ஆதலினினால் வாக்குப் போடுவீர்! தேர்தல் ஸ்பெஷல் கதம்பசோறு! பகுதி 32

கதம்ப சோறு பகுதி 32


ஆதலினினால் வாக்குப் போடுவீர்!


   ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நம் ஆட்சியாளர்களை நாமே தேர்ந்தெடுக்க உதவுதான் தேர்தல். எத்தனையோ ஏமாற்றங்கள், கட்சிகளின் மீது வெறுப்புக்கள், இவர்கள் ஜெயித்து என்ன செய்துவிட போகிறார்கள் ஊரை கொள்ளையடிக்க நாம் எதற்கு ஓட்டுப் போடுவது என்ற எண்ணம் நிறைய பேருக்கு ஏற்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகளும் காரணம். மக்களை இலவச மோகத்தில் திசை திருப்பி, ஓட்டுக்கு காசு கொடுத்து அதை டாஸ்மாக் மூலமாக திருப்பி வாங்கிக் கொண்டு அப்ப கொடுத்தோம் இப்போ எடுக்கிறோம் என்று இன்று அரசியல் என்பதே சம்பாதிக்க என்றாகிவிட்டது. இன்று தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவில்லை! அரசியல் சேவை என்பதெல்லாம் காமராஜரோடு மறைந்துவிட்டது. ஆங்காங்கே ஒன்றிரண்டு நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் எள்ளி நகையாடி அரசியலுக்கு வரவிடாமல் மீறி போட்டியிட்டாலும் தோற்கடித்து விடுகிறோம். ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டேன் என்று யாரும் சொல்வதாக தெரியவில்லை! அஞ்சு வருசம் கொள்ளையடிக்க போகிறான். ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தால் என்ன? என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது இன்றைய நிலை. சிலர் அப்படி பணம் வாங்கிக் கொண்டும் வாக்களிக்க செல்வது இல்லை! ஆனாலும் வாக்களிப்பது நமது கடமை! நம்மை ஆள நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான தேர்வு இது! நம் ஒரு ஒற்றை ஓட்டு கூட ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க முடியாததற்கு காரணமாக அமைந்துவிடலாம். கட்சிகள் ஆயிரம் இருக்கலாம். வேட்பாளர்கள் பலர் இருக்கலாம். அதில் உங்கள் பகுதிக்கான உறுப்பினரை நீங்களும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். 1000 ஓட்டுள்ள ஊரில் 500 அல்லது 600 ஓட்டுக்கள் பதிவானால் மீதமுள்ள 400 ஓட்டுக்கள் வெறுப்பினாலோ விரக்தியாலோ பதிவாவது இல்லை! இந்த நானூறும் பதிவானால்தான் அது முழுமையான தேர்தலாக இருக்க முடியும். 600 ஓட்டுக்களில் 150 பெற்றவன் வென்றான் என்றால் இந்த நானூறுக்கு என்ன மதிப்பு இருக்கிறது. இதே நிலைதான் நோட்டாவிற்கும். நோட்டா யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று நீங்கள் வாக்களித்தால் அது செல்லாததாகத்தான் ஆகிவிடுகிறது. அதை கணக்கில் யாரும் எடுத்துக் கொள்ளப்போவது இல்லை! ஆகவே நம் தலையெழுத்தை தீர்மானிக்க போவதும் அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதுமான இந்த தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள்! உங்கள் தேர்வுகூட ஒரு சமயம் இந்தியாவை மாற்றக்கூடியதாக அமையலாம்! ஆதலினால் வாக்களிப்பீர்!

தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளுமா?

   தேர்தல்கள் பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே புதிய நடைமுறைகளை புகுத்தி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். பிரதான கட்சி வேட்பாளர்களையே இப்போதெல்லாம் பலருக்கு தெரிவது இல்லை! புதியவர்களாக இருக்கிறார்கள். உதிரிக்கட்சிகள் சுயேச்சைகள் பிரச்சாரத்திற்கு பல ஊர்களுக்கு வருவது கிடையாது. இதில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு வருவது வாடிக்கை ஆகிவிட்டது. கட்சிக்காரர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் எப்படியும் கட்சிபாசத்தில் அவர்கள் கட்சிக்காரருக்கு வாக்களித்துவிடுவார்கள். ஆனால் நடுநிலை வாக்காளர்களின் கதிதான் பரிதாபமாக உள்ளது. கட்சி சார்பற்று ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமெனில் வேட்பாளரை பற்றி அறிந்திருந்தால்தானே செய்ய முடியும். பிரதான கட்சி வேட்பாளர்கள் கூட கட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள். எதிரணியின் குறைகளை சொல்லுகிறார்களே தவிர அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இதுவரை அந்த தொகுதிக்கு அல்லது சமூகத்திற்கு எந்த அளவிற்கு உதவி உள்ளார். அவரை தேர்ந்தெடுத்தால் என்ன செய்து கொடுப்பார் என்பதை தெரிவிக்க மாட்டேன் என்கிறார்கள். இதனால் நடுநிலை வாதிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. வேட்பாளர்களின் சொத்துக்கணக்கை வாங்கி வெளியிடும் தேர்தல் ஆணையம், இனிவரும் தேர்தல்களில் போட்டியிடுவோர் சமுகத்திற்கு செய்த தொண்டுகள் சிலவற்றை ஆதாரப்பூர்வமுடன் கேட்டு பெற்று அதை தினசரிகளில் வெளியிட்டால் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். அரசியல்கட்சிகளும் பிரசார உத்திகளை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். எனக்கே என் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை! அவர்களின் விபரம் தெரியவில்லை! இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஓட்டுப் போடுவது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்:

      ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:
*
தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
*
ஓட்டு போடும் மையத்திற்கு செல்லும் போது, ஏதாவது ஒரு அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.
*
ஓட்டுச் சாவடிகளுக்கு, மொபைல் போன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
*
தனியார் வாகனங்கள், ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்.
*
முதல் தேர்தல் அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.
*
இரண்டாவது அலுவலர், வாக்காளரின் இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் வாக்காளரும் கையெழுத்திட வேண்டும்.
*
அடுத்ததாக, வாக்காளர் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள, 'பேலட் பட்டனை' அழுத்துவார். பின் வாக்காளர், ஓட்டு போடும் மறைவிடத்திற்கு சென்று, ஓட்டை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
*
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயருக்கு எதிரே நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா' என்ற பட்டனை அழுத்தலாம்.
*
வாக்காளர் ஏதாவது ஒரு பொத்தான் மட்டும் பயன்படுத்தி, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
*
நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்பு விளக்கு எரியும்; ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட பிறகு, 'பீப்' ஒலி கேட்கும். இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு, அணைந்து விடும். ஓட்டளிக்கும் முறை, இத்துடன் முடிவடையும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க கொண்டு செல்ல வேண்டிய 10 ஆவணங்கள் குறித்த விபரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலைதிட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அடையாளமாக காட்டி வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். 

படித்த புத்தகம்: கவர்ந்த கண்கள்:

  புத்தகச் சந்தையில் வாங்கி வந்த மறுநாளே இந்த புத்தகத்தை உடல் நலம் சரியில்லாத பொழுதும் படித்தேன் இரண்டு மணி நேரத்தில் படித்தும் முடித்துவிட்டேன். சாண்டில்யன் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கவர்ந்த கண்கள் தான் என் கண்களையும் கவர்ந்தன.166 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ 50.
    இராமானுஜரால் சீடனாக ஏற்கப்பட்ட வில்லிதாசனுடைய சரிதத்தை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார் சாண்டில்யன்.இது கதை என்பதை விட உண்மை நிகழ்ச்சி என்று அறிமுகத்திலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். இன்று சமத்துவம் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் இராமனுஜர் காலத்தில் அது கிடையாது. வில்லி என்ற வகுப்பினர் கீழ்த்தரமாக கருதப்பட்டனர். வேதத்தை அனைவருக்கும் உபதேசம் செய்த இராமனுஜர் வில்லியை தன் சீடனாக ஏற்றுக்கொண்டு அழகிய மணவாளனின் கண்களால் கவரச் செய்தார். இதை சிறிது கூட சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக அழகிய வர்ணணைகள் கலந்து தமக்கேயுரிய பாணியில் தந்துள்ளார் சாண்டில்யன். காவிரியின் சுழல் என்னும் அழகில் வில்லியின் கண்கள் முதலில் கவர்கின்றன.பின்னர் தாசி பொன்னாச்சியின் கண்களால் கவரப்படுகிறான். இறுதியில் ஆச்சார்யார் அவனை பெருமாளின் கண்களால் கவரச்செய்கிறார். இதை சிற்சில கற்பனை கதாப்பாத்திரங்களுடன் படைத்து மனதில் நிற்கச் செய்கிறார் ஆசிரியர். சாண்டில்யனின் நட்சத்திர நாவல்களில் இந்த நூலும் ஒன்று என்பது பதினாலாம் பதிப்பாக இந்த நூல் இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது காட்டுகிறது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நாவல்.

குளுகுளு கோடை ரெசிபி!

கிர்ணிப்பழ சாலட்!


தேவையானவை; கிர்ணிப்பழம் ஒன்று, எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாறு அரைத் தேக்கரண்டி, சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை: கிர்ணிப்பழத்தை தோல் சீவி விதைகளை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும். கிர்ணிப்பழத்துண்டுகளுடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை தூவி நன்கு கலந்து பறிமாறவும்.
   ஜிலுஜிலு கிர்ணிப்பழ சாலட் ரெடி!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

முள்ளங்கி கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.

வில்வ இலை சூரணம் அரைத் தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயில் கலந்து காலை, மாலை உட்கொள்ள வயிற்றுக் குத்தல் தீரும்.


வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லுதல், தாய்ப்பால் பெருக்குதல், மாதவிலக்கை தூண்டுதல் ஆகியவை பப்பாளிபழத்தின் குணங்கள்.

தொந்தி அதிகமாக உள்ளவர்கள் வாழைத் தண்டை பருப்பு சேர்க்காமல் சமைத்து சாப்பிட தொந்தி குறையும்.

வேனல் காலத்தில் கட்டிகள் அதிகம் வரும். எருக்கம் பால் தடவினால் கட்டி பழுத்து உடைந்துவிடும். வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டினால் நெறிகட்டி சரியாகும்.


நான் பார்க்கலை!


 ஜன சந்தடியான நகரத்தில் ஒரு வங்கியினுள் கொள்ளைக் கூட்டம் நுழைந்தது. கொள்ளையர் தலைவன் வங்கியினுள் சென்று துப்பாக்கியை மேனேஜர் முன் நீட்டினான். அங்கிருந்த பணம் அனைத்தையும் மிரட்டி வாங்கி மூட்டைக் கட்டிக் கொண்டான். புறப்படும் சமயம், அங்கிருந்த ஒருவனிடம் கொள்ளைக்காரன், நான் இந்த பாங்கை கொள்ளை அடிச்சதை நீ பாத்தியா? என்று கேட்டான்.
 அவனும், “ ஆமா… நான் பார்த்தேன்!” என்று சொன்னான். அடுத்த நொடி கொள்ளையன் அவனை சுட்டுக் கொன்றுவிட்டான். மீண்டும் பயங்கர கோபத்துடன், அங்கிருந்தவர்களை பார்த்து, ‘நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா?’ என்று கேட்டான்.
  அங்கிருந்தவர்கள் மவுனமாக இருக்க அப்போது அங்கிருந்த புதிதாக திருமணமான ஜோடி ஒன்றிடம் போய் ‘நான் சுட்டதை பார்த்தீங்களா?” என்றான்.
  அந்த ஜோடியில் புருஷங்காரன் சொன்னான், “ நான் பார்க்கலை! ஆனா என் மனைவி பார்த்துக்கிட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

(படிச்சதில் பிடிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஓட்டு போடும் முறையை விளக்கிச் சொன்னதற்கு நன்றி, கிர்ணிப்பழ சாலட் செஞ்சுப் பார்த்துட்டு சொல்றேன். அப்புறம் அந்த புருசனுக்கு அந்த பொண்டாட்டி மேல அப்படியென்ன கோபம்!?

    ReplyDelete
  2. நாளை ஓட்டுப்போட இருக்கும் நம் மக்களுக்கு தேவையான பதிவு.

    என்னுடைய மினி நூலகத்தில் அந்த புத்தகமும் இருக்கிறது. ரத்தினச் சுருக்கமான விமர்சனம்.

    "//புதிதாக திருமணமான ஜோடி //" - அதுக்குள்ளேயே பொண்டாட்டி மீது கோபமா?

    ReplyDelete
  3. கண்டிப்பா நல்ல மனிதர்களை பார்த்து ஓட்டு போடுவோம்

    ReplyDelete
  4. ஆனால் இன்றய என் பதிவு "தயவு செய்து ஓட்டு போடாதிங்க "

    ReplyDelete
  5. ஓட்டுப் போட்டுடுவோம்! கிர்ணிப் பழ சாலட் கோடைக்கலத்துக்கு ஏற்றது. ஜோக் ஏற்கெனவே படித்திருக்கிறேன். வோட்டுப்போட பூத் ஸ்லிப் மட்டுமே போதும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. \\அந்த ஜோடியில் புருஷங்காரன் சொன்னான், “ நான் பார்க்கலை! ஆனா என் மனைவி பார்த்துக்கிட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”\\கல்யாணம் ஆன புதிசிலேயே இவன் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கான் போல.

    ReplyDelete
  7. கதம்ப சோறு...!
    சுவை...

    ReplyDelete
  8. சுவையான கதம்ப சோறு.....

    ReplyDelete
  9. இன்றைக்கு பொருத்தமான பதிவு.... நான் பார்க்கலை - ஹா...ஹா...

    ReplyDelete
  10. வணக்கம்
    பதிவில் சிறப்பான அலசல்...... கலத்துக்கு தகுந்த மாதிரி பதிவு அமைந்துள்ளது....

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. கதம்பம் நன்று ரசித்தேன் நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!