கோவைப் பேரூர் பட்டீஸ்வரர்!

கோவைப் பேரூர் பட்டீஸ்வரர்!


பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப் படும். ஆனால் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. பங்குனி உத்திரம், ஆருத்ரா, போன்ற தினங்களில் நடராஜர், சிவகாமி அம்மன் வீதியுலா சென்று திரும்பும் சமயம் சிவகாமி அம்மன் மட்டும் இந்த சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்கு உரிய வாசலில் தங்கை அம்பிகை உரிமையாக நுழைவதாக சொல்லுகிறார்கள்.

பிறவாப்புளி: ஒரு மரத்தில் உள்ள எல்லா விதையும் முளைக்காது என்று உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் சொல்ல முடியாது அல்லவா? பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத் தலவிருட்சம் பிறவாப் புளி எனப்படுகிறது. இதன் விதைகள் முளைப்பது இல்லை. முக்தி அளித்து பிறவா வரம் தரும் இறைவன் ஆலய தல விருட்சமான இதன் விதைகளும் முளைப்பது இல்லையாம். இந்த ஊர் மாடுகள் போடும் சாணத்தில் புழுக்கள் தோன்றாதாம்.

நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராசப்பெருமானுக்கு ஆண்டில் பத்துமுறை அபிஷேகம் செய்விக்கப் படுகிறது. சிவாலயங்களில் ஆடும் நடராசரை காண்போம். இவர் ஆடி முடிக்கும் தருவாயில் உள்ள நடராசர். இந்த நடராஜரின் குறும்புப் பார்வை மிக அழகானது. சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இத்தலம் கருதப்படுகிறது. மேலைச்சிதம்பரம் என்றும் வழங்கப்படுகிறது.


தலவரலாறு:  முன்னொருசமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்ததில் களைத்துப் போக நாரதர் காமதேனுவை படைப்புத்தொழில் செய்ய ஈசனை நோக்கி தவம் செய்ய சொன்னார். காமதேனுவும் இத்தலத்தில் வந்து இங்கு புற்று வடிவில் இருந்த ஈசனை வழிபட்டு தவம் இருந்தது. ஒருசமயம் காமதேனுவின் கன்றான பட்டி புற்றாக இருந்த சிவனை காலால் மிதித்து விட்டது. காமதேனு சிவனிடம் கன்று செய்த தவறை மன்னிக்கும்படி கேட்டது.
   புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈசன், இருவரையும் ஆசிர்வதித்து அருளினார். பட்டி மிதித்தமையால் வெளிப்பட்டமையால் பட்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
சிவனின் நடனம் காண விரும்பிய மகாவிஷ்ணு பட்டி முனி என்ற பெயரில் இடையனாகவும் பிரம்மா கோமுனியாக பசு வடிவில் இங்கு வந்ததாக ஐதீகம். நடராஜருக்குரிய சபைகளில் இது கனக சபையாகும். இங்குள்ள கனக சபையில் நடராஜர் எழுந்தருளி நடனமாட அருகில் கோமுனி, பட்டிமுனி உள்ளனர். தத்துவங்கள், மற்றும் வேதத்தை குறிக்கும் தூண்கள் 3 பஞ்சாட்சர படிகள் என விஷேசமாக சபை அமைந்துள்ளது.


இக்கோயிலின் தீர்த்தம் கொம்பு தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. பட்டிஸ்வரரை வழிபட்ட காமதேனு தன் கொம்பினால் தோண்டி உண்டாக்கிய தீர்த்தம் இது. ‘சிருங்கத் தீர்த்தம்’ என்று வடமொழியில் வழங்கப்பட்டது. இங்குள்ள பைரவர் ஞான பைரவர் என்று வழங்கப்படுகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இந்த ஆலயத்தில் உள்ள தட்சிணா மூர்த்தி சன்னதியில் விஜயதசமியில் அட்சராப்பியாசம் நடப்பது இன்னொரு சிறப்பான செய்தியாகும்.
சிவலிங்க சொருபத்தில் பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

ஆனித்திருமஞ்சன விழா

   திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்ட வரலாறு பின்வருமாறு
சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய  சிவபெருமான், சுந்தரர்திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் பள்ளன்  என்ற விவசாயியாகவும், உமாதேவி பள்ளி என்றவிவசாயப் பெண்ணாகவும் அவதரித்து நாற்று நடச் சென்றனர். தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று  நந்திதேவரிடம் எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார், கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். (இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது  தாண்டவதரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.  பிறப்பில் பேதமில்லை என்று இறைவனே உணர்த்திய தலம் இதுவாகும்.
    சோழ மன்னர்கள்  இவ்வாலயத்திற்கு திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.  


இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் "இறவாப்பனை' எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

கோவையில் இருந்து பத்துகிலோ மீட்டர் தூரத்தில் பேரூர் உள்ளது. காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
நடை திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை.
தொலைபேசி: 0422- 2604989.

ஆனித்திருமஞ்சன நாளில் ஆனந்த கூத்தாடும் பேரூர் நடராசர் தரிசனம் காண்போம்! நலம்பெறுவோம்!

( படங்கள் இணையத்தில் தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. எங்க ஊர் கோவில். அங்கு இருந்த போது சென்று வந்திருக்கிறேன். மீண்டும் சென்று தரிசிக்கும் ஆவல் உள்ளது. பார்ப்போம்.

    படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு.

    ReplyDelete
  2. இந்தக்கோயிலுக்கு போகாதவர்கள் தெரிந்து கொள்வதற்க்கு, நல்ல விசயங்களை வெளியிடுகிறீர்கள் நண்பா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  4. மற்றுமொரு புதியதொரு கோவிலின் அறிமுகம்.
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், // தவறான தகவல்

    ReplyDelete
  6. இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்கள், ஓலை சுவடிகளில் இருந்து பல பெயர்கள் நாம் அறிய கிடைக்கிறது. விக்கிரம சோழன், வீரசோழன், வீரராஜேந்திர சோழன், கரிகாற்சோழன், வீரபாண்டியன், மாதையன், மூன்றாம் வீரவல்லாளன் ...இப்படி பல.

    Read more: http://eniyavaikooral.blogspot.com/2012/04/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வந்து கருத்திட்டமைக்கு நன்றி! இந்த கோயிலுக்கு நானும் சென்றதில்லை! பத்திரிக்கைகள், இணையங்களில் படித்ததை தொகுத்து தருகின்றேன்! கரிகால் சோழனால் கட்டப்பட்டது என்று விக்கிபீடியாவில் உள்ளது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.

      Delete
    2. விக்கிபீடியா தகவல்களை முழுமையும் நம்ப முடியாது. தகவல் தெரிஞ்சவர் தரவேற்றுகிறார். திருந்தங்களை மேற்கொள்ளலாம். இந்த கோவிலை கட்டுவித்தவர் ஒருவரே அல்ல. பல கால கட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. ராஜ ராஜன் பெரிய கோவிலை கட்டினான். அப்படி சொல்வது மாதிரி உறுதியான ஆதாரங்கள் கிடைக்கல. சோழர்கள் லிஸ்ட்மேல கொடுத்தமாதிரி பல கல்வெட்டுகளும் பட்டையங்களும் கிடைத்து இருக்கிறது. இன்னும் சொன்னா கரூர் ஆண்ட அரசர்களின் பங்கு இந்த கோவிலில் இருந்து இருக்கிறது.

      Delete
  7. நல்ல தகவல்கள்.... நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. சிவா சிவா அருமை அய்யா ஆலய சிறப்பு தரிசிக்க அவளாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!