சிந்தனைப் பஞ்சம்!

கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களாகவே ஓர் தடுமாற்றம், தடைபட்டது போன்ற உணர்வு எனக்கு, பதிவுலகில் வழக்கம் போல இயங்கமுடிவதில்லை! என்ன ஆயிற்று என்று தெரியவில்லை! அப்படி ஓர் சிந்தனைப் பஞ்சம் வந்துவிட்டது. முன்பெல்லாம் இப்படி வந்தால் எதையாவது வெட்டி ஒட்டிப் போட்டு பதிவு தேத்திவிடுவேன். ஆனால் இப்போது நல்ல பையன் ஆயிட்டேன் இல்லையா? அதனால் அப்படி எதுவும் செய்ய தோன்றுவது இல்லை.
   
     பொதுவாக  பதிவு எழுத நான் ரொம்ப மெனக்கெடுவது எல்லாம் இல்லை! பிறரைப்போல பல நூல்களை ஆராய்ந்தோ நெட்டில் தேடியோ ஆதாரங்களை எல்லாம் பிரிப்பேர் செய்தோ நான் பதிவு எழுதுவது கிடையாது. அப்படியே இணையத்தில் அமர்ந்து பிறரின் பதிவுகளை படித்து கொண்டிருப்பேன். திடீர் என எதாவது ஸ்ட்ரைக் ஆகும். அதை பில்டப் செய்து அப்படியே பதிவு தேத்திவிடுவேன்.
  
      ஒரு டைம் டேபிள் வைத்திருந்தேன், திங்கள் கவிதை, செவ்வாய் கதை, புதன், கதம்பசோறு, வியாழன், ஜோக், வெள்ளி ஆன்மீகம், சனி, பாப்பாமலர், ஞாயிறு, தமிழ் அறிவு என்று. 

    அதன்படி அன்றைய தினம்  கணிணியை ஓப்பன் செய்து  உட்கார்ந்து அதற்கேற்ப யோசிப்பேன். அப்படியே தோன்றுவதை வேர்டில் டைப்பி ப்ளாக்கரில் ஒட்டி விடுவேன். படங்களை மட்டும் இமேஜஸில் சுட்டுக்கொள்வேன். இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது  ஓர் இருமாதமாக பார்ம் இல்லாத பேட்ஸ்மேன் போல கொஞ்சம் தடுமாற்றம். 

     அதுவும் இல்லாமல் கம்ப்யூட்டர் முன் அமரவே கொஞ்சம் கடுப்பாகவும் இருக்கிறது. அப்படி ஓர் கற்பனை பஞ்சம் உருவாகிவிட்டிருக்கிறது.என்னதான் செய்வது என்று தெரியாமல் பலநாள் பதிவுகளை தவிர்த்துவிடுகிறேன். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. பத்தி எழுதலாம் என்று  கொஞ்சம் முயன்று கொண்டிருக்கிறேன். சில பத்திக் கட்டுரைகள் நல்ல பேஜ் வியு கண்டிருக்கிறது. அதே சமயம் பழைய பாணியை விடவும் முடியவில்லை! பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் பதிவர்களுக்கு எல்லாம் இது நடந்து இருக்கலாம். ஆனால் எனக்கு ஏன் நடக்கிறது? என்று தெரியவில்லை!


   ஒரு நல்ல தாட்( எண்ணம்) கிடைத்தாலும் அதை சிறப்பாக முடிக்க முடியாமல் தடுமாறுகிறது. இன்றைக்கு பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தும் வீணாக கோட்டை விட்டார்களே அதுமாதிரித்தான் செவ்வாய்க் கிழமை அன்று கூட   ஒரு நல்ல சிறுகதைக்கான கரு உதித்தும் அதை சரிவர எழுத முடியாமல் திருப்தி இல்லாமல் போய் பழைய பதிவு ஒன்றை மீள்பதிவு செய்து விட்டேன்.

    இது எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை! அதுவரை எனது வழக்கமான பதிவுகளுக்கு பதில் இப்படி சுயபுராணம், பத்திக்கட்டுரைகள், கிரிக்கெட் என்று எதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் மீண்டும் எனது வழக்கமான பதிவுகளை தருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  ஒரு வகை சோர்வு என்னை ஆட்கொண்டு இருக்கிறது அதில் இருந்து  மீண்டுவரக் காத்திருக்கிறேன் அதுவரை உங்கள் ஆதரவினை நாடுகின்றேன்! நன்றி!

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சில சமயங்களில் ஒன்றும் செய்யாமல்
    வெறுமனமே இருக்கத் தோன்றும்
    அதனால் பாதகம் ஒன்றுமில்லை நண்பரே
    சிந்தனைகளுக்கும் சிறிது ஓய்வு கொடுங்கள்
    காத்திருக்கிறோம்

    ReplyDelete
  2. மெனக்கெட தயாராக இல்லை என்றால் பலமுறை இது போல் நடக்கும்...

    புது முயற்சி = அழியாத ஆர்வம்...!

    ReplyDelete
  3. சுரேஷ்! இது போன்று எங்களுக்கும் நடக்கும். பல சமயங்களில். அப்போது துளசி "எனக்கு நேரமே இல்லை...பதிவு எதுவும் எழுதல...என்று...கீதாவைப் போடச் சொல்லுவார். கீதா..இதோ நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே அதே போன்ற மன நிலையில் இருப்பதுண்டு....இப்படி இருவரும் போராடி, வாக்குவாதம் செய்து...ஒப்பேற்றுவதுண்டு.....கீதாவிற்கு எதை எழுத வேண்டும் என்றாலும் அதற்கு நேரம் வேண்டும்....அதாவது ரூம்போட்டு யோசிப்பது போல் அஹ்ஹஹ.....புத்துணர்வுடன் மீண்டு வாருங்கள். ஏதொ ஒன்று உங்கள் உள் மனதில் ஒளிந்து கொண்டு உங்கள் மூளையின் மேல் ஆலம் பரப்பி யோசிக்க விடாமல் செய்யும்...அதைக் கண்டுபிடியுங்கள் ஆர அமர்ந்து இருந்து....கண்டு பிடித்துவிட்டீர்கள் என்றால் தீர்வே.....பின் மீண்டும் புத்துணர்வுடன் வாருங்கள்!

    ReplyDelete
  4. Don't worry, your are writing in an excellent way, don't be under obligation to produce certain number of posts in certain period, like that. That will spoil your thinking capability, write as and when you feel it doing it.

    ReplyDelete
  5. இதுவும் கடந்து போகும் தளிர் சுரேஷ் சார்!
    உங்களைப் போன்ற பதிவர்களே இப்படிச் சொன்னால் எப்படி..!
    சிந்தனைப் பஞ்சத்தையும் சுவையான ஒரு பதிவாக்கி விட்டீர்களே :)) சபாஷ்!

    ReplyDelete
  6. நிறைய தொடர்ந்து எழுதினால் ஒருநிலையில் தேக்கம் ஏற்பட்டுவது இயற்கைதான்.வாரத்திற்கு இரண்டு மூன்று எழுதினால் கூட போதுமானது

    ReplyDelete
  7. இது இடைத்தேக்கம் அல்ல, பலவற்றை போட்டு சிந்தனையில் எதை எடுப்பது அல்லது இதைவிட சிறப்பா என ஒரு தேடல், அது திருப்த்தியாகும் வரை,,,,,,,,,,,,,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!