ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது? கதம்பசோறு பகுதி 55

கதம்பசோறு! பகுதி 55


போக்குவரத்து தொழிலாளர் போராட்டமும் உறங்கும் அரசும்!

       ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் போராட களம் இறங்கிவிட்டார்கள். அவர்களது கோரிக்கைகள் ஒன்றும் தள்ளிவிடக் கூடியதாக இல்லை! மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்ல முக்கிய வாகனம் பேருந்துதான். அலுவலகம், பள்ளி, பொழுதுபோக்கிடங்கள் என்று எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து மிக அவசியம். திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே போராட்டம் தொடங்கிவிட தமிழ்நாடு ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அதுவும் விழா நாட்களில் இந்த மாதிரியான போராட்டங்கள் விழாவையே குலைத்துவிடும். வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கும் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் பேருக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் ஜனத்திரளுக்கு அவை போதுமானதாக இல்லை! தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமூக முடிவுக்கு வராமல் அரசு உறங்கிக் கிடக்கிறது. அவர்களுக்கென்ன இப்போது தேர்தலா வரப்போகிறது? அப்போதுதான் ஏழைகளின் கஷ்டம் அவர்களுக்குப் புரியும்.

கடலில் விழுந்த விமானம்!

    காணாமல் போன  ஏர் ஏசியன்   விமானம் கடலுக்குள் நொறுங்கி வீழ்ந்துவிட்டதாக வந்த தகவல் மனதை பிழிவதாக அமைந்தது162 பேர் ஜலசமாதி அடைந்தது எதனால்? விமானத்தின் தொழில்நுட்ப கோளாறா? விமானிகளின் தவறா?. நிறைய விமானவிபத்துக்கள் மற்றும் கடத்தல்கள் விமான பயணத்தையே பாதுகாப்பு இல்லாதவையாக மாற்றிவிட்டது. இதில் பயணித்த பயணிகளின் உறவினர்களின் நிலை இரக்கத்திற்கு உரியது. எத்தனை இழப்பீடு கொடுத்தாலும் இறந்தவர்களை மீட்டுவிட முடியுமா? எந்த பாதுகாப்பும் வழங்காத இதுபோன்ற விமான நிறுவனங்களில் விமானப் பயணம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணி தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு புத்தாண்டு மிகவும் சோகமானதாக அமைந்துவிட்டது வேதனைக்குரியது.



பெங்களூர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்

   பெங்களூரில் கடந்த பதினெட்டாம் தேதி குண்டுவெடிப்பில் உயிரிழந்த பவானியின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டு உள்ளது. அவரது மகள் இன்னும் தன் தாய் இறந்ததை நம்ப மறுக்கிறாள். அவரது இழப்பு அந்த நடுத்தரக் குடும்பத்தை மிகவும் பாதித்து உள்ளது. பெங்களூரில் தொடர்ந்து குண்டுவெடிப்புக்கள் நிகழ்வதும் மக்கள் பாதிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. அங்கு வசிப்பதற்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே இத்தகைய குண்டுவெடிப்புக்கள் காட்டுகின்றன. நம் தமிழக அரசியல் கட்சிகள் இந்த நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டன. உயிரிழந்த இத்தனை நாள் கழித்து உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் வீட்டைச்சுற்றி சாக்கடை ஓடுகின்றது. அவரது மரணத்திற்கு ஒரு அரசியல்வாதி கூட வருத்தம் தெரிவிக்கவில்லை! சவ அடக்கத்தில் பா.ஜ. தமிழிசை மட்டும் கலந்து கொண்டுள்ளார். இதுவே பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கே இதுமாதிரி உயிர்விட்டிருந்தால்  அவர்கள் ஓடிவந்திருப்பார்கள். தமிழகத்தில் ஒரு மனிதனின் உயிர்மீது யாருக்கும் அக்கறை இல்லை!

கிழக்கு கடற்கரைச்சாலையின் அபாயங்கள்!

    ஈ.சி.ஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச்சாலை அதிவேக பயணங்களுக்கு ஆபத்தானது என்ற கருத்து இருந்தது. இப்போது அந்த சாலையில் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்துவருவது அந்த சாலையின் பெயரை கெடுத்துவருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் அந்த பக்கம் இருப்பதுடன் நீண்ட பீச் இது போன்ற குற்றங்களுக்கு உதவியாக அமைந்துவிடுகிறது. யாரும் தொந்தரவு செய்யாத தனிமையை விரும்பும் காதலர்கள் இந்த சாலையை தேர்ந்தெடுக்க குற்றவாளிகளும் இதையே தேர்ந்தெடுத்து தொலைத்துவிட்டார்கள்! சென்ற வாரத்தில் நீலாங்கரை அருகே ஒர் கல்லூரி மாணவி காதலருடன் பேசிக்கொண்டிருந்த போது போலீஸ் என்று சொல்லி ஒருவர் ஏமாற்றி அழைத்து சென்றிருக்கிறார். அவரிடமிருந்த தப்பித்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் கூற மருத்துவ பரிசோதனையில் அப்படி நடக்கவில்லை என்று தெரிந்தது. எப்படியோ போலீஸ் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டது. அவனும் ஓர் ஐ.டி ஊழியன்.திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. பல பெண்களிடம் இது போன்ற குற்றங்கள் புரிந்துள்ளான். சிறுவயது முதல் தகாத பழக்கங்கள் ஏற்பட்டதால் இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளான். சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறும் இந்த சாலையை எப்படி காக்கப் போகிறார்கள் தெரியவில்லை!

தோனி ஆட்டம் ஓவர்!

    மெல்போர்னில் போராடி டிரா செய்த தோனி டெஸ்டில் இருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டார். ஓரிரு வருடங்கள் முன்பே டெஸ்ட்டில் இருந்து விலகிவிடுவேன் என்று சொல்லியிருந்தார். இப்போது சரியான தருணத்தில் விலகி இருக்கிறார். இந்த தொடர் ஆரம்பத்திலேயே அல்லது இறுதியிலோ விலகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். போகட்டும் பதவி ஆசை யாரைவிட்டது. புதிய கேப்டன் கோஹ்லி. முதல் டெஸ்ட்டினை போலவே கடைசி டெஸ்டிலும் வித்தியாசங்கள் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
 ஆனாலும் தோனியின் இந்த திடீர் ஓய்வு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அணியினருடன் தோனிக்கு சுமூக உறவு இல்லையோ குறிப்பாக கோஹ்லியுடன் என்ற கேள்வி எழுகிறது. கேப்டன் பொறுப்பை மட்டும் துறந்து இருக்கலாமே ஏன் ஓய்வையும் அறிவித்தார் என்கிறார்கள். நம் நாட்டில் தான் ஒரு பிளேயர் நன்றாக ஆடிவிட்டால் சாகும் வரை அவரை விடமாட்டார்கள் தொடர்ந்து சொதப்பினாலும் தாங்குவார்கள். என்னை பொறுத்தவரை தோனியின் முடிவு சரியென்றே தோன்றுகிறது உலக கோப்பை முடிந்தபின் மற்றவகை போட்டிகளுக்கும் அவர் டாட்டா சொல்லலாம்! தோனி ரசிகர்கள் இந்த இழப்பை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

கிச்சன் கார்னர்!
  கதம்ப இட்லி! மங்கையர் மலரில் பரிசுபெற்றசமையல் குறிப்பு
 செய்முறை எழுதியவர்: கலைவாணி


   தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, தலா 100 கிராம். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1.1/2 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் கோதுமை ரவை போல அரைக்க வேண்டும்.
  தாளிக்க தேவையானவை: நல்லெண்ணெய் தேவையான அளவு, கடுகு ½ ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு 10 வரமிளகாய் -2 மோர்மிளகாய் -4 கறிவேப்பிலை சிறிது, பெருங்காயம் சிறிது, எலுமிச்சம்பழம் 1 மஞ்சள்தூள் சிறிது, தேங்காய் துருவல்  3 டீஸ்பூன், சமையல்சோடா- 1 சிட்டிகை , உப்பு தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு முந்திரி, மிளகு, வரமிளகாய், பொடியாக கிள்ளிய மோர்மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல் இவை அனைத்தையும் அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி எலுமிச்சம் சாறு, சமையல் சோடா ,தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு டம்ளர்களில் நல்லெண்ணை ½ ஸ்பூன் ஊற்றி பின் ஒரு கரண்டி மாவு ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்
  தண்ணீர் உள்ள பாத்திரத்தில் டம்ளர்களை வைத்து பின் கூறாக உள்ள கத்திக்கொண்டு எடுக்கவும். இந்த இட்லிக்கு இட்லிபொடி புதினா சட்னி தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.


டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

இஞ்சி பச்சை மிளகாயை அரைத்து வெங்காயத்துடன் வதக்கி ரவை உப்புமா செய்தால் வாசனையாக இருப்பதுடன் மிளகாயும் வாயில் கடிபடாது.

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது படிகாரத்தை போட்டு காய்ச்சி இறக்கவும். ஆறியதும் அந்த நீரில் வாய் கொப்பளித்துவர துர்நாற்றம் நீங்கும்.

சிறு குழந்தைகளின் ஷூவிற்கு பாலீஷ் தினமும் போட முடியாவிட்டால் ஒருசொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் போதும் பளபளப்பாகிவிடும்.

உலர்ந்த ரோஜா இதழ்களை நீரில் ஊறவைத்து அதில் தேன் விட்டு சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கும் உடல் சூடு தணியும்.

சளி இருமல் தொல்லையா? கறிமுள்ளி இலைச்சாறு அல்லது தூதுவளை இலைச்சாறுடன்  தேன் கலந்து சாப்பிட குணமாகும்.

துவையல் அரைக்கும்போது புளிக்கு பதிலாக மாங்காயை நறுக்கி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

பதிவர் அறிமுகம்!

 கோயில் பிள்ளை

கோயில் பிள்ளையின் செதுக்கல்கள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரும் அமெரிக்கா வாசி என்று நினைக்கிறேன்! சுவையான பல தகவல்களை இயல்பான நடையில் எழுதுவது இவரது பலம்! நகைச்சுவையில் அசத்துகிறார். சமூக விழிப்புணர்வுடன் புகையில்லா உலகம் புத்தாண்டில் மிளிர வேண்டும் என்று எழுதி உள்ளார். இவரது தள இணைப்பு   கோயில் பிள்ளையின் செதுக்கல்கள்!



ஏகாதசி அன்று ஏன் சாப்பிடக் கூடாது?

   உலகில் மூடப்படாத தொழிற்சாலை சமையலறை. ஓயாது வேலை செய்வது வயிறு. ஆண்டின் அனைத்து நாட்களிலும் இவை இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. மனித கவனமும் பெரும்பாலான நேரம் இதற்கே செலவழிகிறது. ஏகாதசியன்று மட்டும் இந்த தொழிற்சாலையை மூடிவிட்டால் பக்தர்களுக்குப் பெருமாளிடம் 100 சதவிகிதம் கவனம் வந்துவிடும். அதனால் சாப்பிடக் கூடாது என்பது உருவாகி இருக்கலாம்.
  உப என்னும் சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் இருப்பது என்று அர்த்தம். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளையே நினைத்து இருக்கும் உயிர்வாசமே உபவாசம்.
(தமிழ் இந்துவில் படித்தது)

படிச்சதில் பிடிச்சது!
டாக்டரை சந்திக்காத நோயாளி!


  மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவன், டாக்டர்! நான் எப்பவுமே பரபரப்பாக இருக்கிறேன்! உள்ளத்திலே அமைதியே இல்லை! என்றான்.
   அவனை நன்கு பரிசோதித்த டாக்டர், கவலைப்பட தேவையில்லை! உங்களுக்கு ஒரு நோயும் இல்லை! யார் யார் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குகிறார்களோ அவர்களைவிட்டு சிறிது காலம் விலகி இருங்கள் எல்லாம் சரியாகிவிடும். வாரத்திற்கு ஒரு முறை என்னை வந்து பாருங்கள் என்றார்.
  இரண்டுவாரம் கழிந்தது நோயாளி வந்து டாக்டரை பார்க்கவில்லை! என்ன ஆயிற்றோ என்ற கவலையில் நோயாளிக்கு போன் செய்தார் டாக்டர்.
  “நீங்கதானே டாக்டர், எரிச்சல் ஏற்படுத்தறவங்களைக் கொஞ்ச காலம் பார்க்க வேண்டாம் என்று சொன்னீர்கள். உங்களைவிட யாரும் எனக்கு அதிக எரிச்சல் தருவதாகத் தெரியவில்லை. அதனால்தான் பார்க்க வரவில்லை! என்று பதில் சொன்னார் அந்த நோயாளி.

(முட்டாள் ஜோக்ஸ் என்ற நூலில் இருந்து)

டிஸ்கி} கதம்பசோறின் வடிவம் புத்தாண்டில் இருந்து மாற்றி அமைக்கபட உள்ளது. இந்த ஆண்டின் கடைசி கதம்பசோறு பதிவு இது. வேளைப்பளுவின் ஊடே எழுதி உள்ளேன்! ஆண்டின் முதல் பதிவு நாளை எழுதுவேனா என்பது சந்தேகமே! பார்ப்போம்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கதம்பச் சோறு கதம்ப இட்லியையும் தந்திருக்கின்றது! புதிய ஒரு ரெசிபி. அருமை செய்து பார்க்க வேண்டும்...

    முதல் செய்திகள் மனதை மிகவும் வருத்தியது உண்மை! செய்தித்தாளிலும், இங்கும்.....புத்தாண்டு இவர்களுக்கு மிகவும் சோகமான ஒன்றே. இனியாவது இவர்களுக்கு நல்லது நடக்கட்டும்..இழப்பிலிருந்து மீண்டு...

    ஹஹஹ் முட்டாள் ஜோக்ஸ் பகிர்வு....

    கோயில் பிள்ளையை இன்று நாங்களும் அவருக்குப் புத்தாண்டு பரிசாக அறிமுகப்படுத்தலாம் எங்கள் தளத்தில் என்று நினைத்து எழுதி வைத்திருந்தோம்....நீங்களும் அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள்....நாங்களும் செய்யலாம் அல்லவா சுரேஷ் நண்பரே!

    ReplyDelete
  2. சுரேஷ் நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனித இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் !

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புச் சகோதரா !என்றுமிலாதவாறு
    மிகச் சிறந்த ஆக்கங்களைத் தொடர்ந்தும் எழுதுவதன் மூலம் தங்களின்
    புகழ் மென்மேலும் உயர வாழ்த்துகின்றேன் .தங்கள் குடும்பத்தினருக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  5. கதம்ப சோறு ரொம்ப ஹெவி இருக்கு:) சார் க்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. கதம்பம் ஜோர்
    வாழ்க வளமுடன்
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  8. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. எவ்வளவு விசயம் சகோ!! நன்று
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  13. கதம்பச்சோறு அருமை. புதிய பொலிவுடன் வரும் கதம்பச்சோறை பார்க்க ஆவல்.
    வைகுண்ட ஏகதேசியின் தத்துவம் சூப்பர்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அருமையான கதம்ப சோறு......

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எவ்வளவு விசயம். கதம்ப சோறு உண்மையாகவே நன்றாக இருந்தது, நன்றி. நம்பிக்கை தானே நாளை நம்புங்கள் எழுதுங்கள்,
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!