ஆந்தை கொட்ட கொட்ட முழிக்குது! பாப்பா மலர்!

ஆந்தை கொட்ட கொட்ட முழிக்குது!  பாப்பா மலர்!


ஓர் ஊரில் ஒர் அம்மா தன்னோட குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தாங்க. சின்னசின்ன வாக்கியங்களா சொல்லி குழந்தையை திரும்ப சொல்லச் சொன்னாங்க. நாம தினமும் பார்க்கும் பொருள்களை காட்டி அதனோட பெயரை சொல்லிக் கொடுப்பாங்க. குழந்தையும் சுவாரஸ்யமா பேசக் கத்துக்கிச்சு. திரும்ப திரும்ப சொல்லி பார்த்துக்கிச்சு.
   ஒரு நாள் குழந்தையோட அம்மா, ‘அதோ பார் தென்னை மரம்! எவ்வளவு உயரமா வளர்ந்திருக்குது பார்த்தியா?” எங்கே சொல்லு
பாக்கலாம்? ‘தென்னை மரம் நெடு நெடுன்னு நிக்குது.”  அப்படின்னு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்திட்டிருந்தாங்க.
  குழந்தையும் தென்னை மரம் நெடுநெடுன்னு நிக்குதுன்னு தென்னை மரம் நெடு நெடுன்னு நிக்குதுன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டிருந்துச்சு.
  அடுத்த நாள் அம்மா குழந்தைகிட்ட  “பெருச்சாளியை பார்த்திருக்கியான்னு?” கேட்டாங்க.
   “பெருச்சாளின்னா என்னம்மா?”ன்னு கேட்டது குழந்தை.
“எலி பார்த்திருக்கே இல்லையா? அது மாதிரிதான் இருக்கும் ஆனா அதை விட பெரிசா குண்டா இருக்கும்னு சொல்லிக் கொடுத்தாங்க அம்மா. பெருச்சாளியை பெருக்கான்னு கூட சொல்லுவாங்க எப்ப பார்த்தாலும் குடுகுடுன்னு ஓடும் சுவரையெல்லாம் குழி பறிக்கும்னு சொன்னாங்க அந்த அம்மா.
   இப்ப சொல்லு பார்க்கலாம்! பெருச்சாளி சுவர பரபரன்னு பறிக்குது! அம்மா சொன்னபடி குழந்தையும் சொன்னது.
  இன்னொரு நாள் அந்த அம்மா ஆந்தையை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க.  “ஆந்தை ஒரு பறவை அதுக்கு  கண்ணு கொட்டை கொட்டையா பெரிசா இருக்கும். கோட்டான்னு அதுக்கு இன்னொரு பேரும்  இருக்கு. அது முழிக்கிற முழியை பார்த்தா பயமா இருக்கும். எங்கே சொல்லு பார்க்கலாம்? ஆந்தை கொட்ட கொட்ட முழிக்குது! ” குழந்தையும் ஆந்தை கொட்ட கொட்ட் முழிக்குதுன்னு திரும்ப சொல்லிச்சு.
   அதுக்கப்புறம் அந்த அம்மா நரியை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. நரி நாய் மாதிரி இருக்கும். ஆனா அதனோட வால் புசுபுசுன்னு இருக்கும். நாயை விட வேகமா ஓடும். அது காட்டுலதான் வாழும். அப்படின்னு சொன்ன அவங்கம்மா எங்கே சொல்லுடா செல்லம்  “நரி குதிச்சு குதிச்சு ஓடுது”ன்னு சொல்லிக்கொடுத்தாங்க
 இப்ப குழந்தை நாலு வாக்கியத்தை கத்துக்கிச்சு.
 “தென்னை மரம் நெடுநெடுன்னு நிக்குது
பெருச்சாளி பரபரன்னு சுவர பறிக்குது
ஆந்தை கொட்டகொட்ட முழிக்குது
நரி குதிச்சு குதிச்சு ஓடுது”
  இந்த வாக்கியங்களை ராத்திரி சாப்பிட்டு முடிச்சதும் திரும்ப திரும்ப சொல்லி பழகும் அந்த குழந்தை.
   அன்னிக்கு ராத்திரி குழந்தை சீக்கிரமாவே சாப்பிட்டு தூங்கிருச்சு. அதனால பாதி ராத்திரியிலே அது கண் முழிச்சிக்கிச்சு. அதுக்கு அவங்க அம்மா சொல்லிக்கொடுத்த பாடம் நியாபகத்துக்கு வந்துருச்சு. அதை திரும்ப திரும்ப சொல்லி பார்த்துக்கிச்சு.
   அப்ப அந்த வீட்டுல திருடறதுக்கு ரெண்டு திருடனுங்க வந்தானுங்க. சுவர்ல ஓட்டையை போட்டு வீட்டுக்குள்ள போக அவங்க ப்ளான் பண்ணியிருந்தாங்க. திருடனுங்க வந்த நேரம் குழந்தை முழிச்சு பாடத்தை சொல்லிக்கிட்டிருந்துச்சு. திருடனுங்க நுழையவும் குழந்தை சத்தமா “தென்னை மரம் நெடுநெடுன்னு நிக்குது!” அப்படின்னு சொல்லிச்சு.
  இது திருடனுங்க காதுல விழுந்துச்சு. “ யாரோ முழிச்சிக்கிட்டு இருக்காங்க! நாம போயிரலாம்” என்றான் ஒருவன்.
  “ அடப்போடா பைத்தியக் காரா! இவ்ளோ தூரம் வந்துட்டு சும்மா போறதா? அந்த குழந்தை தூக்கத்துல உளறுது! அதுக்கு போயி பயந்துகிட்டு… ம் ஆவட்டும்.. அப்படின்னான் இரண்டாவது திருடன்.
   உடனே முதலாமவம் தன் கையில் இருந்த கோலால் சுவரில் துளை போட ஆரம்பித்தான்.
  இப்போ இந்த குழந்தை, “ பெருச்சாளி சுவரை பறிக்க பாக்குது!”ன்னு தெளிவா சொல்லிச்சு.
   இதைக் கேட்டதும் தைரியம் சொன்னவனுக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துருச்சு. காத தீட்டிக்கிட்டு கேட்டான்.
  இப்ப குழந்தை சொல்லுச்சு! “ ஆந்தை கொட்ட கொட்ட கொட்ட முழிக்குது”
   அந்த திருடனுக்கு உண்மையிலே பயம் அதிகம் ஆயிருச்சு. “ நாம செய்யறதை ஒரு குழந்தை கவனிச்சுதான் இப்படி சொல்லுதோ?”ன்னு சந்தேகப்பட்டான். அப்போ அந்த குழந்தை மறுபடியும் சொல்லுச்சு “ ஆந்தை கொட்ட கொட்ட முழிக்குது!”
    திருடங்களுக்கு வியர்த்து கொட்டியது. “ஓ நாம ஏமாந்துட்டோம்! யாரோ குழந்தை குரல்ல பேசி ஏமாத்தறாங்க! அவங்க நம்மளை கவனிச்சுட்டு இருக்காங்க! இனிமே இங்க இருந்தா மாட்டிப்போம்னு சொல்லி ரெண்டு திருடனுங்களும் ஓட ஆரம்பிச்சாங்க!
  இப்போ குழந்தை சொல்லுச்சு! “ நரி குதிச்சு குதிச்சு ஓடுது!”
 
அதைக் கேட்டதும் திருடனுங்களுக்கு கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்து போச்சு! “சந்தேகமே இல்லை! இனிமே நாம இங்கிருந்தா ஆபத்துதான் ஓடிருவோம்னு ஓரே ஓட்டமா ஓடியே போயிட்டாங்க!
  இப்ப அந்த குழந்தை ஒரு புது சொல்லை சேர்த்து சொல்லுச்சு
“நரி வேகமா குதிச்சு குதிச்சு ஓடுது”
  அவ்ளோ தான்! அந்த திருடனுங்க இன்னும் வேகமா ஓட ஆரம்பிச்சாங்க!
  இது எதுவும் தெரியாத குழந்தை அம்மா சொல்லிக்கொடுத்த பாடத்தை படிச்சிக்கிட்டு இருந்துச்சு.

(செவிவழிக்கதை)

டிஸ்கி} பிரபல குழந்தை எழுத்தாளர் வாண்டுமாமா என்ற கிருஷ்ணமூர்த்தி கடந்த வியாழனன்று தனது 90வது வயதில் காலமானார்.  குழந்தைகளுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் பல தலைமுறைகள் குழந்தைகளுக்கு பயனளிக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கதை, நன்றி.
    வாண்டு மாமா அவர்களின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  2. இதையொத்த கதைகளை எங்களது ஆத்தா சொல்லி நான் கேட்டிருக்கிறேன். எனக்கு அந்நாள்கள் நினைவிற்கு வந்தன. நன்றி.

    ReplyDelete
  3. இந்த கதையா நான் சின்ன வயதில் கேட்டிருக்கேன்.
    மலரும் நினைவுகள்:)
    http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html

    ReplyDelete

  4. குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமா அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    செவிவழிக்கதை அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமையான கதை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !

    ReplyDelete
  7. ஆஹா, அருமையான கதை. ஷீயா வயசுல கேட்டது. மீண்டும் நியாபகப்படுத்தியதுக்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  8. செவி வழிக் கதை அருமையாக இருந்தது....

    வாண்டு மாமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!