தன் குற்றம்

தன் குற்றம்

“ என்ன மாமி! சவுக்கியமா? இப்பல்லாம் நம்ம ஆத்து பக்கம் வர மாட்டேங்கிறீங்க?” என்ற குரலைக் கேட்டு முருகர் சன்னதியில் கொடிமரத்தில் சேவித்துக் கொண்டிருந்த வசந்தா மாமி நிமிர்ந்தாள்.
  “யாருடாப்பா அது? சங்கரனா? நன்னாயிருக்கியாடா கொழந்தை! ஆத்துல தோப்பனார், அம்மால்லாம் சவுக்கியமா? கொழந்தையை ஸ்கூல்ல சேர்த்திட்டியா?” விசாரித்துக் கொண்டே போனார்.
   இதுதான் வசந்தாமாமியிடம் உள்ள ஒரு நல்லப் பழக்கம்! பழகிவிட்டால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு விசாரிப்பார். நாம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் பதிலுக்கு ஒருமணி நேரம் நம்மை விடமாட்டார். இதற்காகவே பார்த்தும் பார்க்காதது போல நழுவி விடுவது உண்டு. வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காப்பீடு முகவர், மல்டிலெவல்மார்க்கெட்டிங் என்று எதையாவது இன்னும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருப்பார்.
   தன்னுடைய பணி நிமித்தமாக அடிக்கடி வெளியே வருவார். அப்போதெல்லாம் மதிய வேளையில் எங்கள் ஊரில் உள்ள குருக்கள் வீட்டில் தான் ஆகாரம். வெளியே சுற்றிக் களைத்துப் போய் வருவார்.  நல்ல உச்சிவெயில் மண்டையை பிளக்கும். “ஏம் மாமி? இவ்ளோ கஷ்டப்படறேள்? உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த தொழில் தேவையா? என்பார் குருக்கள் மாமா.
    “அதில்லே மாமா? இந்த உடம்பு இப்படியே சுத்தி சுத்தி பழகிறுச்சு! இப்படி சின்ன வயசுல இருந்து உழைச்சுத்தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன். சட்டுன்னு விட்டுட முடியலை! ஏதோ உடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும் பார்ப்போம்! அப்புறம் விட்டுடலாம்” என்பார்.
    “ சொன்னா கேக்க மாட்டீங்க! இந்த வேகாத வெயில்ல எதுக்கு வீண் அலைச்சல்? நீங்க சம்பாதித்துதான் பொழுது விடியனும்னு இல்லே! இருந்தாலும் உங்களாலே சும்மா இருக்க முடியாதுன்னு சொல்றேள்! சரி உங்க இஷ்டம்!”  என்பதோடு முடித்துக் கொள்வார் குருக்கள் மாமா.
    ஒரு புன்னகையுடன் அவர் வீட்டில் நுழைபவர் சாயங்காலம்தான் வெளியில் வருவார். மதிய ஆகாரம் மாலை காபி எல்லாம் குருக்கள் வீட்டில்தான். மதியத்துக்கு மேல் மாமியை பார்க்க வேண்டும் என்றால் குருக்கள் ஆத்தில் பார்க்கலாம் என்று எல்லோருமே சொல்வார்கள். அப்படி ஒரு பிணைப்பு குருக்கள் வீட்டோடு மாமிக்கு இருந்தது.
   கால ஓட்டத்தில் குருக்கள் மாமா இறந்து போக, மாமி குருக்கள் ஆத்துக்கு வருவது குறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும் தொழிலை விடவில்லை! எங்கள் ஊருக்கு வருகிறார் போகிறார். ஆனால் குருக்கள்வீட்டுப் பக்கம் வருவது குறைந்துவிட்டது. வந்தாலும் தங்குவது இல்லை! மதிய சாப்பாடு கூட இப்போது கட்டி எடுத்து வந்துவிடுகிறார். அங்கேயே கோவிலில் அமர்ந்து சாப்பிட்டு கிளம்பி விடுகிறார்.
   இன்று கோவிலில் பார்த்ததும் இதைத்தான் கேட்க வேண்டும் என்று தோன்றியது சங்கரனுக்கு.  “ஏன் மாமி? நீங்க நம்ம ஆத்துக்குத்தான் வரது இல்லை! குருக்களாத்துக்கும் போறதில்லையாமே? தப்பா நினைச்சுக்காதீங்க! எனக்குத் தெரிஞ்சு நீங்களும் குருக்கள் மாமாவும் பழகின விதத்துக்கு இப்ப அங்க நீங்க போகாம இருக்கிறது என்னமோ மனசு கேக்கலை! அதான் கேட்கறேன்” என்றான் சங்கரன்.
   மாமி பெரிசாக ஒரு பெருமூச்சு விட்டார்.  “அதையேண்டா கேக்கறே சங்கரா? அந்த குருக்கள் மாமா என் அண்ணா மாதிரிடா! அவ்ளோ வாஞ்சையா பழகுவார்! பார்த்தா பேசாம போகமாட்டார். நான் முதல்ல இப்ப மாதிரி சாப்பாடு எடுத்துவந்து சாப்பிட்டுகிட்டுதான் இருந்தேன். ஆனா அந்த மாமாதான் நம்ம ஆம் இருக்க நீ ஏன் சாதம் கட்டிண்டு வந்துண்டு இருக்கே? உனக்கு ஒருவேளை சாதம் போட்டா நான் ஏழை ஆயிரமாட்டேன்! தினம் எங்காத்துலதான் சாப்பிடனும்னு சொல்லி பிடிவாதமா கூட்டிண்டு போய் சாதம் போட்டார். அப்புறம் அந்த மாமியையும் குறை சொல்ல முடியாது. ஒரு முகச்சுளிப்பு இல்லாம நடந்துக்குவா!”
    “அப்புறம் ஏன் மாமி இப்ப அந்த பக்கம் வரதே இல்லை?”
“டேய் சங்கரா? நோக்குத் தெரியாதது இல்லே? அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியா போகக்கூடாது! குருக்கள் மாமாவுக்கு மூணு பசங்க! இப்ப மூணு பேரும் தனித்தனியா வீட்ட கட்டிண்டு சவுக்கியமா இருக்கா? அப்ப குருக்கள் வீடு ஒண்ணுதான்! இப்ப மூணா பிரிஞ்சி போச்சு! யார் ஆத்துல போய் சாப்பிடுவேன் சொல்லு? அதுவும் இல்லாம இந்த பசங்க எல்லாம் மனுஷால விட பணத்த பெரிசா நினைக்கறானுங்க! ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டு இருப்பானுங்களா அவனுங்க? கோயில்ல நுழைஞ்சா கூட ஒரு துளி விபூதி கொடுக்க கூட யோசிக்கிறானுங்க!”
    “நான் உள்ளே நுழைஞ்சாலே ஏதோ வேண்டாத விருந்தாளி வந்தா மாதிரி மூஞ்சை திருப்பிக்கிறானுங்க! போகட்டும்! அதான் அந்த பக்கமே வர்றது இல்லை! அங்க வேலையும் இல்லை! அவனுங்க யாரும் என்கிட்ட பாலிசியும் போடலை! அப்புறம் எதுக்கு அந்த பக்கம் வரனும் சொல்லு?” என்னையே திருப்பிக் கேட்டார்.
    “ மாமி! எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்களா? குருக்கள் குணம் வேற அவங்க பசங்க அதே மாதிரி இருக்கணும்னு அவசியம் இல்லையே?”
      “நிஜம்தாம்பா! ஆனா வரவேற்க கூட வேண்டாம்! ஒரு மாதிரி முகத்த திருப்பிக்கிறது பிடிக்கலை! குருக்கள் போனப்புறம் ஒருநாள் சாப்பாட்டு வேளையிலே அந்த பக்கம் வந்தா மூணு ஆத்து கதவும் சாத்தி இருக்கு! நான் வாசல்ல வந்து நின்னு குரல் கொடுத்தா கதவை திறந்து, அடடே மாமியா? அவர் சாப்பிட்டிண்டு இருக்கார்! அப்புறமா வாங்க மாமின்னு மூஞ்சால அடிச்சமாதிரி  சொல்றா!  ஒரு பேச்சுக்கு ஒரு வாய் சாப்பிடறேளா மாமின்னு கேக்கவே இல்லைடா”
       “ இப்படி ஒரு  விஷயம் நடந்திருக்குன்னு எனக்கு தெரியாது மாமி!” ஆனாலும் ஒரு கேள்வி மாமி? நீங்க குருக்களாத்துக்கு பத்து வருசமா பழக்கம்! அவா ஆத்துல இந்த பத்து வருஷம் சாப்பிட்டு இருக்கேள்! நிஜம்தானே!
   அதிலென்னடா சந்தேகம்? அந்த மாமா உசிரோட இருந்த வரைக்கும் எனக்கு மத்தியான ஆகாரம் அங்கதான்!
   இந்த பத்து வருசம் அங்க மத்தியானம் சாப்பிட்டு இருக்கீங்களே! ஒரு முறையாவது அவங்களுக்கு ஏதாவது பழம் பிஸ்கெட் ஹார்லிக்ஸ்னு வாங்கி தந்து இருக்கீங்களா?
  மாமி யோசனையில் ஆழ்ந்தார்!
 பெரியவங்களுக்கு வேண்டாம்! அந்த பெரியவரோட பேரன் பேத்திகளுக்காவது ஏதாவது தின்பண்டம் வாங்கி கொடுத்திருக்கேளா?
     “ இல்லைடா! நான் போற நேரம் கொழந்தைங்க ஸ்கூல் போயிருக்கும்! அதுங்க திரும்பறதுக்குள்ளே வந்துருவேன்! குருக்களோட பசங்களும் அவ்வளவா பேச மாட்டாங்க!”
   “ ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டா இருந்தும் மக்களோட மனசை புரிஞ்சிக்கலையே மாமி?”
   “ மாமி! பிரதி உபகாரம் பார்க்காம உதவி செய்யற மனசு இப்ப யாருக்கும் இல்லே! நீ இதை செஞ்சா நான் அதைச்செய்வேன்கிற மாதிரி ஆகிப் போச்சு! அந்த குருக்கள் மாமா அந்தக் காலத்து மனுஷர்! எதுவும் எதிர்பார்க்காம உங்களுக்கு ஆகாரம் போட்டிருக்கார்! ஆனா அவரோட பசங்க இந்தக் காலத்து மனுஷா இல்லையா? நீங்க அவங்க கிட்ட பழகினதும் கம்மிதான்! அவங்க உங்க கிட்ட பழகினதும் கம்மி! குருக்கள் கிட்ட கிடைச்ச மரியாதையை இவங்க கிட்டேயும் எதிர்பார்த்தா கிடைக்குமா?”
    “மாமி! பிறர் குத்தத்தை காணும்போது தன் குற்றத்தையும் நினைச்சுப் பார்க்கணும்! நீங்க அந்த பசங்களுக்கு எதுவும் செஞ்சது இல்ல! அப்ப அவங்க கிட்ட எதிர்பார்க்கிறதும் தப்புதானே?”
    “வயசுல சின்னவனா இருந்தாலும் சரியா சொன்னேடா? உண்மைதாண்டா சங்கரா? நானா ஏதோ கற்பிதம் பண்ணி குருக்களாத்து பசங்களை தப்பா நினைச்சிட்டேன்! இனிமே எதிர்பார்க்கிறது போல கொடுக்கவும் செய்யனும்கிறதையும் புரிஞ்சுகிட்டேன் என்றார் மாமி.
   “ தட்ஸ் இட் மாமி! வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்” என்றேன்.
   ”கட்டாயமாடா! ஆனா அது எங்காத்துல வா! நானே உனக்கு பில்டர் காபி போட்டுத் தரேன்!” என்றார் மாமி தெளிவுடன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மாமிக்கு அறிவுரை சொன்ன விதம் அருமை. உண்மை பிரதியுபகாரம் பாராமல் உபகாரம் செய்வது வழக்கொழிந்து போய்விட்டது.

    ReplyDelete
  2. நல்லதொரு படிப்பினையை கொடுத்தது கதை (எனக்கும்தான்) நண்பரே....

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  4. அடி ஆத்தி... இம்புட்டு நன்னா எழுதி இருக்கியே.. தொ.. சேத்துட்டேன், உன்னையும். அருமையான பதிவு, தளிர் சுரேஷ்.. அருமையா எழுதி இருக்கேள்...

    ReplyDelete
  5. நல்ல படிப்பினையை கற்றுக்கொடுக்கும் கதை. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சுரேஷ்,

    ReplyDelete
  6. நல்ல கதை
    நல்ல நடை
    நல்ல படிப்பினை
    நன்றி
    வாழ்த்துக்கள்.
    நிறை எழுதுங்கள்

    ReplyDelete
  7. மிக அழகான நடையில் ஒரு யாதார்த்தமாக நல்ல கருத்து மிக்க வாழ்க்கைப் படிப்பைச் சொல்லியிருக்கின்றீர்கள் சுரேஷ்! எதிர்பாராத விருந்தோம்பல் இப்போது தமிழர் பண்பாடு இல்லாது ஆகின்றதோ?!!!

    ReplyDelete
  8. வணக்கம்
    எதிர்பார்ப்பது போல் கொடுக்கவும் வேண்டும். நன்றாகச் சென்னீர்கள்
    அசத்தலான கதை. நன்று.
    நன்றி சகோதரரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!