சென்னை குண்டுவெடிப்பும் வாழ்வதற்கு வழியும்! கதம்ப சோறு! பகுதி 34

 கதம்பசோறு பகுதி 34

சென்னை குண்டுவெடிப்பு:  

    அமைதிப் பூங்கா என்ற பெயர் எடுத்த சென்னையில் கடந்த வியாழனன்று விடியலில் வெடித்த இரட்டை குண்டுகள் ஓர் அப்பாவி பெண்ணை பலிகொண்டிருக்கிறது. அதற்கு முந்தின நாள்தான் பயங்கரவாதி ஒருவனை தமிழக போலீசார் பிடிக்க அவன் தமிழகம் முழுவதும் வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறுகிறான். மறுநாள் அதிகாலையிலேயே இந்த பயங்கரம். நல்ல வேளையாக இரயில் நின்று கொண்டிருந்த சமயம் வெடித்தமையால் உயிரிழப்புக்கள் குறைந்து போனது. ஒரு லட்சம் நிவாரணம் அளித்துவிட்டது ரயில்வேத் துறை. இது தேவையில்லை என்று மறுக்கிறது ஸ்வாதியின் தரப்பு. பணம் தந்தால் போன உயிர் திரும்பிடுமா என்ன? ஆனாலும் இப்போது பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தமிழகத்தில் ரயில் நிலையம் மட்டுமல்ல பஸ் நிலையம் முதற்கொண்டு அனைத்து ஜன நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைவாகத்தான் உள்ளது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் குண்டுவெடித்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை! எதற்காக வெடித்தார்கள்? யார்? என்ற விபரமும் கிடைக்கவில்லை! தீவிரவாதிகள் இப்படி அப்பாவி பொது ஜனங்களிடம் விளையாடுவதை தவிர்த்து அவர்களுக்கு எதிரிகளான அரசிடம் அரசாள்பவர்களிடம் கைவரிசையை காண்பித்தால் நன்றாக இருக்கும். அதைவிடுத்து அப்பாவி ஜனங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினால் இரண்டு நாட்கள் அல்லது இரண்டு வாரங்கள் அழுதுவிட்டு சில லட்சங்கள் இழப்பீடு தந்துவிட்டு யார் மீதோ குற்றம் சாட்டி சிலரை பேருக்கு கைது செய்து கணக்கு காட்டி முடித்துவிடுவார்கள்.

சிரஞ்சீவி:

     தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் ஓட்டுப்போடப் போய் ஒரு சாப்ட் வேர் நிறுவன பணியாளரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார். உடன் இருந்தவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள். இதற்கப்புறம் வரிசையில் நின்று ஓட்டுப்போட்ட சிரஞ்சீவி, வரிசை மீறிச் செல்லவில்லை! வாக்காளர்ப்பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க சென்றேன் என்று சமாளித்து இருக்கிறார். நம் சென்னையிலும் ஓட்டு பதிவு மறுநாளன்று அனைத்து தினசரிகளிலும் ரஜினி ஓட்டுப்போட்டார். அஜித் ஓட்டுப்போட்டார். கமல் ஓட்டுப்போட்டார் என்று நடிகர்கள் ஓட்டிடுவதை படம் எடுத்து போட்டிருந்தனர். அவர்களும் ஒரு இந்தியக் குடிமகன். ஓட்டுப்போடுவது அவர்கள் கடமை. அதை போடுகிறார்கள். அதை படம் எடுத்து போட்டு பக்கத்தை நிரப்புவது ஏன்? வெளிநாட்டில் வாழும் இந்தியர் ஒருவர் ஓட்டுப்போடுவதற்காகவே விடுமுறையில் சொந்த செலவில் வந்து இருக்கிறார். பல லட்சங்களோ ஆயிரங்களோ அவருக்கு செலவாகியிருக்கும் வந்து திரும்ப, இதை எந்த முன்னனி பத்திரிக்கைகளும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதே சமயம் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் ஓட்டுப்போடுவது பெரிய விஷயமாகிவிட்டது ஊடகங்களுக்கு.

ரஜினியின் லிங்கா:

       கோச்சடையான் படத்திற்கு அடுத்து ரஜினி நடிக்க இருக்கும் படம் லிங்கா. இதற்கான படப்பிடிப்பு மைசூர் சாமூண்டீஸ்வரி கோயிலில் பூஜையுடன் துவங்கியது. ரஜினியின் வெற்றிப்பெற்ற படங்களான முத்து, படையப்பா போன்றவை மைசூரில் படம் பிடிக்கப் பட்டவை. அந்த வரிசையில் லிங்காவும் மைசூரில் படமாக இருக்கிறது. இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் மைசூரில் படமாவதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் உருவ பொம்மையையும் நேற்று எரித்தனர். ஆனாலும் மைசூரில் படப்பிடிப்பு நடத்துவது என்று படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். இதற்கிடையில் கன்னட நடிகரும் ரஜினியின் நண்பருமான அம்பரீஷ் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புக்‌ஷெல்ப்:

   இந்தவாரம் படித்த புத்தகம் பகுதியில் சக பதிவர் வீடு திரும்பல் மோகன் குமார் எழுதிய வெற்றிக்கோடு உயர்தலே வாழ்க்கை என்ற புத்தகம் பற்றி.
   வீடு திரும்பல் மோகன் குமாரை அறியாத பதிவர்கள் இருக்க முடியாது. அவரது வலைப்பூ சுவையான ஒன்று. பயணக்கட்டுரைகள் மிகச்சிறப்பாக எழுதுவார். இந்த புத்தகமும் வலையில் சில பகுதிகள் எழுதி பின்னர் கடைசி சில அத்தியாயங்கள் எழுதாமல் விட்டு புத்தகத்தில் எழுதி முடித்துள்ளார். வலைப்பூவில் எழுதுபவர் என்பதால் இவரது எழுத்தை மிகச் சுலபமாக உள்வாங்க முடிகிறது. தேவையற்ற நீட்டல் முழக்கல்கள் இன்றி சுருக்கமாக பக்கத்தில் இருந்து பேசுவது போன்று சிறப்பாக அமைந்துள்ளது எழுத்து. பெரும்பாலும் சுய முன்னேற்ற நூல்கள் பெரிய மனிதர்கள் சிலரை உதாரணம் காட்டி அவர் இந்த வயதில் இப்படி இருந்தார். இந்த வயதில் இதைத் தொடங்கினார். இப்படி மாற்றி யோசித்தார் இன்று வெற்றி பெற்றார் இப்படி இருக்கும். ஆனால் வெற்றிக்கோடு புத்தகத்திற்கு ரோல் மாடல் அதன் ஆசிரியரே! இளம்வயதில் அவர் செய்த முயற்சிகள் பெற்ற தோல்விகள், அதிலிருந்து கற்றப்பாடம் இன்று எப்படி வளர்ந்து வருகிறார் இதை சில இடங்களில் உதாரணமாக்கி மொத்தம் 19 அத்தியாயங்களில் நாம் எப்படி எல்லாம் முன்னேற வேண்டும் அதற்கு முட்டுக்கல்லாக இருப்பது எவை என்று பட்டியலிட்டு அதை களைவதையும் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.
பொறாமை குறித்து இவர் சொல்லும் வரிகள் சூப்பர்ப். வெற்றிபெற முன்னேற மகிழ்ச்சிகொள்ள ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உண்டு. அது நமக்குமட்டுமே நடக்கவேண்டும் என்பது மூடத்தனம். என்கிறார் உண்மைதானே!
உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். இது உங்களைநீங்களே அவமானப்படுத்திக்கொள்வதாகும். சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கு நீங்கள் சிறிதாவது முன்னேறி இருக்கிறீர்களா? என்று பாருங்கள் என்கிறார்.  சத்தியமான ஒன்று. இதைப்படித்தவுடன் என்னுடைய போன வருட செயல்பாடு, இந்த வருட செயல்பாடு, போனவருடம் என்ன தவறு செய்தேன்? என்று யோசிக்க ஆரம்பித்து சிலவற்றை திருத்திக்கொண்டும் விட்டேன்.
  கடவுளாலும் முடியாத ஒன்று! நடந்ததை மாற்ற அவராலும் முடியாது! இது இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளாம்! உண்மைதானே! இப்படி நூல் முழுவதும் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள் ஏராளம். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

வெளியீடு: அகவொளிப்பதிப்பகம், 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், அலைபேசி 9994541010,  பக்கங்கள் 104 விலை ரூ 80.
 
இந்த நூலின் ஒரே குறையாக எனக்குத் தோன்றுவது இன்னும் கொஞ்சம் தரமான தாளில் அச்சடித்திருக்கலாம் என்பதுதான்.

டீ.வி ஷோ!

   இரண்டுவாரங்களாக டீவி பக்கம் செல்லவில்லை! ஒரே தேர்தல் புராணங்கள். அதற்கடுத்தபடியாக சீரியல்கள் என்று இப்போதெல்லாம் டீவி பக்கம் செல்லவே பிடிக்கவில்லை.
ஞாயிறன்று சன்னில் சந்திரமுகி ஓடிக்கொண்டு இருந்தது. வடிவேலுவின் காமெடி, மற்றும் ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்புக்காக அப்படியே பார்க்க ஆரம்பித்தேன். இந்த படத்தில் ரஜினி கொஞ்சம் வயசானவராகவே எனக்கு தென்பட்டார். குரலும் சரி இல்லை. இளம் வயது நயன் அட்டகாசமாக இருந்தார். அதே நேரத்தில் கே.டீவியில் வல்லவன் போய்க் கொண்டிருந்தது. அந்த நயனுக்கும் இந்த நயனுக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல் இருந்தது. இந்த படத்தில் ஜோதிகா நடித்தகேரக்டரில் சிம்ரன் நடிக்க இருந்து பின்னர் அவருக்கு திருமணம் ஆனதால் ஜோதிகா நடித்தார் என்று படம் வந்தபோது பேசிக்கொண்டார்கள். சிம்ரன் நடித்து இருந்தாலும் இந்த அளவிற்கு ஹிட்டாகி இருக்குமா என்று சந்தேகம்தான்.இதில் பல ஜோக்குகள் இரட்டை அர்த்தமுடன் இருந்தாலும் யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பேய் இருக்கா இல்லையா ஜோக்குக்காகவும் ராரா பாட்டுக்கும் இந்த படத்தை பல தடவை பார்க்கலாம். விளம்பரங்கள் அதிகமாக ஒளிபரப்பி கழுத்தறுத்துவிட்டார்கள். இருந்தாலும் ராரா பாட்டில் ஜோதிகா கண்களை உருட்டி மிரட்டும் சீனுக்காக காத்திருந்து பார்த்து முடித்தேன். இடையே விஜய் டீவியில் நீயா- நானா- முழுவதும் பார்க்கவில்லை! ரோபோ சங்கர் பேசியது கொஞ்சம் டச்சிங்காக இருந்தது. தூக்கம் கண்ணை அசத்த உறங்க சென்றுவிட்டேன்.

கிச்சன் கார்னர்.
பால் போளி

தேவையானவை: மைதா- ஒருகப் பால் இரண்டுகப், பாதாம்விழுது 2 டீஸ்பூன், ஏலக்காய் சிறிது. நெய், குங்குமப்பூ, முந்திரி,தேவையான அளவு.

செய்முறை:  மைதாவுடன் நெய் உப்பு சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி அதில் சர்க்கரை பாதாம் விழுது, குங்குமப்பூ, முந்திரி விழுது ஆகியவை கலக்கவும்.
   மைதா மாவில் பூரி மாதிரி செய்து நெய்யில் பொறித்தெடுக்கவும்.பின்னர் பாலில் போட்டு ஊற வைக்கவும். பத்து நிமிடம் ஊறியதும் பால் போளி ரெடி.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
  

 கேக் செய்யும் பொழுது பயன்படுத்தும் வேக்ஸ் பேப்பரை வீட்டில் செய்த இனிப்புக்கள் மற்றும் முறுக்கு வகைகள் வைக்கும் பாத்திரத்தின் உள்ளே போட்டு அதன் மீது தின்பண்டங்கள் வைத்தால் பாத்திரம் சுத்தம் செய்வது சுலபமாகும்.

 சட்டைக் காலரில் கடுமையான அழுக்கு படிந்து இருந்தால் சிறிது ஷாம்ப்பூவை அழுக்கு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து துவைத்தால் அழுக்கு கிளியர் ஆகிவிடும்.

கடும் மூக்கடைப்பால் அவதிப்படுபவர்கள் மூக்கில் மூன்று சொட்டு தூய நல்லெண்ணையை விட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ டிகாஷனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அழுக்கான கண்ணாடிகள், டைல்ஸ், போன்றவற்றை துடைக்க பளிச்சிடும்.

சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக்கொண்டிருந்தால் கல் உப்பை இரவில் போட்டு வைத்திருந்தால் காலையில் அடைப்பு இருக்காது.

வாஷ்பேசின் பாத்ரூம், டாய்லெட்களில் ஒரு டப்பாவில் அடுப்புக்கரித்துண்டுகளை போட்டுவைத்தால் துர்நாற்றம் சிறிதும் வீசாது.

படிச்சதில் பிடிச்சது!
          வாழ்வதற்கு வழி!

   ஒரு குடும்பமே தற்கொலைக்கு தயாராகிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக்கூடாது என்று முடிவெடுக்கிறார் தந்தை. சாவுக்கான வழிகளை தேர்ந்தெடுக்கிறார்.
  தூக்கில் தொங்கலாம்; ஒரு வேளை கயிறு அறுந்துவிட்டால்…?
  விஷம் அருந்தலாம்; ஒரு வேளை அது கலப்படமாயிருந்தால்…?
  கிணற்றில் குதிக்கலாம்; ஒரு வேளை நீர்மட்டம் குறைவாயிருந்தால்…?
  தீயிட்டுக்கொள்ளலாம்; ஒரு வேளை பாதியில் அணைந்து போனால்…?
   தகப்பன் இத்தனை கேள்விகளை போட்டு குழப்பிக்கொண்டிருந்தபோது, கடைசி குழந்தை கேட்டது.
    “அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும் போது பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?”
   உடம்பையும் உயிரையும் ஆடி அதிர வைத்தது அந்த கேள்வி.

வைரமுத்து விகடன் மேடையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது படித்ததாக சொன்ன துணுக்கு இது. என்னையும் அதிர வைத்தது.



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும் போது பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?”
    உடம்பையும் உயிரையும் ஆடி அதிர வைத்தது அந்த கேள்வி.//

    நல்ல கேள்வி .. வாழ்வதற்கு வழி சொல்லிவிட்டாள் குழந்தை.

    ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அனைத்து தகவல்களுக்கும் நன்று.

    ReplyDelete
  2. லிங்கா, சென்னை, சிரஞ்சீவி எல்லாம் நானும் படித்த விஷயங்கள்! கடைசி விஷயம் - படித்ததில் பிடித்தது - அழகு.

    எப்படி இவ்வளவு விஷயங்கள் டைப் செய்து பதிவிடுகிறீர்கள்! :)))

    ReplyDelete
  3. வணக்கம்!

    தளிரளித்த இன்கதம்பச் சோறுண்டேன்! தங்க
    மலரளித்த இன்ப மணம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. நல்ல கதம்பச் சோறு....

    குண்டு வெடிப்பு - :(((((

    வாழ்வதற்கு ஒரு வழி கூடவா இல்லை - நல்ல கேள்வி..

    ReplyDelete
  5. பால் போளி செய்து பார்க்க வேண்டும் எளிமையாகத்தான் தெரிகிறது.
    டிஸ்ப் எப்பவும் போல் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!