம்பிக்கை ஏற்பட்டு அவரை தலைவராக்க முயல்கின்றனர். என்னைக் கேட்டால் கோஹ்லிக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுத்தது கூட சரியில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் ஒருவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியை கொடுத்து நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது இந்திய அணி நிர்வாகம். தோனி தலைமையில்தான் நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. கேப்டனாகவும் அவர் ஜொலித்துள்ளார். பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராகவும் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். இந்த ஒரு தோல்வி அவரது சகாக்கள் சரியாக விளையாடாமையால் நிர்வாகத்தினரின் ஒத்துழையாமை கொள்கையால் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் ரவீந்திர ஜடேஜா போன்றோருக்கு அவர் தரும் அதிக வாய்ப்புகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.ஆனாலும் இவர் ஒரு வீரரின் மேல் வைக்கும் நம்பிக்கை வியக்கவைக்கிறது தொடர்ந்து பலவாய்ப்புகள் வழங்கி திறமையை மெருகெற்றுவார். இந்திய அணிக்காக பல வெற்றிகளையும் கோப்பைகளையும் தந்த இவரை வெறுக்காமல் இன்னும் ஓர் வாய்ப்பை அவருக்குத் தரலாம் என்பது என் கருத்து.

 டீவி கார்னர்:

  டீவி பார்ப்பது வெகுவாக குறைந்து போய்விட்ட சூழலில் மே மாத இறுதிவாரத்தில் தங்கை வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஜி தொலைக்காட்சியில் ஜோதா அக்பர் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். நானும் ஓர் ஆர்வத்தில் பார்க்க அப்படியே மூழ்கிப் போனேன். அக்பராக நடிப்பவர் மிகச்சிறப்பாக நடிக்கின்றார். தூயதமிழில் வசனங்கள் காட்சியமைப்புகள் வெகு ஜோராக இருக்கின்றன.  அதே போல பாலிமரில் ஒளிபரப்பாகும் இருமலர்கள்.  போன்ற மொழிமாற்றத்தொடர்கள் ரசிக்கவைக்கின்றன. ஜெயா டீவியில் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஜெய் வீர ஹனுமான் மற்றும் அதைத்தொடர்ந்து ஒளிபரப்பாகும் ராமாயணம் போன்றவையும் சிறப்பாக இருக்கின்றன. இதே போன்ற தொடர்களை நம் டீவிக்கள் வழங்காமல் இன்னும் பழிவாங்குதல் போன்ற அரதபழசான கதைகளையே அரைத்துக் கொண்டிருப்பது வேதனை.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பூத்த முருங்கை பூக்கள் உதிர்ந்து காய்கள் காய்க்க வில்லையா? பெருங்காயம் சிறிதளவு எடுத்து வேரின் அடிப்பாகத்தில் தோண்டி புதைக்கவும். நீரூற்றிவிடவும். கூடியவிரைவில் காய்க்க ஆரம்பிக்கும்.

பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்து பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து வெயிலில் காய வைத்தால் பழைய நிலைக்கு வந்துவிடும்.

மேசைகளில் உள்ள இழுப்பறைகளை சுலபமாக திறந்து மூட ஓரங்களில் சிறிது சோப்பு அல்லது மெழுகைத் தேய்த்தால் சுலபமாக திறந்து மூடலாம்.

கண்ணாடிகளை ஒரு துண்டு உருளைக்கிழங்கைக் கொண்டு நன்கு தேய்த்து துடைத்தால் கண்ணாடி பளபளக்கும்.

கைகளில் பெயிண்ட் கரையா? சமையல் எண்ணையால் நன்கு தேய்த்தால் கறை மறைந்து போகும்.

ஊசியில் நூல் கோர்ப்பதற்கு முன் நூலின் முனையை நகபாலிஷில் நனைத்து பின் கோர்த்தால் ஊசியில் எளிதாக நூல் நுழையும்.

கிச்சன் கார்னர்!

வெஜ் பணியாரம்

 தேவையானவை:  இட்லிமாவு 2கப், துருவிய கேரட் கால் கப், நறுக்கிய வெங்காயம் 2 டேபிள் ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
கடுகு உளுந்து, கடலைப்பருப்பு- தாளிக்க, கறிவேப்பிலை கொத்துமல்லி சிறிதளவு. எண்ணெய்- உப்பு- தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய கேரட வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கொட்டி கலக்கவும். 
பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். நன்றாக வேகவிட்டு எடுத்தால் சுவையான வெஜ் பணியாரம் ரெடி
  எழுதியவர்: ஆதிரை வேணுகோபால். (தி. இந்துவில் படித்தது)

இவர்களை அறிந்து கொள்வோம்!

அமெரிக்காவில் விருது வாங்கிய இந்திய மாணவர்களை பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்!  அமெரிக்க விருது வென்ற இந்திய மாணவர்கள்



பதிவர் அறிமுகம்:
  மரபுக் கனவுகள்
பதிவரின் பெயர் : ந.உ. துரை. 

எ,.பி. ஏ படித்துள்ள இவர் மரபுக் கவிதைகளை எளிய தமிழில் தருகின்றார். குறள் வடிவில் இவர் எழுதும் கவிதைகள் ரசிக்க வைக்கின்றது 2009 முதல் எழுதி வரும் சீனியர் வலைப்பதிவர் என்றாலும் நிறைய பேருக்கு இவரைத் தெரியவில்லை. மரபுக் கவிதைகள் விரும்புவோர் இந்த தளம் செல்லலாம் இதோ மரபுக் கனவுகள்!


படிச்சதில் பிடிச்சது!
கவிஞர் கண்ணதாசன்


கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவு
போல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !

கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !

சிவாஜி நடித்த " படித்தால் மட்டும் போதுமா ? " என்ற படத்தில் ஒரு பாடல் :

" என்ன " சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.

' அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் " சிச்சுவேஷன் " " ---- எம்.எஸ். விஸ்வநாதன்.

கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !

"அண்ணன் காட்டிய வழியம்மா - இது

அன்பால் விளைந்த பழி அம்மா !

கண்ணை இமையே பிரித்ததம்மா - என்

கையே என்னை அடித்தம்மா ! "

என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா,

" அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்

அவனை மறக்கவில்லை - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "

என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !

இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !


(ஈகரை தமிழ் களஞ்சியத்தில் படித்தது)


Comments

  1. மிகும் பயனுள்ளது டிப்ஸ்...

    கண்ணதாசன் சிறப்பு என்றும்...

    ReplyDelete
  2. கண்ணதாசனின் நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  3. ஓ bcom படிப்பா? ஒரே படிப்பிற்கு ஒடுவது என்பது மறைய வேண்டும் சகோ. எத்தனைத் துறைகள் உண்டு!!

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு. அனைத்து விஷயங்களையும் படித்தேன் - ரசித்தேன்.

    ReplyDelete
  5. ஆம் சகோ, ஒரு காலத்தில் சிறப்பு என கருதப்படும் படிப்பு, பின்னர் பயன் இல்லை என்று, இப்படியே மாறி மாறி,,,,,,
    படிக்கறதே வேஸ்ட் என்றும் வரும் போல,,,,,,,
    முருங்கை காய்க்க சொன்ன தகவல் அருமை.
    அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  6. கதம்பச்சோறு அல்ல;பல்சுவை விருந்து

    ReplyDelete
  7. கலக்கல் பதிவை ரசித்தேன் :)

    ReplyDelete
  8. அதே சமயம் இந்தப் பொருள் உடல்நலனுக்கு தீங்கானது என்று பாக்கெட்டில் பொறித்துவிட்டு விஷத்தைக் கூட விற்றுக் கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் வினோதமானது. சிகரெட், பீடி, குட்கா, பான், சாராயம் போன்றவை இந்தியச் சந்தையில் பொருளாதார அளவில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. இவற்றை முழுவதுமாக தடை செய்ய ஓர் அரசும் முன் வரவில்லை என்பது வெட்கமான விஷயம்.// உண்மையே! எது எதற்கெல்லாமோ கூச்சல் போடுபவர்கள், கல்வித் துறையில் நடக்கும் ஊழலுக்கோ, இல்லை மேற் சொன்னவற்றையோ மட்டும் கண்டு கொள்ளாமல் விடுவதிலிருந்து தெரிகின்றதே இதில் எத்தனை பினாமிகள், பெட்டிகள் கிடைக்கின்றன என்று.....மக்களும் முட்டாள்கள்தான் அதில் நாமும் அடக்கம்...இல்லையா நண்பரே!

    பி காம்.....ம்ம்ம் கல்வித்துறையே வியாபாரமாகிப் போன பின்...என்னத்த சொல்ல....எல்லாமே பணத்தின் அடிப்படையில்தான் படிப்ப்பு என்பதும் நிரூபணம்....

    டிப்ஸ் அருமை....

    பணியாரம் செய்வதுண்டு என்றாலும் தங்களது குறிப்பையும் குறித்துக் கொண்டோம்.....

    அறிமுகம்புதியது

    கண்ணதாசன் ஆஹா....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!