சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!

   கடந்த  ஞாயிறன்று  உள்ளூர் பூஜைகள் முடித்து வெளியூர் கோயில் பூஜைக்கு செல்லும்போதே தாமதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் உள்ளூர் கோயில் தவிர வெளியூர் கோயில் எனக்கு ஒன்றிரண்டுதான். ஆனால் இப்போது அரைடஜனுக்கு கொஞ்சம் அதிகம் ஆகிவிட்டது. டியுசன் எடுப்பதை நிறுத்தியதால் வருமானத்திற்கு இப்படி அதிகப்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் சிரமப்படாமல் துட்டு வருமா என்ன?
 
               ஒன்றிரண்டு கோயிலாக இருந்த போது உள்ளூர் பூஜை முடித்து வெளியூர் சென்று அதிகபட்சம் பத்து மணிக்கெல்லாம் வீடுதிரும்பிவிடுவேன். அப்புறம் வெட்டி ஆபிசர்தான். மாலையில் டியுசன் அதற்கு கொஞ்சம் பிரிப்பேர் செய்வேன். டீவி. அரட்டை என ஜாலியாக பொழுது போகும். இப்போது குடும்பஸ்தன் ஆகிவிட்டதால் கூடுதல் பளு பகல் பொழுதில் டீவி பார்ப்பது குறைந்துவிட்டது. வெளியூரில் இருந்து வருவதற்கே பன்னிரண்டு மணி ஆகிவிடுகிறது.

                ஞாயிறன்று   தச்சூர் சிவன் கோயில் பூஜை செய்துகொண்டிருந்தேன். கொஞ்சம் தாமதமாக சென்றதால் பதட்டம் வேறு. அதுவும் இல்லாமல் இரண்டு நாட்களாக படுத்திய ஜலதோஷம் அதிகமாகி தும்மல் மூக்கில் ஒழுகிக்கொண்டு வேலையை தாமதப்படுத்திக் கொண்டு இருந்தது. தச்சூர் கூட்டுச்சாலையில் ஒரு ஹோமியோபதி மருத்துவர் உண்டு அவரிடம் வைத்தியம் செய்து கொள்ளலாம் என்று வேக வேகமாக பூஜை முடித்துக் கொண்டு கோயில் கதவை தாழிட அப்போது வெளி மண்டப ஓரமாக  மொட்டைத்தலையோடு அழுக்குச் சட்டை அணிந்து பார்க்கவே பரிதாபமாக நின்றது ஓர் உருவம்.

                     அடடா! இவன்  இங்கு எதற்கு வந்தான்? சும்மா போக மாட்டானே! என்று  யோசித்தபடியே கதவை பூட்டி வெளியே வந்தேன். அவனும் பின்னாலேயே வந்தான். வண்டியில் பையை மாட்டியபடியே  வண்டியில் ஏற ஆயத்தம் ஆனேன்.  “சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!”  உரிமையாக கேட்டான் அவன்.  “இல்லபா” என்றேன் “ ரொம்ப நாள் ஆயிருச்சு கொடுத்து! ப்ளீஸ்! ஒரு பத்து ரூபா கொடு!” என்றான் அவன் மீண்டும் உரிமையுடன். பையில் பணமிருந்தும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தபடி  “ என்கிட்ட காசு எதுவும் இல்லே! தொந்தரவு பண்ணாதே!” என்று  பறந்தேன். பின்னாலேயே கொஞ்ச தூரம் வந்தவன் நின்றுவிட்டான். “ அப்பாடா! என்று ஒரு நிம்மதி!

               அவன்   என்னுடன் ஒன்றாய் படித்தவன். அவன் தந்தை பெரிய மளிகைக் கடை வைத்திருந்தவர். பஞ்செட்டி பள்ளியில் அவன் உட்கார்ந்த இடத்தை நான் பறித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. அதற்காகவாது ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் ஏற்கனவே சீர்கெட்டு இருக்கும் அவன் மேலும் கெட்டுப் போகவேண்டாம் என்று கொடுக்கவில்லை! காலையில் இருந்து எத்தனை பத்து ரூபாய் சேர்த்து வைத்து இருப்பானோ? இந்த பத்து ரூபாய் கொடுத்தால் அதனுடன் சேர்த்து ஒரு குவார்ட்டர் அடிக்க கிளம்பி விடுவான். 

                படித்த மனைவி, நன்றாக படிக்கக் கூடிய மகள் இவைகள் இருந்தும் குடி அவனைக் கெடுத்து விட்டது. என்ன ஒன்று கவுரவமாய் தெரிந்தவர்களாய் பார்த்து பிச்சை எடுக்கிறான். ஒரு மளிகைக் கடை வைத்துக் கொடுத்தார்கள். அதை ஒழுங்காக நடத்துவது கிடையாது. பெண்டாட்டி பிள்ளைகளுக்கு எதுவும் வாங்கிக் கொடுப்பது கிடையாது. மாமனார் வீட்டினர் ஏதோ உதவ அதில் அவன் மனைவி குடும்பம் நடத்தி வருகையில் இவன் இன்னும் திருந்தாமல்  குடித்துக் கொண்டிருக்கிறான். சற்று மனநலமும் பாதிக்கப் பட்டு இருக்கிறது.

     ஒரு முறை பிள்ளையார் கோயில் மண் உண்டியலை திருடும் போது பிடிபட்டு உதைபட்டு மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.  இப்போது திரும்பி வந்திருக்கிறான். ஆனால் இன்னமும் திருந்தவில்லை.  ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் வஞ்சித்தவன் வாழ்வான் வஞ்சித்தவன் மகன் வாழான்! என்ற பழமொழிகள்   உண்டு. அவை பற்றி நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கண்டு இருக்கிறேன். எங்கள் ஊரிலேயே சிலரை பார்த்தும் இருக்கிறேன். இவனும் அந்தவகையில் ஒருவன் தான்.

     இவனுடைய தந்தை மளிகை வைத்திருந்தார் அல்லவா? அப்போது மது விலக்கு அமலில் இருந்த நேரம். எம். ஜி. ஆர் ஆட்சி  கள்ள மார்க்கெட்டில் சாரா வெல்லம்  விற்பார். எங்கெங்கு ஊரல்கள் இருக்குமோ அங்கெல்லாம் இவன் தான் சைக்கிளில் கட்டிக் கொண்டு சென்று போடுவான். நல்ல விலை வைப்பார்கள் ஒன்றுக்கு இரண்டாக அவர்களும் வாங்கிக் கொள்வார்கள். வியாபாரம்தான் இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் சட்டத்துக்கு புறம்பான தொழில் அதிலும் நேர்மை இல்லை. கள்ளசாராயம் குடித்து எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டதோ? அந்த சாபம் எல்லாம் சேர்ந்திருக்கும் அல்லவா?

        அன்று இப்படி விற்று நிறைய லாபம் சம்பாதித்து வீடு வாசல் என்றெல்லாம் வாங்கி குவித்திருக்கலாம் அவனுடைய அப்பா. நன்றாக வாழ்ந்தார்தான். ஆனால் அவனுடைய பிள்ளை இன்று வாழவில்லை! அதே குடி அவனை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் இப்போது யாரும் உணர்வது இல்லை. இப்போது வாழ்ந்தால் போதும் வசதி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இவனைப் பற்றி ஒரு முறை பேஸ்புக்கிலும் கலாகுமரனுடன் பேசி இருக்கிறேன்.

         அமைதியானவன்! யார் சொன்னாலும் கேட்டுக் கொள்பவன், நல்ல உழைப்பாளி அன்று. ஆனால் இன்றோ  ஊதாரி! பிச்சை எடுக்கிறான், குடும்பத்தை கவனிக்காதவன். இதெல்லாவற்றிற்கும் முதற் காரணம் குடி!  குடிதான் இன்று கோலொச்சுகிறது இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் எத்தனை குடும்பங்களை அழித்து இப்படி கோலொச்சுகிறது? கணக்கில் இல்லை! 

    நேற்று மாலை! ஒரு 6.30 மணி அளவில் பஜார் வரை சென்று திரும்புகிறேன். டாஸ்மாக் எல்லாம் நிறைந்திருக்கிறது. குடித்துவிட்டு வாகனத்தை தடுமாறி ஓட்டி வருவபர்களிடம் வருமானத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கோஷ்டி. சம்பாதித்ததில் பாதியை குடித்து மீதியை இவர்களிடம் இழந்து மீண்டும் நாளைக்கு குடிக்க எதை சம்பாதிக்கலாம் என்று யோசனையோடு  செல்கிறது ஒரு கோஷ்டி. இன்னும் சில நிலவரம் புரியாமல் சாலையில் விழுந்து கிடக்கின்றது. இப்படியொரு அலங்கோலமான தமிழகத்தை என் முப்பத்தொன்பது வயதில் காண்பேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை.

        மது விலக்கு அமலில் இருந்து கள்ளச்சாராயம காய்ச்சி விற்ற காலத்தில் கூட இது போன்ற காட்சிகளை நான் கண்டதில்லை. குடி ஒரு மனிதனை எப்படியெல்லாம் அடிமைப் படுத்துகிறது பார்த்தீர்களா? கூடப்படித்த ஒருவனிடம் உரிமையாக பிச்சை எடுக்க வைக்கிறது?  முகம் தெரியாதவர்களிடம் கூட கையேந்த வைக்கிறது. சம்பாதித்த காசை தமிழக அரசுக்கு மொய்யெழுத வைக்கிறது. இப்படி மக்களை வஞ்சித்து வாழும் தமிழக அரசு எத்தனை நாளைக்கு நன்றாக இருக்குமோ? என்ற ஓர் பயமும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது.

       கொள்ளை, கொலை, தகாத உறவுகள், அடிதடி சண்டை, விபத்துக்கள், இன்னும் என்னவெல்லாமோ அதற்கெல்லாம் மூல காரணம் இந்த குடிதான். என் நண்பன் கெடவும் காரணம் குடிதான். நண்பன் மட்டுமல்ல என் சித்தப்பா ஒருவரும் இந்த குடியால் கெட்டழிந்தார். குடிப்பதனால் சில மணி நேர மகிழ்ச்சி கிடைக்கத்தான் செய்யும் சில மணி நேர மகிழ்ச்சிக்காக வாழ்நாள் மகிழ்ச்சியை இழக்கும் மூடர்களை என்னத்தான் செய்வது.?

       ஆண்டார்குப்பத்தில் ஓரு பழக்கடைக்கு சென்றிருந்தேன். ஒரு மனிதன் மனநலம் பாதிக்கப் பட்டவன் போல  சார்! டீ குடிக்கணும் ஓர் அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க என்று அருகில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் இரக்கப்பட்டு கொடுத்துவிட்டார். கடைக்காரர் தலையில் அடித்துக் கொண்டார்! ஏன் சார்? என்றேன்.

        சார்! இவனெல்லாம் பைத்தியமா? இப்படியே ஒரு பத்து பதினைஞ்சு பேருக்கிட்ட அஞ்சும் பத்துமா வாங்கி சேர்த்துக்குவான். டாஸ்மாக் போய் ஊத்திக்குவான். ஏதாவது கடை வாசல்ல வந்து  படுத்துக்குவான். போதை தெளிஞ்சதும் திரும்பவும் இப்படி வசூலுக்கு கிளம்பிடுவான். இதே பொழப்பா போச்சு இவனுக்கு தினமும் பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்! என்றார்.

       அதே மாதிரிதான் என் கூடப்படித்தவனும் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான். ஒரு நாள் புத்தி மதியும் சொல்லி பார்த்தேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் அமைதியாக அப்புறம் சரி சுரேஷ்பாபு ( என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பவன் இவன் மட்டும்தான்) நீ சொல்றதெல்லாம் சரி!  ஒத்துக்கறேன்! ஆனால் இப்ப ஒரு பத்து ரூபா கொடு! என்றான். தலையில் அடித்துக் கொண்டேன்.  இதுதான் கடைசி என்று அன்று  கொடுத்ததோடு சரி  இதுவரை கொடுக்கவில்லை!

     அன்றும் மறுத்துவிட்டேன்! ஆனால் சுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்! என்ற அவன் குரல் மட்டும்  ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வேதனையான விசயம் நண்பரே தங்களது நண்பரைப்போல பலருக்கும் இந்த சமூகத்தில் நண்பர்கள் இருக்கின்றார்கள் தமிழக அரசை குற்றம் சொல்கிறோம் அவர்களை உட்கார வைத்தது யார் ? ஏன் சமீபத்தில் ஸ்ரீரங்கம் முடிவை மக்கள் எப்படி ? தந்தார்கள் யாருக்கும் எதைப்பற்றியும் கவலை இல்லை. என்ன செய்வது நடப்பது நடந்தே தீரும்
    தங்களது நண்பர் விரைவில் திருந்தி நல்ல வாழ்க்கைக்கு திரும்பி வர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. அவர்கள் குடும்பத்தில் சொல்லி டி- அடிக்ஷன் சென்டரில் சேர்க்கலாமே...,

    ReplyDelete
  4. வேதனையான விஷயம்! மிக மிக..குடி என்றுமே கோலோச்சாது சுரேஷ்! நாங்கள் சொல்ல வந்ததை நண்பர் ஸ்ரீராம் சொல்லி விட்டார். அதே வழிமொழிகின்றோம். கண்டிப்பாகப் பலன் இருக்கும். மீண்டவர் பலர் இருக்கின்றார்கள். முயற்சிக்கலாமே. ஒரு குடும்பம் பிழைக்குமே..சொல்லிப் பாருங்கள் அவரது வீட்டாரிடம் அவரது மனைவி படித்தவர் என்பதால்....

    ReplyDelete
  5. எனக்கு தெரிந்து ஒருவர் குடிப்பதற்காக, ஒவ்வொருவரிடமும், இரண்டு ரூபாய் கேட்பார், அதற்கு மேல்கேட்க மாட்டார். குறைவான தொகை கேட்டார் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை
    குடியினால் நாடே அழிந்து கொண்டிருக்கிறது நண்பரே
    பள்ளிகளின் எண்ணிக்கையை விட , பார்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றே எண்ணுகின்றேன்

    ReplyDelete
  6. ஸ்ரீராம் சார் சொன்னது போல் உடனே சேர்க்க வேண்டும்...

    ReplyDelete
  7. மனம் கனக்கிறது.

    ReplyDelete
  8. நண்பரே,

    சொந்த கடமைகளின் காரணமாய் நேரமின்மையால், ஒரு இடைவெளிக்கு பிறகு உங்கள் தளம் வருகிறேன்...

    மிக யதார்த்தமான எழுத்து நடையில், மனதை தொடும்படி முடித்த இந்த பதிவு நமது சமூக அவலத்துக்கான சான்று ! அதோடு தன்வினை பற்றி அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் பதிவு !

    இவர்களை போன்ற பத்து ரூபாய் ஆசாமிகளில் ஒருவரையாவது நாம் அனைவரும் சந்தித்திருப்போம்...

    என்னை மிகவும் கவர்ந்த பதிவு.

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.


    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  9. குடியின் கொடுமையை எப்படி சொன்னாலும் உணராதவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறதோ அதில!

    ReplyDelete
  10. அநேகமாக நாம் எல்லோரும் நமக்கு தெரிந்த குடும்பங்களில் யாரவது ஒருவர் இதே போன்று குடி பழக்கத்திற்கு அடிமையாகி மானம் மரியாதை இழந்து குடும்பம் குழந்தை குட்டிகளை மறந்து நாசமாகி கொண்டிருப்பதை பார்க்கிறோம் என்பதை மறுக்கவே முடியாது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!