நான் கடந்த சென்ற வருடம்! திரும்பி பார்க்கிறேன்!

திரும்பி பார்க்கிறேன்!

2014ம் ஆண்டு முடிந்து 2015 துவங்கிவிட்டது. இன்னும் சிலநாட்களில் இந்த வலைப்பூவும் ஐந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறது. அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம். சென்ற ஆண்டில் தளிர் தளத்திலும் என்னிலும் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இன்று பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்! வேறவழி இல்லை! இன்று ஜோக் பதிவு எழுத வேண்டும். காலையில் இருந்து கோயிலில் வேலை! இப்போதுதான் சற்று ஓய்வு. ஜோக் வரவில்லை! வருடத்தின் முதல் நாள் பதிவு எழுதாமல் இருந்தால் எப்படி? அதனால் இந்த மொக்கையோடு ஆரம்பிப்போம்.

2014ன் ஆரம்பமே எனக்கு நல்லதொரு முன்னேற்றமாகத்தான் ஆரம்பித்தது. என்னுடைய பேஜ்வியு அதிகரிக்க ஆரம்பித்து இருந்தது. நான் மிகவும் விரும்பிய வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பு கிடைத்தது. ஜனவரி இறுதியில் துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை அந்தபொறுப்பில் இருந்தேன். எனக்குத் தெரிந்த நிறைய பதிவர்களை அறிமுகம் செய்தேன். சில புதியவர்களையும் அறிமுகம் செய்தேன். அந்த பொறுப்பு எனக்கு வலையுலகில் புதிய நட்புக்களையும் பெற்றுத் தந்து எனது தளம் இன்னும் சிலருக்கு அறிமுகம் ஆக உதவியது. வலைச்சரத்தின் ஆசிரியர் என்பது என்னுடைய ஓர் கனவு. அக்கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி! அத்துடன் சென்ற ஆண்டில் மட்டும் நிறைய முறை வலைச்சரத்தில் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். இது கூடுதல் போனஸ்.

 அதே பிப்ரவரி மாதத்தில் பாக்யா இதழில் எனது ஜோக்குகள் கவிதைகள் பிரசுரம் ஆகின பின்னர் மார்ச்சில் ஒரு கதையும் பிரசுரம் ஆனது. இதற்கு நண்பர் எஸ்.எஸ் பூங்கதிர் அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். முகநூலில் ஒரு சாட்டிங்கில் என்னை விசாரித்து கதை, கவிதை இருந்தால் அனுப்பி வையுங்கள் என்றார். உடனே பாக்யா இதழில் வெளியிட வைத்து எனது நீண்ட நா:ள் கனவான பத்திரிக்கைகளில் எழுதுவதை பூர்த்தி செய்யவைத்தார். என்ன ஒன்று என்னால்தான் தொடர்ந்து படைப்புக்களை அனுப்ப முடியவில்லை! என்னுள் ஒளிந்திருந்த எழுத்து திறமையை வெளிவரச்செய்த அவருக்கு மிக்க நன்றி.
   இதைத் தொடர்ந்து வாரமலர் இதழிலும் என் ஜோக் ஒன்று பிரசுரம் ஆனது. மேலும் இந்த ஆண்டில்தான் சொந்தமாக நிறைய ஜோக்குகள் எழுதி வலையில் வெளியிட்டேன். கவிதைகள் மட்டுமின்றி கதைகளும் இந்த் ஆண்டில் நிறையவே எழுதினேன். இந்த ஊக்கம் கிடைக்க பாக்யாவில் வெளியான என் படைப்புக்களே காரணம். அதற்கு பாக்யா ஆசிரியர் திரு பாக்யராஜ், திரு எஸ்.எஸ் பூங்கதிர் மற்றும் நிர்வாகத்தினருக்கு  எனது நன்றிகள்.

நான் பூஜை செய்யும் வாலீஸ்வரர் கோயில் பற்றிய தகவல் நிகழ்ச்சிகள் முதலில் ராஜ் டீவியிலும் பின்னர் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

   இந்த வருடத்தில் எனது பிளாக் பாலோவர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 200 கடந்து 210 பாலோவர்களை அடைந்தது.
  இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தை இந்த ஆண்டில் தான் பிறந்தது.  எனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது. அதில் அவள் சிறப்பாக ஏ + கிரேட் வாங்கி வருவது எல்லாம் மகிழ்ச்சியே! 

 இந்த ஆண்டில்தான் எனது வலைப்பூவில் எனது சொந்த இடுகை அதிகரித்து பகிர்வுகள் குறைந்தது. எழுத்தும் பிறர் வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தது. பக்கபார்வைகள் அதிகரித்தது. சினிமா குறித்து குறைவான அளவே எழுதியது. கிசுகிசுக்களை அறவே தவிர்த்தது என்ற முன்னேற்றங்கள் நடந்தன. வலைப்பூவின் முகப்பு படத்தை திரு முரளிதரன் அவர்கள் தாமாகவே முன்வந்து வடிவமைத்து தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த ஆண்டில்தான் versatile பிளாக்கர் அவார்டும் கிடைத்தது.

  இந்த ஆண்டில் துளசிதரன், கில்லர்ஜி, பாண்டியன், சாமானியன், கஸ்தூரி ரங்கன், மைதிலி கஸ்தூரி ரங்கன், உமையாள் காயத்ரி விச்சு, மாடிப்படி மாது, விசு, சொக்கன்,யாதவன்நம்பி சகோதரி ஏஞ்சலின்  ஊமைக்கனவுகள் விஜி, அய்யா முத்துநிலவன் ,முனைவர் ஜம்புலிங்கம் போன்ற ஆளுமைகளின்புதிய நட்புக்களை  பெற்றது மிகவும் மகிழ்ச்சியே! அதிலும் மதுரைத்தமிழன் என்னுடைய பாலோவர் ஆனது எனக்கு மகிழ்ச்சி! எப்படி என்றால் என்னைப்பற்றி எதிர்மறையாக சொன்னவர் என்னை புரிந்துகொண்டு தளத்திற்கு வருகை புரிந்து நட்பு பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த ஆண்டின் வருத்தம் வலைபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது. கில்லர்ஜி,   டிடி, ரமணி ஐயா போன்றோரை சந்தித்து மகிழ நினைத்திருந்தேன். தீபாவளி சமயம் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு என்பதால் மதுரை வர இயலாமல் போய்விட்டது வருத்தம் தந்தது.

கொன்றைவனத்தம்பிரான் அவர்கள் என்னுடைய இந்த் வலைப்பூ இந்த அளவிற்கு மாற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணி ஆவார். இந்த வருடம் அவர் என் வலைக்கு வந்து ஏதாவது சொல்வார் என்று நினைத்து இருந்தேன். வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தவர் அதன் பின் வரவே இல்லை! நிறையமுறை எதிர்பார்த்து மிகவும் ஏமாந்தேன். இதுவும் வருத்தம்.

என்னுடைய பதிவுகள் திருடப்படுகிறது என்று பரமு சிவசாமி என்ற அன்பரால் அறிந்தேன். பதிவுகள் பலரை சென்றடைவது, சினிமாவரை செல்வது மகிழ்ச்சி என்றாலும் திருடி எடுக்கப்படுகிறது என்பது வருத்தமே! மேலும் இந்த அன்பர் என்னை உசுப்பேற்ற பணக்காரத் திமிர் உள்ளவன், ஏழையை எள்ளி நகையாடுகிறீர்கள் என்று பொத்தாம் பொதுவாக சொன்னது வருத்தம் அளித்தது. ஒருவேளை இவர்தான் கொ.வ. தம்பிரானோ அல்லது அவரது உதவியாளரோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

 வலையுலகில் நான் அறிந்த நான் மதிக்கும் பிரபல பதிவர்கள் பலரின் தளத்திற்கு சென்று கருத்துரைகள் தந்தாலும் அவர்கள் என் தளத்தை எப்போதாவது ஒரு முறை கூட திரும்பிபார்க்காதது கருத்துரை தராதது மிகவும் வருத்தமே!
   இவ்வளவு வளர்ந்தும் முன்பு தமிழ்மணத்தால் தடை செய்யப் பட்ட பதிவராகவே இன்னும் இருப்பதால் தமிழ்மணத்தில் பதிவுகள் இணைக்க முடியாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

 மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட சித்தப்பா மகன் அருண்குமார் மஞ்சள் காமாலையினால் திடீரென உயிரை விட்டது இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம். வீட்டில் அனைவருக்கும் செல்லமாக இருந்தவனை காலன் செல்லமாக அழைத்துக்கொண்டது மிகவும் வருத்தம்.
   இந்த ஆண்டில் இரண்டு பதிவுகள் மதம் சம்பந்தமாக போதிய தகவல்கள் இன்றி எழுதி நிறைய பேஜ்வியு பெற்றாலும் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். இதனால் நிறைய மனசஞ்சலம் ஏற்பட்டுவிட்டது. இதனால் திருமதி கிரேஸ் பிரதிபா தேன்மதுர தமிழ் என் தளத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். இது மிகவும் வருத்தம் தந்தது. இதை எழுதி முடித்து பார்க்கிறேன்! நீண்டநாளுக்கு பின் அவர் என் தளத்திற்கு வந்து கருத்துரை தந்துள்ளார் மிக்க மகிழ்ச்சி!

  பேய்கள் ஒய்வதில்லை தொடரின் வெற்றிக்குப்பின் மற்றுமொரு தொடர் துரத்தும் நிழல் தொடங்கினேன்! அதை தொடர்ந்து முடிக்க முடியாமல் போனது வருத்தம். இந்த ஆண்டில் அதை கொஞ்சம் மாற்றி தொடர நினைக்கிறேன்!

இப்படி இந்த ஆண்டு என்னை நிறைய மாற்றி உள்ளது. இலக்கில்லாமல் ஏதோ பதிவிடவேண்டும் என்று இருந்த என்னை மாற்றி பதிவுகள் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்து ஒர் முதிர்ந்த மனிதனாகவும் மாற்றி அமைத்துள்ளது. பொதுவில் இந்த ஆண்டு எனக்கு மிகவும் ராசியானதாக அமைந்துவிட்டது. இன்னும் நிறைய இருந்தாலும் அதை அப்புறம் சொல்லுகிறேன்! மொக்கை ஓவரா போயிடுத்து இல்லை! இந்த புதிய ஆண்டும் என்னை வளர்க்கும் என்ற நம்பிக்கையில் இதோ பதிவுகளை எழுத ஆரம்பித்துவிட்டேன்! தொடர்ந்து வந்து ஆலோசனைகளைத்தரும் என்னுடைய பாலோயர்கள் நட்புக்கள், சைலண்ட் ரீடர்கள் அனைவருக்கும் நன்றி! தளிர் தொடர்ந்து நல்ல படைப்புக்களை தர முயற்சிக்கும்! நன்றி!

  அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    எங்களையும் திரும்பிபார்க்கவைத்து விட்டீர்கள்...பகிர்வுக்கு நன்றி
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    மனந்திறந்து சொல்லித் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்!
    பிறந்த வருடம் வளமும் நலமும் தர உங்கள் உயர்வைக்
    கண்டு வியக்கும் வலையுலகம்!

    தொடருங்கள் சகோ!...

    ReplyDelete
  5. இவாண்டும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துகள்
    சதாய ஸ்வாஹேத்யாஹ
    சதாயுர்வை புருஷசதவீர்ய::
    ஆயுரேவ வீர்யமவருந்தே
    சஹஸ்ராய ஸ்வாஹேத்யாஹ
    ஆயுர்வை சஹஸ்ரம்
    ஆயுரேவா வருந்தே
    ஸர்வஸ்மை ஸ்வாஹேத்யாஹ
    அபரிமித மேவாவருந்தே

    ReplyDelete
  6. புத்தாண்டு மலரட்டும்... புதுவாழ்வு தொடரட்டும்

    ReplyDelete
  7. வலையுலகில் நான் அறிந்த நான் மதிக்கும் பிரபல பதிவர்கள் பலரின் தளத்திற்கு சென்று கருத்துரைகள் தந்தாலும் அவர்கள் என் தளத்தை எப்போதாவது ஒரு முறை கூட திரும்பிபார்க்காதது கருத்துரை தராதது மிகவும் வருத்தமே!
    இந்த வார்த்தை 100க்கு100 உண்மை நண்பரே...
    என்னையும் தங்களின் மனதில் வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியான சந்தோஷம் அடைந்தேன் நண்பரே... தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இவ்வருடம் இன்னும் சிறப்பாக அமைய இறைவன் துணை செய்யட்டும் எனது புதிய பதிவு
    எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்.

    ReplyDelete
  8. ஜனவரி முதல் தேதியன்று கோயிலில் வேலைகள் எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது. இருந்தும் சோர்வடையாமல், பதிவிட்டதை கண்டு மிக்க மகிழ்ச்சி மற்றும் பாராட்டுக்கள்.

    "//வலையுலகில் நான் அறிந்த நான் மதிக்கும் பிரபல பதிவர்கள் பலரின் தளத்திற்கு சென்று கருத்துரைகள் தந்தாலும் அவர்கள் என் தளத்தை எப்போதாவது ஒரு முறை கூட திரும்பிபார்க்காதது கருத்துரை தராதது மிகவும் வருத்தமே!//"

    இந்த அனுபவம் எனக்கும் உண்டு.

    சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் சிறக்க என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மனதில் உள்ள நிறைகுறைகளை தெளிவாக... உண்மையாக கூறி உள்ளீர்கள்... இந்த ஆண்டு மேலும் சிறக்க +

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  11. இந்த வருடமும் சிறப்பாக எழுத வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  12. நடு நிலையான பரபட்சமற்ற சுய அலசல்
    மனம் கவர்ந்தது
    முதிர்சியடைந்ததை எழுத்தே காட்டிக் கொண்டிருக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மனம் திறந்த வார்த்தைகள், உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன...

    பதிவுகள் திருடப்படுகின்றன - இதற்கு என் ஒரே பதில் - தரமான பதிவுகள் திருடப்படும். தாங்கள் தரமான பதிவுகளை எழுதுகிறீர்கள் என்று அர்த்தம்.

    தங்களது பதிவுகளுக்கு அதிகம் நான் பின்னூட்டம் எழுதியதில்லை, எப்போதாவது தான். இருந்தாலும் எல்லா பதிவுகளையும் படித்துவிடுவேன். இனி தொடர்ந்து கருத்துரையிடுகிறேன்.

    நன்றி சுரேஷ் அண்ணா....

    ReplyDelete
  14. வணக்கம் சகோ..
    ஆகா..இப்படி நினைத்துவிட்டீர்களா சகோ? பதிவுகளுக்கு என் கருத்தைச் சொன்னேனே சகோ,,வருத்தம் ஒன்றும் இல்லை. அந்த பதிவுகளுக்குப் பிறகு என் வருகை குறைந்ததா? Coincidence only..நூல் வெளியீடு, வெளிநாட்டுப் பிரயாணம் என்று நேரக் குறைபாடு தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை சகோ..உங்கள் தளம் வரவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன்..ஏதோ ஒரு வேலையால் தள்ளிப்போய் விடும்..ஒருவழியாகப் புத்தாண்டில் வாழ்த்துச் சொல்லவந்தேன்.. மீண்டும் இணையவலம் துவங்கியாயிற்று..தொடரவே இங்கு வந்தேன் சகோ,,நல்லதாகப் போயிற்று.. :) மனதில் இருப்பதைச் சொன்னது மகிழ்ச்சி சகோ..இப்பொழுது தெளிவாகிவிட்டது அல்லவா?

    இந்த வருடமும் பல பதிவுகள் தந்து வெற்றிநடைபோட வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருத்தம் போய்விட்டதா சகோ? என் தளத்தில் உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.

      Delete
  15. சுரேஷ் நண்பரே! முதலில் நன்றி! எங்களையும் நினைவு கூர்ந்ததற்கு. மிக்க மிக்க நன்றி!

    அழகான சுய அலசல்! இரண்டும் கலந்து + , - கலந்து கட்டி....அருமை...

    தாங்கள் ஒரு சிறப்பான படைப்பாளர் அதனால்தான் பதிவுகள் திருடப்படுகின்றன. அதற்கு பூட்டு போட டிடி, கில்லர்ஜி, மதுரைத்தமிழன் அவர்களைத் தொடர்பு கொண்டால் எப்படி என்று சொல்லுவார்கள். அவர்கள் தளங்கள் பூட்டு போடப்பட்டது. இந்த மூன்று பேரும் உங்கள் நன்பர்கள்தானே பின்னே ஏன் நீங்கள் போடவில்லை என்று கேட்கத் தோன்றலாம்....எங்கள் பதிவுகள் திருடப்படமாட்டா என்ற அசாத்தியமான நம்பிக்கையில்....நெவர்....ஹஹஹஹ்ஹ்

    ஜோக் அசைட்...தங்கள் எழுத்துக்கள் மேன் மேலும் உயரும் நண்பரே! நிச்சயமாக இந்த புது வருடத்திலும் தங்கள் எழுத்துக்கள் வளர்ந்து தங்களுக்கு புகழ் சேர்த்து, தங்கள் கனவுகள் பலித்திட அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. தாங்கள் செய்வதே பூஜையல்லவா. எத்தனை பெரிய ஒரு விடயம்!!!! அந்த இறைவன் தங்களுடன் எப்பொதும் இருப்பார்!!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இந்த ஆண்டும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் சுரேஷ்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!