வைரத்திருட்டு! பாப்பா மலர்!

வைரத்திருட்டு!  பாப்பா மலர்!

   காலை வேளை! இன்ஸ்பெக்டர் பரசுராம் தமது உடுப்பை மாட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பத் தயார் ஆன போது போன் மணி அடித்தது.  “வீட்டில கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்களே!” என்றபடி அவரது மனைவி நிர்மலா ஹார்லிக்ஸ் டம்ளரோடு வந்து நின்றாள்.
   “போலீஸ்காரனுக்கு எப்பவும் டியுட்டிதான்!” என்று சிரித்தபடி கூறிய பரசுராம் ரீசிவரை எடுத்து காதில் வைத்தார். “அடடே! அப்படியா! ஒண்ணும் கவலைப்படாதீங்க! கண்டுபிடிச்சிடலாம்! நான் உடனே வரேன்!” என்று சொல்லி போனை வைத்தார்.

    அப்போதுதான் உள்ளே நுழைந்த அவரது மகன் வளவன்,  “என்னப்பா! எதைக் காணோம்! கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க!” என்றான்
     “அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது ஆபிஸ் சம்பந்தப்பட்ட விஷயம்!”
    “அபிஷியல் கேஸ்னா ஸ்டேஷனுக்குத்தானே போன் வரும்! உங்ககிட்ட போன் பண்ணி இருக்காங்களே!” வளவன் மடக்கினான்.
    “உன் கிட்ட சொல்லாம இருக்க முடியாது! எப்படியும் மடக்கி கேட்டுடுவே!” என்றார் பரசுராம்.
   “அப்ப சொல்லுங்க!”
   “உங்க அம்மாவோட பிரெண்ட் மாதர் சங்கத் தலைவி மணிமேகலை பேசினாங்க! அவங்களோட வைரத்தோட்டை காணோமாம்! கண்டுபிடிச்சு கொடுக்க என்னை கூப்பிட்டு இருக்காங்க!”
    “அப்ப நீங்க அவங்க வீட்டுக்கு கிளம்பறீங்களா?” 
 “வேறவழி! இல்லேன்னா உங்கம்மா என்மேல கோபிச்சுக்க மாட்டாங்களா?”
    “அப்பா! அப்பா! நானும் வரட்டா! இன்னிக்கு ஸ்கூல் லீவு! ஒரே போர் அடிக்குது!”
   “நான் வேண்டாம்னு சொன்னா கேக்கவாப் போறே! வா!”
அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் மணிமேகலையின் வீட்டில் இருந்தனர். பங்களா பெரிதாக இருந்தது. போர்ட்டிகோவின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்து நிழலை அள்ளி வழங்கின. நகர்ப்புறத்தில் இப்படி ஒரு பங்களாவா ஆச்சர்யப்பட்டான் வளவன்.
    வளவன் இயல்பிலேயே புத்திசாலி மாணவன். எதையுமே வித்தியாசமாக புதிய கோணத்தில் சிந்தித்து விடையளிப்பான். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரன். தந்தையால் தீர்க்க முடியாத பல கேஸ்களுக்கு இவன் சொல்லும் கோணம் ஒரு தீர்வைத் தரும். இந்த கேஸில் வளவன் என்ன செய்கிறான் பார்ப்போம்.
   பரசுராம் விசாரணையைத் துவக்கினார்.
“வைரத்தோட்டை எப்பத்திலிருந்து காணலை?”
“ இன்னிக்கு காலையில இருந்துதான் சார்! அதிகாலையில் ஒரு ஏழுமணிக்கு காணாம போயிருச்சு!”
  “ அதற்கு முன்னாடி தோடு எங்க இருந்திச்சு?”
”தோடு பீரோவில லாக்கர்லதான் இருந்துச்சு! இன்னிக்கு ஒரு பங்க்‌ஷணுக்கு கிளம்ப குளிச்சுட்டு தோட்டை மாட்டிக்கிலாம்னு எடுத்தேன். டிரெஸ்சிங் டேபிள் கிட்ட வந்ததும் போன் அடிச்சுது! தோட்டை டேபிள் மேலேயே வச்சுட்டு அப்படியே போய் போன் அட்டெண்ட் பண்ணிட்டு திரும்பறேன்! தோட்டைக் காணோம்!”
“ தோட்டைக் காணோமா? தோடுகளைக் காணோமா?”
   “தோட்டைத்தான் காணோம்! ஒரு தோடு மட்டும் காணாம போயிருக்குது!”
   “ஒரு தோடு மட்டும் யாரும் எடுக்கமாட்டாங்களே! கீழே எல்லாம் தேடிப்பார்த்தீங்களா?”
  “ வீடு முழுவதும் கொட்டி அலசியாச்சு இன்ஸ்பெக்டர்!”
     “போன் யார்கிட்ட இருந்து வந்துச்சு?”
 “என் ப்ரெண்ட் வசுமதி கிட்ட இருந்துதான்! கல்யாணத்துக்கு கிளம்பிட்டியா?ன்னு விசாரிச்சா!”
    “எவ்வளவு நேரம் போன் பேசியிருப்பிப்பீங்க!”
 “ஒரு அஞ்சு நிமிஷம் பேசியிருப்பேன்!”
அவ்வளவு சீக்கிரம் வெளி நபர் உள்ளே வந்து திருடியிருக்க முடியாதே! கண்டிப்பாக இது வீட்டில் இருப்பவர்கள் யாரவதுதான் செய்து இருக்கணும் என்று முடிவுக்கு வந்தவர்.  “உங்களை தவிர்த்து வீட்டுல இன்னும் யார் யார் இருக்காங்க?” என்றார்.

       “என் ஹஸ்பெண்ட் மாசிலாமணி! என் பையன் விக்னேஷ்!, அப்புறம் ரெண்டு வேலைக்காரங்க, கார் டிரைவர் பொன்னம்பலம், வேலைக்காரி பார்வதி.”
      “அவங்ககிட்ட விசாரிச்சீங்களா?”
 “ரெண்டு வேலைக்காரங்களும் 8 மணிக்குத்தான் வருவாங்க! அதனால அவங்க எடுக்க வாய்ப்பு இல்லை! கார் டிரைவர் பொன்னம்பலம் ஹாலை தாண்டி உள்ளே வரமாட்டார். பார்வதியும் நம்பிக்கையான பெண்மணிதான்!”
     “பணம் எதுவேணும்னாலும் செய்யும் மேடம்! இது வைரம்! ஒரு நிமிஷம் சபலப்பட்டு எடுத்து இருக்கலாம் இல்லையா?”
  “நோ! நோ! இவங்க அப்படிப்பட்டவங்க கிடையாது! பத்துவருஷமா எங்கிட்ட வேலைக்கு இருக்காங்க!”
   “எதுக்கும் விசாரிச்சிடுவோமே!”
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வளவன் திடீரென்று காணாமல் போனான்.

இருவரிடமும் உருட்டி மிரட்டி விசாரித்தும் தாங்கள் எடுக்கவில்லை! உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் இனமில்லை நாங்கள்! என்று சாதித்தார்கள்.
   வீட்டில் உள்ளவர்களில் வேலைக்காரர்கள் எடுக்கவில்லை என்றால் அவரது கணவரும் பிள்ளையும்தான் மிஞ்சுகிறார்கள்! அவர்கள் எடுத்திருப்பார்களா? சேச்சே! இருக்காது! குழம்பினார் பரசுராம்.
    அப்போதுதான் உடன் வந்த வளவனை காணவில்லையே! எங்கு போனான்? என்று தேட ஆரம்பித்தார். “வளவா! வளவா!” குரல் கொடுத்தார்.

   அப்போது தோட்டத்தில் இருந்து குரல் கொடுத்தான் வளவன்!   “அப்பா! திருடனை கண்டுபிடிச்சிட்டேன்!”
  “ நாம் இங்கு திண்டாடிக்கொண்டு இருக்கிறோம்! அவன் என்னடாவென்றால் திருடனை கண்டுபிடித்துவிட்டானாமே! எப்படி?”
     “என்னடா விளையாடுகிறாயா?”
 “உங்களோடு விளையாட எனக்கும் ஆசைதான்! ஆனால் நீங்கள் காலையில் வேலைக்குப் போனால் இரவில்தானே வீடு திரும்புகிறீர்கள்! பிள்ளையோடு விளையாட உங்களுக்கு ஏது நேரம்?” வளவன் சமய சந்தர்ப்பத்தில் தாக்கினான்.
   பரசுராம் பதில் சொல்ல முடியாமல் விழுங்கி, “சரிசரி! திருடன் எங்கே? ”என்றார்.
      “இங்கே தோட்டத்துக்கு வாருங்கள்! இங்கே இருக்கும் மாமரத்தில் திருடன் ஒளிந்து கொண்டு இருக்கிறான்!”
    “என்னது மாமரத்தில் திருடனா? ஜாக்கிரதையாக இரு! இதோ! வந்துவிடுகிறேன்!” பரசுராம் துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு புழக்கடை பக்கம் செல்ல உடன் மற்றவர்களும் விரைந்தனர்.
   அங்கு வளவன் ஒரு பைனா குலரை கழுத்தில் மாட்டியபடி நின்றிருந்தான்.
   “ வளவா! உனக்கு ஒன்றும் ஆகவில்லையே! எங்கே திருடன்?”
   “ பயப்படாதீர்கள் அப்பா! எனக்கு ஒன்றும் ஆகாது! ஏனென்றால் வைரத்தோட்டை திருடியது திருடன் அல்ல?”
  “ என்னது விளையாடுகிறாயா? இப்போதுதான் திருடன் மாமரத்தில் இருக்கிறான் என்றாய்! இப்போது திருடன் இல்லை என்கிறாய்!”
    “உண்மைதான் அப்பா! வைரத்தோட்டை திருடியது திருடன் அல்ல! திருட்டுகாகம்! அதோ அந்த மாமரத்தில் கூட்டில் வைரத்தோட்டை வைத்திருக்கிறது! இந்த பைனாகுலர் வழியாக பாருங்கள்!” என்று பைனாகுலரை நீட்டினான்.
   பைனாகுலர் வழியாகப் பார்த்தபோது அங்கிருந்த காகத்தின் கூட்டினுள் வைரத்தோடு  மின்னுவது தெரிந்தது.
   பரசுராம் மகனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார். “எப்படிடா கண்டுபிடிச்சே?”
    “ அப்பா! திருடனுங்க யாராவது திருடி இருந்தா ரெண்டு தோட்டையும் திருடி இருப்பாங்க! ஆனா இவங்க ஒரு தோட்டை காணோம்னு சொன்னப்ப எனக்கு சந்தேகமாயிடுச்சு! ஒரு வேளை டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்து கீழே எங்காவது விழுந்து இருக்குமோன்னு கீழே தேடிப் பார்த்தேன்! அப்பத்தான் டிரெஸ்ஸிங் டேபிள் மேலே காகத்தோட பாதச்சுவடு தெரிஞ்சது! அது மட்டும் இல்லாம கொஞ்சம் எச்சமும் இருந்தது. ஜன்னல் திறந்திருந்தது. ஜன்னல் வழியா பார்த்தா இந்தமாமரம் தெரிஞ்சது. காகங்கள் பளபளக்கும் பொருளை திருடும்னு படிச்சது ஞாபகத்துக்கு வந்துது! சரி நம்ம கண்டுபிடிப்பு சரியான்னு பார்க்க இந்த மாமரத்துக்கிட்டே வந்து பார்த்தேன். அந்த சமயம் சரியா சூரிய வெளிச்சம் இந்த கூட்டுல விழ ஏதோ ஒளி வீசறமாதிரி தெரியவும் பைனாகுலர்ல பார்த்தேன்! தோடு சிக்கிடுச்சு!” சிரித்தபடி கூறினான் வளவன்.
   இன்ஸ்பெக்டர்  உங்க பையன் ரொம்ப புத்திசாலியா இருக்கானே! இவனுக்கு என்னோட கிப்ட் ஆயிரம் ரூபா! என்று அந்த பெண்மணி பணத்தை நீட்டினாள்.
    “ பணம் எல்லாம் வேண்டாம் ஆண்ட்டி! எனக்கு ஒரே ஒரு ஐஸ்க்ரீம் மட்டும் போதும்! அதைத்தான் எங்க அப்பா வாங்கித்தர மாட்டேங்கிறார்! இந்த பணத்தை ஏதாவது ஏழை பசங்களுக்கு உதவி பண்ண யூஸ் பண்ணிக்கோங்க என்றான் வளவன் பெரிய மனிதனாக.
   சில நிமிடத்தில் வேலையாள் ஒருவன் மாமரத்தில் ஏறி வைரத்தோட்டை எடுத்துவர இன்னொருவன் வெளியே சென்று ஒரு பெட்டியோடு வந்தான். அதை வாங்கி வளவனிடம் கொடுத்தாள் மணிமேகலை.
   வளவன் ஆர்வமுடம் அதை பிரிக்க அது பேமிலி பேக் ஐஸ்கிரிம்!
   ஐ! ஜாலி! ஜாலி! என்று குதித்தான் வளவன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஐஸ் க்ரீம் பையன் வளவன்.புலிக்குப் பிறந்த புலி!

    ReplyDelete
  2. அருமையாக கதை வருகிறது உங்களுக்கு ...
    தொடர்ந்து எழுதுங்க
    www.malartharu.org

    ReplyDelete
  3. அருமை நண்பரே அருமை
    வளவன் புத்திசாலிதான்

    ReplyDelete
  4. புத்திசாலித்தனமான ஒரு கதை.
    அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான கதை. சிறுவன் வளவனும் வைரம் போலவே பிரகாசிகிறாரே.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!