உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 59

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 59

அன்பான வாசகர்களே! மரபுத்தொடர்கள் குறித்து சென்ற வாரம் பார்த்தோம். ஐந்து வகையான மரபுத்தொடர்கள் உண்டு என்பதையும் அதில் நிறைய பயன்படும் முதல் வகையான எதிர்மறை மரபுத்தொடரைப் பற்றியும் அறிந்து கொண்டோம். இதை நினைவு கூற இங்கு: மரபுத்தொடர்கள்

  நினைவுக்கு வந்துவிட்டதா? மரபுத்தொடர்களில் அடுத்த வகை இடக்கரடக்கல்/ மங்கலவழக்குத்தொடர் என்பதாகும்.

அது என்ன இடக்கரடக்கல்?

 அவையில் எல்லோர் முன்னாலும் சில வார்த்தைகளை பேச முடியாது. அப்போது அப்படி பேசுவதும் நாகரீகம் அன்று. அதனால் அச்செயலை அந்த வார்த்தைகளை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் வேறு வழியான மரபு சொற்களில் சொல்வது நம்முடைய வழக்கமாகும். இப்படி சொல்லத்தகாத இடக்கரான சொல்லை அடக்கி வேறுவகையில் சொல்வதால் இடக்கரடக்கல் என்று சொல்லப்படுகிறது.

  உதாரணமாக நமது பதிவர்கள் தண்ணி அடிப்பதை மகாத்தியானம் என்று சொல்லுவர். தண்ணி அடிச்சிட்டு இருக்கிறான் என்று பலர் முன்னிலையில் சொல்ல முடியாது. அதையே மகாத்தியானத்தில் இருக்கிறார் என்றால் புரிபவருக்கு புரியும் அன்றோ? அதே போல் மலம் கழித்தலை கொல்லைக்கு போயிருக்கிறான் என்று சொல்லுவர். இன்னும் சிலர் இன்னும் நாகரீகமாக கால்கழுவிட்டு வந்தான் என்று சொல்வர்.

மங்கல வழக்குத்தொடர்.

 இதே போல மங்கலமற்ற ஒரு செய்தியை மங்கலமாக மாற்றி சொல்லுதல் நம் மரபில் உண்டு. உதாரணமாக இறந்தார் என்பதை இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லுவது மங்கலவழக்காகும். குழூஉக்குறி என்பது இவ்வகையே! இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்குள் வழங்கும் சொற்கள் ஆகும். பணத்தை  “வைட்டமின் ப” என்று சொல்லுவர். மகாதியானமும் இவ்வகையை சேர்ந்ததே!

இதற்கு சில எடுத்துக்காட்டுகள்:

காலைக்கடன் கழித்தல்-  மலம் கழித்தல் குளித்தல்
ஒண்ணுக்குப்போதல் – சிறுநீர் கழித்தல்
நன்காடு-    சுடுகாடு
தாலிபெருகியது-  (தற்செயலாக) தாலி அறுந்தது
தினம்தோறும் தீபாவளி -  எல்லாநாலும் மகிழ்ச்சி
பட்டை நாமம் சாத்திவிட்டான் -   ஏமாற்றிவிட்டான்.

இவை மட்டும் இன்றி வசைமொழித்தொடரும் உண்டு.
கேலியாகவோ கிண்டலாகவோ வசைமொழியாகவோ கற்பனை நயமுடன் தொடர்களை கையாளுவது வசைமொழி மரபுத்தொடர் ஆகும்.
பொண்ணு யானைபோல சிவப்பு, ஓடுகாலி, வெட்டிக்கழுதை, பொறம்போக்கு, ஓட்டகச்சிவிங்கி  ஆகியவை இவற்றுக்கான சில எடுத்துக்காட்டுக்கள்.

மரபுத்தொடர்களில் சொற்களை வெளிப்படுத்தும் சுவையான உத்தியும் உண்டு.  அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு என்ற தொடரை எடுத்துக் கொள்ளுங்கள். மாடு அசைப்போட்டே தின்று தீர்க்கிறது. ஆனால் அசையாமல் உள்ள வீட்டை கட்டி முடிக்கையில் நம் பொருள் காணாமல் போகிறது. இதை சுவைபட வெளிப்படுத்துகிறது இந்த மரபுத்தொடர். இதே போல வாயில்லா ஜீவன், சொடுக்கு போடுகிற நேரத்தில், விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆழம்பார்க்கிறாயா? குடிமுழுகிவிட்டது, கயிறு திரிக்கிறான், பிஞ்சிலே பழுத்தவன், முகத்தில் ஈ ஆடவில்லை போன்றவை சுவை வெளிப்படுத்தும் மரபுத்தொடர்களாகும்.

இவை மட்டும் இன்றி ஏனையவகையில் வெளிப்படும் மரபுத்தொடர்கள் பிற மரபுத்தொடர்கள் என்று சொல்லுவர். ஒல்லிபாச்சான், கோட்டை விட்டான் போன்றவை இதில் அடங்கும்.

மரபுத்தொடர்களை அறிந்து கொண்டீர்களா? இனி எழுதியும் சொல்லியும் பழகுங்கள்! உங்கள் எழுத்துக்களில் இந்த மரபுத்தொடர்களை பயன்படுத்தி பாருங்கள்! சுவை கூடியிருக்கும்.  விழலுக்கு இரைத்த நீராய் இல்லாமல் பயிருக்கு சென்றால் சரிதான்!

     இனிக்கும் இலக்கியம்!

ஐந்திணை ஐம்பது

 அகத்திணை பற்றிய ஐம்பது பாடல்களை கொண்டது இந்த நூல். இதனை இயற்றியவர் மாறன் பொறையனார். நான்காம் நூற்றாண்டை சேர்ந்தவர் இந்த கவிஞர்.

   இந்த நூலில் யானை தன் காதலியான பெண் யானையை குளிப்பாட்டிவிடுதல், கலைமான் தன் இணையை நீருண்ண செய்தல், யானை புலிக்கு அஞ்சுதல், போன்ற பாடல்கள் சுவைபட உள்ளன. குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி என்று ஐந்து வகையில் கூந்தலை முடித்தல் போன்ற நயமான செய்திகள் உள்ள நூல் இது.
  அந்த நூலில் உள்ள இந்த பாடலை பார்ப்போம்!

   “ சுனைவாய் சிறுநீரை எய்யாது என்றெண்ணிப்
    பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமான்
    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர், காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி."


  நமது இல்லங்களிலே மனைவியானவள் சோறு குறைவாக இருந்தால் கணவனுக்கு முழுவதுமாக பறிமாறி விடுவாள். அதே சமயம் கணவனும் சோறு குறைவாக இருப்பதை அறிந்து தனக்கு பசியில்லை! போதும் போதும் என்று மனைவிக்கு உணவை மிச்சம் வைப்பான். இது இன்றைக்கு நடக்கிறதோ இல்லையோ! ஆனால் அந்தக்காலத்தில் நடந்தது. இதுவல்லவோ இல்லறம்!

   அப்படி ஓர் காட்சியை புலவர் கவிதையில் கூறுகிறார்.
தலைவன் பிரிந்து சென்ற காட்டில் தலைவி ஒரு காட்சியை காண்கிறாள். சுனை அருகே இரண்டு மான்கள் வருகின்றன. ஒன்று கலைமான் மற்றொன்று அதன் காதலியான பிணை மான். இரண்டுக்கும் நீர் வேட்கை, தாகம் மிகுதியாக இருக்கிறது. சுனையிலோ நீர் சிறிதளவே இருக்கிறது. அந்த சிறிய அளவு நீரை தன் காதலியான பிணைமான் உண்ணட்டும் என்று காதலனான கலைமான் நினைக்கிறது. அதே சமயம் தான் உண்ணாமல் தன் காதலி உண்ணாள் என்பதும் அதன் நினைவுக்கு வருகிறது. அதனால் பொய்யாக நீரை குடிப்பது போல பாவனை செய்து  காதலியை நீர் அருந்த வைக்கிறது.
இதுதானே காதல் நெறி!

என்ன அழகாக விளக்கி இருக்கிறார் புலவர். இதன் உவமை நயமும் பாடல் நயமும் என்னே இனிமை!


மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இட்டு  நிரப்புங்கள்! நன்றி!

மேலும் தொடர்புடைய பதிவுகள்:



Comments

  1. மரபுத் தொடர்புகளைப் பற்றிய மிகவும் முக்கியமானவற்றைத் தெரிந்துகொண்டேன். இனி பயன்படுத்த முயல்வேன். நன்றி.

    ReplyDelete
  2. அந்தக்கால இல்லறம் இனிமை...

    ReplyDelete
  3. சகோ..!
    இத்தொடரை நான் தொடர்ந்து வர இயலவில்லை ..
    வாய்ப்பு கிட்டும் போது படிக்கிறேன் .
    இது பகிர்வாக தெரியவில்லை .தமிழுக்கு நீங்கள் செய்யும் பணியாகவே நான் நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  4. வணக்கம்சொந்தமே.இங்கு சில மரபுத்தொடர்கள் அறிமுகமானவை.மாக◌ாதியானம் அருமையான உதாரணம்..மான் உவடை கல்லு◌ாரிக்காலத்தை நினைவுக்கு வருகிறது.அருமை .வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க.

    ReplyDelete
  5. மரபுத்தொடர்களை மிகவும் எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!