ஒட்டிக்கொண்டிருக்கும் கலைஞரும் ஓட்டம்பிடித்த ராஜபக்‌ஷேவும்! கதம்பசோறு! பகுதி 56

கதம்ப சோறு! பகுதி 56


ஓடவிரட்டப்பட்ட ராஜபக்‌ஷே!

      அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து ஈழத்தில் தனது கொடுங்கோல் ஆட்சியை பரவச்செய்த ராஜபக்சேவின் தந்திரம் பொய்த்துப்போனது. இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தேர்தலைநடத்தி தானே மீண்டும் அதிபர் ஆகிவிடத் துடித்த அவரின் கனவு பலிக்கவில்லை! தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அப்போதும் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி அவர் வென்றதாக அறிவிக்க முயற்சி நடந்தது என்றும் கேள்விப்பட்டேன்! நல்ல வேளை! அதிகாரிகள் நல்லவர்களாக இருக்கப் போக பக்‌ஷேவின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. புதிய அதிபராக சிறிசேனா பொறுப்பேற்று உள்ளார். அவர் முன் நிறைய சவால்கள் உள்ளது. தமிழர்களுக்கு குடியேற்றங்கள் அமைத்துக்கொடுத்து அவர்களின் நல்வாழ்க்கைக்குத் தேவையான திட்டங்களை ஏற்படுத்தி தருவது அவரின் முதல் கடமையாகும். உள்நாட்டுப் போரினால் சீரழிந்து போயிருக்கும் இலங்கையை மீண்டும் புணரமைப்பும் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. எது எப்படியோ தமிழர்களுக்கு இவரின் வெற்றி தைப்பொங்கலை சர்க்கரைப் பொங்கலாக மாற்றி அமைத்து உள்ளது.

பொது விநியோக உணவு தானியங்கள் திருட்டு!


    ரூபாய் 48 ஆயிரம் கோடி வரை பொது விநியோக உணவுதிட்ட பொருட்கள் திருட்டு போவதாகவும் அது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதாகவும் அசோக் குலாதி- ஸ்வேதா சைனி என்ற இருவர் கலந்து நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2011-12ம் நிதி ஆண்டில் மொத்த விநியோகத்தில் 47% திருட்டு போயுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மத்திய அரசின் உணவு தானிய விநியோகத்திற்கும் அவற்றை மக்கள் பெறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி அதாவது இழப்பு 38% என்ற அளவில் உள்ளது. 2011-12 ல் 48 ஆயிரம் கோடியாக இருந்த இழப்பு நடப்பாண்டில் 61 ஆயிரம் கோடியாக உயரும் என்று சொல்லப்படுகிறது.
   இந்த இழப்புக்களை தவிர்க்க உணவு விநியோகத்திலும் நேரடி மானிய முறை அமலாக்கப்படும் நாள் விரைவில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

சுனந்தா புஷ்கர் கொல்லப்பட்டாரா?

     முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்று தற்போது செய்திகள் வருகின்றன. முன்பு அவர் மரணத்தில் சந்தேகம் இல்லை! தற்கொலை என்று சொல்லப்பட்டது. இப்போது விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று அறிக்கை வந்துள்ளது. இதை கண்டுபிடிக்கவே ஆறுமாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. இனி உண்மையான கொலையாளியை பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை! சசிதரூர் என்னை மாட்டி வைக்க சதி நடக்கிறது என்கிறார். ஒர் மரணம் ஓர் ஆட்சிக் காலத்தில் தற்கொலை என்றும் ஆட்சி மாறியதும் கொலை என்றும் மாறுவது விசித்திரம்தான்! இப்படி ஆட்சிக்கேற்ப காட்சிகள் மாறிக்கொண்டு இருந்தால் மக்களின் நம்பிக்கையை அதிகாரிகளும் அரசும் இழந்து போக வேண்டியதுதான்!

கலைஞரே தலைவர்!

      திமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்களுக்கு இடையே மீண்டும் கலைஞரே தலைவர் ஆகி இருக்கிறார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நிலையில் இன்னும் அட்டைப்பூச்சி மாதிரி ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் விட்டுக்கொடுக்க நினைத்தாலும் விட முடியாத சூழல், சூழ்நிலைக் கைதியாக அவர் தலைவர் பதவியில் ஒட்டிக் கொள்ள பொதுச்செயலாளராவது ஆகிவிடுவோம் என்று அன்பழகனை நீக்கி ஸ்டாலினை பொதுச்செயலாளர் ஆக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டது. அழகிரியும் உள்ளே நுழைய முயன்று தோற்றுவிட்டார். இப்படி அடிக்கடி உட்கட்சி சனநாயகம் காக்கிறேன் என்று கேலிக்கூத்துக்களை அரங்கேற்றுவதை விட நிரந்தர தலைவர், நிரந்தர செயலர், நிரந்தர பொருளர் என்று அறிவித்து விடலாம். இந்த முறை அன்பழகன் மற்றும் கலைஞரால் போட்ட மாலையைக் கூட தாங்க முடியவில்லை! பக்கத்தில் இருவர் தாங்கிக் கொண்டார்கள். எதை பெரிதாக சாதித்தார்கள் என்று இவ்வளவு பெரிய மாலை? வழக்கமான ஒன்றுக்கு இத்தனை பெரிய பில்டப் தேவையா?

 சென்னை புத்தக கண்காட்சி!

      இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே கண்காட்சிக்கு சென்றுவிட்டேன். உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் தென்பட்டார். அவரிடம் ஒருவர் பவ்யமாக ஒரு புத்தகத்தை கொடுத்து லேட்டஸ்ட் இஷ்யூ படிச்சு பாருங்க என்று கூறிக் கொண்டிருந்தார். நிறைய ஸ்டால்கள் சிலவற்றில் கூட்டங்களும் நிறைந்து இருந்தன. கிழக்கு, உயிர்மை போன்ற பதிப்பக நூல்கள் வழக்கம் போல விலை அதிகம். மீனாட்சி பதிப்பகத்தில் மலிவுவிலையில் சுஜாதா நாவல்கள் கிடைக்கிறது. எல்லா ஸ்டால்களிலும் பொன்னியின் செல்வன் இருக்கிறது. மாதொரு பாகன் வாங்கலாம் என்று டிஸ்கவரிக்கு போனால் அது கிடைக்கவில்லை! அர்த்தநாரியும் அதன் அடுத்த பகுதியும் இருந்தது. வாங்க வில்லை! எரியும் பனிக்காடு வாங்கினேன். மொத்தம் ஆறு வழிகளில் ஐந்தை மூன்று மணிநேரத்தில் நிறைவு செய்து பைகளை நிரப்பி பர்ஸின் கனம் குறைத்தேன்! தந்தையும் வந்து அவர் தனியாக சுற்றி சில புத்தகங்கள் வாங்கினார். ஆறு மணி அளவில் குடந்தையூர் சரவணன் வந்து மகிழ்வூட்டினார். நாங்கள் கிளம்பும் சமயம் என்பதால் அவருடன் அன்னம் ஸ்டாலுக்கு சென்று முத்துநிலவன், ஆவி,மகாசுந்தர், பாலகணேஷ், கீதா, தேவதாதமிழ் கீதா,செல்லப்பா யக்ஞசுவாமி அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடி  உடன் விடைபெற்றுவிட்டேன். ஏழு மணிக்கு கிளம்பி பத்து மணி தாண்டிதான் ஊர் வர முடிந்தது. சென்னை டிராபிக் ரொம்பவே அலுப்பை ஏற்படுத்தியது. விரிவான பதிவு விரைவில்.

மண்ணைக்கவ்விய இந்திய கிரிக்கெட் அணி!

    இந்த முறை இளம் வீரர்களுடன் சென்ற இந்திய அணி தொடரை வெல்லாவிடினும் ஒரு போட்டியிலாவது வெல்லும் என்று எதிர்பார்த்தேன். இல்லை! கடைசி போட்டியில் கோலியும் ஏமாற்றிவிட்டார். அவரும் தடுப்பாட்ட வியுகத்தில் ஆடவேண்டிய சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் மாற்றி அமைத்துவிட்டார்கள். எதிரணியின் 20 விக்கெட்களை வீழ்த்தும் பவுலர்கள் கிடைக்காதவரை இந்திய டெஸ்ட் அணி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் இருக்க வேண்டும். என்ன ஒன்று இந்த தொடரில் நமது பேட்ஸ்மேன்கள் நல்ல ஸ்கோர் செய்தனர், குறிப்பாக, கோலி, ரகானே, விஜய், ராகுல் போன்றோர் ஆடியவிதம் சிறப்பு. தவான், ரெய்னா, ரோகித் ரொம்பவே சொதப்பிவிட்டனர். ஒருநாள் போட்டியிலாவது வெல்கிறார்களா பார்ப்போம்!

 பதிவர் அறிமுகம்!

   முத்து நிலவன்!
    பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லைதான்! இவரது தளம் ஓர் பூக்கடை! பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியர், கல்வியாளர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். பல்வேறு நூல்களை வெளியிட்டு உள்ளார். வளரும் கவிதை என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது கட்டுரைகள் அனைவருக்கும் பயனளிக்கும். முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற இவரது நூலை அனைத்து பெற்றோர்களும் படிக்க வேண்டும். தமிழில் எழுதும் போது  நமக்கு ,ன, ந,ண குழப்பம் ஏற்படும். அதைப்பற்றி இவர் சுவையாக எழுதிய பதிவு இது:  மூனுசுழி “ண“ , ரெண்டுசுழி “ன“ என்ன வித்தியாசம்?

புட்ச கவிதை!

  அதிகாலை துயில் எழுப்புகையில்
  என் மீது கால் போட்டு எழமறுக்கும் அவன்
  வாசலில் நின்று பல் துலக்கினால்தான்
  நுரை வருமெனப் புலம்புவான்
  ஜில் தண்ணி கண்ணு எரியுமெனக்
  குளிக்க மறுத்து
  திணித்த உணவை வாயில் வைத்து
  வேடிக்கைப் பார்த்து
  அடுத்த வாய் உணவுக்கு அனுமதி மறுப்பான்.
   சீருடை அணிவித்ததும்
  பெல்ட் காணவில்லை என
  அவன் ஒளித்து வைத்தது நினைத்து
  நகைப்பான்.
  அம்மாவுக்கு பறக்கும் முத்தமிட்டு
  சாவகாசமாகக் கிளம்ப
  பள்ளிக் கதவை அடைத்ததைப் பார்த்து
  ‘ஓ’வென அழும் அவன் தான்
   முணுமுணுக்கிறான்…
  ‘மெதுவா வண்டி ஓட்டி வந்த
   உன்னாலதான்பா லேட்டு!
                    ஆதி சரவணன்.
நன்றி விகடன் 23-7-14


சூப்பர் க்ளிக்! 


டிஸ்கி} இந்த பகுதியில் வரும் சமையல் குறிப்பு, டிப்ஸ், குட்டிக்கதை, புத்தக விமர்சனம் இனி அவ்வப்போது தனிப்பதிவாக வரும். இன்னும் நிறைய மாற்றங்களை யோசித்துக் கொண்டுள்ளேன்! விரைவில் செயலாக்கம் பெறும்! நன்றி!

வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல்நல் வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. தங்களை நேற்று புத்தக காட்சியில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே!

    ReplyDelete
  2. கதம்பம் வழக்கம் போலவே பூக்கடைய் மணத்தது நண்பரே....
    பதிவர்களை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. கதம்பம்பம் மணமாய்...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நாங்கள் சென்னை செல்லாத குறை உங்களது பதிவைக் கண்டதும் மறைந்துவிட்டது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. சுவையான சோறு
    இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சுவையான கதம்ப சோறு.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நறுமணக் கதம்பம் அருமை..புத்தகத் திருவிழாவிற்கு சென்றது அறிந்து மகிழ்ச்சி..அங்கிருந்திருந்தால் நானும் வந்திருப்பேன்..
    நூல், மற்றும் பதிப்பக விவரங்கள் கொடுத்திருப்பது நன்று..
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ !

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வழக்கம் போல அருமையான கதம்பச் சோறு
    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சுரேஷ் தங்களை புத்தகக் கண்காட்சியில் முதன் முதலாகச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி - கீதா.

    கதம்பம் மணக்கின்றது. சில பகுதிகள் தனியே வருவது குறித்து சந்தோஷம்....ந்லல்லதே ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!