அம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்!

அம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்!


 அம்மாவை சிறையில் அடைத்தாலும் அடைத்தார்கள். அதிமுகவினர் அதை எதிர்த்து நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினம் ஒரு போராட்டமும் வேண்டுதலும் செய்து தமிழக மக்களை உச்சிகுளிர?.. வைத்துக் கொண்டு இருக்கின்றனர். நாமும் நம் பங்குக்கு சில யோசனைகளை முன்வைப்போம்.

 தமிழக அமைச்சர்கள் எல்லோரும் அம்மாவுக்காக தாடி வளர்க்கிறார்களாம். வெளியில் வந்தால் மீசையும் தாடியும் மழித்து விடுவார்களாம். இதனால் ஏதாவது பிரயோசனம் உண்டா நரைத்துப்போன முடியும் தாடியும் சாமிக்கு தேவையா? ஏற்கனவே திருப்பதியிலும் பழனியிலும் இன்னும் எத்தனையோ ஊர் தெய்வ கோயில்களிலும் கொட்டிக்கிடக்கிறது முடி! அதனால் கடவுள் கோபித்துக் கொண்டு ஜாமின் கோரிக்கையை நிராகரித்து விடலாம். எனவே அசைவச் சாமியாக இருந்தால் ஆடு கோழி வளர்க்கலாம். அதுவும் ஒன்று இரண்டு என்று இல்லாமல் அம்மாவின் ராசி எண்ணுக்கு தகுந்தபடி நிறைய ஆடுகோழிகளை வளர்த்து கோவிலுக்கு நேர்ந்துவிட்டால் கோவிலுக்கு வருமானமும் கிடைக்கும் அம்மாவுக்கு விடுதலையும் கிடைக்கும். சைவ சாமிகளாக இருந்தால் ஆடு கோழிகளை கொடுத்தால் கோபித்துக் கொள்ளும். அதனால் நட்சத்திரமரம் அது பூச்செடிகளை கோயிலில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்களாம். கோயில்களாவது அழகு பெறும். கோயிலுக்கு பூசைக்கு பூவும் கிடைக்கும். இதான் சாக்கு என்று சில அமைச்சர்கள் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டாலோ சாமிகுத்தம் ஆகிப்புடும் சொல்லிப்புட்டேன்!

   தாடி வளர்க்கும் அமைச்சர்கள் அப்படியே கோட்டைக்கு நடை பயணமும் வரலாம்.அம்மா விடுதலை ஆகும் வரை நடந்து வந்தால் அவர்களுக்கு வேண்டுதலும் ஆயிற்று. உடம்புக்கு நல்லதும் ஆயிற்று. மக்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று.

கோர்ட் வாசலில் குலவை சத்தம் போட்டு அம்மாவுக்கு ஜாமீன் கேட்டு போராடலாம் மகளீர் அணியினர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிதான் தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் கோயில்களில் யாகம் செய்வதற்கு பதில் அவர் வீட்டின் முன்னால் பெரிதாக யாககுண்டம் அமைத்து யாகம் வளர்த்தால் அந்த புகையின் கொடுமை தாளாது அவர் ஜாமீன் கொடுத்து விடலாம். இதில் ஒரு பின்விளைவும் இருக்கிறது. புகை அவருக்கு பகையாகி கோபம் கொண்டு ஜாமீன் தராமலும் போகலாம்.

 தமிழ்நாட்டையே அம்மா கிட்ட கொடுத்திருக்காங்க மக்கள்! அப்ப அவங்க சேர்த்த சொத்தும் தமிழ்நாட்டிலயே அடக்கம் தானே அப்புறம் எப்படி கொள்ளையடிச்சாங்க?  இப்படி எடக்கு மடக்காக வக்கில்களுக்கு எடுத்து கொடுத்து போராடலாம்.

அரசு வக்கீல் பவானி சிங்! அவர் தமிழரு இல்லே! அதனால தமிழ்நாட்டு கேஸ்ல வாதாடக் கூடாதுன்னு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம்.


பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அம்மா அடைப்பட்டு இருப்பதால் அம்மாவை தெய்வமாக கருதும் அதிமுகவினர் அங்கேயே பொங்கல் வைத்து சிறையை அங்கப்பிரதட்சணம் செய்து அதையே ஒரு கோவிலாக மாற்றலாம். இதனால் எரிச்சல் அடைந்து அம்மாவுக்கு ஜாமின் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள்.

சுப்ரமண்யம் சாமி கேஸ் போட்டதால் அவர் பேர் கொண்ட முருகர் கோயில்கள்ல மொட்டையடிச்சு சுப்ரமண்யம் சாமியோட மனசை குளிரவைக்கலாம்.

அசைவமே சாப்பிடக் கூடாதுன்னு ஜோஸ்யர்கள் சொல்லி இருக்கிறதாலே அம்மாவுக்கு ஜாமின் கிடைக்கற வரை அசைவ ஓட்டல்களை திறக்க கூடாதுன்னு ஒரு போராட்டம் செய்து அம்மாவை குளிர வைக்கலாம்.

அம்மாவுக்கு ஜாமீன்கிடைக்கறவரைக்கும் கடல்ல ஒரு மீனும் பிடிக்க கூடாதுன்னு தடை விதிக்கலாம்.

கர்நாடகா காவிரி தண்ணியை தராவிட்டாலும் நாங்க தண்ணி காட்டுவோம்னு கூவம் தண்ணிய கர்நாடாகவுக்கு திருப்பிவிட்டா அந்த நாத்தம் தாங்கமா அம்மாவுக்கு ஜாமின் கிடைக்கலாம்!

அதிமுக வக்கில்கள் ஏடாகூடமா பேசறதாலே ஜாமீன் கிடைக்காம போயிருது. அதனால அவங்க எல்லோரும் அலகு குத்திக்கிட்டு கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் பரிதாபப்பட்டு ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திடலாம்.

அதிமுக மகளிர் அணியினர் ஜட்ஜ் வீட்டு முன்னாடி ஒப்பாரி வைச்சு அழுதால் பெண்ணுன்னா பேயும் இறங்கும்னு சொல்றதுனால ஜட்ஜும் இறங்கி ஜாமீன் கொடுக்கலாம்.

சரத்குமாருக்கு நாட்டாமை வேசம் போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா அவரோட நாட்டாமை தீர்ப்பை மதிச்சு ஜாமீன் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

அதிமுக காரங்க எல்லோரும் தங்களோட பேரை ‘ஜாமீன்’னு மாத்திகிட்டா கோர்ட்ல ஜாமீன் கிடைக்காட்டியும் ஒருத்தரை ஒருத்தர் ஜாமின்னு கூப்பிட்டு திருப்தி அடைஞ்சிக்கலாம்!

 அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் யாரும் தீபாவளிக்கு மட்டுமில்ல எப்பவும் மைசூர் பாகு செய்யக்கூடாது விற்க கூடாதுன்னு போராடலாம். அப்படியே மைசூர் போண்டாவையும் மைசூர் சேண்டல் சோப்பையும் தடை செய்யலாம்.

  சிறுவயது குழந்தைகளை நீதிமன்றத்தில் நிறுத்தி எங்களுக்கு அம்மா வேணும்னு அழச்சொல்லாம்! அதனால நீதிபதி மனம் இரங்கி ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திடலாம்!

  தலைமை நீதிபதி வீட்டுக்கு கிலோ கணக்குல குலோப் ஜாமூன் அனுப்பிக்கிட்டே இருக்கலாம்! அம்மாவுக்கு வேணும் ஜாமீன்! அதுவரைக்கும் அனுப்புவோம் ஜாமூன்! அப்படின்னு எதிர்கட்சி காரங்களுக்கும் ஜாமூன்  அனுப்பி போராடலாம்!
இன்னும் நிறைய யோசனை இருந்தாலும் ரத்தத்தின் ரத்தங்கள் நலன் கருதி இத்தோட நிறுத்திப்போம்!

(பதிவில் உள்ள கருத்துக்கள் நகைச்சுவைக்கே! யாரையும் புண்படுத்த அல்ல.)


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!.

Comments

  1. நீங்கள் சொவது காமெடியாக இருந்தாலும் இதைக்கூட செய்வார்கள் அதிமுகவின் அடிமைகள்...

    ReplyDelete
  2. என்ன சுரேஷ் சூப்பர் ஐடியா எல்லாம் கொடுத்திருக்கிங்க, இவனுங்க இதை எல்லாம் செய்தாலும் செய்வாங்க.

    ReplyDelete
  3. போட்டுத் தாக்கறீங்க சுரேஷ். துக்ளக் சத்யா காமெடி படிக்கிறா மாதிரி இருக்கு. சூப்பர்.

    ReplyDelete
  4. எங்கேயோ படித்த நினைவு.
    தொண்டர்கள் எல்லாம் மஞ்சள் தூண்டு போர்த்தி கொள்ளவேண்டும் என்று, யாரோ ஒரு ஜோசியர் சொன்னார். உங்கள் யோசனை எல்லாம் சூப்பர். நல்ல நனைச்சுவை பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல யோசனைகள் - :)))

    ரசித்தேன் சுரேஷ்.

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை கிலோ என்ன விலை என்று கேட்க ஆரம்பித்துவிட்ட தமிழ் கூறும் நூல் உலகில் இன்னொரு கல்கி போன்ற சரளமான நகைச்சுவையுடன் தங்கள் பதிவு எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொல்லும் அதே வேளையில் நமது முதல்வரின் அநியாய சிறை தண்டனையை கண்டிக்காமல் கேலிக்கூத்தாக்கியிருப்பதை கண்டிக்கவும் செய்கிறேன். இனி என் விமர்சனம் சஸ்ட் உங்கள் எழுத்துக்கே அன்றி உள்ளடக்கத்துக்கு அல்ல.
    நகைச்சுவை என்பதை யாரும் உற்பத்தி செய்துவிட முடியாது பொருள் பருத்த வார்த்தைகளை பங்காக கோர்த்து அதில் ஒரு பொருள் நேர்பட நிற்க தொக்கி நிற்கும் சிறு தொகுதியில் மறைபொருள் இலை மறைகாயாக இயங்கி வரும்போது படிப்பவர் இதழ்களில் முறுவலை தருவிப்பதே நகைச்சுவை என்பார் அறிஞர் பரிதிமாற் கலைஞர்.
    அடுத்த முறையேனும் நல்ல அரசியல் கலவாத கட்டுரையில் பகடி எழுதுங்களேன் ப்ளீஸ். ஆனாலும் கூட உங்களு அரசியல் ச’ட்டையர் அருமையாய் வருதுங்க.
    சமுதாயப் பார்வையும் சாகிர்த்த கீர்த்தி நிறைந்த சமுத்துவ எழுத்தும் கொண்ட உங்கள் எழுத்து என்னை வசிகரிக்கிறது. அதுவும் நீங்களூ புரட்சிக் கருத்துக்களுகு வலியுறுத்துபவராக இருப்பதால் அதன் மதிப்பு இரட்டிப்பாகிறது.

    பரமுசிவசாமி

    ReplyDelete
  7. //நமது முதல்வரின் அநியாய சிறை தண்டனையை கண்டிக்காமல் கேலிக்கூத்தாக்கியிருப்பதை கண்டிக்கவும் செய்கிறேன்//
    இதில் என்ன அநியாயம் என்று எடுத்து சொன்னால் நன்றியாக இருப்பேன். மொத்த சொத்து 66 கோடி என்று அவர்கள் தான் வருமான அதிகாரிகளிடம் எழுதி கொடுத்து இருகின்றார்கள், அது எப்படி வந்தது என்றால், கணக்கு காட்ட முடியவில்லை. அதனால் வந்ததின் விளைவு. கணக்கை காட்டி விட்டு பேஷா இல்லத்திற்கு செல்லலாமே.

    ReplyDelete
  8. அருமையான யோசனைகள். பார்த்து அவர்கள் உங்களிடம் இதுக்கு ட்யூஷன் படிக்க வரப்போறாங்க!!!

    ReplyDelete
  9. Ji, padikka padikka sirippai adakka mudiyavillai…… nalla pathivu, migavum rasithen.

    ReplyDelete
  10. ஹாஹாஹஹ் செம யோசனைகள் நண்பரே! எதுக்கும் காப்பி ரைட் போட்டு வைச்சுக்கங்க.....

    ReplyDelete
  11. சத்தியமா ரொம்ப சிரிச்சோம்.....ஒரு சட்டைரிக்கல் ட்ராமா போடலாம் போல....

    ReplyDelete

  12. (பதிவில் உள்ள கருத்துக்கள் நகைச்சுவைக்கே! யாரையும் புண்படுத்த அல்ல.)

    Super Super Super

    from Devakottai

    ReplyDelete
  13. கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பவர்கள்கூட ,உங்க ஆலோசனைகளைப் படித்தால் ஆனந்தக் கண்ணீர் விடுவார்கள் )

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!