இதெல்லாம் பிள்ளையார் நிறைவேற்றினாரா? தெரியவில்லை!

  நான் ஒரு கோயில் குருக்கள் என்பது என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். நான் பூஜை செய்யும் பிள்ளையார் கோயில் தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களில் இப்படி எத்தனையோ சக்தி மிக்கத் தலங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வேளை பூஜைக்கும் கூட வழி இல்லாமல் மூடிக் கிடக்கின்றன.

     தற்போது நிறைய ஆன்மீகப் பத்திரிக்கைகள் பெருகிவிட்டன. அவர்களுக்கு தம் வாசகர்களுக்கு எதையாவது புதிதாய் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆகவே நிறைய கோயில்களை பற்றி எழுதுகின்றார்கள். சும்மா கோயிலைப் பற்றி எழுதினால் போதுமா? பக்தர்கள் சென்று விடுவார்களா? இந்த குறை நீங்கும்! அந்தகுறை நிவர்த்தியாகும் என்று சொல்கிறார்கள்.

    உண்மையில் அப்படி நிவர்த்தி ஆகுமா? ஆகாது என்றால் அப்புறம் கடவுள் எதற்கு? இதற்கு பதில் சொல்லி நான் பதிவின் ஆழத்திற்குள் சென்று நாத்தீகம், ஆத்தீகம் பற்றி விவாதிக்க விரும்பவில்லை! இந்து சமயத்தில் எல்லோருக்கும் முன்பிறவி, ஊழ்வினை குறித்த நம்பிக்கை இருக்கின்றது. அந்த வினைகள் முன்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேதான் இந்த பிறவி வாய்த்துள்ளது என்ற நம்பிக்கையும் உண்டு. அப்படி இருக்கையில் நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் கடவுளை வணங்கிவிட்டால் உடனே ஓடி விடுமா?

  வெயில் அடிக்கிறது! வெயிலை தடை செய்ய முடியுமா? முடியாது . மர நிழலில் நிற்கலாம், குடை எடுத்துப் போகலாம். ஒரு மின்விசிறி, ஏசி மிஷின் வைத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் வெயிலில் இருந்து நம்மை தற்காலிகமாக காத்துக் கொள்ள உதவுமே தவிர முழுவதும் காத்துவிடாது. அதே போலத் தான் பரிகாரங்களும்.

    எல்லா கோயில்களிலும் இன்று பரிகாரங்கள் பிரதானம் ஆகிவிட்டன! அப்போதுதான் கூட்டம் வருகிறது. பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்று பலரும் புலம்புவதை பார்க்க முடிகிறது. நாம்  செய்த ஊழ்வினையை அதற்கான தண்டணையை அனுபவித்தே ஆக வேண்டும்.  சில நோய்களுக்கு மருந்து இல்லை என்பது  போல ஊழ்வினைக்கும் பரிகாரம் இருப்பதாய் தெரியவில்லை!

      அந்த தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும். அப்புறம் பரிகாரங்கள் எதற்கு? வெயிலில் இருந்து மரம்  நிழல் கொடுத்து காப்பதைப் போல பரிகாரங்கள் நம்மை கொஞ்சம் கஷ்டத்தை விலக்கித் தரும் அவ்வளவே? அப்படியானால் சிலருக்கு பரிகாரங்கள் உடனே பலித்து விடுகின்றதே அது எப்படி? அவர்கள் ஊழ்வினை பயனை அனுபவித்து விட்டார்கள். இனி அந்த கஷ்டம் அவர்களுக்கு இல்லை என்பதாக இருக்கும். அதனால் உடனே நிறைவேறிவிடுகின்றது.

    இதெல்லாம் போகட்டும்! நான் சொல்ல வந்ததே வேறு! திருமணம் தடை, குழந்தை இல்லை, கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, நோய் தீரவேண்டும்  இதெல்லாம் கேட்டு பரிகாரங்கள் நேர்த்திக் கடன் செய்கின்றார்கள் சரி. ஆனால் இப்படியெல்லாம் கூட கடவுளிடம் வேண்டுவார்களா?

    நான் பூஜை செய்யும் கோயிலுக்கு இரண்டு வருடம் முன்பு ஒரு மாணவன் வந்தான். இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். குள்ளமான  உருவம், மெல்லிய தேகம், கருப்பு நிறம், தலையில் கொஞ்சம் முடிகள் குறைவு.  அவனுடைய குறைகளைப் பாருங்கள். பிள்ளையாருக்கு ஒரு லெட்டரே எழுதிவிட்டான். அதை இதை பிள்ளையாரிடம் வைத்துவிடுங்கள் என்று சொல்லி கொடுத்தான்.

   அவன் சென்ற பின் அதில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன்.
    பிள்ளையாரப்பா! இந்த செமஸ்டரில் ஆல் பாஸ் ஆகவேண்டும் பர்செண்டேஜ் 70க்கு மேல் வரவேண்டும்.

நான் வெள்ளையாக மாறவேண்டும்.

இப்போது இருக்கும் உயரத்தை விட இன்னும் உயரமாக ஆறு அங்குலம் உயர வேண்டும்.

இங்கிலிஷ் புரியவில்லை! அது நன்றாக புரிய வேண்டும்.

தலையில் முடி சரியாக வளரவில்லை! அது வளர்ந்து நன்கு நீளமாக  வளர வேண்டும்.

இப்படி ஓர் நாலைந்து கோரிக்கைகள் எழுதி வைத்திருந்தான். படித்தவுடன் சிரிப்பு மாளவில்லை! இந்த கோரிக்கைகளை பிள்ளையார் நிறைவேற்றினாரா என்பதும் இன்னும் தெரியவில்லை!


Comments

  1. வேடிக்கை மனிதர்கள் வேறென்ற சொல்வது இவை நிறைவேறாவிட்டால் கடவுள் இல்லை என்பான் இதுதான் மானிட குணம். சிந்தனைக்குறிய பதிவு நண்பரே..

    ReplyDelete
  2. சிந்தனைக்க உரிய பதிவு நண்பரே
    முயற்சி செய்யாமல் கடவுளை மட்டும் வேண்டுவதால் என்ன பயன்

    ReplyDelete
  3. நம்பிக்கையே வாழ்க்கை...

    ReplyDelete
  4. முதலில் உங்கள் தத்துவங்கள் பற்றி. வாழ்க்கையில் அடி மேல் அடி பட்டு நிமிர்ந்த ஒருவரால்தான் இதுபோல் சொல்ல முடியும்; எழுத முடியும். அந்த வகையில் உங்கள் உலகியல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    அடுத்து அந்த மாணவன். அவன் மீது தவறு ஏதும் இல்லை. நம்பிக்கையே வாழ்க்கை. தான் நம்பும் தெய்வம், தான் வேண்டுவதைத் தரும் என்று நம்புகிறான். அந்த மனநிறைவே அவனுக்கு ஒரு நிம்மதியைத் தரட்டும்.

    ReplyDelete
  5. நம்பிக்கை தானே வாழ்க்கை! அந்த மாணவன் நம்பிக்கை கொண்டிருக்கிறார் - பிள்ளையார் மேல்!

    ReplyDelete
  6. அந்த மாணவன் வைத்திருப்பது அசட்டுத்தனமான நம்பிக்கை என்றாலும் கோவில் குருக்களான உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவினை எதிர்பார்க்கவில்லை

    ReplyDelete
  7. இந்த காலத்தில் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க &ஆலோசனை சொல்ல யாரும் இல்லாததால் இப்படி கோரிக்கைகளை கடவுளிடம் வைத்து மன ஆறுதல் அடைக்கிறார்கள். அவ்வளவுதான்.இப்படி செய்வதால் அவ்ர்களுக்குள் இருந்த மன இறுக்கம் குறைகிறது........வசதி இல்லாதவன் இப்படி கடவுளிடம் சொல்லி மன ஆறுதல் அடைக்கிறான் வசதியுள்ளவனோ கவுன்சிலிங்க் போகிறார்கள்

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    நம்பிக்கைதான் வாழ்க்கை...அவன் எழுதியதில் தப்பில்லை....அருமையாகசொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நம்பிக்கை தானே சகோ எல்லாமே ..
    அதுவும் எனக்கு இறை நம்பிக்கை மிக அதிகம் ..
    அம்மாணவன் பிள்ளையார் மேல் நம்பிக்கை வைத்ததில் தவரில்ல்ல ஆனா அவனும் முயற்சி செய்து படிக்கணும் (நிறம் உயரம் )கூட ...மனு கொடுத்ததோடு நிற்காமல் முயன்றால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறியிருக்கும்

    ReplyDelete
  10. எதுவுமே நம்பிக்கையில்தான் இருக்கிறது. அந்த மாணவனின் பிரார்த்தனைக் கடிதத்தில் எவ்வித தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். கடிதம் எழுதிய பின் அவன் நேர்மறை எண்ணங்களில் இருந்திருக்க வாய்ப்புண்டு. அவனது பிரார்த்தனைகளில் சிலவற்றுக்கு நல்ல விளைவும் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    ReplyDelete
  11. அவனுடைய வேண்டுதல் நிறைவேறனும். ந்ம்பிக்கை தானே வாழ்க்கை. நிறைவேறட்டும்.

    ReplyDelete
  12. சிந்திக்கவைக்கும் பகிர்வு.நம்பிக்கையான பிள்ளையார்போலும் அந்த மாணவனுக்கு)----

    ReplyDelete
  13. யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல்லவனுக்கு தெரியாதா ?இப்படி கடவுளை நம்பாதவனைவிட நாத்திகனே மேல் :)

    ReplyDelete
  14. யாருக்கு என்ன தரவேண்டுமென்று 'எல்லாம்' வல்லவனுக்கு தெரியாதா ?இப்படி கடவுளை நம்பாதவனைவிட நாத்திகனே மேல் :)

    ReplyDelete
  15. அன்பான சுரேஷ் அண்ணா, நீங்கள் இப்படி செய்யலாமா ? அடுத்தவன் டைரியைப் படிப்பது குற்றம் அதை எள்ளி நகையாடுவது தவறல்லவா. நீங்கள் கருப்புசட்டை அனியத் தொடங்கி விட்டீர்களா ? இல்லையெனில் உடன் ஒரு கருப்பு சட்டை தைய்யுங்கள் அய்யா. அண்ணா இனி ஒரு முறை இப்படி பொறுப்பில்லாமல் படாளம் கூட்டு ரோட்டில் பேசுவது மாதிரி எழுதாதீர்கள்,. உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இளக்காரமாக இருக்கலாம் ஆனால் எங்கள் நம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. தெய்வநிந்தனை தவறு.

    குமார்.

    ReplyDelete
  16. நம்பிக்கையே வாழ்க்கை! ஆனால் வெறும் பரிகாரங்கள் என்பது இப்போது கமர்ஷியல்தான். பரிகாரங்கள் செய்தாலும் நாமும் முயற்சி போட வேண்டும். அப்போதுதான் கடவுளும் அருள்வார். நாம் உழைக்காமல் கடவுளிடம் சென்று பரிகாரம் செய்வதில் அர்த்தம் இல்லை. முழுமையாக இறைவனை நம்பி உழைத்தாலே போதும் பரிகாரங்கள் தேவை இல்லை. டோட்டல் சரண்டர் டு காட்.....

    சுரேஷ் நீங்கள் நா சு நல்லபெருமாள் என்பவர் பல வருடங்களுக்கு முன் எழுதிய நாவல் அமுத சுரபி என்று நினைக்கின்றோம் பரிசு பெற்ர நாவல்....நம்பிக்கை குறித்த நாவல் தான் அருமையான நாவல் முடிந்தால் கிடைத்தால் நூலகத்தில் வாசித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  17. அவன் மனக்குறையை கொட்டி ஆறுதல் தேடியிருக்கான் ....இதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இது அவன் தனிப்பட்ட விஷயம் ... ஆனால் அதை அவன் அனுமதியில்லாமல் படித்ததும் ..பிறரிடம் பகிர்ந்ததும் தவறு...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!